Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Tuesday, February 10, 2009

ரிச்சி ஸ்ட்ரீட் aka நரசிங்கபுரம் தெரு


உங்களுக்கு சென்னையில் நரசிங்கபுரம் தெரு எங்கே இருக்கிறதென்று தெரியுமா? என்னப்பா சத்யம் திரையரங்கம் தெரியுமாங்கிற மாதிரி கேட்கிறங்கிறீங்களா? அது சென்னையில் எல்லாருக்கும் தெரிஞ்ச இடம் தான். அதுதான் ரிச்சி ஸ்ட்ரீட் என தமிழில்(!) அழைக்கபடும் மின்னணு சாமான்கள் விற்கப்படும் தெரு.

ஜவுளிகளுக்கு எப்படி ரங்கநாதன் தெருவோ அதைப் போல மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) பொருட்களுக்குப் பேர் போன தெரு ரிச்சி ஸ்ட்ரீட். ஒரிஜினல் சாமான்கள், ஒரிஜினலைப் போலவே இருக்கும் டுபாக்கூர் சாமான்கள், கம்பெனி ப்ராண்டட் சாமான்களைவிட தரமான மின்னணு சாதனங்களை இங்கே வாங்கலாம். கணிப்பொறிக்குத் தேவையான திருகாணி முதல் ப்ராசசர் வரை சகலமும் கிடைக்கும் தெரு.

இந்தத் தெரு 1974ல் வெறும் 5 கடைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இப்போது 900க்கும் மேற்பட்ட கடைகளுடன் ஒட்டு மொத்த சென்னை/தமிழகத்துக்கும் தேவையான மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் இடமாக உள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய மின்னணுப் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையாக உள்ளது. இங்கே கடை வைத்திருப்பவர்கள் முக்கால்வாசிப் பேர் குஜாராத்திகள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு (ரொம்பப் பெருமை ! ).

ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் அளவுக்கு இங்கேயும் கூட்டம் எல்லாக் கடைகளிலும் மொய்க்கிறது. பெரும்பாலான மக்கள் வாங்க வருவது கணினிக்குத் தேவையான பொருட்கள், USB pen drive, mobile memory card போன்றவை. இங்கே வாங்க முடியாத மின்னணு சாதனங்களே இல்லை எனலாம். நமக்குத் தெரிந்த எல்லா கம்பெனி ஐட்டங்களும், தெரியாத ஏகப்பட்ட சரக்குகளுக்கும் கிடைக்கின்றன. புதிதாக ஒரு கணினி வாங்க வேண்டும் என்றால் ஷோரூம் போய் அங்கே காட்டும் கணினியை வாங்குவதற்கு அதே configuration உடன் இங்கே 10000 குறைவாகவே வாங்கிவிடலாம்.

கணினி மட்டுமின்றி ’ரிச்சி ஸ்ட்ரீட் மேட்’ டிவிடி ப்ளேயர்கள், மெமரி கார்டுகள், மொபைல் போன்கள், கணினி உதிரி பாகங்கள் என வாரண்டி இல்லாத சரக்குகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. புதியன மட்டுமின்றி பழைய பொருட்களையும் சரி செய்து விற்கிறார்கள். கணினியில் அல்லது தனியாக Play station வைக்கத் தேவையான எல்லாப் பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. என்ன புது எலக்ட்ரானிக்ஸ் சாமான் வந்தாலும் அடுத்த நாளே இங்கே எதிர்பார்க்கலாம். ஒரிஜினலாகவோ அல்லது டுபாக்கூராகவோ !!! :)))

நான் ஒரு முறை மெமரி கார்ட் வாங்கப் போனபோது அந்தக் கடைக்காரர் ஒரு பேனாவை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார். என்ன வென்று பார்த்தால் அது ஒரு ரகசிய கேமராவுடன் உள்ள பேனா. 4 மணி நேர ரெக்கார்டிங் வசதியுடன் USB plug & play model. விலை வெறும் 700. இப்படி அன்றாட உபயோகத்துக்கு அல்லாத பல பொருட்கள் இங்கே மலிவாகக் கிடைக்கின்றன.


இப்படி எல்லாமே இங்கே கிடைத்தாலும் சில பிரச்சினைகளும் இங்கே இருக்கின்றன. முதலாவது டூப்ளிகேட் சாமான்கள். நாங்கள் ஒரு முறை ஆப்பிள் ஐபாட் வாங்கப் போன போது அந்தக் கடைக்காரன் ”ஒரிஜினலா, டூப்ளிகேட்டா?” என்றான் (ரொம்ப நல்லவன்) . இரண்டிலும் கொஞ்சமும் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியவில்லை. விலை மட்டுமே வித்தியாசம். டூப்ளிகேட் மூன்று மடங்கு விலை குறைவு. இது என்ன தங்கமா? உரசிப் பார்த்து வாங்க? அவன் ஒரிஜினல் என்று சொன்னதையே வாங்கித் தொலைத்தோம். ஒன்றும் பிரச்சினையில்லாமல் வருகிறது.

அடுத்தது இங்கே நிறைய கடைகள் இருப்பதால் எல்லாக் கடைகளிலும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். நாங்கள் புதிதாதகக் கணினி வாங்க வேண்டியிருந்ததால் நிறையக் கடைகளில் Configuration சொல்லி விலை விசாரித்தோம். ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது 600 ரூபாய் விலை வித்தியாசம் இருந்தது. பின்னர் 'Delta peripherals' என்ற கடையில் வாங்கி விட்டு 250 கொடுத்து மாடியில் ஒரு இடத்தில் எல்லா பாகங்களையும் மாட்டினோம். கடையில் இருக்கும் பொடியன் சர்வ சாதரணமாக எல்லாவற்றையும் மாட்டுகிறான்.

அடுத்தது வாரண்டி. வாங்கும் வரை ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டு பின்னால் எதாவது பிரச்சனை என்று அடுத்த நாள் போய்க் கேட்டால் “யார் நீ?” என்று கேட்பார்கள். இல்லையெனில் “கம்பெனி வாரண்டி. நாங்க எதுவும் பண்ண முடியாது” என்பார்கள்.

அடுத்த பிரச்சினை. கூட்டமாக உள்ள கடைகளில் நீங்கள் ஒரு சாமான் வாங்குவதற்குள் உங்களுக்கு பிபி ஏறி பின்னர் குளுக்கோஸ் தான் ஏற்றணும். பின்னே நீங்கள் எதாவது சாமான் கேட்டால் என்னவோ க்டன் கேட்ட மாதிரி கடையில் இருப்பவர்கள் மதிக்கவே மாட்டார்கள். ஒரு பத்து தடவை கேட்டு பின்னர் அங்கே இருப்பவன் கையைப் பிடித்து இழுத்துக் கேட்டால்தான் எடுத்துத் தருவான். எனவே ஹைபிபி மக்கள் தவிர்க்கவும். :)

சரி அப்படின்னா எதுக்கு இங்க போய் ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு தெரியாம ஒரு பொருளை வாங்குறதுக்கு நேரா ஷோரூமுக்குப் போய் வாங்கிரலாமே என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இங்கே ஒரிஜினல் சாமான்களும் விலை கம்மி. உதாரணத்துக்கு ஸ்பென்சரில் ஒரு கேமரா மெமரிகார்ட் 1GB 850 ரூபாய் சொன்னார்கள். அதே மெமரி கார்ட் 2GB 550க்கு ரிச்சி தெருவில் வாங்கினேன். எனவே நாம் நம்பிக்கையான கடையைத் தேர்ந்தெடுத்துப் போனால் ஒரு பிரச்சினையும் இல்லை.

என் அனுபவத்தில் கணினி உதிரி பாகங்கள், உதா. எலி, விசைப்பலகை, ஹெட்போன் மற்றும், USB pendrive, Mobile memory card போன்றவை வாங்க 'Oasis networks' என்ற கடையில் குறைவான விலைக்கு ஒரிஜினல் சாமான்களை வாங்கலாம். இது பிரதான வீதியிலேயே உள்ளது.

புதிய கணினிக்கு எல்லா பாகங்களும் வாங்கி பின்னர் தனியாகப் பொருத்த வேண்டுமானால் 'Delta peripherals' என்ற கடை உள்ளது. நாங்கள் விசாரித்தவரை இங்கே எல்லாப் பொருட்களும் விலை குறைவாகவே கிடைக்கின்றன. 'Oasis networks' க்கு எதிரில் கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸின் உள்ளே இருக்கிறது.

எந்தக் கடைக்குப் போனாலும் பிராண்ட் பெயரைச் சொல்லியே கேளுங்கள். உதா USB pendrive, Mobile memory card வாங்க வேண்டுமானால் Kingston, Transcend, Sandisk போன்றவை பிரபலமானவை. பேர் சொல்லாமல் கேட்டால் அவர்கள் வைத்திருக்கும் டுபாக்கூரைக் கொடுப்பார்கள். நினைவிருக்கட்டும் ஒரிஜினல் சாமான்கள் எப்பவும் மூடிய உறையில் (Sealed pack) மட்டுமே வரும். உறை கிழிந்திருந்தாலோ, இல்லாமல் இருந்தாலோ வாங்க வேண்டாம்.

குறிப்பாக ஆளே இல்லாத கடையில் வாய் நிறைய பீடா போட்டுக் கொண்டு ஷோக்காக எவனாவது உட்கார்ந்திருந்தால் அவன் கடைக்குப் போகவே வேண்டாம். கண்டிப்பாக அவன் டுபாக்கூர்தான். (அனுபவம் இருக்கில்ல !!!)

Sunday, November 30, 2008

சென்னையில் ஒரு மழைக்காலம்


'சென்னையில் மழை பெய்யாது, வெயில் அதிகம், வேர்க்கும், தண்ணீர்ப்பஞ்சம் இருக்கும், ஊர் ரொம்ப அழுக்கா இருக்கும், அதெல்லாம் ஒரு ஊரா?' நீங்க அப்படி நினைக்கிற ஆளா?. குறிப்பா பெங்களூர் மக்கள் :). இவை எல்லாம் இருந்ததுதான். ஆனால் 2004 கோடைகால‌ம் வரை.

அதன்பிறகு 2004 மழைக்காலத்தில் கொட்டித்தீர்க்க ஆரம்பித்த மழை இப்பொழுது வரை வருடாவருடம் தொடர்கிறது. அதனால் சென்னையைப் பத்தி தப்பா நினைக்காம நடப்பு நிலவரத்தையும் தெரிஞ்சுக்கங்க. 2004க்குப் பிறகு இப்போ மீண்டும் நிஷாவின் கோரத்தாண்டவத்தால் சென்னை திரும்பவும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

ஏற்கனவே இரண்டு வாரங்கள் முன்பு மழை நன்கு பெய்து ஓய்ந்து போய் டிசம்பரில் வரவேண்டிய பனிக்காலம் முன்பே தொடங்கியிருந்தது. (உலகம் வெப்பமயமாதல் காரணமா?) இப்போ தொடர்ந்து ஐந்து நாட்களாகப் பெய்துவரும் மழையால் முதலில் மகிழ்ச்சியாயிருந்தாலும் வெள்ளம் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது, 90 பேர் பலி ஆகிய செய்திகளைப் படிக்கவும் நின்று போனது. இப்போதைக்கு மழை பெய்யாமலிருந்தால் போதும் என்று நினைத்தாலும் இதோ இப்போதும் விட்டு விட்டுப் பெய்து கொண்டுதான் இருக்கிறது. பெய்யெனப் பெய்யும் மழை. பெய்தும் கெடுக்கும் மழை.

2003ம் வருடம் டிசம்பரில்தான் நானும் பிராஜெக்ட் பண்ண‌ சென்னைக்கு வந்தேன். வடபழனியில் வீடு. இரண்டு படுக்கையறை வாடகை வெறும் 3600. 5 பேர் தங்கியிருந்தோம். அரசல் புரசலாக சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் தெரிந்திருந்தாலும் வாழக்கையே வெறுத்துப் போனது அப்போது தான். ஜனவரியில் நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை. நாங்கள் தங்கியிருந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் எல்லோரும் சேர்ந்து தண்ணீர் லாரியில் காசு கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தினோம். அதுவும் மகா மட்டமாக இருக்கும். கூவத்தின் ஓரத்தில் தெளிந்திருக்கும் தண்ணீரை எடுத்து வந்திருப்பானுங்களோன்னு நினைக்கத் தோணும். வெறும் ஒரு வாளித்தண்ணீரில் குளியல். ஒரு வாளித்தண்ணீரில் ஒரு வாரம் போட்டிருக்கும் உடைகளைத் துவைத்து அலசுவது என மகா கொடுமை.

அந்தக் கொடுமைக்கெல்லாம் விடிவு என்பது போல 2004ல் மழைக்காலத்தில் கொட்டித் தீர்த்தது மழை. ஊர் முழுவதும் வெள்ளமென்றாலும் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. அப்பொழுதிலிருந்து இதோ இப்போது வரை தண்ணீர்ப் பிரச்சினையெல்லாம் கிடையாது. தொடர்ந்து மழைபெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விட்டதால் வீடு வாடகையையும் கண்டமேனிக்கு உயர்த்தி விட்டார்கள். நாங்கள் இருந்த வீட்டின் தற்போதைய வாடகை 8500.

இந்த மழைக்காலத்தில் நான் இருக்கும் சூளைமேடு பகுதி எவ்வளவோ தேவலை. எப்பவும் போல வேளச்சேரி, மடிப்பாகம் பகுதிகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. வண்டியை வெளியில் எடுத்து 5 நாட்களாகிறது. ஸ்டெர்லிங் சாலை, கல்லூரி சாலைகளில் தண்ணீர் தேங்கிப் போய் நிற்கிறது. ஆச்சரியம் இவ்வளவு மழைக்குப் பிறகும் சூளைமேடு சப் வேயில் தண்ணீர் தேங்கவேயில்லை. கல்லூரி சாலையில் இருக்கும் அரசு அலுவலகங்கள், மகளிர் கிறித்தவக் கல்லூரி, சங்கர நேத்ராலயா போன்ற‌ கூறுகெட்ட குப்பைகள் உள்ளே தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றுகிறேன் என சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.

2000 ரூபாய் நிவாரணம் என அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் நிக‌ழ்ந்த‌து போல‌ திரும்ப‌வும் ஏதேனும் அச‌ம்பாவித‌ங்க‌ள் நிக‌ழ்ந்துவிட‌க்கூடாது. அர‌சு அலுவ‌ல‌கங்க‌ளுக்கு ம‌ட்டும் விடுமுறை என‌ ஒரு த‌லைப‌ட்ச‌மாக‌ ஆணை பிற‌ப்பித்த‌ அர‌சைக் க‌ண்டிக்கிறேன். ஏன் த‌னியார் அலுவ‌ல‌கங்க‌ளில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் நீச்ச‌லடித்தா அலுவ‌ல‌க‌ம் செல்ல‌ முடியும்? ;) . அடுத்த முறையாவது அளவோடு பெய்யட்டும் மழை.

வெயில், வேர்வையெல்லாம் இப்போ சென்னையில் இல்லையா எனக் கேட்கும் பெங்களூர் பெருமான்களே ஒரு வாரமா சென்னையில் ஓசி ஏசி தெரியுமா?