Saturday, March 22, 2008

துரத்திய மரணம் ! அறியாத சுப்பு !

மரணம் மனிதனுக்கு இயற்கை தான். ஆனால் எதிர்பாராதவிதமாக அதை நேர்கொள்ளும் போது மரணிப்பவரைச் சார்ந்தவர்கள் தான் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். குடும்பத்தினர் ஒருபுறம் அவருக்கு வெளியில் பழக்கமானவர்கள் என மனரீதியான பாதிப்பும், நமக்கு எப்போது ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு அலைக்கழிக்கின்றன.

டிசம்பர் மாதம் பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்லும் போது ஓசூர் தாண்டியதும் ஒரு விபத்து. 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலையின் நடுவில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எதோ கனரக வாகனத்தில் அடிபட்டு இறந்து போயிருந்தார். நான் சென்ற பேருந்து சம்பவ இடத்தைக் கடந்து சென்ற போது சம்பவம் நிகழ்ந்து 10 நிமிடங்களுக்குள் தான் இருக்கும். அன்றைய பயணம் முழுவதும் அதே நினைப்பிலேயே முடிந்தது. இந்த நினைப்பிலிருந்து விடுபடவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது. அதன் பின்னர் செய்திகளில் விபத்து, மரணம் குறித்தவைகளைப் பார்க்கும் போது மனம் மிகவும் வருத்தப்பட்டது. முன்பெல்லாம் விபத்து, மரணச் செய்திகளைப் படிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பை விட ஒரு மரணத்தை நேரில் பார்த்தபின் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகவே இருந்தது.

அதன் பின்னர் சிலநாட்கள் கழித்து ஊரில் இருந்து பெங்களூர் திரும்பி வரும்போது எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணத்தையும் காண நேர்ந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்திருந்தார். தலையில் மட்டுமே அடி. தலைக்கவசம் அணிந்திருந்தார். ஆனால் முழுவதுமாக தலையை மறைக்காமல்,தொப்பி போல இருக்கும் தலைக்கவசம். ஒருவேளை தலைமுழுவதும் மறைக்கும் கவசம் அணிந்திருந்தால் நிச்சயம் உயிர் தப்பியிருப்பாராயிருக்கும். 2,3 நொடிகளுக்கு மேல் அந்த இடத்தைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். இந்த சம்பவத்தின் பாதிப்பும் சில நாட்கள் இருந்தது.


மேலே படத்தில் இருக்கும் பையனின் பெயர் சுப்பிரமணியன். ஊர் திருவண்ணாமலை. சென்னையில் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஃப்ரஷராக வேலைக்கு சேர்ந்தவன். வயது 23. நாங்கள் எல்லோரும் சுப்பு என்று அழைப்போம். நான் பெங்களூரில் வேலை கிடைத்ததும் அந்த அலுவலகத்தில் வேலையை விட்ட போது, என் பணிகள் அனைத்தையும் இவனிடம்தான் ஒப்படைத்துவிட்டு வந்தேன். மிகவும் அமைதியான பையன். அழகான சிரிப்பு. அதிர்ந்துகூட பேசமாட்டான். நான் செய்த எல்லா ப்ராஜக்ட்களையும் விளக்கிய போது கவனமாகவும், பொறுப்பாகவும் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டான். அதன்பின் குழுமடல்கள் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்தோம்.

சுப்பு இப்போது உயிருடன் இல்லை. :(

அந்த அலுவலகத்தில் ஒரு வருடம் பணிபுரிந்த பின் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் இருக்கும் விப்ரோவில் (பழைய MPower) கடந்த டிசம்பரில் வேலைக்குச் சேர்ந்தான். போனமாதம் அலுவகத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இரத்த வாந்தி எடுத்திருக்கிறான். உடனே நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்திருந்திருக்கிறார்கள். எல்லா பரிசோதனைகளும் முடிந்தபின் மருத்துவர்கள் சொன்னது அவனுக்கு ப்ரைன் ட்யூமர் இறுதி நிலை. மறுநாள் சாயங்காலம் சுப்பு உலகை விட்டுச் சென்றுவிட்டான்.

சுப்புவின் மரணம் நண்பர்கள் மூலம் தெரியவந்தபோது ஏற்பட்ட மனச்சங்கடங்களுக்கு அளவே இல்லை. இரண்டு நாட்கள் அலுவலகத்தில் வேலையே பார்க்க முடியவில்லை. பழைய நினைவுகளே ஆட்கொண்டன. 23 வயதில் மரணமா? ஏன் இப்படி? என்ன என்ன கனவுகள் கண்டிருப்பான்? தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? சுப்புவின் மரணம் அவனை நம்பியிருந்த குடும்பத்துக்கு பேரிடி தான்.

ப்ரைன் ட்யூமர் முதல்நிலையிலேயே கண்டுபிடித்திருந்தால் சரிசெய்திருக்க முடியும் என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். அதன் அறிகுறி கடுமையான தலைவலி இருக்குமாம். சுப்புவுக்கும் அப்படி இருந்து அறியாமையால் கவனிக்காமல் இருந்துவிட்டானோ?

எல்லோரும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். மரணம் எல்லோரையும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.
சிலரை ரொம்ப தூரத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. அது எப்பவும் சீரான வேகத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நமது வேகம் குறையும் போது நம்மைப் பற்றிக் கொள்கிறது.
சிலரை ரொம்ப அருகில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நாம் கொஞ்சம் வேகமாக ஓடினால் தப்பிக்கலாம்.
சிலரை மரணம் எதிர்நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது. இதை ஒன்றும் செய்ய முடியாது. விதி என்று கூட சொல்லிவிடலாம்.

ஆனால் தவிர்க்கக் கூடிய மரணங்களை ஏன் நம் உடல் நலத்தில் அக்கறை கொள்வதன் மூலம் தவிர்க்கக் கூடாது? நம் மரணத்தால் நம்மைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்வோம். எனவே உடல்நலத்தில் அக்கறை கொள்வோம் நண்பர்களே !!

Thursday, March 13, 2008

மழலையர் பாடல்கள் - அரும்புகளுக்காக



சிட்டு

சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் !
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு !!


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>




சேர்ந்து செய்வோம் !

துண்டு தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன் !

துண்டு துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய் பொம்மை செய்தனள் !

வண்ணத்தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர் !
சின்னப்பையன் கண்டனர்
சேர்த்துப் பூக்கள் செய்தனர் !

சிறிய பொருளும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே !
சின்னஞ்சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே !


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>


மரம் வளர்ப்போம்

தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறதே !
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறதே !

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வாபோல பழம் தருது !
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது !

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போல பழுக்கிறது !
சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே !


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>


நன்றி : சங்கீதா அக்கா

Wednesday, March 12, 2008

மிட்வீக் ஜொள்ளு

வீக்கென்டில் மங்களூரிலிருந்து சில ஜொள்ளுப்பார்ட்டிகள் நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் ஜொள்ளுப்பார்ட்ட்டிகளுக்காக பதிவு போட்டு நம் கவனத்தை வேறெங்கும் சிதறவிடாமல் செய்வதால் இந்த மிட்வீக் ஜொள்ளு.

அஞ்சாதே படத்தின் 'கத்தாழைக் கண்ணாலே குத்தாதே நீ என்னை' குத்துப்பாட்டு.
சித்திரம் பேசுதடியின் வாள மீன் பாட்டைப் போலவே டான்ஸ், கானா உலகநாதனுக்குப் பதில் பாண்டியராஜன், அதே போல இருட்டில் மூன்று பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். ஜிப் போன மணிபர்ஸ் மாதிரி இந்த அம்மணி வாயை மூடாமல் குத்தாட்டம் போடுவதை என்ஜாய் பண்ணுவோமா?

Saturday, March 01, 2008

எழுத்தாளர் சுஜாதா - சில நினைவுகள்


சுஜாதா என்ற தமிழ் எழுத்துலகின் நட்சத்திரம் ஒன்று தன் ஒளியை நிறுத்திக் கொண்டுவிட்டது. வருத்தங்களும், சோகங்களும் நிரம்பிய முகங்களை தமிழ் வாசகர் வட்டத்தில் பார்க்கிறோம். இப்படிப்பட்ட மாமனிதரை நேரில் காணும் வாய்ப்பு ஒருமுறை சென்னையில் நான் பணிபுரியும் போது ஏற்பட்டது.

இரு வருடங்களுக்கு முன்பு சென்னையில் என் உடன் பணிபுரியும் நண்பனின் அண்ணனுக்குத் திருமணம். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் பாம்குரோவ் ஹோட்டலின் பின்புறம் உள்ள மண்டபத்தில்தான் திருமணம். அலுவலக நட்பு வட்டம் எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் போனது இரவு 7மணிக்கு மேல். எனவே உள்ளே போய் மணமக்களை வாழ்த்தி விட்டு சாப்பிடப் போகும் போது உடன் வந்திருந்த கேரளத்து டிம்சன் "கல்யாணத்துக்கு சுஜாதால்லாம் வந்திருக்கு"ன்னான். எங்க கிளையன்ட் ஒருத்தங்க பேரும் சுஜாதாதான். நாங்க பண்ற ப்ராஜட்க்கு யுஏடி எல்லாம் அவங்கதான் பண்ணுவாங்க. அதனால் நாங்க அவுங்கதான் வந்திருக்காங்க போல பொண்ணுக்கு சொந்தமா இருக்கும்னு நினைச்சிக்கிட்டோம்.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்தால் மண்டபத்துக்கு வெளியே சேர் போட்டு எழுத்தாளர் சுஜாதா யார் கூடவோ பேசிக் கொண்டிருந்தார். நான் தான் முதலில் கவனித்தேன். "டேய் சுஜாதாடா"ன்னு சொல்ல நண்பர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். டிம்சன் "நான் தான் அப்பமே சொன்னனில்லை?"ன்னான். டக் இன் செய்த தொள தொள சட்டையுடன் எளிமையான தோற்றத்தில் உட்கார்ந்து ஒருவருடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். நாங்களும் அந்த இடத்தை விட்டுப் போக மனமில்லாமல் நாங்களும் அவருக்கு சற்று தள்ளி நாற்காலிகளில் அமர்ந்தோம்.

எனக்கு அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டுமென்று மிகுந்த ஆவல். ஆனால் கையில் பேப்பரோ, பேனாவோ இல்லை. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அல்லவா? ரொம்பவே வருத்தமாகப் போய்விட்டது. அவரும் எங்களை அடிக்கடி கூர்ந்து கவனித்தார். நான் "அவரிடம் எதாவது பேசுவோம்" என்று சொன்னேன். எல்லோருக்கும் கூச்சம். என்ன பேசுவது என்று. யாரும் வரவில்லை. வேறுவழியின்றி நானும் விட்டுவிட்டேன். ஒருமணிநேரத்துக்கு மேல் அங்கே இருந்தோம். நாங்கள் கிளம்பிய போது மணி 9:30. நாங்கள் கிளம்பும் வரை சுஜாதா கிளம்பவில்லை. இப்பொழுது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டோமே என்று தோன்றுகிறது.

போனவாரம் மதுரையிலிருந்து கிளம்பும் போது கொஞ்சம் நேரம் இருந்ததால் ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கும் சர்வோதய இலக்கியப் பண்ணைக்குச் சென்று சுஜாதா புத்தகங்களைத் தேடினேன். ஸ்ரீரங்கத்துக் கதைகளில் இரண்டு பக்கம் படித்து விட்டு "தள்ளுபடி ஏதும் இருக்கா?"ன்னு கேட்க அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று சொன்னார்கள். எனவே நண்பனிடம் சொல்லி செல்வியில் தள்ளுபடியுடன் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டே வந்துவிட்டேன்.

பின்னர் பொழுது போக்க கல்கி வாங்கிவிட்டு ரயிலில் வரும் போது படித்துக் கொண்டே வந்தேன். அதில் 'வாரம் ஒரு பாசுரம்' என்ற தொடரில் சுஜாதா எழுதிவருகிறார். அதைப் படிக்கும் போது சுஜாதா உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தேசிகனின் பதிவு நினைவுக்கு வந்தது. இந்த நிலையிலும் தவறாமல் எழுதி வருகிறாரே என்று நினைத்துக் கொண்டேன். அவரது கடைசிப் படைப்பைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோணவில்லை.

சுஜாதாவின் படைப்புகளில் 'கரையெல்லாம் செண்பகப்பூ', 'கற்றதும் பெற்றதும்', 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' மட்டுமே படித்திருக்கிறேன். இருந்தாலும் அவர் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. இன்னமும் நிறையப் படிக்க வேண்டும் என்று ஆவல். என் அண்ணன் அவர் குமுதத்தில் எழுதிய அறிவியல் தொடரின் பக்கங்களையெல்லாம் சேகரித்து வைத்த ஞாபகம் இருக்கிறது. அவரின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டால் எல்லாத் தரப்பு மக்களையும் எளிதில் சென்று அடையும். சாத்தியமா என்று தெரியவில்லை.

அமரர் கல்கியைப் போல் அமரர் சுஜாதாவுக்கும் தமிழ்மக்களின் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் உண்டு. அந்த தமிழ்த்தாயின் அருந்தவப்புதல்வனின் ஆன்மா திருவரங்கனின் உள்ளத்துள் ஐக்கியமாக எல்லோரும் வேண்டுவோமாக!