Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Wednesday, October 28, 2009

மாமல்லபுரம்


’சிவகாமியின் சபதம்’ - பண்டைத் தமிழகத்தின் பல்லவ சாம்ரஜ்யம் எப்படி எழுச்சியுற்று வாதாபியை வென்று கணபதியைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்தது என ஒரு காதலின் பின்னணியில் புனையப்பட்டிருக்கும் அருமையான சரித்திரப் புதினம்.

மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் அவர்களது சிற்பக்கலை மீதான காதலை அருகிலிருந்து கண்டது போல சிவகாமியின் சபதத்தில் படித்து விட்டு அவர்கள் ஆட்சி புரிந்த மாமல்லபுரத்திற்குச் செல்லவில்லையென்றால் எப்படி???

கோடைவாட்டியெடுக்கும் ஒரு விடுமுறை நாளில் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் செல்லலாமெனத் திட்டமிட்டு நண்பகலில் அங்கு சென்றாயிற்று. ஆனால் கோடையில் வந்தது எவ்வளவு தவறு எனப் பின்னர் உணர்ந்தேன்.

பேருந்து நிலையத்திற்கு அருகில் நடந்து செல்லும் தொலைவில்தான் சிறப்புமிக்க ’கடற்கரைக் கோவில்’ உள்ளது. ஆர்ப்பரிக்கும் கடல் பின்னணியில் கோவிலைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி.

கிபி 640ல் மகேந்திரவர்மரால் குன்றைக் குடைந்து குடைவரைக் கோவிலாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏகப்பட்ட சிற்பங்கள் கடற்காற்றால் அரிக்கப்பட்ட நிலையிலும் செதுக்கிய சிற்பிகளின் திறமையைக் காட்டுகின்றன.

இருகோவில்களாக உள்ள கடற்கரைக் கோவிலில் கிழக்கு நோக்கி அமைந்த கோவிலில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ளது. பின்புறம் உள்ள சிறிய கோவிலில் மேற்கு நோக்கி உள்ள சன்னிதி வெறூமையாக உள்ளது. உள்ளே சிலை எதுவும் அமைக்கப்படவில்லை அல்லது அழிந்திருக்கலாம். இதன் பின்புறம் உள்ள சன்னிதியில் படுத்திருக்கும் நிலையில் பெருமாள் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.


சுற்றிச் சுற்றிப் படங்கள் எடுத்தபின் மதிய உணவு. ம். பரவாயில்லை ரகம். அடுத்தது மகிசாசுரமர்த்தினி மண்டபம். இது ஐந்துரதம் செல்லும் சாலையில் உள்ளது. வலதுபுறம் சிறிய மலையின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே மூன்று மண்டபங்கள் உள்ளன. முதல் மண்டபம் பாறையைக் குடைந்து மூன்று சன்னிதிகளுடன் உள்ளது. உள்ளே சிறபங்களோ வேலைப்பாடுகளோ இல்லை.

அதற்கும் சிறிது மேலே சென்றால் அருமையான மகிசன் வதம் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மற்றொரு பக்கம் படுத்திருக்கும் திருமால் சிற்பம். பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இவ்விரண்டும் அவ்வளவு அருமை.




அவ்வ்வ்வ்... கால் வலிக்குதே !!! தண்ணீர் வேறு காலியாகிவிட்டது. இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னொரு மண்டபம் தெரிகிறது. அவ்வளவு தூரம் நடக்கமுடியாது என்று மேலே இருந்த இன்னொரு சிறிய மண்டபத்துக்குச் சென்றேன். இது என்ன கண்காணிப்புக் கோபுரமா அல்லது கலங்கரை விளக்கமா தெரியவில்லை. உள்ளே மேலே ஏறிச் செல்ல மாடிப்படிகள் உள்ளன.

கீழே இறங்கிவந்த பிறகு ஐந்துரதம் செல்ல நடைப்பயணம். சாலையின் இருபுறங்களிலும் சிற்பக் கூடங்கள். பெரிய பெரிய புத்தர் சிலைகள் வேலை முடிந்து வெளியில் வைக்கப்பட்டிருந்தன. அடுத்த சோதனையாக என் கேமரா வேலை செய்யவில்லை. பேட்டரியில் சார்ஜ் இல்லை. சும்மா ஒரு 250 படங்கள் மட்டுமே எடுத்திருந்தேன். முக்கியமான ஐந்து ரதங்களைக் கேமராவில் படம்பிடிக்க முடியவில்லை. என் அலைபேசியில் மட்டுமே படங்கள் எடுத்தேன்.




ஐந்து விதமான ரதங்களும் விதவிதமான சிற்பங்களுடன் கண்கொள்ளாத அழகுடன் விளங்குகின்றன. யானை, சிங்கம், நந்தி என அனைத்தும் அருமை.

அப்பாடா .... அவ்வளவு தான் கோடையின் கொடுமையில் இதற்கு மேல் என்னால் நடக்கமுடியாது. திருக்கழுகுன்றம் செல்லமுடியாது. பகீரதன் தவம், புலிக்குகை, திருக்கழுகுன்றம் காண முடியவில்லை. பயணம் பாதியில் முடிந்தது.

Wednesday, June 18, 2008

மதுரை-திருப்பரங்குன்றம்-அழகர்கோவில்-பழமுதிர்ச்சோலை-பதிவர் சந்திப்பு

'கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி' அப்படின்னு பழமொழி சொல்வாங்க. ஆனால் 'கடும் உழைப்புக்குப்(சரி.. சரி..) பின் விடுமுறை' அப்படிங்கிறதே எப்பவும் நம்ம கொள்கை. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்த ப்ராஜெக்ட் வேலை மே மாத இறுதியில் முடிவுக்கு வந்ததை அடுத்து "ஒரு வாரம் விடுப்பு வேணும்.குடுக்கலைன்னா எடுத்துக்குவேன்"ன்னு மிரட்டியிருந்ததால் விடுப்பு கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை.

ஒரு சின்ன ப்ளாஷ் பேக். ரெண்டு மாதம் முன்னாடி தூங்கிறப்போ கனவில் கையில் வேலோட முருகனும், அவர் மாமன் அழகரும் வந்து "ஏம்பா, ரெண்டு வருசம் மதுரையில் படிச்சியே எங்களை ஒரு தடவையாவது வந்து எட்டிப் பார்த்தியா? வாராவாரம் அல்வா வாங்கித் திங்கிறதுக்காகவே டவுன்ஹால் சாலை வழியா மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போன நீ அல்வா கிடைக்காதுங்கிறதுக்காக திருப்பரங்குன்றத்துக்கும், அழகர்கோவிலுக்கும் வராம டபாய்ச்சல்ல.. பாரு உனக்கு விடுப்பு கிடைக்காது" அப்படின்னு சொன்னதால "அப்படியெல்லாம் இல்லீங்கோ. நான் கூப்பிட்டப்போ துணைக்கு யாரும் வரமாட்டேன்னு சொன்னதால வரமுடியலீங்கோ. எனக்கு விடுமுறை கிடைச்சா கண்டிப்பா வந்து பார்க்கிறேன்"னு வாக்கு கொடுத்துட்டேன்.

கோவில் குளம்னு கூப்பிட்டாலே கம்பளிப் பூச்சியைப் பார்க்கிற மாதிரி நண்பர்கள் பார்க்கிறதால இப்பவும் தனியாகவே போக வேண்டிய சூழ்நிலை ஆகிப் போச்சு. சரியா இந்த நேரத்துல புரட்சிப்பதிவர் டிபிசிடி வேற மதுரையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொன்னதை நம்பி அதையும் என் பயணத்திட்டத்தில் சேர்த்துக்கிட்டேன். ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய் அடிக்க முடிவு பண்ணியாச்சு.


கிடைச்சது 9 நாட்கள் விடுமுறை. ஜூன் 7 முதல் 15 வரை. விடு ஜூட். விடுப்புக்கு முதல் நாள் நான் வேலையே பார்க்கலை. எல்லோர்கிட்டயும் போய் "நான் ஊருக்குப் போறேன். ஒரு வாரம் லீவு" அப்படின்னு பீத்திக்கிட்டே திரிஞ்சேன். ரொம்ப பேர் காண்டாகிட்டாங்க. வரும்போது எதாவது திங்கிறதுக்குக் கொண்டு வா. (அட உங்களுக்கெல்லாம் வேற ஒன்னுமே தெரியாதாப்பா? ஊருக்குப் போனா எதாவது திங்க கொண்டு வரணும்னு எவன் சட்டம் போட்டான்?). ஒரு வழியா மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது அதிகாலை மணி 2. டவுன் ஹால் சாலையில் அலைஞ்சு திரிஞ்சு ஒரு விடுதியைக் கண்டுபிடித்து தூங்க ஆரம்பிச்ச போது மணி 2:30.

என் திட்டம் இது தான். முதலில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம். பின்னர் திருப்பரங்குன்றம். அடுத்து அழகர் கோவில். அதற்கப்புறம் மலை மேல் பழமுதிர்ச்சோலை மற்றும் இராக்காயி அம்மன் கோவில் தரிசனம்.

மீனாட்சி அம்மன் கோவில்
சீக்கிரமே மீனாட்சி அம்மன் கோவில் போகணும்னு முடிவு பண்ணியதால் வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே தூக்கம் போட்டேன். காலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டமே இல்லாத தரிசனம். அம்மன் சன்னிதியிலேயே கூட்டம் இல்லை. சுவாமி சன்னிதியில் விழாக்காலங்களிலே கூட கூட்டம் இருக்காது. அதுவும் நான் சென்ற போது கூட்டமில்லாமல் ஒரு தரிசனம். பின்னர் பரிவாரங்களை வணங்கிவிட்டு வெளியில் வந்து தெப்பக்குளப் படிக்கட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாயிற்று.


மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் கோபுரம் முழுவதும் தென்னை ஓலையால் மூடிவைத்திருந்தார்கள். கோவிலுக்கு வெளியே சித்திரை வீதி முழுவதும் சாலையைப் பெயர்த்துப் போட்டிருந்தார்கள். வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. காலையில் சாலையோரக் கடையில் மதுரை ஸ்பெசல் சுடச் சுட இட்லி சாப்பிடலாமென்றால் என் நேரம் ஒரு கடையும் தென்படவில்லை. சரின்னு வெறும் வயிற்றோடவே திருப்பரங்குன்றம் பேருந்து ஏறிய போது மணி 7:30.

திருப்பரங்குன்றம்
பெரியாரிலிருந்து கால் மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் வந்து விட்டேன். முருகனின் முதல் படை வீட்டைத் தரிசிக்கப் போறோமே, கடவுளை நினைத்துக் கொண்டே செல்லணும் என்று 'சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா' என்ற முருகன் துதியைப் பாடிக்கொண்டே கோவிலுக்குள் வந்து சேர்ந்தேன்.


திருப்பரங்குன்றம் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. கோவிலின் அமைப்பு ரொம்பவே வித்தியாசமானது. மலைதான் கோவிலின் ஒரு பக்கம். அதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,சிலைகளைச் சுற்றிக் கோவில் கட்டியிருக்கிறார்கள். கோவில் இரண்டு தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் நந்தி, மயில், எலி வாகனங்களின் சிலைகள் உள்ளன. அவற்றுக்கு எதிரே இரண்டாவது தளத்தில் முருகர், துர்க்கை, விநாயகர், முருகனுக்குப் பக்கவாட்டில் பெருமாளும், விநாயகருக்குப் பக்கவாட்டில் சிவனும் உள்ளனர்.

துர்க்கைக்கு சன்னிதிக்கு நேரேதான் ராஜகோபுரம் உள்ளது. முருகர் துர்க்கைக்குப் பக்கவாட்டில், தெய்வானையுடன் பக்கவாட்டில் சிற்பமாகக் காணப்படுகிறார். முருகனுக்கு அருகில் ஒருவர் தாடியுடன் உள்ளார். நாரதர் என்று குருக்கள் சொன்னார், அது தவறு இந்திரன் அல்லது அகத்தியராக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இங்கும் கூட்டமில்லை. ரொம்ப நேரம் நின்று வணங்கிய பிறகு தெப்பக்குளம் மற்றும் கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் ஒரு அக்கா தெருவோரத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். வெறும் ஐந்து ரூபாய்க்கு சில பல இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு திரும்பவும் பெரியார் நிலையம் வந்து சேர்ந்தேன்.

அழகர் கோவில்
அங்கிருந்து பேருந்தில் அழகர் கோவிலுக்கு வந்து சேர்ந்த போது மணி 10:15. சுற்றிலும் பச்சை பசேல் என்று மலை. மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவில். உள்ளே சென்றால் கோவிலின் வெளியே முதலில் வருவது பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னிதி. இங்கு சாமிக்கு சிலை கிடையாது. மூடப்பட்ட கதவில் சந்தனம் பூசப்பட்டு அதையே கருப்பசாமியாக வழிபடுகிறார்கள். ஏன் என்ற காரணமும், வரலாறும் தெரியவில்லை. ரொம்பவும் சக்திவாய்ந்த கடவுள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெளியே



உள்ளே


மிகுந்த பயபக்தியோடு வணங்கிவிட்டு அழகர் கோவிலின் உள்ளே சென்றால் இங்கும் கூட்டமில்லை. சனிக்கிழமையாதலால் பூஜைகள் நடந்து கொண்டிருந்ததன. கொஞ்ச நேரத்தில் அது முடியவும் அழகரையும் தரிசித்துவிட்டு பிற சன்னிதிகளையும் தரிசித்து விட்டு வெளியில் வந்தால் நம் முன்னோர்களின் குறும்பு. பூஜை முடிந்து வாழைப்பழம் வைத்திருந்தவர்களையெல்லாம் விரட்டிக் கொண்டிருந்தனர்.

பழமுதிர்ச்சோலை

அழகர்மலையின் மேலே முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை உள்ளது. இங்கு செல்வதற்கு அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதியில் இருப்பது போல. மலைப்பாதையில் பத்து நிமிடப் பயணம். பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இறக்கிவிடுகிறார்கள். இந்த முருகன் கோவில் கொஞ்சம் சிறியது தான். விநாயகர், முருகர், பெருமாள் சன்னிதிகள் மட்டுமே உள்ளன.

இராக்காயி அம்மன் கோவில்

பழமுதிர்ச்சோலையில் இருந்து அதே மலைச்சாலையில் ஒரு பத்து நிமிடம் நடந்தால் நூபுரகங்கை எனப்படும் வற்றாத தீர்த்தக்கிணறு மற்றும் அதை ஒட்டி இருக்கும் இராக்காயி அம்மன் கோவிலையும் தரிசிக்கலாம். எல்லோரும் தீர்த்தக் கிணற்றில் குளித்து விட்டு வந்து தரிசிக்கிறார்கள். நான் தலையில் தெளித்துக் கொண்டு இராக்காயி அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் என் புயல்வேக ஆன்மீகப் பயணம் முடிவுக்கு வந்தது. அப்போது மணி 12:10.

வௌவால் தெரியுதா?



அழகர்மலையின் அழகிய தோற்றம்



திரும்பவும் மலையில் இருந்து இறங்கி அழகர்கோவில் சென்று பின் பெரியார் நிலையத்தில் இறங்கி, சாப்பிட்டு விட்டு டவுன்ஹால் சாலை பிரேமாவிலாஸில் அல்வா சாப்பிட்டுவிட்டு விடுதிக்குச் சென்று பேய்த்தூக்கம் போட்டேன்.

மதுரையில் கண்ட மாற்றங்கள்
1. பண்பலை வானொலிகள்
2. மாற்றம் செய்யப்பட்ட பெரியார் நிலையம் மற்றும் புதிய மேம்பாலம்
3. ஏகப்பட்ட ஏர்பஸ்கள். இரண்டுமடங்கு கட்டணம்.
4. தங்கரீகல் திரையரங்கு மாற்றம் செய்து கட்டப்படுகிறது. DTS,ACயுடன்.
5. டவுன்ஹால் சாலையில் ஒரு தேநீர் 4 ரூபாய். அநியாயம்.

என்றும் மாறாதது
வாங்கண்ணே என்னும் மக்களின் அன்பு. (ஐஸ் ஐஸ்... நானெல்லாம் உங்களுக்கு அண்ணனா? எப்பவும் அன்புத்தம்பிதேன்)

பெருமாள் தெப்பம் - டவுன்ஹால் சாலை

இந்த அழகான தெப்பக்குளம் நேதாஜி சாலைக்கும் டவுன்ஹால் சாலைக்கும் இடையில் இருக்கிறதென்றால் நம்பமுடிகிறதா? தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமித்து விட்டதால் இப்பொழுது தெப்பக்குளத்துக்குப் போக வழியே கிடையாது.

சின்ன சந்தேகம்
ஏன் அழகர்கோவில் கருப்பசாமி சன்னிதியில் சிலை வழிபாடு இல்லை? யாருக்காவது தெரியுமா?

பதிவர் சந்திப்பு
மதுரை வந்ததிலிருந்தே பதிவர் டிபிசிடியின் நடவடிக்கைகள் மர்மமாகவே இருந்தன. முதலில் நான் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என்று சொன்னபோது என் கைப்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு திடீரென்று ஒருநாள் "நான் டிபிசிடி பேசுறேன். இது தான் என் கைப்பேசி எண்" என்று சொல்லிவிட்டு நான் "அப்புறம்" என்பதற்குள் டீங் டீங் டீங். தொடர்பைத் துண்டித்துவிட்டார். அப்புறம் இரண்டு நாட்களாக பேச்சு மூச்சைக் காணோம்.

சந்திப்புக்கு முதல் நாள் தொலைபேசி "எங்க சந்திப்பு நடத்துறீங்க?"ன்னு கேட்க "நாளைக்கு சந்திப்புக்கு நாளைக்குத்தான் முடிவு பண்ணனும்" அப்படின்னு மர்மச்சிரிப்பு சிரிக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி.'நான் அவசரமாக போடி போகிறேன். என்னால் உங்களைச் சந்திக்க முடியாது' என்று. பின்னூட்ட பாணியில் ஒரு சோக ஸ்மைலியை அவருக்கு குறுஞ்செய்தியில் அனிச்சையாக அனுப்பிவிட்டேன்.

ஆகக் கூடி சந்திப்பு இருக்குன்னு ஆசையைக் கிளப்பிவிட்டு கடைசியில் எஸ்ஸாகிப் போன டிபிசிடியின் நடவடிக்கைகளில் சந்தேகமும் ஒரு வித பதற்றமும் இருப்பதால் எதற்கும் மலேசியா காவல்துறை அவர்மேல் ரெண்டு கண்ணையும் வைப்பது நல்லது. சந்திப்பு இல்லாததால் சாவகாசமாகக் கிளம்பி இரவு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

Monday, February 11, 2008

தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்டமாய் ! பிரம்மாண்டமாய் !


போன வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராமேஸ்வரம் சென்று வந்தது தான் என் முதல் பதிவாக மலர்ந்தது. அது போல இந்த வருடமும் ஒரு கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்து இதுவரை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் மட்டுமே பார்த்திருந்த தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.

கூட வருவதாக சொல்லியிருந்த நண்பன் கடைசி நேரத்தில் கழன்று கொள்ள நான் மட்டும் இராமநாதபுரத்தில் இருந்து தனியே புறப்பட வேண்டியதாயிற்று. ஆறு மணி நேரப் பயணத்திற்குப் பின் தஞ்சை சென்றடையும் போது காலை மணி 11. பிரம்மாண்டமான கோபுரம் வரவேற்க ஆச்சரியத்துடன் உள்ளே சென்றேன்.

பெருவுடையார் சன்னிதி்





சன்னிதியின் கூரையில் ஒரே கல்லில் செய்யப்பட்ட கல் வளையம்



பொன்னியின் செல்வராகிய இராஜராஜ சோழர், சோழர் பெருமையை தமிழுலகம் என்றென்றும் பேசவேண்டும் என்று பெருமிதத்துடன் கட்டிய பிரம்மாண்டக் கோவில். முதலில் சுவாமியைத் தரிசித்து விட்டுப் பின்னர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் முதலில் பிரம்மாண்ட நந்தியையும், பின்னர் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) சன்னிதியையும் சென்று தரிசித்தேன். மிகப்பெரிய சிவலிங்கம். எட்டி எட்டிப் பார்த்து தரிசிக்க வேலையே வைக்காமல் வாயிலிலிருந்தே நல்ல தரிசனம் கிடைத்தது. கூட்டமும் குறைவு. சிறப்பு தரிசனம், தர்ம தரிசனம் என்ற பேச்சே இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை. சாமியைப் பார்க்க அடிதடி இருந்தால் தானே இந்த முறைகளெல்லாம் தேவை?

பின்னர் பிரகாரத்தை சுற்றி வந்து விநாயகர், முருகர், குரு, சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகி (பிரஹன்நாயகி) சந்நிதிகளுக்கும் சென்று தரிசித்தேன். பின்னர் கோவிலைச் சுற்றி வந்து சிற்பங்களைப் பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் ஆரம்பித்தேன். பெருவுடையார், நந்தி, பெருவுடையார் சன்னிதியின் மேல் கலசம் இருக்கும் பெரிய விமானம் எல்லாமே ஒரே கல்லால் செய்யப்பட்டவை என்று தெரிந்தபோது ஆச்சரியமே மிஞ்சியது.

பெரிய நந்தி



ஒரு கல்வெட்டு



கோவிலின் ஒரு பகுதி



கோவிலின் வெளிச்சுவர், பிரகாரச்சுவர் என எல்லா இடங்களிலும் கல்வெட்டுகள், கல்வெட்டுகள் மட்டுமே. அதனால் தான் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இந்தக் கோவில் இருக்கிறது. இவை அனைத்தும் இராஜராஜசோழன் காலத்தவை. அவரின் ஆட்சிக்கால சிறப்பையும், கொடைகளையும் இதில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். பெருவுடையார் சன்னிதியைச் சுற்றி முழுவதும் அழகழகான சிற்பங்கள் உள்ளன. பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் பெருவுடையார் சன்னிதியின் உட்புறம் இருக்கும் சுவர்களிலும் பெரிய பெரிய தூண்களிலும் சிற்பங்களே இல்லாமல் வெறுமனே இருக்கின்றன. காரணம் தெரியவில்லை. ஒருவேளை சிற்பங்களால் கோபுரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களின் வலிமை குறையக் கூடும் என்ற காரணமாக இருக்கலாம்.

அழகான சில ஓவியங்கள்





கோவிலின் உள்புறம் நாயன்மார்கள் மற்றும் 108 சிவலிங்கங்கள் இருக்கும் சுற்று மண்டபம் முழுவதும் அழகழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நம் ஆட்கள் அதன் அருமை தெரியாமல் தங்கள் பெயர்களையும், I love you என்றெல்லாம் ஓவியங்களின் மேல் கிறுக்கி வைத்திருக்கிறார்கள். :(

பூங்கா மற்றும் நடைபாதை




கோவிலில் கவனித்த இன்னொரு முக்கியமான விசயம் சுத்தம். ஒரு சிறிய காகிதம் கூட இல்லாமல் அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். அறநிலையத்துறை கவனிக்கவும். அப்புறம் கோவிலின் வெளிச்சுவருக்கும், உள்சுற்றுச் சுவருக்கும் இடையில் அருமையான பூங்கா மற்றும் நடைபாதை. கோவிலின் வெளிச்சுவருக்கு வெளியே ஒரு கோட்டை போன்ற அமைப்பும், ஒரு அகழி போன்ற வாய்க்காலும் காணப்படுகிறது. இது அகழி அல்லது கோவிலின் பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் வரும் வாய்க்காலாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அழகிய குதிரை



அழகான பூதம்



இந்தக் கோவில் ஒரு புராதனச் சின்னம்



கோவில் வரலாறு



தோளில் நார்ப்பையுடனும் கையில் கேமராவுடனும் சுற்றிக் கொண்டிருந்த என்னிடம் "போட்டோ எடுத்துத் தருவீங்களா? எவ்வளவு?" என்று கேட்டு வெறுப்பேற்றினார் ஒரு வேலூர்க்காரர். :). மதியம் 2மணிக்கு எல்லாவற்றையும் பார்த்து விட்டு, வசந்தபவனில் சாப்பிட்டு விட்டு, தஞ்சை வராமல் டேக்கா கொடுத்த நண்பனைப் பார்க்க திருச்சிக்கு பேருந்தில் ஏறினேன்.

Wednesday, November 21, 2007

ஓசூர் - ராயக்கோட்டை - தர்மபுரி

பெங்களூரில் இருந்து ஊருக்குச் செல்லும் போது விழாக்காலங்கள் தவிர பிற நாட்களில் திட்டமிட்டெல்லாம் பயணம் செய்வதில்லை. வெள்ளிக்கிழமை மதியம் இங்கிருந்து பெங்களூர் - சேலம் - மதுரை - இராமநாதபுரம் என்று தமிழக அரசுப்பேருந்துகளில் மாறி மாறிப் பயணம் செய்வதுதான் வழக்கம். திரும்பி வருவதும் அவ்வாறே. முதுகு மற்றும் அதன் கீழிருக்கும் பகுதிகள் என்னவாகும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை :) . மாதம் ஒருமுறை இப்படித்தான் பயணம்.

அன்றும் அப்படித்தான் சில்க் போர்டு அருகில் சேலம் பேருந்துக்காக ரொம்ப நேரம் நின்றும் வந்தபாடில்லை. எனவே ஓசூர் சென்று அங்கிருந்து சேலம் சென்று விடலாம் என்றெண்ணி ஓசூர் சென்றேன். அங்கிருந்தும் சேலத்துக்குப் பேருந்து இல்லை. தர்மபுரி வரை செல்லும் பேருந்துகள் மட்டுமே இருந்தன. ஆனால் அவை செல்லும் வழி வழக்கமாக நான் செல்லும் வழி கிடையாது.

வழக்கமாக பெங்களூரிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழி இது தான். பெங்களூர் - ஓசூர் - கிருஷ்ணகிரி - தர்மபுரி - சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் - மதுரை - பரமக்குடி - இராமநாதபுரம். ஸ்ஸ்ஸ்ஸப்பா .. இப்பவே கண்ணைக் கட்டுதே :) . மொத்த பயண நேரம் 14மணி.

ஆனால் நான் ஏறிய பேருந்து கிருஷ்ணகிரி வழியாகச் செல்லாமல் இராயக்கோட்டை, பாலக்கோடு ஆகிய ஊர்கள் வழியே தர்மபுரி செல்வது. முதலில் யோசித்தாலும் சரி புதியதொரு வழியில் சென்றுதான் பார்ப்போமே என்று ஏறிவிட்டேன். வழக்கமாகச் செல்லும் வழியில் ஓசூர் தாண்டியதும் இருபது நிமிடங்கள் டீ குடிக்க நிறுத்தி விடுவார்கள். அதெல்லாம் நமக்குத்தான் தேவையில்லையே ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் :).

இந்த இரண்டு மணி நேரப்பயணத்தில் நான் பார்த்தவை நிறைய. முதலில் சமமான சாலையில் சென்றாலும் ஓசூர் தாண்டியதும் அழகாக மலையில் ஏற்ற இறக்கங்களில் பேருந்து சென்றது. மலையென்றால் கொடைக்கானல் அளவெல்லாம் கிடையாது. சும்மா சின்னகுன்றுகள் தான். இருபுறமும் பசுமையாக செடிகளும் மரங்களும் இருக்க நடுவில் ஏற்ற இறக்கமான சாலையில் பேருந்து விரைந்து சென்றது பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

தமிழகத்தில் என்றுமே மொழிப்பாகுபாடு பார்ப்பது கிடையாது என்பதற்கு இந்த வழியில் இருக்கும் கிராமங்களே சாட்சி. சாலையோர வழிகாட்டிப் பலகைகளில் பெரும்பாலான கிராமங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழ் மற்றும் தெலுங்கிலும், சில கிராமங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் கன்னடத்திலும் எழுதப்பட்டிருக்கின்றன. பள்ளிகள், வங்கிகள் அனைத்திலும் தமிழ், தெலுங்கு அல்லது கன்னடத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

ஓசூர் தமிழ்நாட்டில் இருந்தாலும் அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் தெலுங்குதான் போலும். பேருந்தில் அனைவரும் தெலுங்கில் தான் பேசிக் கொண்டிருந்தனர். அதே போல் நகரப் பேருந்துகளிலும் தமிழ், கன்னடம், தெலுங்கில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.

ஒருமணி நேரம் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் ராயக்கோட்டை தாண்டியதும் காணாமல் போனது. தமிழகத்தின் தேசியமரமான கருவேலமரங்கள் கண்ணுக்குத்தெரிய ஆரம்பித்தன. சரி தான் போங்கப்பா எங்க போனாலும் இந்த உபயோகமில்லாத மரம்தானான்னு தூங்க ஆரம்பிச்சிட்டேன்.