இப்போது ஏடிஎம் வசதியில்லாத வங்கியே இல்லைன்னு சொல்லலாம். நாம் ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பித்த உடனே அல்லது கடன் அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு நமக்கு ஒரு பிளாஸ்டிக் அட்டையை வழங்குவார்கள். அதைதான் நாம் ஏடிஎம் அல்லது கடையில் சாமான் வாங்கும் போது பணத்துக்குப் பதிலாக உபயோகிக்கிறோம். இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். (அப்புறம் எதுக்கு நீ வேற ஒரு தடவை சொல்றன்னு கேட்கக் கூடாது. அப்பத்தான ஒரு flow கிடைக்கும்). அந்த அட்டையில் அப்படி என்ன இருக்குன்னு தெரிந்து கொள்வோம்.
அந்த அட்டையில் உங்கள் அழகான முகம், அட்டை எண், காலாவதியாகும் தேதி போக பின்னால் ஒரு கருப்புப் பட்டையிருக்கும். அதன் பேர் Magnetic Stripe. பிளாப்பியில் இருக்கிறதல்லவா அதேதான். தண்ணீரில் போட்டால் கூட ஒன்றும் ஆகாது(போட்டுப் பார்த்துட்டு ஒப்பேந்து போச்சுன்னா நான் பொறுப்பில்லை). அந்தக் கருப்புப் பட்டையிலும் நமது கார்டு எண், காலாவதியாகும் தேதி போக CVV1(Card Verification Value 1) என்ற ரகசிய எண்ணும் இருக்கும். இது ஒவ்வொரு கார்டுக்கும் வேறாக இருக்கும். உங்களுக்குக் கொடுப்பதற்காக அட்டை செய்யும் போதே அந்த ரகசிய எண்ணை அந்த கருப்புப் பட்டையில் பதிந்து விடுவார்கள்.இது எதற்காக என்றால் ஒருவருடைய அட்டை எண்ணும், காலாவதியாகும் தேதியும் தெரிந்துவிட்டால் வேறு யார் வேண்டுமானாலும் போலி அட்டை செய்து கொள்ளமுடியுமல்லவா? அதைத் தடுக்கத்தான்.
CVV1 என்று இருக்கிறதே CVV2 வேறு இருக்கிறதா என்றால் ஆமாம். உங்கள் அட்டையைத் திருப்பிப் பார்த்தால் கருப்புப் பட்டையின் கீழ் நீங்கள் கையெழுத்திடுவதற்காக வெள்ளை நிறத்தில் ஒரு பட்டையிருக்கும். அதில் கடன் அட்டை என்றால் உங்கள் அட்டை எண்ணும், வங்கிக் கணக்கு அட்டை என்றால் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணும் அதைத் தொடர்ந்து ஒரு 3 இலக்க எண்ணும் இருக்கும். அது தான் CVV2. இது எதுக்குன்னா இணையத்தில் உபயோகப்படுத்துகிற போது நம்மளோட அட்டைதானா இல்ல போலியான்னு கண்டுபிடிக்கிறதுக்காக. இதுவும் ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபடும். இது ஒவ்வொன்றின் பயன் பற்றியும் பின்னால் விபரமா சொல்கிறேன். இப்போ ஏடிஎம் பற்றிப் பார்க்கலாம்.
ஏடிஎம்ங்கிறது கொஞ்சம் ஹைடெக் அலமாரி. NCR, Diebold நிறுவனங்கள தான் இவைகளின் தயாரிப்புக்குப் புகழ் போனவை. ஏடிஎம் மிகவும் உறுதியானது. அதன் கண்ணாடியைக் கூட யாரும் எளிதில் உடைக்க முடியாது.அதற்குள் ஒரு கணினி இருக்கும். அது தான் நாம் பார்க்கும் screen எல்லாம் காட்டும். விசைப்பலகைக்குப் பதில் நாம் அமுக்கும் எண்கள் கொண்ட Key Pad இருக்கும். அப்புறம் ஒரு Card Reader. நாம ஒரு துவாரத்தில் நமது அட்டையை சொருகுகிறோமே அது தான். அது தான் நமது அட்டையின் பின்னால் இருக்கும் கருப்புப் பட்டையில் இருக்கும் விபரங்களைப் படித்து தற்காலிகமாகச் சேமித்து வைத்துக் கொள்ளும்.
அப்புறம் ஒரு பெட்டகம் (Locker). அதில் தான் பணம் வைக்கும் Slots இருக்கும். ஏடிஎம்மில் பணம் இல்லையென்றால் இந்த பெட்டகத்தைத் திறந்து ஒவ்வொரு Slotடிலும் 1000,500,100 என்று வைத்து எந்த ஸ்லாட்டில் எந்த ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன என்பதை ஏடிஎம்-மின் கணினியில் பதிந்து விடுவார்கள். மாற்றிப் பதிந்து விட்டால் சீன் தான். 500 எடுப்பவனுக்கு 1000மும், 1000 எடுப்பவனுக்கு 100ம் போகும். அதனால் இதை செய்யும் போது கவனமாக இருப்பார்கள். குறிப்பாக இந்தியாவில் தற்போதுள்ள ஏடிஎம் வகைகளில் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் வசதியும், எந்த ரூபாய் நோட்டு என்று அறிந்து கொள்ளும் வசதியும் கிடையாது. வெளிநாடுகளில் இருக்கலாம் என நினைக்கிறேன்.
மேலும் ரசீது கொடுக்கும் ஒரு ஸ்லாட்டும், ஏடிஎம்மில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக EJ (Electronic Journal) எனப்படும் காகித ரோலும் இருக்கும். இந்தக் காகித ரோலில நாம் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலோ, ஏடிஎம்மைத் திறந்தாலோ, நாம் என்ன செய்தாலும் அந்தக் காகித ரோலில் எழுதிக் கொண்டே வரும். காகிதம் தீர்ந்து போனால் கூட memoryயில் பதிந்து வைத்துக் கொண்டு காகித ரோலை மாட்டின உடனே 'ஒரு கடமை தவறாத காவல்துறை அதிகாரி' போல கட கட வென எழுதித் தள்ளிவிட்டு தான் மறுவேலை பார்க்கும். இது விமானங்களில் இருக்கும் கருப்புப் பெட்டி போல் பின்னால் என்ன பிரச்சினையென்றாலும் பார்த்துத் தெரிந்து கொள்ள உதவும்.
அப்புறம் ஒரு குப்பைத் தொட்டி. இது எதுக்குன்னா உங்களுக்கு ரசீது கொடுக்கும் போதோ, அல்லது பணம் கொடுக்கும் போதோ கிழிந்து அல்லது எசகு பிசகாக மாட்டி விட்டாலோ அதை அப்படியே உள்ளே இழுத்து இந்தக் குப்பைத் தொட்டியில் போட்டு விடும். இது போக பணம் கொடுக்கும் Cash dispenser, பணம் அல்லது செக் டெபாசிட் செய்ய உதவும் Slotகளும் இதில் உள்ளன.
ஆக இவ்வளவு சாமான் சட்டுகளும் ஒரு ஏடிஎம் பெட்டியில் உள்ளன. சரி அட்டையைப் போட்டவுடனே கொஞ்ச நேரத்தில் எப்படிப் பணம் வருது? அது அடுத்த பதிவில்.
(தொடரும்)



