Sunday, May 09, 2010

ராஜன் புரோட்டா ஸ்டால்



ஊரில் உத்தமராஜன் என்றால் எல்லோருக்கும் தெரியும். காரணம் அவர் கட்சியில் இருந்தார். அரசியல் என்றால் என்னவென்று தெரியுமுன்பே உத்தமராஜனையும் அவரது கட்சிப்பற்றையும் பார்த்து அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொண்டோம் என்றால் அது பொய்யில்லை.

உத்தமராஜன் என் வகுப்புத்தோழன் காந்திராஜனின் தந்தை. பிறக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைக் கையில் பிடித்தபடியே வந்திருப்பாரோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு விசுவாசமான திமுக தொண்டர். வாட்டசாட்டமான உருவம். முறுக்கு மீசை. விரலில் கலைஞர் படம் போட்ட தடிமனான மோதிரம். தேய்த்த வெள்ளை வேட்டி சட்டை. வேட்டியில் கறுப்பு சிவப்பு கரை. அவரது ட்ரேட்மார்க் அடையாளம் ஒரு மிதிவண்டி. வண்டியின் ஹெட்லைட்டில் மஞ்சள் கலர் ஸ்கார்ப். இரண்டு ரிவர்வியூ கண்ணாடிகள். சக்கரத்தின் கம்பிகளில் கறுப்பு சிவப்பு மணிகள். சைக்கிளின் பின்புறம் சிவப்பு விளக்கின் மேலே உதயசூரியனின் படம். மிதிவண்டியின் கைபிடியின் இரண்டுபுறமும் ஒலிநாடாவைக் கொத்தாக வெட்டி காற்றடித்தால் சரசரவென சத்தத்துடன் செல்லுமாறு செய்திருந்தார். மிதிவண்டியின் செயின் கார்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று கறுப்பு சிவப்பு மையினால் எழுதப்பட்டிருக்கும்.

நாங்கள் எல்லோரும் ஒரே தெருதான். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். தெருவில் விளையாடும் போது தண்ணீர் தவித்து காந்தியின் வீட்டுக்குப் போக நேர்ந்தால் வீட்டின் நடுப்பத்தியில் மாட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய கலைஞர் படங்கள் ஒரு வித்தியாமான உணர்வை ஏற்படுத்தும். ராஜன் ஒன்றும் கட்சியின் பொறுப்புகள் எதிலும் இருக்கவில்லை. ஆனால் கட்சியின் உண்மையான விசுவாசி என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். உத்தமராஜனுக்கு ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கின் எதிரில் ஒரு புரோட்டாக் கடை இருந்தது. சிறிய கடை என்றாலும் சுவையான சால்னாவுடன் புரோட்டா கிடைக்கும் என்பதால் கூட்டம் நிரம்பி வழியும். கடையிலும் எல்லா இடத்திலும் கலைஞர்தான். கடையின் பெயர் கூட கறுப்பு சிவப்பில்தான் எழுதப்பட்டிருக்கும்.

காந்தியிடம் பேசும்போதெல்லாம் "ஏண்டா உங்க அப்பாவுக்கு கருணாநிதின்னா ரொம்ப பிடிக்குமாடா? உங்க வீடு பூராம் கலைஞர் படமா இருக்கு??"ன்னு ஆச்சரியத்துடன் கேட்டோம். "அவருக்கு கலைஞரை மட்டும் யாராவது குறை சொன்னால் கெட்ட கோவம் வரும்டா.. அடிபின்னிருவார்" ன்னான். எங்கள் நண்பர் குழுவில் இருந்த துடுக்கு ரீகன் மட்டும் "டேய் உங்க அப்பா இன்னிக்கு மதியம் வீட்டில் இருக்கிறப்போ நான் 'கலைஞர் ஒழிக'ன்னு உங்க வீட்டு வாசலில் நின்னு கத்துவேன். உங்கப்பா என்ன செய்றார்னு பார்ப்போம்"ன்னு சவால் விட, எங்களுக்கும் ஆவல் அதிகமாகி நடப்பதைப் பார்ப்போம்னு கமுக்கமா இருந்துட்டோம்.

அன்னிக்கு மதியம் ரீகன் காந்தி வீட்டு வாசலில் நின்று "கலைஞர் ஒழிக" அப்படின்னு கத்த, நடுப்பத்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த உத்தமராஜன் திடுதிடுவென வாசலுக்கு வந்து ரீகனின் பிடறியில் ஒரு அறைவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத ரீகன் பொறி கலங்கிப் போய் அழுது கொண்டே ஓட்டமெடுத்தான். பொன்னம்மாள் அக்கா வீட்டு மாட்டுக் கொட்டகைக்குப் பின்னால் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் குப்பென வேர்க்க ஆரம்பித்தது.

அதன்பின் சிவருடங்களில் உத்தமராஜனின் தம்பிகள் பெரிய ஆட்களாகிவிட அவர்களின் உழைப்பால் ராஜன் புரோட்டா ஸ்டால் ஊருக்குள் மேலும் நான்கு இடங்களில் கிளைகளைத் தொடங்கியது. வருடங்கள் அதிகமாக ஆக ராஜனின் கட்சிப்பற்று கூடிக்கொண்டே போனது. ஊருக்குள் கட்சியின் முக்கியமான நிதி ஆதாரமாக மட்டுமே இருந்த ராஜன், கட்சியில் எந்தப் பதவியும் கேட்டு வாங்கவில்லை. உண்மையான விசுவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கட்சியில் பதவிகள் வாங்கிக் கொடுக்கும் ஒரு ஏணியாகவே இருந்தார்.

வருடங்கள் ஓடின. 2001 தேர்தல் நிதிக்கு கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தோல்வி. விரக்தியாலும், தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையினாலும் அதிகமாகக் குடித்து விட்டு வந்து தன் வீட்டின் கூரை மேல் தானே கல்லை விட்டு எறிந்து சத்தம் போட்டு புலம்பிக் கொண்டிருந்தார். காந்தியும் காந்தியின் அம்மாவும் அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுத்திண்ணையில் உட்கார வைத்த போது சின்னக் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். காந்தியின் தம்பி ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதது கூட அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தத் தேர்தல் முடிவினால் அவர் மிகவும் மனமுடைந்து போய்விட்டார்.

ராஜனின் தம்பிகளுக்கு இந்த அரசியல் எல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அண்ணனை எதிர்த்துப் பேசமுடியாமல் இருந்தனர். இப்போது தேர்தலுக்காக எக்குத்தப்பாகப் பணத்தைச் செலவு செய்ததால் கடுப்பான அவர்கள் "எங்களிடம் கேட்காமல் எப்படி பொதுப்பணத்தில் இருந்து கட்சிக்குக் கொடுக்கலாம்?" என்று சண்டை போட்டு அவரவர்கள் தனித்தனியே கடைகளைப் பிரித்துக் கொண்டு போய்விட்டார்கள். ராஜனின் வணிகம் இப்போது ஒரு கடையுடன் சுருங்கிவிட்டது. மூன்று பெரிய பிள்ளைகள் வேறு. நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது காந்தி பள்ளிப்படிப்புடன் நின்று விட்டு கடையைப் பார்த்துக் கொண்டான்.

நானும் அதன்பின்னர் இளங்கலை, முதுகலை படிப்புகள் முடித்து ஊரையும் காலி பண்ணிப் போய்விட்டதால், நிறையப் பேருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று மாதங்கள் முன்பு துபாயில் இருக்கும் முத்துவிடம் இணைய அரட்டையின் போது எதேச்சையாக காந்தியைப் பற்றி விசாரிக்க "டேய் அவங்க அப்பா இப்பவெல்லாம் முந்தி மாதிரி இல்லடா .. ரொம்ப மாறிட்டார்டா .. ஊருக்குப் போய் ஒருதடவை காந்தியைப் பாருடா.. உன்னை ரொம்ப கேட்டான்" என்று சொன்னதும் எனக்கும் ஊருக்குச் செல்லும் ஆவல் ஒட்டிக் கொண்டது.

பங்குனிப் பொங்கல் விழாவிற்கு ரொம்ப வருடங்கள் கழித்து இந்த வருடம் போன போது காந்தியின் புரோட்டாக் கடைக்குப் போனேன். வெளியில் ராஜனின் ட்ரேட்மார்க் சைக்கிளைக் காணவில்லை. அதற்குப் பதில் ஒரு பழைய சைக்கிள் எந்தவித அலங்காரமும் இல்லாமல் செயின் கார்டில் வெள்ளைப் பெயிண்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று எழுதப்பட்டிருந்தது. கடையின் உள்ளே பெரிய பெரிய கலைஞர் படங்கள் எல்லாம் கழட்டப்பட்டு, ராஜன் இளைஞராக இருக்கும் போது கலைஞருடன் எடுத்துக் கொண்ட கறுப்பு வெள்ளைப் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. உள்ளே ராஜன் கல்லாவில் நின்று கொண்டிருந்தார். கரைவேட்டி இல்லை. ஆனால் கலைஞர் படம் போட்ட மோதிரம் போட்டிருந்தார். முறுக்கு மீசையில் ஏகப்பட்ட நரைமுடிகள். பார்த்ததும் "ஏய் வாப்பா வாப்பா என்ன ஆளையே காண்றதில்லை? சொந்த ஊரை மறக்கக் கூடாதுப்பா"ன்னு அறிவுரை கூறினார்.

"அப்படியெல்லாம் இல்லை அப்பா ! வேலை அதிகமாக இருப்பதால் வரமுடிவதில்லை"ன்னு மழுப்பி, "காந்தி எங்கே?" "பலசரக்கு வாங்கப் போயிருக்கான்பா. நீ சாப்பிடு அதுக்குள்ள வந்துருவான்"ன்னு சொல்லி அவரே இலை எல்லாம் எடுத்துப் போட்டு மூன்று புரோட்டாக்களை பிய்த்துப் போட்டு மணக்கும் சால்னாவை அதில் ஊற்றிவிட்டுப் போனார். ஒரு வெட்டு வெட்டிவிட்டு கல்லாவில் நின்று கொண்டிருந்த அவரிடம் "எப்படி அப்பா ! இப்படி மாறிட்டீங்க?" "எதைச் சொல்ற கட்சி வேட்டி கட்டுறதில்லையே அதையா? அட ஆமாம்பா கட்சிப்பாசம், கொள்கையெல்லாம் மனசளவில் மட்டுமே இருக்கு. ஓட்டு மட்டும் என் தலைவனுக்கு மறக்காம போட்டுடுறோம்". "எனக்கு விவரம் தெரிஞ்சதிலயிருந்து கட்சியில் இருக்கீங்களே அப்பா! கண்டிப்பா அதுக்கான பலன் ஒருநாள் கிடைக்கும். கவலைப்படாதீங்கப்பா". "ஹஹாஹா ! அதுவும் இன்னிக்கு நடந்திருச்சுப்பா !" அப்படின்னு சொல்லி அன்றைய முரசொலியை எடுத்துக் காண்பித்தார்.

'பத்து வருடங்களுக்கு மேல் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்காக பொற்கிழி வழங்கப்படும்' என்ற செய்தியுடன் மாவட்டவாரியாக அவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழே உத்தமராஜனின் பெயர் மூன்றாவதாக இருந்தது. நான் அவரைப் பெருமிதத்துடன் பார்த்தேன். அவர் கையில் இருந்த மோதிரத்தில் கலைஞர் சிரித்துக்கொண்டிருந்தார்.

Saturday, May 01, 2010

பதிவு போட வச்ச பரபரப்பு செய்திகள்


ரொம்ப நாள் ஆகிட்டே போகுது பதிவு போட்டு.... சரி கிடைச்ச நேரத்துல சின்னதா ஒன்னு ... சமீபத்தில் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை.

முதல்ல நித்யானந்தா. எனக்கு எப்ப்வுமே சாமியார்கள் மேல ஒரு கரிசனமோ ஈர்ப்போ இருந்ததே இல்லை. ஏன்னா நான் சின்னப்புள்ளயா (இப்போ மட்டும் வளந்துட்டமாக்கும்..ம்க்கும்..) இருந்தப்போ சங்கராச்சாரியார் என்ற ஜெயேந்திரர் வந்திருந்தார். கோவில்ல ஏதோ பிரசங்கமெல்லாம் பண்ணினார். 'சாமியை யாரும் தொடாதீங்கோ' என்ற அதட்டலுக்கு நடுவில் பக்தர்கள் ஆசிபெற துடித்துக் கொண்டிருந்தார்கள். நான் பக்கத்தில் ஏதோ வேன் இருக்கே என்று போய்ப் பார்த்தேன். சகல வசதிகள், ஏசி, படுக்கை, சமயலறை, இரு உதவியாளர்கள் கிட்டத்தட்ட மினி வீடு மாதிரி இருந்தது. சாமியார்னாலே கஷ்டப்படணும் ஓட்டாண்டியா நின்னு மக்களுக்கு அறிவுரை சொல்லணும்கிற பிம்பம் மனசுல பதிஞ்சு போனதால எனக்கு அப்பலருந்தே சாமியார்களைப் பார்த்தால் பிடிக்காமப் போச்சு. சரி அப்ப ஓட்டாண்டியா நிக்கிற சாமியார்களைப் பிடிக்குமான்னா அதுவும் இல்லை. சும்மா சாமி பேர சொல்லிட்டு பிச்சை எடுக்கிறானுக பாரு என்றுதான் தோணும். :‍)

நித்யானந்தா மட்டுமல்ல ... இந்த பணக்கார கார்ப்ரேட் சாமியார்கள் எல்லாருமே அழிக்கப்படவேண்டும். பக்தர்களை போதைக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் கல்கி, தான் போகும் இடமெல்லாம் பணக்காரர்களின் வீடுகளில் பூஜை செய்கிறேன் பேர்வழி என்று பணத்தைத் திருடும் அமிர்தானந்தமயி, (பங்காரு, ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ் எல்லாம் பிராடுகளான்னு தெரியல்.. யாராவது சொல்லுங்க) இன்னும் குறிசொல்றேன்னு போட்டி போட்டு ஆளுக்கு ஒரு அம்மனையும், கருப்பசாமியையும், அகத்தியரையும், ஆஞ்சநேயர் பெயரைச் சொல்லியும் பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரர்களும் ஒழியவேண்டும்.

மனஅமைதி வேணும்னா கோவிலுக்குப் போ, கண்ட கருமம் பிடிச்ச நாய்கள்ட்டயும் ஏன் காசைக் கொண்டு போய் கொட்டுறீங்க. ரொம்ப பணம் இருந்தா என் அக்கவுன்ட் நம்பர் தாரேன் அதுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுங்க. வெட்டிப்!@#$$க....

சானியா‍‍ சோயப் மாலிக். ஏன் எல்லாரும் இந்தியா பாகிஸ்தான்னு சண்டை போடுறாங்கன்னு தெரியல.. இதே ஒரு பாகிஸ்தான் பொண்ணு இந்தியாவுக்கு கல்யாணமாகி வந்தா பத்திரிக்கைகள் 'மருமகளே வருக!' என எழுதியிருக்கும். அதே நேரம் சானியா சோயப் ஆயிஷா எல்லாமே அவங்க குடும்ப விசயம். அதுக்குப் போயி இந்த வ(ம)ட இந்திய ஊடகங்கள் இவ்வளவு பெருசு பண்றாங்கன்னு தெரியல. எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் சண்டையிட்டு விவாகரத்து பெற்று சோயப்பின் முகத்திரையைக் கிழத்த ஆயிஷா பாராட்டுக்குரியவர். வெட்கக்கேடான ஒருவிசயம் சானியா சோயப் விசயம் பீக்ல இருந்தப்போ நக்சல் தாக்குதலில் 53 ராணுவ சகோதர்கள் கொல்லப்பட்டது இந்த மட இந்திய மீடியா நாய்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டதுதான். நாசமாப் போக.

அடுத்து ஐபிஎல் லலித்மோடி. ஐயா செம கில்லாடி. கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு சின்னவிசயத்தையும் பைசாவாக மாற்றியவர். 'தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?' பிசிசிஐக்கு 5000 கோடின்னா எனக்கு 500 கோடின்னு நல்லா கமிசன் அடிச்சு ஜமாய்ச்சிருக்கார். இப்போ போயி வருமானவரி சோதனை பண்றாங்களாம். ஒன்னியும் பண்ணமுடியாது. பின்னால ஏகப்பட்ட்ட கைகளுக்குப் பங்கு இருக்கு போல. ஐயா இவனுங்க இப்படி கோடிக்கணக்குல வ்ரி ஏமாத்தியிருக்கானுகளே, 2007ல் எனக்கு நீங்க 4200 ரூபா கூடுதலா செலுத்துன வரியை திரும்பத் தரணுமே எப்பத் தரப்போறீங்க?

தமிழ்நாட்டில் அழகிரி. சானசே இல்லை. திமுக தலைவர் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன்னு சொல்லி குட்டையைக் குழப்பிட்டு ஜாலியா வெளிநாடு போயிட்டார். தமிழ்ல தான் நாடாளுமன்றத்துல பேசுவேன்னு அடம்பிடித்து தமிழுக்கு அங்கே இடம்வாங்கிக் கொடுத்தால் புண்ணியமாப் போகும்.

ஸ்டாலின் மேல் எப்பவுமே ஒரு மரியாதை உண்டு. இரு நாட்களுக்கு முன் தவறான சிகிச்சையால் கண்பார்வை பாதிக்கப்பட்ட தங்கை சுரேகாவின் சிகிச்சைக்கு முழுச் செலவையும் ஏற்று தான் ஒரு சிறந்த மனிதநேயமிக்க மனிதர் என்று உணர்த்தியிருக்கார். இதுபோல தன் பேர்கூட வெளிய வராம எவ்வளவோ பேர் உதவிகள் செய்றாங்க. அவங்களுக்கும் ஒரு வணக்கம்.

ஐபிஎல்ல சென்னை வென்றது மகிழ்ச்சி. அதிலும் 'வெற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்' என்ற ஹைடன் பேச்சு ஹைலைட். தோத்துப் போன‌ மும்பை பசங்க மேட்ச் பிக்சிங்னு புலம்புறதெல்லாம் ஓவர். போனதடவை நாங்க ராஜஸ்தான்கிட்ட தோத்தப்ப இப்படியா புலம்பினோம். சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு... :)

இன்னும் இருக்கு ... அப்புறமா சொல்றேன்.

ஓட்டப் போட்டுட்டுப் போங்க சாமி ....

Friday, April 09, 2010

Bear Grylls - பயம் அறியான் !!


Bear Grylls - பேர் கிரில்ஸ். இந்தப் பெயர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கும் நீங்கள் டிஸ்கவரி சேனலை விரும்பிப் பார்ப்பவர் என்றால். இவர் தான் 'ஆபத்தை அரவணைக்கும் அசகாய சூரர்' என்ற அடைமொழியுடன் Man vs Wild என்ற நிகழ்ச்சியில் சாதித்துக் காட்டுபவர்.

தன்னந்தனியே காட்டிலோ, பாலைவனத்திலோ, பனிப்பிரதேசத்திலோ, கடலிலோ, தீவிலோ, ஆற்று வெள்ளத்திலோ நாம் மாட்டிக் கொண்டால் எப்படி சமயோசிதமாகச் சிந்தித்தும், இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மட்டுமே வைத்து அந்தச் சூழலிலிருந்து உயிர் தப்பிப்பது என்பதைக் காட்டுவது தான் இந்த Man vs Wild.

இந்த நிகழ்ச்சியில் தான் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும் மனிதராக வந்து கலக்கும் ஹீரோதான் Bear Grylls - பேர் கிரில்ஸ். யார் இவர்? இவருக்கு ஏன் இந்த வெட்டி வேலை?

Bear Grylls - பேர் கிரில்ஸ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 35 வயதாகும் இவர் பிரிட்டனின் விமானப்படையில் பணியாற்றியவர். 24 வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் ஆங்கிலேயர். ஆபத்துகளை எதிர்நோக்கி அவற்றில் இருந்து மீண்டுவருவதில் கரைகண்டவர். அபாயங்களைக் கண்டு அஞ்சாதவர். ஏன் அதைப் பற்றியே சிந்திக்காதவர்.

தான் இராணுவத்தில் பணியாற்றியபோது கற்றுத் தரப்பட்ட உபாயங்களைக் கொண்டும் , தானாக அறிந்தவற்றைக் கொண்டும் இவர் இந்த நிகழ்ச்சியில் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு அவற்றை வெல்கிறார்.

விமான விபத்துகளில் சிக்கியும், போர்க்காலங்களில் வேறுவழியின்றி தனிமையில் மாட்டிக் கொள்ள் நேரிடும் வீரர்கள் எப்படி அந்த சூழலை எதிர்கொண்டு உயிருடன் மீண்டு வருவது என்பதை மக்களுக்கு உணர்த்தவேயாம்.

அப்படி என்ன தான் இவர் சொல்லித் தருகிறார்? அதுதான் Survival Techniques.
மனிதன் உயிர்வாழ நெருப்பு அவசியம். கையில் தீப்பெட்டியோ, லைட்டரோ இல்லாத நிலையில் எப்படி நெருப்பு பற்ற வைப்பது, எப்படி காட்டுக்குள் குடில் அமைப்பது, எந்த‌ வ‌கையான‌ செடிக‌ள், ப‌ழ‌ங்க‌ள், காளான்க‌ளைச் சாப்பிட‌லாம், சூழலை உணர்ந்து எப்படி தப்பிப்பது உதாரணமாக ஆற்று வெள்ளம் திடீரென் அதிகமானால் அதை எப்படி உணர்வது போன்றவை.

மனிதர் வெளுத்துக் கட்டுகிறார். மலையேறுவதில் கில்லாடி. இண்டு இடுக்குகளில் நுழைந்து, கும்மிருட்டாய் வௌவால்கள் நிறைந்த குகைக்குள் அலைந்து, நீருக்குள் மூழ்கி என தன் சாகசத் திறமைகளால் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறார்.

இவர் பச்சையாக சாப்பிடாத பூச்சிகள், பாம்புகள், நத்தைகள், மீன்கள், தவளை, பல்லிகள் கிடையாது. 'புரதச்சத்து அதிகம் கிடைக்கும்' என்று எல்லாத்தையும் அப்படியே கடித்துத் தின்பார். ஏன் ஒருமுறை தண்ணீர் தாகம் என்று பாலைவனத்தில் சிறுநீரையும் குடித்தார். இதெல்லாம் செய்தால்தான் இக்கட்டான சூழலில் நாம் உயிர் வாழமுடியும் என்று சொல்கிறார். நமக்காக பாவம் மனிதர் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?? இவர் வீட்டில் எப்படித்தான் பொறுத்துக் கொள்கின்றனரோ? சும்மா சொல்லக் கூடாது ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உலகம் முழுவதும்.

இவ்வளவு திறமைகள் இருந்தும் மனிதர் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் மாட்டியிருக்கிறார். முதன்முதலாய் இவரது நிகழ்ச்சி ஒளிபரப்பனபோது இவர் காட்டுக்குள் தனியே இருப்பது போல காட்டியவுடன், 'தனிமனிதனுக்கு எப்படி தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இப்படி தவிக்கவிடலாம்?' என்று சர்ச்சை எழுந்திருக்கிறது. அதன் பின்னர்தான் 'தனிமனித பாதுகாப்பு சட்டவிதிகளின் படி பாதுகாப்பு' வழங்கப்படுவதாக நிகழ்ச்சி துவங்கும் முன்னர் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுவாவது பரவாயில்லை. தான் நடத்தும் நிகழ்ச்சியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு உண்மை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு இவரது இமேஜ் அதலபாதாளம் சென்றுவிட்டது. அது என்ன? இவரைப் போன்றே 'Les Stroud - லெஸ் ஸ்ட்ராடு' என்றொரு 'காட்டுவாசி' இருக்கிறார். இவரது ரசிகர்களுக்கும், Bear Grylls - பேர்ல் கிரில்ஸின் ரசிகர்களுக்கும் இணையத்தில் ஒரே முட்டல் மோதல் தான். ஏன் இப்படி? Bear Grylls - பேர்ல் கிரில்ஸ் உண்மையிலே திறமையானவரா அல்லது அப்படி முன்னிறுத்தப்படுகிறாரா? Bear Grylls vs Les Stroud யார் சிறந்த காட்டுவாசி அல்லது ஆபத்துகளை வெல்பவர்? இதல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாமே?

Friday, January 08, 2010

பசுமை இல்ல வாயுக்கள் - நம் பங்களிப்பு என்ன ?


பசுமை இல்ல வாயுக்கள் அப்படின்னா என்ன? கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும். பூமியை மிதமான சூடான வெப்பத்தில் வைத்திருக்கும் வாயுக்களே அவை. இந்த வாயுக்களால்தான் பூமியில் தாவரங்களும், உயிரினங்களும் தோன்றின. இல்லையெனில் பூமி வெறும் பனிக்கோளமாகவே இருந்திருக்கும். இந்த வாயுக்களால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 33 டிகிரியாக உள்ளது.

இந்த வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் உயிரினங்கள் அழியும். துருவப்பகுதிகள் உருகத் துவங்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும். இந்த வாயுக்கள் அதிகரிக்க என்ன காரணம்? சுலபமான விடை மனிதனின் ஆதிக்கம்.

கீழே உள்ள 10 காரணிகள் தான் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணம்.

1. மின் உற்பத்தி நிலையங்கள் - 25%
நிலக்கரி மற்றும் எண்ணையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் உலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு.

2. காடுகள் அழிப்பு - 20%
விவசாயம் மற்றும் குடியேற்றங்களுக்காக காடுகள் அழிப்பு. இதனால் பசுமைஇல்ல வாயுக்கள் உறிஞ்சப்படாமல் பூமியில் இருக்கின்றன.

3. போக்குவரத்து - 13%
வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

4. எரிபொருள் உற்பத்தி - 6.3%
பெட்ரோல் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு

5. உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் - 6%
பயிர்களுக்குப் போடப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நைட்ரேட் ஆக்சைடை வெளியிடுகின்றன

6. பண்ணைகள் - 5%
பண்ணைகளில் உள்ள மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் வெளியிடும் மீத்தேன்

7. சிமெண்ட் உற்பத்தி - 4%
பெருகிவரும் குடியேற்றங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் சிமெண்ட் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறதி. இந்த ஆலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணி.

8. விமானங்கள் - 3.5%
விமான எரிபொருளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு

9. இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தி - 3.2%
இந்த தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

10. குப்பைகளும் கழிவுகளும் - 3%
குப்பைகளில் வெளிப்படும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு


இந்த வாயுக்களின் உற்பத்தியைக் குறைக்கத்தான் உலகநாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன. இவையெல்லாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் ம்ட்டுமே முயன்று தீர்வு காண முடியும் என்றல்ல.


அன்றாட வாழ்வில் சாதாரண மக்களாகிய நாமும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறோம். தனிமனிதனாக நாமும் நம்மால் முயன்ற அளவு இவற்றைத் தவிர்க்க முடியும். சிறிய விசயங்கள்தான் மிகப்பெரும் பலன் தரும். ஒவ்வொரு வீட்டிலும் முயன்றால் சிறுதுளி பெரு வெள்ளம்.

1. சாதாரண விளக்குகளுக்குப் பதில் CFL விளக்குகளைப் பயன்படுத்துதல். இதனால் மின்சாரப் பயன்பாடு குறையும். உற்பத்தியும் அதிக அளவில் தேவையிருக்காது.

2. மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி ஆகியவை பயன்படுத்துதல். Energy Star முத்திரை 3க்கு மேல் இருப்பதை வாங்கலாம்.

3. அலுவலகக் கணினிகளை Stand byல் வைக்காமல் இயக்கத்தை முழுவதும் நிறுத்திவிடுதல்

4. ஏசிகளின் பில்டரை அடிக்கடி சுத்தம் செய்யலாம்.

5. தண்ணீர் சுடவைக்கும் இயந்திரங்களுக்குப் பதிலாக சூரிய ஒளி வெந்நீர் அடுப்புகளைப் பயன்படுத்தலாம். தண்ணீரை எப்போதும் 50 டிகிரிக்கு மேல் சுடவைக்க அவசியமில்லை.

6. துணிகள் அதிகம் இருந்தால் மட்டும் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்

7. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். பிக் ஷாப்பர் பைகள் மிகவும் வசதியானவை. கடைகளில் கொடுக்கும் பாலித்தீன் பைகளைத் தவிர்க்கலாம்.

8. குப்பைகளைப் பாலித்தீன் பைகளில் சேகரிக்கும் பழக்கத்தை மாற்றி குப்பைவாளிகளில் மட்டும் சேகரிக்கலாம். பாலித்தீன்களை எரிக்கும் போது வெளிவரும் வாயுக்கள் அதிக தீமை விளைவிப்பவை.

9. வாகன உபயோகத்தை முடிந்த அளவு குறைக்கலாம். Car pooling எனப்படும் முறையில் நண்பர்கள் சேர்ந்து ஒரு வாகனத்தை உபயோகிக்கலாம்.

10. வார இறுதி நாட்களில் பேருந்துகளை மட்டும் பயணத்துக்குப் பயன்படுத்தலாம். நெரிசலும் இருக்காது தானே??

11. சிக்னல்களில் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

12. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மரம் வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் டன் கணக்கில் கார்பன் டை ஆக்சைடை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது


இதுபோன்ற செயல்கள் டென்மார்க் நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. டென்மார்க் தன் மின் உற்பத்திக்கு காற்றாலைகளையே பெரும்பாலும் பயன்ப்டுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டத் தடையும் உள்ளது. டென்மார்க் உலகுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.அதனால் தான் தலைநகர் கோபன்ஹகனில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.

பிரிட்டன் போர்னியோ, நியூகினியா தீவிலுள்ள அடர்ந்த காடுகளை விலைக்கு வாங்கி அங்கு மரங்களை வெட்டத் தடைசெய்யும் படி அந்நாட்டு அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


நம் அரசாங்கமோ சாலை விரிவாக்கம், நான்கு வழிச் சாலை என இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டித்தள்ளிவிட்டது :( . அரசை நம்பிப் பயனில்லை நாமே முயன்றால் தான் உண்டு.

தகவல் கோர்வை - இணையம்

Saturday, January 02, 2010

சீனத்தயாரிப்புகள் வரமும், சாபமும்


இன்றைக்கு நம்மில் பெரும்பாலோனோர் வீட்டில் குறைந்தது ஒரு சீனப்பொருளாவது இருக்கும் நிலைமை இருக்கிறது. காரணம் அதன் குறைந்த விலை. குறிப்பாக அலைபேசிகளின் உபயோகத்தால் சீனத் தயாரிப்புகள் அனைவரையும் மிக எளிதில் சென்று அடைந்து விடுகின்றன. அமெரிக்கா கூட இந்த மலிவுவிலை சீனப்பொருள்களைக் கண்டு அஞ்சுகிறது.

பெரும்பாலோனோரின் முதல் சீனத்தயாரிப்பாக ஹீரோ பேனாதான் இருந்திருக்க முடியும். பள்ளிகளில் தலைமையாசிரியரின் அடையாளமே தங்கநிற மூடி போட்ட ஹீரோ பேனாதான்.

சீனத்தயாரிப்புகளுக்கு எப்படி இவ்வளவு வெற்றி? அதன் மலிவு விலையும், மேம்பட்ட உபயோகமும்தான். சீனப்பொருள்களின் தரமும் குறை சொல்லும் அளவு இருந்ததில்லை. எவ்வளவோ சீன அலைபேசிகள் மற்ற பிராண்டட் மொபைல்களைவிட குறைந்தவிலையில் அதிக Featuresஉடன் கிடைக்கின்றன். அதனால் தான் அவற்றுக்கு இவ்வளவு வரவேற்பு. பிரச்சினை வந்தால் தூக்கிப் போட்டுவிட்டு வேறு வாங்கிக் கொள்ளவேண்டியது தான். அதை சர்வீஸ் எல்லாம் செய்யமுடியாது. பிராண்டட் மொபைல்களில் பிரச்சினை வந்தால் அவற்றின் உதிரி பாகங்களின் விலை மொபைல்வாங்கிய விலையைவிட அதிகமாகவே இருக்கின்றன.

அலைபேசிகள் மட்டுமல்ல மற்றுமொரு முக்கியமான சீனத்தயாரிப்பும் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றிதான். அவைதான் பொம்மைகள். இன்றைய குழந்தைகள் விளையாடாத சீனப்பொம்மைகளே இல்லை. உள்ளூர் தயாரிப்பில் 700, 800 இருக்கும் சீனத்துக் கார் பொம்மைகளின் விலை வெறும் 100, 150 தான். மேலும் இவற்றால் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைப்பதால் சீனப்பொருள்களை விற்றுவருகின்றனர். இன்றும் சீனத்தயாரிப்புகளை மட்டும் விற்கும் கடைகள் ஏகப்பட்டவை உள்ளன.

இப்படி அலைபேசிகள், பொம்மைகள் என மக்களுக்கு உபயோகமாக இருந்த சீனப்பொருள்கள் இன்று தடை செய்யப்படும் நிலைமைக்கு வரக் காரணம் என்ன? இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க போலி வீட்டு உபயோகப் பொருள்களை Made in India என்று போட்டு வெளியிட்டதுதான். சமீபகாலமாக எல்லையில் இந்தியாவைச் சீண்டிவரும் சீனா, ஷாம்பூ, முகக்ரீம் என ஏகப்பட்ட போலித் தயாரிப்புகளை இந்தியாவில் தயாரித்ததாக முத்திரையிட்டு இந்தியாவுக்கே அனுப்பி விற்கப்பார்த்தது.


இங்கேதான் பிரச்சினை. இதனால் மலிவு விலையில் கிடைக்கும் பிற சீனப்பொருள்களின் தரமும் கேள்விக்குறியானது. முதல்கட்டமாக IMEI எண் இல்லாத சீன அலைபேசிகளை உபயோகப்படுத்தமுடியாது எனக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. விடுமா சீனா? இப்பொழுது IMEI எண்ணுடனும் சீன அலைபேசிகள் கிடைக்கின்றன. இப்பொழுது எப்படி சீனப்பொருள்களின் உபயோகத்தைத் தடுப்பது எனவும் அரசு சிந்தித்து வருகிறது.

இன்னொரு முக்கியவிடயம் பார்ப்பதற்குக் கண்களைக் கொள்ளை கொள்ளும் சீனா பொம்மைகள் மற்றும் அலைபேசிகள் தரமில்லாத பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சொல்லி வருகின்றன. மலிவு விலையில் கிடைக்கும் இந்தப் பொருள்களால் நிச்சயம் நம் உள்நாட்டுத் தயாரிப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் உள்நாட்டுத் தயாரிப்புகளோ எளிய மக்களுக்குக் கட்டுபடியாகத விலையில் அல்லவா கிடைக்கின்றன. எனவே ஆபத்தை அறியாத மக்கள் அவற்றையே வாங்குகின்றனர். கோழியா முட்டையா கதைபோல் இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வாக இருக்க முடியும்?