Wednesday, July 18, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

நான் இரண்டு வருடங்கள் Banking domain-ல வேலை பார்த்ததுனால ஓரளவுக்கு ஏடிஎம்,கடன்/வங்கிக் கணக்கு அட்டை, இணைய வியாபாரம்(?) (Online shopping) இதிலெல்லாம் கொஞ்சம் ஞானம் உண்டு. அவை பற்றித் தான் எழுதலாம்னு இருக்கேன். படிக்கிறவுங்க சும்மா போகாம, புரிஞ்சுதா இல்லையாங்கிறதையும், ரொம்ப Technical terms உபயோகிக்கிறேனாங்கிறதையும் கருத்தாகச் சொல்லிவிட்டுப் போங்கள்.சந்தேகங்கள் இருந்தாலும் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இப்போது ஏடிஎம் வசதியில்லாத வங்கியே இல்லைன்னு சொல்லலாம். நாம் ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பித்த உடனே அல்லது கடன் அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு நமக்கு ஒரு பிளாஸ்டிக் அட்டையை வழங்குவார்கள். அதைதான் நாம் ஏடிஎம் அல்லது கடையில் சாமான் வாங்கும் போது பணத்துக்குப் பதிலாக உபயோகிக்கிறோம். இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். (அப்புறம் எதுக்கு நீ வேற ஒரு தடவை சொல்றன்னு கேட்கக் கூடாது. அப்பத்தான ஒரு flow கிடைக்கும்). அந்த அட்டையில் அப்படி என்ன இருக்குன்னு தெரிந்து கொள்வோம்.

அந்த அட்டையில் உங்கள் அழகான முகம், அட்டை எண், காலாவதியாகும் தேதி போக பின்னால் ஒரு கருப்புப் பட்டையிருக்கும். அதன் பேர் Magnetic Stripe. பிளாப்பியில் இருக்கிறதல்லவா அதேதான். தண்ணீரில் போட்டால் கூட ஒன்றும் ஆகாது(போட்டுப் பார்த்துட்டு ஒப்பேந்து போச்சுன்னா நான் பொறுப்பில்லை). அந்தக் கருப்புப் பட்டையிலும் நமது கார்டு எண், காலாவதியாகும் தேதி போக CVV1(Card Verification Value 1) என்ற ரகசிய எண்ணும் இருக்கும். இது ஒவ்வொரு கார்டுக்கும் வேறாக இருக்கும். உங்களுக்குக் கொடுப்பதற்காக அட்டை செய்யும் போதே அந்த ரகசிய எண்ணை அந்த கருப்புப் பட்டையில் பதிந்து விடுவார்கள்.இது எதற்காக என்றால் ஒருவருடைய அட்டை எண்ணும், காலாவதியாகும் தேதியும் தெரிந்துவிட்டால் வேறு யார் வேண்டுமானாலும் போலி அட்டை செய்து கொள்ளமுடியுமல்லவா? அதைத் தடுக்கத்தான்.

CVV1 என்று இருக்கிறதே CVV2 வேறு இருக்கிறதா என்றால் ஆமாம். உங்கள் அட்டையைத் திருப்பிப் பார்த்தால் கருப்புப் பட்டையின் கீழ் நீங்கள் கையெழுத்திடுவதற்காக வெள்ளை நிறத்தில் ஒரு பட்டையிருக்கும். அதில் கடன் அட்டை என்றால் உங்கள் அட்டை எண்ணும், வங்கிக் கணக்கு அட்டை என்றால் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணும் அதைத் தொடர்ந்து ஒரு 3 இலக்க எண்ணும் இருக்கும். அது தான் CVV2. இது எதுக்குன்னா இணையத்தில் உபயோகப்படுத்துகிற போது நம்மளோட அட்டைதானா இல்ல போலியான்னு கண்டுபிடிக்கிறதுக்காக. இதுவும் ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபடும். இது ஒவ்வொன்றின் பயன் பற்றியும் பின்னால் விபரமா சொல்கிறேன். இப்போ ஏடிஎம் பற்றிப் பார்க்கலாம்.

ஏடிஎம்ங்கிறது கொஞ்சம் ஹைடெக் அலமாரி. NCR, Diebold நிறுவனங்கள தான் இவைகளின் தயாரிப்புக்குப் புகழ் போனவை. ஏடிஎம் மிகவும் உறுதியானது. அதன் கண்ணாடியைக் கூட யாரும் எளிதில் உடைக்க முடியாது.அதற்குள் ஒரு கணினி இருக்கும். அது தான் நாம் பார்க்கும் screen எல்லாம் காட்டும். விசைப்பலகைக்குப் பதில் நாம் அமுக்கும் எண்கள் கொண்ட Key Pad இருக்கும். அப்புறம் ஒரு Card Reader. நாம ஒரு துவாரத்தில் நமது அட்டையை சொருகுகிறோமே அது தான். அது தான் நமது அட்டையின் பின்னால் இருக்கும் கருப்புப் பட்டையில் இருக்கும் விபரங்களைப் படித்து தற்காலிகமாகச் சேமித்து வைத்துக் கொள்ளும்.

அப்புறம் ஒரு பெட்டகம் (Locker). அதில் தான் பணம் வைக்கும் Slots இருக்கும். ஏடிஎம்மில் பணம் இல்லையென்றால் இந்த பெட்டகத்தைத் திறந்து ஒவ்வொரு Slotடிலும் 1000,500,100 என்று வைத்து எந்த ஸ்லாட்டில் எந்த ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன என்பதை ஏடிஎம்-மின் கணினியில் பதிந்து விடுவார்கள். மாற்றிப் பதிந்து விட்டால் சீன் தான். 500 எடுப்பவனுக்கு 1000மும், 1000 எடுப்பவனுக்கு 100ம் போகும். அதனால் இதை செய்யும் போது கவனமாக இருப்பார்கள். குறிப்பாக இந்தியாவில் தற்போதுள்ள ஏடிஎம் வகைகளில் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் வசதியும், எந்த ரூபாய் நோட்டு என்று அறிந்து கொள்ளும் வசதியும் கிடையாது. வெளிநாடுகளில் இருக்கலாம் என நினைக்கிறேன்.

மேலும் ரசீது கொடுக்கும் ஒரு ஸ்லாட்டும், ஏடிஎம்மில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக EJ (Electronic Journal) எனப்படும் காகித ரோலும் இருக்கும். இந்தக் காகித ரோலில நாம் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலோ, ஏடிஎம்மைத் திறந்தாலோ, நாம் என்ன செய்தாலும் அந்தக் காகித ரோலில் எழுதிக் கொண்டே வரும். காகிதம் தீர்ந்து போனால் கூட memoryயில் பதிந்து வைத்துக் கொண்டு காகித ரோலை மாட்டின உடனே 'ஒரு கடமை தவறாத காவல்துறை அதிகாரி' போல கட கட வென எழுதித் தள்ளிவிட்டு தான் மறுவேலை பார்க்கும். இது விமானங்களில் இருக்கும் கருப்புப் பெட்டி போல் பின்னால் என்ன பிரச்சினையென்றாலும் பார்த்துத் தெரிந்து கொள்ள உதவும்.

அப்புறம் ஒரு குப்பைத் தொட்டி. இது எதுக்குன்னா உங்களுக்கு ரசீது கொடுக்கும் போதோ, அல்லது பணம் கொடுக்கும் போதோ கிழிந்து அல்லது எசகு பிசகாக மாட்டி விட்டாலோ அதை அப்படியே உள்ளே இழுத்து இந்தக் குப்பைத் தொட்டியில் போட்டு விடும். இது போக பணம் கொடுக்கும் Cash dispenser, பணம் அல்லது செக் டெபாசிட் செய்ய உதவும் Slotகளும் இதில் உள்ளன.

ஆக இவ்வளவு சாமான் சட்டுகளும் ஒரு ஏடிஎம் பெட்டியில் உள்ளன. சரி அட்டையைப் போட்டவுடனே கொஞ்ச நேரத்தில் எப்படிப் பணம் வருது? அது அடுத்த பதிவில்.

(தொடரும்)

Sunday, July 15, 2007

மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா! மக்களின் மத்தியில் காமராஜா!

இன்று ஜூலை15. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம். தமிழக அரசு இந்நாளை இனிவரும் ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாட வேண்டுமென்று அறிவித்திருக்கிறது. மிகவும் வரவேற்கத்தக்கதே.

இவ்வாறு காமரஜர் பிறந்தநாளைப் பள்ளிகளில் கொண்டாடுவது நான் படித்த பள்ளியில் காலகாலமாக நடந்து வரும் ஒன்று. அது நாடார் சமுதாயத்தினர் நடத்தி வந்த பள்ளி. பெருந்தலைவர் பிறந்ததினத்தின் முதல் நாள் எங்கள் பள்ளியில் இருக்கும் ஆளுயர காமராஜர் படத்தை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பிப்பதிலிருந்து பள்ளி களை கட்டிவிடும். பின்னர் கொஞ்சநேரத்தில் தலைமை ஆசிரியரிடமிருந்து வரும் சுற்றறிக்கையில் மறுநாள் எல்லோரும் கண்டிப்பாக சீருடை அணிந்து வரவேண்டும், ஒழுங்காக இத்தனை மணிக்கு பள்ளியில் இருக்கவேண்டும் என்ற கட்டளைகளுடன் நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பொரி வழங்கப்படும் என்ற தூண்டிலும் இருக்கும்.

மறுநாள் காலையில் பள்ளிக்குள் நுழையும்போதே "மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா மக்களின் மத்தியில் காமராஜா" என்ற பாடல் வரவேற்கும். அந்தப் பெரிய காமராஜர் படம் சைக்கிள் ரிக்சாவில் வைக்கப்பட்டு பெரிய ரோஜா மாலையினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் அனைவருக்கும் காமராஜர் படம் போட்ட கொடி தரப்பட்டு அனைவரும் சட்டையில் குத்திக் கொள்வோம். அடுத்தவன் கொடி குத்திவிடச் சொன்னால் குத்தி விடுகிற சாக்கில் குண்டூசியால் நறுக்கென மார்பில் குத்தி விட்டு தெரியாமடா என்று சொல்லி வெறுப்பேற்றுவோம். எல்லா வகுப்பு மாணவர்களும் வரிசையில் நிற்க தலைமையாசிரியர் உரையுடன் தேசியக் கொடியேற்றப்பட்டு பின்னர் ஊர்வலம் தொடங்கும். கைகூப்பியபடியுள்ள காமராஜர் படத்துடன் செல்லும் ரிக்சாவைத் தொடர்ந்து தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்கள் காக்கி சீருடையுடன் முதலில் செல்ல அவர்கள் பின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வெள்ளை சீருடையிலும் பன்னிரெண்டாம் வகுப்பு, பதினொன்று என்று வந்து ஆறாம் வகுப்பில் முடியும். எங்கள் பின்னால் ஆண்கள், பெண்கள் தொடக்கப்பள்ளிகளின் மாணவ, மாணவிகளும் கடைசியாக அனைவரும் எதிர்பார்க்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் ஊர்வலம் செல்லும் வழியில் வந்து இணைந்து கொள்வர்.

இதற்கிடையில் கமுதியில் இருக்கும் காமராஜர் சிலையைப் பற்றிச் சொல்லவேண்டும். யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் பெரிய சிலையாக சாலை ஓரத்தில் மிகவும் பாதுகாப்பாக கம்பீரத்துடன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதியில் அமைத்திருப்பர். முக்கியமான விசயம் அந்தப் பெரிய சிலைக்கும் வேட்டி, சட்டை அணிவித்து இருப்பர். நான் ஒரு நாள் கூட வேட்டி சட்டை இல்லாமல் பார்த்ததில்லை. பிறந்த நாளன்று புது வேட்டி சட்டையுடன் ஏகப்பட்ட மாலைகளுடன் சிலை அழகாக இருக்கும்.

ஓவர் டு ஊர்வலம். இரண்டு மூன்று நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் மட்டும் பந்தாவாக ரிக்சாவின் அருகிலேயே நடந்து செல்வர். ஏனென்றால் ரிக்சாவில் ஒலிப்பெருக்கி மாட்டி காமராஜர் புகழ்பாடும் பாடல்களை அவர்கள் தான் கேசட் மாற்றிப் போட்டு இயக்குவார்கள். மற்றவர்களை அருகிலேயே விடமாட்டார்கள். இவ்வாறாக பட்டையைக் கிளப்பும் ஊர்வலம் நாடார் பஜார், செட்டியார் பஜார், முஸ்லிம் பஜார், தெற்குத் தெரு, மேட்டுத் தெரு வழியாக அமர்க்களமாகச் செல்லும். அனைத்தும் சாதிப்பெயராக இருக்கிறதே என எண்ண வேண்டாம். கமுதியில் அவை மூன்றும் தான் முக்கிய வீதிகள்.

வழியில் சில பெரியவர்கள், வயதான பெண்கள் மட்டும் காமராஜர் படத்தைப் பார்த்துக் கையெடுத்து வணங்குவார்கள். எனக்கு அப்போதெல்லாம் வியப்பாக இருக்கும். சில வீடுகளின் வெளியில் காமராஜர் படம் வைத்து மாலையிட்டு ஏகப்பட்ட மிட்டாய்களை அருகில் தட்டுகளில் வைத்திருப்பார்கள். ஊர்வலத்தில் செல்லும் நாங்கள் போட்டி போட்டு அவற்றை எடுத்துக் கொள்வோம். இப்படி நாங்கள் ஊர்வலமாக வரும் போது எங்கள் எல்லோரது வீடுகளிலுமிருந்து ஆட்கள் வெளியில் வந்து எங்கள் ஊர்வலத்தைப் பார்ப்பார்கள். நாங்கள் அவரவர் வீடு வரும் போது அப்பா, அம்மாக்களைப் பார்த்து கையசப்பதும், வீட்டுக்குள் ஓடிச் சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்து திரும்பவும் ஊர்வலத்தில் கலந்து கொள்வதும் நடக்கும். எங்கள் உடற்கல்வி ஆசிரியருக்கு மட்டும் இது எல்லாம் பிடிக்காது. உர்ரென்று முறைத்தபடியே எங்களுடன் வருவார்.

ஒருவழியாக ஊர்வலம் முடியும் போது பிற பள்ளி மாணவ, மாணவிகளெல்லாம் அடுத்தடுத்து கழன்று கொள்ள நாங்கள் கடைசியாகப் பள்ளிக்கு வந்து சேருவோம். சிறிது நேரம் கழித்து வகுப்புவாரியாக பொரி விநியோகம் நடைபெறும். அதைத் தின்பது கொஞ்சமாகவும், தெருவில் சிதறுவது அதிகமாகவும் சேட்டைகள் செய்து கொண்டே வீட்டினைச் சென்றடவோம். இவ்வாறாக எனது பள்ளிக்காலம் முழுவதும் பன்னிரெண்டு ஆண்டுகள் பெருந்தலைவர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மரியாதை செய்திருக்கிறேன். பள்ளி முடித்து கல்லூரியில் பயின்ற போது இவ்வாறான ஊர்வலம் சாலையோரம் எனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கடந்து சென்ற போது எங்கள் அனைவருக்குமே பழைய நினைவுகள் வந்து ஆட்கொண்டன. அதைக் காட்டிக் கொள்ளாமல் ஊர்வலத்தில் இருந்த மாணவர்களுக்குக் கையசைத்துவிட்டு நின்றோம். இப்போது அந்தப் பெருந்தலைவரின் பிறந்தநாளன்று, தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு அவரது குணத்தில் பத்து சதவீதமாவது கிடைக்கவேண்டும் என எண்ணிக் கொள்கிறேன்.

Thursday, July 12, 2007

கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது

சிறுவயதில் எனக்கு மரம், செடி வளர்த்தல் என்றால் மிகவும் விருப்பம். ஆனால் நாங்கள் சொந்த ஊரில் இருந்தபோது எங்கள் வீட்டில் அதற்கான இடம் கிடையாது. ஆனாலும் காலியான பாலித்தீன் பைகளில் மண் நிரப்பி காட்டுரோஜா(இப்போ பட்டுரோஸ்?!)ச் செடிகளை வளர்த்து வந்தேன். இசை கேட்டால் செடி நன்றாக வளரும் என்பதால் எங்கள் வீட்டு வானொலி இருக்குமிடத்துக்கு அருகில் சன்னலுக்கு வெளியே வைத்து வளர்த்து வந்தேன். ஆனாலும் மரம் வளர்ப்பது என்பது ஓரு கனவாகவே இருந்து வந்தது.

பின்னர் வேறொரு வீட்டிற்கு மாறியபோதும் இதே நிலைதான் என்றாலும், வீட்டிற்கு முன்புறம் நிறைய காலி இடமிருந்ததால் மரம் வளர்க்கும் ஆசை மீண்டும் முளைத்தது. வீட்டு வாசலுக்கு அருகில் ஒரு மரம் வளர்க்கப் போகிறேன் என அம்மாவிடம் சொல்லி வைத்தேன். "என்ன மரம்டா?"ன்னு கேட்டபோது "வேப்பமரம்" என்றேன். மறுநாள் காலையில் என் அம்மா இடுப்பில் தண்ணீர்க் குடமும், கையில் சிறிய வேப்பங்கன்றையும் வைத்திருந்தார்கள். தண்ணீர் பிடிக்கும் குழாயடியில் இருந்து எடுத்து வந்ததாகச் சொன்னார்கள். இரண்டு இலைகள் மட்டுமே முளைத்திருந்த சிறிய செடி அது.

பின்னர் ஒரு காலி பாலித்தின் பையில் மண் நிரப்பி அதில் ஊன்றி வீட்டின் பின்புறம் வெயில் படும் இடத்தில் வைத்து வளர்த்து வந்தேன். ஒரு மரம் மட்டும் போதுமா? இன்னொன்றும் வளர்ப்போம் என எண்ணி பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்த மரமான மயில் கொன்றை மரத்தின் விதைகளை சேகரித்துக் கொண்டு வந்து முளைக்கவைத்தேன். தினமும் தண்ணீர் ஊற்றியும் வேப்பமரம் மட்டுமே வளர்ந்தது. மயில் கொன்றை முளைக்கவே இல்லை. பின் விதையைத் திரும்ப எடுத்து தண்ணீரில் மூன்று நாட்கள் ஊற வைத்த பின் அது லேசாக முளைக்கத் தொடங்கியதும் திரும்பவும் பையில் வைத்து வளர்த்து வந்தேன்.

சில நாட்களில் இரண்டும் நன்கு பெரியனவாக வளர்ந்து விட்டன. தரையில் ஊன்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. எங்கள் வீட்டு வாசலில் ஒரு மரம் மட்டுமே வைக்க இடமிருந்ததால் வேப்பமரத்தை மட்டும் வீட்டு வாசலில் வைப்பது என்றும் மயில் கொன்றை மரத்தை எங்கள் வீட்டு எதிரில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து வளர்ப்பது என்றும் முடிவு செய்தோம். அதன்படியே மரக்கன்றுகளுக்கு வேலியெல்லாம் போட்டு தினமும் தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து வந்தேன். இரண்டு வருடங்களில் மிகவும் நன்றாகவே வளர்ந்து விட்டன.

பின்னர் அந்த ஊரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது எனது நண்பர்கள், தெரிந்தவர்கள், ஆசையாய் வளர்த்த மரங்கள் என எல்லோரையும் பிரிய வேண்டியதாயிற்று. கிளம்பும் முன் வீட்டு வாசலில் இருந்த வேப்பமரத்தையும், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று மயில் கொன்றை மரத்தையும் நன்றாக ஒருமுறை பார்த்துவிட்டு வந்தேன்.
பின்னர் இராமநாதபுரத்தில் தற்காலிகமாக ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான் மதுரையில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். பிறகு வேறொரு வீடு பார்த்திருப்பதாகவும் வீடு நன்றாக இருப்பதாகவும், அங்கு ஒரு ஆச்சரியம் எனக்காக இருப்பதாகவும் என் அம்மா தொலைபேசியில் சொன்னார்கள். நான் எனது நண்பர்கள் யாராவது பக்கத்து வீட்டில் இருக்கிறார்களா என்று கேட்டதற்கு நீ வந்து நேரடியாகப் பார் என்று சொல்லிவிட்டார்கள். நானும் என்னடா இது என்னவாக இருக்கும் என எண்ணியபடியே அந்த வாரம் ஊருக்கு வந்தபின் புது வீட்டைப் பார்க்கக் கிளம்பினேன்.

உண்மையிலேயே ஆச்சரியம் தான். அந்த வீட்டின் வாசலில் ஒருபுறம் வேப்பமரமும், மறுபுறம் மயில்கொன்றை மரமும் இருந்தன. கிட்டத்தட்ட நான் எங்கள் சொந்த ஊரில் வளர்த்த மரங்களின் அளவிலேயே இருந்தன. அம்மா "பார்த்தாயா! இது தான் நான் சொன்ன ஆச்சரியம்"ன்னார்கள். "என்னால் நம்பவே முடியவில்லை" என்றேன். "நீ கஷ்டப்பட்டு இரு மரங்களை வளர்த்தாய். அதன் பலன் உனக்குச் சேரவேண்டியது. அது நீ எங்கிருந்தாலும் உனக்குக் கிடைக்கும் "
ன்னு அம்மா சொன்னார்கள். இன்றும் அந்த மரங்கள் என்னதான் வெயில் அடித்தாலும் வீட்டுக்குள் குளுமையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இப்போதும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றால் எனது மரங்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவது வழக்கம்.

Wednesday, July 04, 2007

கண்ணால் கண்ட காதல் கதை

என்னுடன் பணிபுரிந்த சக அலுவலகத் தோழியின் சுவாரஸ்யமான காதல் கல்யாணக் கதை இது. என் தோழி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். எல்லோரிடமும் மிகவும் நன்றாகப் பழகுவார். அவரும் எனது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இன்னொருவரும் காதலித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அங்கேயே காதலாகிக் கசிந்துருகி பிறகு இருவரும் ஒரே இடத்தில் வேலை கிடைத்ததும் மிகத் தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்தனர். இது இருவரின் வீட்டுக்கும் தெரியாது.

ஒரு நாள் தோழி தனது அக்காவிற்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும், அடுத்த மாதம் கல்யாணம் என்றும் சொன்னார். அவரது அக்கா சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். அக்காவிற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை கணினித்துறையில் ஒரு பெரிய பதவியில் இருப்பதாகக் கூறினார். நாங்களும் "உங்களுக்கு எப்போ கல்யாணம்?" என்று வழக்கமான பல்லவியை எடுத்துவிட்டோம். அவர் "எங்க மேட்டரை வீட்டில் சொல்ல வேண்டியதுதான் பாக்கி" என்றார்.

தன் அக்காவிற்குத்தான் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதே தன் காதலை வீட்டில் சொல்ல இது தான் சரியான சமயம் என எண்ணி சில நாட்களில் இவர் தங்கள் காதலை வீட்டில் சொல்லிவிட்டார். என் தோழியின் அப்பா தலைமைச் செயலகத்தில் பெரிய பதவியில் இருப்பவர். மிகவும் கண்டிப்பானவராம். என்ன ஆச்சரியம்! அவர் கோபமேபடாமல் யாரைக் காதலிக்கிறாய், இருவரும் ஒரே சாதி தானா என்று விசாரித்த போது பையன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மகளுக்காக இவர் பையனின் வீட்டிலும் பேசி அவர்கள் சம்மதத்தையும் வாங்கிவிட்டார். தனது இளையமகளுக்கும் மாப்பிள்ளை பார்த்து விட்ட மகிழ்ச்சியான செய்தியை தனது மூத்த மகளுக்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டில் சொல்லியிருக்கிறார். நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

என் தோழியின் அக்காவிற்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டில் தாம் தூம் எனக் குதித்திருக்கிறார்கள். தாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தினர், இதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது, நீங்கள் செய்தது சரியில்லை, என் தோழியின் தந்தை அவர் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் பெண் எடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டனராம். என் தோழியின் அப்பா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பயனில்லை. கடைசியில் சம்பந்தம் வேண்டாம் என முறித்துக் கொண்டு விட்டனர். என் தோழியோ தன் காதலினால் தனது அக்காவின் திருமணம் நின்று போனதில் மிகுந்த வருத்தத்திலிருந்தார். "சாதியைப் பெரிசாக நினைக்கிறவர்கள் சம்பந்தம் ஒன்றும் நமக்கு வேண்டாம்மா" என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் திரைப்படங்களில் வருவது போன்ற திருப்பம். அதாவது எனது தோழியின் அக்காவிற்கு ஏற்கனவே இன்னொருவருடன் காதல். இவர் தன் தங்கையைப் போல காதலை வீட்டில் சொல்ல தைரியமில்லாமல் திருமணத்திற்குச் சம்மதித்திருக்கிறார். இப்போது தான் எல்லாம் சரியாகிவிட்டதே! அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது காதலை லேட்டாக வீட்டில் சொல்லியிருக்கிறார். இவரது காதலர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தபோது காதலாம். பிறகென்ன முதலில் அக்கா கல்யாணம், பிறகு தங்கை கல்யாணம் என இரு கல்யாணங்களும் ஜாம் ஜாமென நடந்தன. நாங்கள் இரண்டு கல்யாணங்களுக்கும் போய் நன்றாக சாப்பிட்டுவிட்டு வந்தோம்.

இதில் எனக்கு மிகவும் பிடித்தது என் தோழியின் தந்தையின் குணம் தான். தன் இளைய மகளின் காதலால் தன் மூத்த மகளின் திருமணம் நின்றுவிட்டதே என்று எண்ணாமல் அவர்கள் சம்பந்தம் வேண்டாம் என்ற பிறகும் தன் இளையமகளின் வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டதால் கடைசியில் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

Wednesday, June 13, 2007

ஒரே Blogger Account-ன் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் author name மாற்றலாம்!

எல்லோரும் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் ஜாவா ஸ்கிரிப்டில் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கும் அப்படி ஏதாவது செய்ய மாட்டோமா என ஆவல் இருந்து வந்தது. அதற்கேற்றார் போல போன வாரம் நான் ஒரு பிரச்சினையை எதிர் கொண்டேன். ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் சரி செய்தேன். தீபா, ஜெகத் போன்ற ப்ளாக்கர் விஞ்ஞானிகளின் ; -) script-களை ஒப்பிடும்போது என்னுடையது மிகவும் சிறியது தான்.

எனது கூகுள் account-ன் கீழ் இரண்டு Blogs உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பொன்வண்டு வலைப்பதிவு தளம்.

ஆனால் நம்மால் ஒரு account-க்கு ஒரே ஒரு profile மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அந்த profile-ல் நாம் கொடுக்கும் display name-தான் நமது பதிவுகளில் author name-ஆக வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் ஒரு வலைப்பதிவில் பொன்வண்டு என்ற பெயரில் எழுதுகிறேன். எனது மற்றொரு வலைப்பதிவில் வேறொரு பெயரில் எழுத நினைத்தாலும் முடியவில்லை. ஏனென்றால் ஒரு account-ன் கீழ் இருக்கும் எல்லா வலைப்பதிவுகளுக்கும் ஒரே profile-ல் இருந்தே display name-ஐ எடுத்துக் கொள்கிறது. எனது ப்ளாக்கர் profile-ல் display name பொன்வண்டு என்று உள்ளது.

அதனால் என்னுடைய இரண்டாவது தளத்தில் நான் வேறொரு பெயரில் எழுத நினைத்தேன். எப்படி என்று யோசித்தபோது கை கொடுத்தது ஜாவா ஸ்கிரிப்ட்.

ஒரு வலைப்பதிவு தளத்தில் 2 இடங்களில் author name தெரியும்.

1. பதிவின் கீழ், எழுதியவர் பெயர் தெரியுமிடத்தில்.
2. பின்னூட்டங்களில்

எனவே எந்த வலைப்பதிவு தளத்தில் மாற்றம் செய்ய வேண்டுமோ அங்கு அந்த tag-களைக் கண்டுபிடித்து template-ல் மாற்றி விட்டால் பிரச்சினை சரியாகிவிடும்.

செய்ய வேண்டியது :

1. Edit HTML போய் Expand widgets தேர்வு செய்து கொள்ளவும்.

2. கீழே இருக்கும் script-ல் profile_name-ல் உங்கள் profile-ல் உள்ள name-ஐக் கொடுங்கள். new_name-ல் உங்கள் விருப்பப் பெயரைக் கொடுங்கள்.
வழக்கம் போல் script-ஐ </head> tag-க்கு மேலே copy-paste செய்யவும்.

<script type='text/javascript'>
function replace_profile_name(str)
{
var profile_name='பொன்வண்டு';
var new_name='கழுதை';
if (str == profile_name)
str = new_name;
return str;
}
</script>

3. பின்னர் <data:post.author/> tag-ஐக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data:post.author/>'))</script>

4. பின்னர் <data:comment.author/> tag-களைக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data:comment.author/>'))</script>

5. Template-ஐ Save மாடி.




என்னுடைய இன்னொரு வலைத்தளம் - மாற்றம் செய்வதற்கு முன்







மாற்றம் செய்த பின்



இது ஒரு வழி. இப்படி script உபயோகிக்காமல் வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா? அதாவது Blogger-லேயே ஏதாவது option உள்ளதா?

Monday, June 11, 2007

இளையராஜா இசையில் Cheeni Kum இந்திப் படப் பாடல்கள்


நேற்று தான் (ரொம்பவே லேட்) அமிதாப்பச்சன் நடிப்பில் நமது இளையராஜா இசையமைப்பில் வெளிவந்திருக்கும் 'சீனி கம்' திரைப்படப் பாடல்களைக் கேட்டேன். நமது இளையராஜா இசையமைத்த பழைய பாடல்களின் மெட்டுக்களை வைத்து தற்போதைய இசையையும் இணைத்து அருமையாகப் பாடல்களை வடிவமைத்திருக்கிறார். இதுவரை ரகுமான் தான் இந்த மாதிரி செய்து வந்தார். அதாவது தமிழில் தான் இசையமைத்த பாடல்களின் மெட்டுக்களிலேயே தான் இசையமைக்கும் இந்திப் படங்களுக்கும் பாடல்களை அமைத்துக் கொடுத்து வந்தார். இப்போது இளையராஜவும். ஆனால் பாடல்களில் மேற்கத்திய இசையையும் சேர்த்து இசையமைத்திருக்கிறார். இப்போது வட இந்தியர்கள் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல்களை நாம் இருபது வருடங்களுக்கு முன்பே கேட்டுவிட்டோம் என்று பெருமையாகக் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்.

மெல்லத் திறந்தது கதவு படத்தின் 'குழலூதும் கண்ணனுக்கு' பாடலின் மெட்டில் ஒரு பாடலும், மௌனராகம் படத்தில் வரும் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் மெட்டில் இரு பாடல்களும் இசையமைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 'விழியிலே' பாடலின் மெட்டில் ஒரு பாடலும் உள்ளன.

இந்தப் பாடல்களில், குழலூதும் கண்ணனுக்கு மெட்டில் அமைந்த 'பாத்தீன் ஹவா' பாடல் இடையில் அமிதாப் பேசும் வரிகளுடன் மிகவும் அருமையாக உள்ளது. 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் மெட்டில் 'சீனி கம்', 'சூனி சூனி' பாடல்களும், 'விழியிலே' மெட்டில் 'ஜானே தோனா' பாடலும் நன்றாகவே உள்ளன.

எனவே தாமதிக்காமல் download செய்து கேட்டுக் கொள்ளுங்கள். பாடல் வரிகளுக்கும், படத்தின் தலைப்பிற்கும் அர்த்தம் புரியாவிட்டாலும் பாடல்களை ரசிக்கலாம். :)

Monday, June 04, 2007

கானல் நீர் கதாநாயகனின் முதலமைச்சர் கனவு


ஒரு திரைப்படம் தயாரிப்பதற்குப் பின்னணியில் இருந்துவிட்டு அதே படத்தின் கதாநாயகனாகவும் நடித்துவிட்டு முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாலேயே அரசியல் ஆசை, முதலமைச்சர் கனவு எல்லாம் வந்து காணாமல் கானல் நீராகிப் போனதொரு கண்ணீர்க் கதையிது.

'முகவை குமார் என்கிற JK ரித்திஸ் நடிக்கும் கானல்நீர் வெற்றி பெற வாழ்த்துகிறோம். இவண் JK ரித்திஸ் ரசிகர்(அல்லக்கை) பாசறை(!)' என்ற சுவர் விளம்பரங்களும், சுவரொட்டி மற்றும் பேனர்களும் சில மாதங்களாக இராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைக் கலக்கி வந்தன. ஏனென்றால் ஒரு சுவர் அல்லது இடம் கூட விடாமல் விளம்பரம் செய்திருந்தார் கதாநாயகன். அவர் எங்கள் ஊர்க்காரராம். மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பலப்பல பள பள பேனர்களில் அவர் விதவிதமான போஸ்களில் காணப்பட்டார். என் தம்பி அதையெல்லாம் பார்த்துவிட்டு "ஏண்டா இவருக்கு கம்பியைக் காய்ச்சி சூடு போட்டாக் கூட நடிப்பு வராது போலருக்கு"ன்னான்.

கடைசியில் யார் அவர் திடீரென்று எப்படி இவ்வளவு பிரபலமாக முயற்சிக்கிறார் என்று சிலர் பூர்வாசிரமக் குறிப்புகளை எடுத்து விட்டபோது தலை சுற்றியது. அவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை அருகில் 'பருத்திவீரன் டக்ளஸ்' போல டீ மாஸ்டராக இருந்தவராம். பின்னர் இப்போது ஆட்சியில் இல்லாமல் எதிரணியாக இருக்கும் குடும்பத்தின் பினாமியாக இருந்து ஆட்சி மாறியதும் அதை அப்படியே லவட்டி இப்போது லவட்டிய சொத்துக்களைக் காப்பாற்ற ஆட்சி செய்யும் கட்சியில் சேர்ந்துவிட்டார் என்று பலராலும் ஊரறிந்த கிசுகிசு ஆணித்தரமாக சொல்லப்பட்டது. பரமக்குடியில் ஸ்டாலின் வந்தபோது அவருடன் மேடையில் கால் மேல் கால் போட்டு அமரும் அளவுக்கு அவர் கட்சியிலும் பெரிய ஆளாகிவிட்டார். பெரிய தொழிலபதிரும் இல்லை. இப்போதும் வட்டிக்கு விடுவது மட்டுமே தொழிலாம். என்ன கொஞ்சம் பெரிய அளவில்.

இவர் அப்படி என்னென்ன செய்தார்?

1. ஒரு படம் கூட வராமல் முகவை குமார் ரசிகர் மன்றம், நற்பணி மன்றம், முகவை குமார் பேபி கிளப் (குழந்தை ரசிகர்களாம் !), வயதான தாத்தாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது போன்ற போஸ்டர்கள், பேனர்களை ஊர் முழுதும் ஒட்டி கலக்கினார்.

2. ஊரிலிருக்கும் அனைத்து ஆட்டோக்காரர்களுக்கும் தலா 1000 கொடுத்து அவரது ஸ்டில்களை ஆட்டோவில் ஒட்டவைத்தார். அவர் படம் இல்லாத ஆட்டோ இங்கு இல்லை.

3. ஊரிலிருந்த எல்லா ஆட்டோ ஸ்டாண்டுகளையும் அவர் பேருக்கு மாற்றினார்.

4. ஒருநாள் தெரியாத்தனமா மதுரைக்குப் போய்ட்டுத் திரும்பி பஸ்ஸில் வந்த போது அவர் படத்தின் ஆடியோ கேசட் ரிலீஸிற்குப் பிறகு அவர் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார் போல. கிட்டத்தட்ட 100 சுமோக்கள் பறக்க (சத்தியமா பரம்பரை அரசியல்வாதி கூட இப்படிப் பண்ணமாட்டான்) லவுட் ஸ்பீக்கரில் அவரது படத்தின் பாடல்கள் ஒலிக்கப் பறந்து கொண்டிருந்தனர். வழியில் இருக்கும் கிராம மக்கள் அனைவரும் சாலையின் இருபுறமும் வரவேற்க ஆரத்தித் தட்டுக்களுடன் நின்றனர் (அல்லக்கைகள் ஏற்பாடு). ஆரத்தி எடுக்கும் பெண்களுக்கெல்லாம் 500 ரூபாயாம் பஸ் டிரைவர் சொன்னார்.

5. நகரின் ஒட்டுமொத்த லோக்கல் சேனல்களையும் குத்தகைக்கு எடுத்து ஒரே விளம்பரம். தமிழ்ப்புத்தாண்டு அன்று எல்லா லோக்கல் சேனல்களின் அட்டு VJக்களும் அவரிடம் கேவலமாகப் பேட்டி வேறு.

VJ : எப்படி சார்(!) இருக்கிங்க? இப்ப எப்படி பீல் பண்றிங்க?
JK : நல்லாத்தான் இருக்கேன். பொது வாழ்வில் இருப்பதால் பேமிலியைக் கவனிக்கத்தான் நேரமில்லை.
VJ : எப்படி சார் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறது கஷ்டமா இல்லயா?
JK : உங்க கேள்வியே தப்பு. நான் ஏற்கனவே அரசியலில் இருந்தேன்(!) (கட்சி மீட்டிங்க்கு போஸ்டர் எதுவும் ஒட்டினீங்களோ?). அரசியலில் இருந்தபடியே சினிமாவுக்குப் போனேன். இப்ப அரசியலில் ஒரு மேலான இடத்துக்கு வந்திருக்கிறேன்.
VJ : சரி சார். மக்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?
JK : நல்லாப் படிங்க. படிக்க வைங்க. இப்ப இருக்கிற அரசாங்கம் நம்மளுது. ஸ்டேட், செண்ட்ரல் ரெண்டிலயும். அதுனால நம்ம ஸ்டேட் குறிப்பா நம்ம மாவட்டத்துக்கு நல்லது நடக்கும். ஏற்கனவே சேது சமுத்திரத்திட்டம் சிறப்பா நடந்துக்கிட்டிருக்கு. எதிர்கட்சிகள் இத்திட்டம் பத்தி தப்பா சொல்றாங்க. Fishers (மீனவர்களாம்) எல்லாம் தேவையில்லாம கவலைப்படத் தேவையில்லை.

பேட்டியினிடையில் அவர் சொன்ன கிரேட் காமெடிகள்.

* மும்பைக்கு அப்புறம் இந்தியாவில் land value அதிகமா இருக்கிற இடம் பரமக்குடியாம்!
* ஏர்போர்ட் இல்லாதது எங்கள் மாவட்டத்தின் பெரிய குறையாம். பரமக்குடி ஏர்போர்ட் அமைப்பதற்கு மிகவும் சரியான இடமாம்.
* அப்புறம் ஸ்போக்கன் இங்கிலீஸில் எங்கள் மாவட்ட மக்கள் வீக்கா இருக்காங்களாம். அதுனால சென்னைக்கு வேலை தேடிப் போறதுக்கு முன்னால இவருகிட்ட சொன்னா எதாவது அரேஞ்ஜ் பண்ணித் தருவாராம். (இங்கிலீஷ் தெரியலைன்னா கிளாசுக்குப் போறோம். உன்கிட்ட சொல்லி என்ன ஆவப் போகுது? முதல்ல மீனவர்கள்னா Fishers இல்ல Fishermen-ன்னு சொல்றதுக்குப் பழகு.)

லோக்கல் சேனல் அட்டு பிகர் கேட்காமல் விட்ட கேள்வி.
VJ : இப்போ ஆளும்கட்சி நிழலில் இருக்கிங்க. ஆட்டம் போடுறிங்க. வைகோ வேற ஆட்சி மாற்றம் வரும்னு மாசம் ரெண்டு தடவையாவது சொல்றாரு. சப்போஸ் அந்த மாதிரி ஆகிப் போய் எதிரணி ஆட்சிக்கு வந்து உங்களைக் கஞ்சாக் கேஸில் பிடித்துப் போட்டால் என்ன செய்வீர்கள்?
JK : ஊரில இருக்கிற ஆட்டோக்கெல்லாம் 500 ரூபாய் கொடுத்து உங்க வீட்டுக்கு வரச் சொல்லுவேன்.

எங்க வீட்டுக்கு வராம இருந்தா சரி. இப்படியாக அலும்புமன்னனாகத் திரிந்தவர் படம் ரிலீஸ் ஆனவுடன் அட்ரஸ் இல்லாமல் போனார். இங்கு முகவையில் படம் ஒரே வாரத்தில் திரையரங்கை விட்டு ஓடியது பெரும் சோகமாக அமைந்து போனது. ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் எங்கள் ஊரிலாவது அட்லீஸ்ட் மினிமம் 100 நாள் தாராளமாக ஓடும் என எதிர்பார்த்தோம். காசு கொடுத்து ஓட்டச் சொன்னதற்கு திரையரங்கின் முதலாளி ஒத்துக்கொள்ளவில்லையாம். முதலில் இவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டிருந்தவர் படத்தின் லட்சணத்தைப் பார்த்துவிட்டு மறுத்துவிட்டாராம்.

"அய்யய்யோ! ஆரத்தி எடுக்கும் போதெல்லாம் ஐநூறு கொடுத்தேனே அவங்க கூடப் படம் பார்க்க வரலியே. ஆட்டோக்காரனுக்கெல்லாம் ஆயிரம் கொடுத்தேனே அவனும் படம் பார்க்க வரலியே"ன்னு புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.

இப்படி புயல் அடித்து ஓய்ந்த மாதிரி ஊர் இருந்த போது போன வாரம் வாரமலரிலோ, குமுதத்திலோ வந்த செய்தி திரும்பவும் புயலைக் கிளப்பியிருக்கிறது. மக்களெல்லாம் பாதுகாப்பான இடத்துக்குப் போகும்படி எங்க ஊர் கிடேசன் பார்க்ல மீட்டிங் நடந்தப்போ கலெக்டரே சொல்லியிருக்காராம். நானும் ஊரைக் காலி பண்ணிட்டு ஒரிஸ்ஸாப் பக்கம் போய்டலாம்னு இருக்கேன்.

அந்த செய்தி என்னன்னா எங்க தலைவர் முகவை குமார் அடுத்து ஒரு படத்தில் நடிக்கப் போறாராம்.