Sunday, November 02, 2008

சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் அடுத்த நூற்றாண்டிலாவது முடியுமா?

சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் 1996-97ம் ஆண்டுகளுக்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சேலம்‍-நாமக்கல்-கரூர் நகரங்களை இணைப்பதாகும். தற்சமயம் முக்கிய மாவட்டத்தலைநகரமான நாமக்கல் நகரத்தில் தொடர்வண்டிநிலையமோ இருப்புப் பாதையோ இல்லை.

இத்திட்டத்துக்கான அடிக்கல் அப்போதைய மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சர் நிதிஷ்குமார் அவர்களால் 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி நாட்டப்பட்டது.

இந்த இருப்புப்பாதையின் மொத்த தூரம் 85 கிமீ. இதனால சேலம், மல்லூர், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர் ஆகிய நகரங்கள் இணைக்கப்படும். திட்டத்துக்கான மொத்த செலவு 136 கோடி இந்திய ரூபாய்கள் ஆகும். இதில் முக்கியமாக காவேரி ஆற்றின் குறுக்கில் மோகனூரையும் வாங்க‌ல் ஊரையும் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்ட வேண்டும்.

தற்சமயம் தென்மாவட்டங்களிலிருந்து வரும் புகைவண்டிகள் சேலம் செல்வதற்கு கரூரிலிருந்து ஈரோடு சென்று அங்கிருந்து சேலம் செல்லவேண்டும். இதனால் கூடுதலாக 45கிமீ தூரமும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கூடுதலாகவும் ஆகும்.

சரி இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதே இந்தத் திட்டம் முடிந்து புகைவண்டிகள் ஓட ஆரம்பித்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. :(. காரணம் கூறுகெட்ட அரசாங்கம் செய்த ஒரு செயல் தான்.
இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலங்கள் ‍ பெரும்பாலும் விவசாயிகள் ‍ இடமிருந்து கையகப்படுத்தும் போது அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்க முன்வந்த தொகை-அதிகமில்லை ஜென்டில்மென்-ஒரு சதுராடிக்கு 0.63 பைசா. (இவனுங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?)

காவேரி ஆற்றுப் படுகையில் அமைந்திருக்கும் வளம் கொழிக்கும் நிலங்களை இப்படிக் கேவலமான் முறையில் விவசாயிகளிடமிருந்து பெற்று விடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் இதை எதிர்த்துப் பலரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்ததால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நாமக்கல் நீதிமன்றம் ஒரு சதுர அடி ரூ211 என்ற விலையில் அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. இருப்பினும் மேலும் சில வழக்குகளை விவசாயிகள் தொடர்ந்ததால் இத்திட்டம் காலவரையற்று ஒத்தி வைக்கப்பட்டு பல வருடங்களாக தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் ஏதும் நிதி ஒதுக்கப்படவில்லை.

கடந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சர் வேலு தெரிவிக்கையில் சுமுகமான முறையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஒரு சில அதிகாரிகளஇன் பொறுப்பற்றதனத்தால் தேவையில்லாத வழக்குகள் போடப்பட்டு திட்டம் தாமதமானதுடன் இன்னும் செயல்படுத்தப்படவும் இல்லை என்பதுதான் வருந்தத்தக்கது.

நாமக்கல், மோகனூர் சுற்றுவட்டார நண்பர்கள் வருத்தத்துடன் இத்தகைய தகவ்ல்களைத் தெரிவித்ததால் இதை எழுதும் எண்ணம் ஏற்பட்டது.

Tuesday, August 12, 2008

கன்னடத்துக்கு செம்மொழி - குறுக்கே நிற்கிறதா தமிழ்?

ಕನ್ನಡ


மீண்டும் ஓர் பெரிய சர்ச்சை. தமிழகப் பேருந்துகள் மறிப்பு, சரக்குந்துகள் மீது கல்வீச்சு என கர்நாடகம் திரும்ப ஆரம்பித்து விட்டது. காரணம் கன்னடம் செம்மொழி ஆகக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு தனிநபர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கன்னடர்கள் கேட்பது "ஏன் உங்கள் தமிழ் மட்டும் தான் உசத்தியா? எங்கள் மொழிக்கெல்லாம் செம்மொழி மரியாதை தரக்கூடாதா?" என்று.

பிரச்சினை தமிழக அரசு தான் திட்டமிட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாகத் திசை திருப்பப்பட்டு கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் பாதிக்கப்படும் சூழல் வருவதற்கு முன் தமிழக அரசு "எங்களுக்கும் வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கு" என்று தெளிவான விளக்கத்தைத் தக்க காலத்தில் அளித்தது. இல்லையென்றால் இந்நேரம் கர்நாடகத்தில் எல்லாக் கட்சிகளும் மீண்டும் போர்க்கோலம் பூண்டிருக்கும்.

முதலில் செம்மொழி என்றால் என்ன? 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருக்கும் மொழிக்குத்தான் செம்மொழி மரியாதை கிடைக்கும். இதற்கென்று மத்தியஅரசால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரையை ஆய்வு செய்து செம்மொழி மரியாதையை வழங்கும்.

ஏற்கனவே தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாம் நம் தமிழ்மொழிக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டது. காரணம் சொல்லவா வேண்டும்? 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறள் உள்ளிட்ட நூல்களும், இலக்கியங்களும் கொட்டிக்கிடப்பதே காரணம்.

பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒருமுறை சொன்னார் "தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு அதன் தோற்றம் 2000 ஆண்டுகள் எனக் குறைக்கப்பட்டு விட்டது" என்று. உண்மைதான் திருக்குறள் உள்ளிட்ட இலக்கணப்பிழையின்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தால் தமிழ் மொழி தோன்றியிருக்கும் காலத்தை வருடங்களால் கணக்கிடமுடியாது.

செம்மொழி மரியாதை கிடைப்பதால் என்ன லாபம்? சும்மா ஒரு கவுரவம் தான். இது போக தமிழ்மொழி ஆராய்ச்சிகள் நடக்க மத்திய அரசும் நிதியுதவி செய்யும்.

'அதற்காக தமிழும், கன்னடமும் ஒன்றா? தமிழையும் கன்னடத்தையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்ப்பதா? தமிழில் இருந்து தோன்றியது தானே கன்னடம்?' என்ற மனநிலையில்தான் ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இருக்கலாம். கன்னடர்கள் அவர்கள் மொழியும் செம்மொழி ஆக வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கான பரிந்துரையையும் செம்மொழி ஆய்வு மையத்திடம் வைத்திருக்கிறார்கள். அதை ஆய்வு செய்து செம்மொழி அந்தஸ்து வழங்கலாமா வேண்டாமா என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.


எந்த மொழி செம்மொழி ஆனால் நமக்கென்ன? ஏற்கனவே தமிழ் செம்மொழி ஆகிவிட்டதே? கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கென்ன? தமிழின் பாரம்பரியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. நம் மத்திய அரசு செம்மொழி என்று சொல்லித்தான் தமிழ் மிகவும் தொன்மைவாய்ந்த மொழி என்று உலகுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தெரியாமலே எத்தனையோ நாடுகளில் தமிழ் மதிக்கப்பட்டு வருகிறது.

இன்றும் நமக்குத் தெரியாத எத்தனையோ நாடுகளின் சிற்றலை வானொலி ஒலிபரப்பில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்தது ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றன. நயாகரா நீர்வீழச்சியின் வரவேற்புப் பலகையில் 'நல்வரவு' என்று தமிழில் எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் பச்சைத் தமிழர்களான நாம் தான் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். மருந்துக்குக் கூட அம்மா, அப்பா என்று சொல்லாத எத்தனையோ பேர் சென்னையில் இருக்கிறார்கள்.

இது போன்ற தேவையில்லாத வழக்குகள் தமிழர்-கன்னடர் உறவை மேலும் மோசமாக்கும். எப்படா வாய்ப்பு கிடைக்கும் தமிழர்களை எதிர்த்துக் களம் இறங்கலாம் எனத் திரியும் நாராயணகவுடா,பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்சன வேதிகே, வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவாளியா கட்சி போன்ற இனவெறி அமைப்புகளுக்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலவும் ஆகிவிடும்.

எனவே இந்த வழக்கு நமக்குத் தேவையில்லாத ஒன்று. காவேரி விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஒகேனக்கல் விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்தச் செம்மொழி விசயத்தில் தமிழுக்கோ, தமிழகத்துக்கோ, தமிழர்களுக்கோ எந்தவித இழப்பும் பாதிப்பும் இல்லை. வழக்குத் தொடர்ந்திருப்பவர் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றால் அது கர்நாடகத் தமிழர்களைப் பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்.

தாய்மொழியைப் போற்றுவோம். பிற மொழியைத் தூற்றாமலிருப்போம்.

Friday, August 08, 2008

டிட் பிட்ஸ் 08-08-08

பீஜிங் ஒலிம்பிக்ஸ்



இன்னிக்குத்தான் பீஜிங் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்குது. இந்தியாவுக்கு எதாவது ஒரு பதக்கமாவது கிடைக்கனும்னு கடவுளை வேண்டிக்கிறேன். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்காமலும், பேரளவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தையும் வைத்திருக்கும் நமது அரசாங்கத்துக்குக் கடும் கண்டனங்கள். இதனால்தாலன் 100 கோடி பேர் ஒரு வெண்கலப்பதக்கத்துக்கு வாயைப் பார்த்து நிக்கிற நிலமை இருக்கு. :(

குருவி + விஜய் + காமெடி = தொல்லை


சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி மாதிரி ஒரு பார்வர்ட் மின்னஞ்சலில் வந்த குருவி காமெடியை யூட்யூபில் வலையேற்றிவிட அதைத் தொடர்ந்து விஜய்யின் விசிலடிச்சான் குஞ்சுகள் கொடுக்கும் பின்னூட்டத் தொல்லைகள் தாங்கமுடியவில்லை. கெட்ட வார்த்தையில் திட்டுவது முதல் 'மவனே உனக்கு சங்கு'தான்னு மிரட்டுறது வரை பின்னூட்டம் போட்டுக் கொல்லுகிறார்கள். நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க இந்த வீடியோவில் அப்படி என்ன தவறு இருக்கு??




வில்லு படம் ப்ளாப் ஆக பிரபுதேவாவுக்கு பாலாபிசேகம் செய்து வழிபடுவோமாக !

பாவம் + பரிதாபம் = நயன்தாரா



மறுபடியும் நயனைக் குறிவைத்து யாரோ ஒரு வலைப்பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டார்களாம். பாவம். அவருக்கு மட்டும் ஏன் தான் இவ்வளவு பிரச்சினைகளோ?

விஷாலுடன் சுற்றுவது பொறுக்காமல் கடுப்பான சிம்புதான் இந்த வேலையைச் செய்திருப்பார் என்று சொல்லாமல் இருந்தால் சரி. சைபர் கிரைம்ல புகார் கொடுங்க மேடம். யார்னு கண்டுபிடிச்சி முட்டிக்கு முட்டி தட்டிருவாங்க.

லிங்க் கொடுன்னு யாரும் எனக்குப் பின்னூட்டம் போட வேண்டாம்னு கேட்டுக்குறேன். ஏன்னா எனக்குத் தெரியாது. ;)

குசேலன் + ரஜினி = குப்பை



தமிழகத்தில் வசித்து வரும் ரஜினி என்ற கன்னடநடிகருக்கு யாராவது பபுள்கம் அல்லது ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுங்கள். வாய் நமநமன்னு இருக்கிறதால் தான் எதாவது வருத்தம், மன்னிப்புன்னு கேட்டு நம்ம உயிரை வாங்குகிறார். அவர் பின்னால் வால் பிடித்துத் திரியும் விசிலடிச்சான் குஞ்சுகள் திருந்தினால் சரி. ஒரே மகிழ்ச்சி குசேலன் குப்பை என்ற செய்தி. இப்படி சந்தோசப்படுவதால் நான் கமல் ரசிகர் என்று எண்ண வேண்டாம். நான் இன்னும் தசாவதாரம் பார்க்கவில்லை. :)


இன்னிக்குத் தேதி 08-08-08 இதே போல இன்னொரு நாள் வர இன்னும் ஒருவருசம் + ஒரு மாதம் காத்திருக்கணும். எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தநாளில் ஒரு பதிவைப் பதிஞ்சி வச்சிக்கலாம்னு ஒரு பதிவு. :)

Thursday, August 07, 2008

'சூப்பர்'மணியபுரம் !





மதுரை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எனக்குள் ஓர் ஆர்வம் எப்பவும் தொற்றிக் கொள்வது உண்மை. அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. வாழ்க்கையின் முக்கியகட்டமான கல்லூரிக்காலத்தை நண்பர்களுடன் மதுரையில் கழித்ததால், அந்த நினைவுகளை மறக்கமுடியாமலும் திரும்பவும் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல முடியாமலும், அதற்கான வடிகாலாக மதுரை குறித்த செய்திகள், திரைப்படங்கள் மேல் எப்பவும் ஆர்வம் காட்டுவதுண்டு.

அந்த வகையில் காதல் திரைப்படத்திற்கு அடுத்து சுப்ரமணியபுரம் என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோவில், தெப்பக்குளம், அண்ணே என்ற பாசச்சொல்லை மட்டும் காட்டாமல் அதற்கும் மேலாக முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த வாழ்க்கைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையின் இளமைக்கால வாழ்க்கையையும் திரையில் காட்டியிருப்பதற்காகவே இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம். 1980ம் காலகட்டம் இன்றைய அரைக்கிழவர்களின் இளமைக்காலம்.

படத்தைப் பாராட்டி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டன. இந்தப்பதிவு படத்திற்கான விமர்சனம் இல்லை. இது போன்ற இயல்பான கதையமைப்பும், கவரும் அம்சங்களும் கொண்ட திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பும், வெற்றியும் பெறும் போது நம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் ஒருவித மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.

  • ஐந்திலக்கத் தொலைபேசிஎண்
  • குழாய் ஒலிபெருக்கி
  • வஜ்ரதந்தி, காளிமார்க், டார்டாய்ஸ் விளம்பரங்கள்
  • ரப்பர் செருப்பு
  • பெல்பாட்டம் பேண்ட், நீளக்காலர் சட்டை
  • தாவணிப்பெண்கள்
  • பாண்டியன் நகரப்பேருந்து
  • கூடைச்சேர்
  • கதவு வைத்த பெட்டியில் இருக்கும் தொலைக்காட்சி
  • சித்ரஹார், ஒலியும் ஒளியும்

இவையெல்லாம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் கண்ணில்பட்ட்வை.

மொத்தத்தில் சுப்ரமணியபுரம் வீட்டிலிருக்கும் பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிப்பார்த்த உணர்வு !

தமிழ்த்திரையுலகில் எப்போதாவது வரும் இது போன்ற படங்களைத் திருட்டு விசிடியில் பார்க்காமல் தாராளமாகத் திரையரங்கில் சென்று பார்க்கலாம்.

இயக்குனர் சசிகுமார், ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோருக்குப் பாராட்டுக்களும், நன்றிகளும் :)

உளியின் ஓசை, குருவி போன்ற சப்பையான படங்களை இன்னமும் முதலிடத்தில் வைத்து அழகுபார்த்துக்கொண்டு சுப்ரமணியபுரம் படத்துக்கு மூன்றாம் இடம் கொடுக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்குக் கண்டனங்கள்.

Wednesday, July 30, 2008

'அஞ்சாநெஞ்சன்' சம்சு !




சம்சு என்கிற சம்சுதீன் தான் நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எல்லா வகுப்புகளிலும் வகுப்புத்தலைவன் அதாவது க்ளாஸ் லீடர். தான் பிறப்பெடுத்ததே வகுப்பில் ஒழுக்கத்தைக் கட்டிக்காக்கத்தான் என்பது போல அவன் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது.

க்ளாஸ் லீடரின் கடமைகளான காலையில் வருகைப்பதிவு எடுப்பது, கரும்பலகையைச் சுத்தம் செய்வது, தினமும் பதிவு=45 வருகை=43 மலர்=102 இதழ்=64 என்று எழுதுவது, பையன்களிடம் காசு வாங்கி வகுப்புக்குச் சொந்தமாகப் பிரம்பு (அப்பவே சொந்தச் செலவில் சூனியம்!), கரும்பலகையை அழிக்க டஸ்டர் வாங்குவது என அவன் வேலைப்பட்டியல் நீளும். இது போக நாங்கள் எல்லோரும் இரண்டாவது பீரியட் முடியவும் சூச்சூ போனால் அவன் மட்டும் வகுப்பில் அமர்ந்து காவல் காப்பான். அதாவது வேற வகுப்பு பையன்கள் யாரும் வந்து எதையும் திருடிரக்கூடாதாம் அதுக்காக. மேலும் எப்பவும் நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் வாங்குவதாலயும், வாத்தியார்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வதாலும் ஒவ்வொரு வருடமும் அவனே வகுப்புத்தலைவனாக வாத்தியாரின் ஒருமனதாக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தான்.

சம்சுவின் நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டது முதல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் நோஞ்சான் பசங்களான நான்,யோகானந்த் என்ற யோகு, பேரையூர் சுரேஷ் மற்றும் எங்கள் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் நண்பர்கள்தான். வகுப்பில் மூன்று வரிசைகளாகப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதிலும் நடுபெஞ்சில் அமர்ந்திருக்கும் நாங்கள் தான் அவன் இம்சையினால் பாதிக்கப்பட்டது. நாங்கள் முதல்பெஞ்சில் அமர்ந்திருந்ததால் நன்றாகப் படிக்கிற பசங்க என்று தப்பால்லாம் நினைக்கப்படாது.

நான் குட்டை+சோடாபுட்டி வேறு. யோகுவும் சுரேஷும் அதே. அதான் காரணம். அப்படி என்னன்ன இம்சையெல்லாம் சம்சுவால் எங்களுக்கு வந்தது? வகுப்பில் ஒவ்வொரு பீரியட் முடிந்ததும் போர்டின் முன்னால் வந்து நின்று கொண்டு "டாய் யாரும் பேசாதீங்க. பேர் எழுதுவேன்" என்பான். பின்பெஞ்சில் கழுதை மாதிரிக் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் அவன் கண்ணுக்குத் தெரியாது.

நான் சுரேஷிடம் "இப்ப என்ன அறிவியல் பீரியடாடா?" அப்படின்னு மெல்லமாக் கேட்டால், கழுகு கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல என்பேரை போர்டில் எழுதிப்போட்டுவிடுவான். "டேய் இப்ப என்னடா அடுத்து என்ன பீரியட் அப்புடின்னுதான்டா கேட்டேன்" என்று வாக்குவாதம் பண்ணினால் மறுபடியும் என்பேரை எழுதிபோட்டுவிடுவான். அதாவது லீடர் சொல்லியும் கேட்காமல் பேசினேன்னு அர்த்தமாம். அடுத்து வரும் வாத்தியாரிடம் இரண்டு அடி வாங்கவேண்டும்.

இது பராவாயில்லை. போர்டு அழிக்க டஸ்டரைக் காணவில்லையென்றால் முதல் பெஞ்சில் இருக்கும் எங்கள் யார் நோட்டையாவது எடுத்து டர்ர்ர்ர்ன்னு பேப்பர் கிழித்து போர்டை கீச் கீச்னு சத்தம் வர அழிப்பான். நாங்கள்லாம் நோஞ்சான் வேறு. அவனை எதிர்த்து என்ன செய்யமுடியும்? சுரேஷ் ஒருமுறை நோட்டைக் கிழித்ததற்கு கெட்டவார்த்தையில் திட்ட அவன் பேரை போர்டில் எழுதி அடைப்புக்குறிக்குள் கெட்டவார்த்தை என்று எழுதிப்போட்டுவிட்டான். மாயா என அழைக்கப்பட்ட கணக்கு வாத்தியார் அடி பின்னிவிட்டார்.

விதியை நொந்துகொண்டு சம்சுவின் இம்சைகளைத் தாங்கிக் கொண்டிருந்தபோது ஒருநாள் காலையில் அறிவியல் பீரியட் பாதியில் எங்கள் வகுப்பு வாசலில் ஒருபையன் காக்கி பேண்ட், வெள்ளைச்சட்டை, டக்இன் செய்து பெல்ட் போட்டுக்கொண்டு "எக்ஸ்க்யூஸ்மி சார்!" அப்படின்னு கூப்பிட்டான். 'யாருப்பா இது துர இங்கிலீசெல்லாம் பேசுது'ன்னு நாங்க வாயைப் பொளந்து பார்க்க "மே ஐ கம் இன் சார்?" அப்படின்னு மறுபடியும் ஆங்கில ஆசிட்டை வீசினான்.

"என்னப்பா வேணும்?" - வாத்தியார்.

"சார் என் பேரு மணிகண்டன். புதுசா சேர்ந்திருக்கேன் சார்"

"சரி உள்ள வாப்பா". வந்தவன் எங்கள் பெஞ்சில் நெரித்துக் கொண்டு உட்கார்ந்தான். பீரியட் முடிந்ததும் சம்சிடம் "டேய் எங்களுக்கே இடம் இல்லை. இவனைப் போய் பின்னால உக்காரச் சொல்லுடா" னு சொன்னால், "போங்கடா .. எலிக்குட்டி மாதிரி எல்லாரும் இருந்துக்கிட்டு முழு பெஞ்சும் வேணுமா? அவன் இங்கதான் இருப்பான்னு" சர்வாதிகாரக் கட்டளை போட்டுட்டான்.

பின் மெதுவாக மணிகண்டனிடம் அவன் பூர்வீகம் விசாரிக்க, அவன் சென்னையில் ஆங்கில வழியில் படித்தவனாம். அவன் அப்பா வேலை பார்க்கும் இடத்தில் கோல்மால் பண்ணிவிட தண்ணியில்லாக் காடுன்னு எங்க ஊருக்கு அனுப்பிட்டாங்களாம். எப்பவும் அவன் தான் முதல் ரேங்க் வாங்குவானாம்.




விசயம் சம்சுக்குக் கேள்விப்பட்டு பேயடித்தது போலாகிவிட்டான். என்னடா இது நமக்குப் போட்டியா ஒரு படிக்கக்கூடிய பையன் வந்திருக்கானேன்னு ரொம்பவும் பயந்து போய்ட்டான். அவன் பயப்படறது தெரிஞ்சதும் நாங்க ஒரே குஷியாகிட்டோம். எப்பவும் மணிகண்டனோடவே சுத்துறது, ஒன்னா சேர்ந்துதான் வீட்டுக்குப் போறது ன்னு திரிஞ்சோம்.

நம்ம தான் 'ஏபிசிடி எங்கப்பன் தாடி' ன்னு ஆங்கிலம் பேசுற ஆளாச்சே! ஆனால் அவன் ஆங்கிலத்தில் பேசி , ஆங்கிலத்தில் வாய்ப்பாடு சொல்லி, ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை பேசி என ஆங்கிலத்தில் பொளந்து கட்டினான். சம்சுக்கு சரியான ஆப்புடா என நினைச்சிருந்தோம்.

அவனிடம் சம்சுவைப் பற்றி சொல்லியிருந்தோம். "டேய் நீ மாதப் பரிட்சையில சம்சுவை விடக் கூட மதிப்பெண் வாங்கி நீ இந்தக் க்ளாஸ் லீடரா வரணும்டா"ன்னு அடிவாங்கின கையைத் தடவிப் பார்த்துக்கொண்டே சொல்லிவச்சிருந்தோம். மணிகண்டன் வந்தால் எங்களுக்கு இனிமேல் வகுப்பில் எந்தத் தொல்லையும் இருக்காது என நம்பி அவனை நல்லா ஏத்திவிட்டுக்கிட்டிருந்தோம். அவனும் கவலையேபடாதீங்கடான்னு சொல்லியிருந்தான்.

இதுக்கிடையில் காண்டாகிப் போன சம்சு, மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திவிட்டான். நாங்கள் அவனுடன் சுற்றுவதால் எங்களையும் பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் சாயங்காலம் மைதானத்தில் விளையாடி விட்டு வீட்டுக்குக் கிளம்புறப்போ தூங்குமூஞ்சி மரத்துக்குப் பின்னால இருந்து யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சின்னு போய்ப் பார்த்தால் சம்சு அறிவியல் புத்தகத்தைத் தொறந்து வச்சிக்கிட்டு அழுதுக்கிட்டிருக்கான்.

ஒரு பேச்சுக்குப் போய் "ஏண்டா அழுற?"ன்னு கேட்க "பொத்திக்கிட்டுப் போங்கடா. உங்களுக்கென்ன?" ன்னான். இருந்தாலும் எங்களுக்கெல்லாம் அளவிடமுடியாத சந்தோசம். எல்லாம் மணிகண்டனை நினைச்சுப் பயந்து போய்தான் அழுகிறான்னு தெரியும். 'ங்கொய்யால எங்களையா திட்டுற? மவனே! மாட்டுனடி! இந்த மாசத்தோட உன்னோட லீடர் பதவி காலி!'ன்னு சந்தோசமா வீட்டுக்குப் போனோம்.

அடுத்த வாரம் மாதப்பரீட்சை எழுதினோம். மணிகண்டன் எல்லாப் பரீட்சையும் நல்லா எழுதியிருக்கிறதா வேற சொன்னான். சனி, ஞாயிறு விடுமுறை முடிஞ்சி திங்கள்கிழமை எல்லாருக்கும் திருத்தின விடைத்தாள்களைக் கொடுத்தார்கள். வரிசையாக ஒவ்வொரு மதிப்பெண்ணும் வரவும் எங்கள் மதிப்பெண்ணைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் மணிகண்டன் மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருந்தோம்.

அடப்படுபாவி!! இப்படி ஏமாத்திட்டியடா !! ஆங்கிலம் தவிர எல்லாத்திலயும் அவன் பெயில்!! திக்கித்திணறி 36 மதிப்பெண் வாங்கியிருந்தான் ஆங்கிலத்தில் !! எங்களுக்கே அவன் முகத்தைப் பார்க்கக் கூச்சமா இருந்தது, ஆஹா ! இவனைப் போய் நம்பி ஏமாந்திருக்கமே!! ன்னு ரொம்ப வருத்தமாப் போச்சு.

அதெல்லாம் விட, சம்சு வந்து அவனைக் கேவலமா ஒரு பார்வை பார்த்தான் பாருங்க .. கொடுமை. அடுத்த வினாடியே சம்சு வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டான்.

"டேய் மணிகண்டா நீ போய் கடைசி பெஞ்சுல உட்காருடா!"

"எதுக்குடா?"

"ம். மக்குப்பசங்கெல்லாம் அங்கதான் உட்காரணும்" அப்படின்னு தெனாவெட்டா சொன்னான். மணிகண்டன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டான்.

என்னது? அப்புறம் நாங்க என்ன பண்ணினோமா?? வாலைச் சுருட்டிக்கிட்டு நம்மளே நல்லாப் படிச்சி முதல் மதிப்பெண் வாங்கி க்ளாஸ் லீடர் ஆகிரணும்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டோம்.

Monday, June 23, 2008

(கு)ரங்கும் ஜிலேபியும்


நானானி என்னை ஜிலேபி பிழியச் சொல்லியிருந்தாங்க. பதிவுகள் படிக்கிறதும் கொஞ்சம் குறைஞ்சதால எனக்கு இது என்ன விளையாட்டுன்னே புரியல. சரி ஜிலேபி பத்தி ஒரு மொக்கை போடணும்னு நானாகவே முடிவு பண்ணிக்கிட்டு ஒரு மொக்கைக் கதை.

பெண்பார்க்க வந்திருந்த பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு மங்களம் மாமி இனிப்பு வகைகளைக் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள். சன்னலில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பாமாவுக்குப் பையனைப் பிடித்திருந்தது. சட்டென மங்களம் உள்ளே வந்து "பாமா, இதை மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்குக் கொடும்மா" என்று காபி கோப்பைகள் இருந்த தட்டைத் தந்து விட்டுப் போனாள்.

குனிந்த தலை நிமிராமல் எல்லோரிடமும் காபி கோப்பைகளைக் கொடுத்த போது தான் கவனித்தாள். தன் அம்மா அவர்களுக்குப் பரிமாறிய இனிப்பு வகையறாக்களில் ஜிலேபியும் இருந்தது. உள்ளே வந்த பாமா அம்மாவைப் பார்த்து மெதுவாக அழுத்தமாகக் கேட்டாள்.

"ஜிலேபியை எதுக்கு அவுங்களுக்குக் கொடுத்தாய்?"
"ஏண்டிம்மா? நீதானே அவங்களுக்குக் கொடுக்கலாம்னு நேத்து இனிப்புப் பண்டமெல்லாம் வாங்கிண்டு வந்தாய்?"
"வந்தேன். ஆனால் நான் ஜிலேபி வாங்கிண்டு வரலை"
"அப்புறம் மேசையில் தட்டில் இருந்த ஜிலேபி??"

பாமா மங்களத்தின் காதில் சொன்னாள்.
"அடிப்பாவி இப்படியா செய்வாய்?" மெதுவாக கூடத்தை எட்டிப் பார்த்துவிட்டு "ஐயையோ மாப்பிள்ளைப் பையன் வேறு ருசிச்சி சாப்பிடுறானேடி!!!" என்று பதட்டப்பட்டாள்.

சற்று நேரத்தில் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்து, பெண்ணைப் பிடித்திருக்கிறதென்று சொல்லிவிட்டு பிள்ளையாண்டானின் அப்பா பாமாவிடம் "குழந்தே! ஜிலேபி நீயே செய்தாயோ? ரொம்ப நன்னாயிருந்தது"ன்னு சொன்னதும் பாமாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

ல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆனதும் கணவன் ஸ்ரீதர் பிறந்தநாள் வந்தது.

"ஏண்டி என் பிறந்தநாளுக்கு நீ ஜிலேபி செஞ்சு தர்றியா? உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தபோது சாப்பிட்ட ஜிலேபி இன்னும் தொண்டையிலேயே இருக்கிறதடி. நீதானே செய்தாய் அந்த ஜிலேபியை? ஜிலேபி செய்யணும்னா நம்மகிட்டே மாவு பிழிய உரல் இல்லியே?"

"பரவாயில்லை. பண்ணிரலாம்"

"உரல் இல்லாம எப்படிப் பண்ணுவாய்? இடியாப்ப உரலில் பண்ணலாம்னு சொல்றாயோ? ஜிலேபி ரொம்ப ஒல்லியா வருமோன்னோ?"

"அசடாட்டம் பேசாதேள். சர்க்கரைப் பாகு தயார் பண்ணிட்டாப் போதும். நீங்க கடையில் போய் ஒரு இருபது முறுக்கு மட்டும் வாங்கிண்டு வாங்கோ. கொஞ்சம் கட்டையா இருக்கிறதா வாங்கிண்டு வாங்கோ"

"முறுக்கு எதுக்கு இப்போ? ஜிலேபிதானே வேணும்னு கேட்டேன்"

"ஐயோ! ஜிலேபி செய்யத்தான் முறுக்கு"

"புரியறமாதிரி சொல்லேண்டி"

"ஈஸ்வரா! எனக்கு ஜிலேபியும் செய்யத் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. நீங்க என்னைப் பெண் பார்க்க வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னால தீபாவளிக்குப் பண்ணின முறுக்கும், குலோப்ஜாமூன் செய்து மிஞ்சிய சர்க்கரைப்பாகும் மீதமிருந்தது. பக்கத்து வீட்டு வாண்டு ரங்கு அதையெல்லாம் பாகுல போட்டு ஊற வச்சுட்டான்.அதைப் போய் எங்கம்மா ஜிலேபின்னு எடுத்து உங்களுக்குக் கொடுத்துட்டா. நீங்களும் அந்த ஜிலேபியைப் போய் ஆஹா ஓஹோ புகழ்றீங்களே?"

ஸ்ரீதர் முகத்தில் ஈயாடவில்லை.

Wednesday, June 18, 2008

மதுரை-திருப்பரங்குன்றம்-அழகர்கோவில்-பழமுதிர்ச்சோலை-பதிவர் சந்திப்பு

'கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி' அப்படின்னு பழமொழி சொல்வாங்க. ஆனால் 'கடும் உழைப்புக்குப்(சரி.. சரி..) பின் விடுமுறை' அப்படிங்கிறதே எப்பவும் நம்ம கொள்கை. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்த ப்ராஜெக்ட் வேலை மே மாத இறுதியில் முடிவுக்கு வந்ததை அடுத்து "ஒரு வாரம் விடுப்பு வேணும்.குடுக்கலைன்னா எடுத்துக்குவேன்"ன்னு மிரட்டியிருந்ததால் விடுப்பு கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை.

ஒரு சின்ன ப்ளாஷ் பேக். ரெண்டு மாதம் முன்னாடி தூங்கிறப்போ கனவில் கையில் வேலோட முருகனும், அவர் மாமன் அழகரும் வந்து "ஏம்பா, ரெண்டு வருசம் மதுரையில் படிச்சியே எங்களை ஒரு தடவையாவது வந்து எட்டிப் பார்த்தியா? வாராவாரம் அல்வா வாங்கித் திங்கிறதுக்காகவே டவுன்ஹால் சாலை வழியா மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போன நீ அல்வா கிடைக்காதுங்கிறதுக்காக திருப்பரங்குன்றத்துக்கும், அழகர்கோவிலுக்கும் வராம டபாய்ச்சல்ல.. பாரு உனக்கு விடுப்பு கிடைக்காது" அப்படின்னு சொன்னதால "அப்படியெல்லாம் இல்லீங்கோ. நான் கூப்பிட்டப்போ துணைக்கு யாரும் வரமாட்டேன்னு சொன்னதால வரமுடியலீங்கோ. எனக்கு விடுமுறை கிடைச்சா கண்டிப்பா வந்து பார்க்கிறேன்"னு வாக்கு கொடுத்துட்டேன்.

கோவில் குளம்னு கூப்பிட்டாலே கம்பளிப் பூச்சியைப் பார்க்கிற மாதிரி நண்பர்கள் பார்க்கிறதால இப்பவும் தனியாகவே போக வேண்டிய சூழ்நிலை ஆகிப் போச்சு. சரியா இந்த நேரத்துல புரட்சிப்பதிவர் டிபிசிடி வேற மதுரையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொன்னதை நம்பி அதையும் என் பயணத்திட்டத்தில் சேர்த்துக்கிட்டேன். ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய் அடிக்க முடிவு பண்ணியாச்சு.


கிடைச்சது 9 நாட்கள் விடுமுறை. ஜூன் 7 முதல் 15 வரை. விடு ஜூட். விடுப்புக்கு முதல் நாள் நான் வேலையே பார்க்கலை. எல்லோர்கிட்டயும் போய் "நான் ஊருக்குப் போறேன். ஒரு வாரம் லீவு" அப்படின்னு பீத்திக்கிட்டே திரிஞ்சேன். ரொம்ப பேர் காண்டாகிட்டாங்க. வரும்போது எதாவது திங்கிறதுக்குக் கொண்டு வா. (அட உங்களுக்கெல்லாம் வேற ஒன்னுமே தெரியாதாப்பா? ஊருக்குப் போனா எதாவது திங்க கொண்டு வரணும்னு எவன் சட்டம் போட்டான்?). ஒரு வழியா மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது அதிகாலை மணி 2. டவுன் ஹால் சாலையில் அலைஞ்சு திரிஞ்சு ஒரு விடுதியைக் கண்டுபிடித்து தூங்க ஆரம்பிச்ச போது மணி 2:30.

என் திட்டம் இது தான். முதலில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம். பின்னர் திருப்பரங்குன்றம். அடுத்து அழகர் கோவில். அதற்கப்புறம் மலை மேல் பழமுதிர்ச்சோலை மற்றும் இராக்காயி அம்மன் கோவில் தரிசனம்.

மீனாட்சி அம்மன் கோவில்
சீக்கிரமே மீனாட்சி அம்மன் கோவில் போகணும்னு முடிவு பண்ணியதால் வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே தூக்கம் போட்டேன். காலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டமே இல்லாத தரிசனம். அம்மன் சன்னிதியிலேயே கூட்டம் இல்லை. சுவாமி சன்னிதியில் விழாக்காலங்களிலே கூட கூட்டம் இருக்காது. அதுவும் நான் சென்ற போது கூட்டமில்லாமல் ஒரு தரிசனம். பின்னர் பரிவாரங்களை வணங்கிவிட்டு வெளியில் வந்து தெப்பக்குளப் படிக்கட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாயிற்று.


மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் கோபுரம் முழுவதும் தென்னை ஓலையால் மூடிவைத்திருந்தார்கள். கோவிலுக்கு வெளியே சித்திரை வீதி முழுவதும் சாலையைப் பெயர்த்துப் போட்டிருந்தார்கள். வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. காலையில் சாலையோரக் கடையில் மதுரை ஸ்பெசல் சுடச் சுட இட்லி சாப்பிடலாமென்றால் என் நேரம் ஒரு கடையும் தென்படவில்லை. சரின்னு வெறும் வயிற்றோடவே திருப்பரங்குன்றம் பேருந்து ஏறிய போது மணி 7:30.

திருப்பரங்குன்றம்
பெரியாரிலிருந்து கால் மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் வந்து விட்டேன். முருகனின் முதல் படை வீட்டைத் தரிசிக்கப் போறோமே, கடவுளை நினைத்துக் கொண்டே செல்லணும் என்று 'சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா' என்ற முருகன் துதியைப் பாடிக்கொண்டே கோவிலுக்குள் வந்து சேர்ந்தேன்.


திருப்பரங்குன்றம் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. கோவிலின் அமைப்பு ரொம்பவே வித்தியாசமானது. மலைதான் கோவிலின் ஒரு பக்கம். அதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,சிலைகளைச் சுற்றிக் கோவில் கட்டியிருக்கிறார்கள். கோவில் இரண்டு தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் நந்தி, மயில், எலி வாகனங்களின் சிலைகள் உள்ளன. அவற்றுக்கு எதிரே இரண்டாவது தளத்தில் முருகர், துர்க்கை, விநாயகர், முருகனுக்குப் பக்கவாட்டில் பெருமாளும், விநாயகருக்குப் பக்கவாட்டில் சிவனும் உள்ளனர்.

துர்க்கைக்கு சன்னிதிக்கு நேரேதான் ராஜகோபுரம் உள்ளது. முருகர் துர்க்கைக்குப் பக்கவாட்டில், தெய்வானையுடன் பக்கவாட்டில் சிற்பமாகக் காணப்படுகிறார். முருகனுக்கு அருகில் ஒருவர் தாடியுடன் உள்ளார். நாரதர் என்று குருக்கள் சொன்னார், அது தவறு இந்திரன் அல்லது அகத்தியராக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இங்கும் கூட்டமில்லை. ரொம்ப நேரம் நின்று வணங்கிய பிறகு தெப்பக்குளம் மற்றும் கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் ஒரு அக்கா தெருவோரத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். வெறும் ஐந்து ரூபாய்க்கு சில பல இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு திரும்பவும் பெரியார் நிலையம் வந்து சேர்ந்தேன்.

அழகர் கோவில்
அங்கிருந்து பேருந்தில் அழகர் கோவிலுக்கு வந்து சேர்ந்த போது மணி 10:15. சுற்றிலும் பச்சை பசேல் என்று மலை. மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவில். உள்ளே சென்றால் கோவிலின் வெளியே முதலில் வருவது பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னிதி. இங்கு சாமிக்கு சிலை கிடையாது. மூடப்பட்ட கதவில் சந்தனம் பூசப்பட்டு அதையே கருப்பசாமியாக வழிபடுகிறார்கள். ஏன் என்ற காரணமும், வரலாறும் தெரியவில்லை. ரொம்பவும் சக்திவாய்ந்த கடவுள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெளியே



உள்ளே


மிகுந்த பயபக்தியோடு வணங்கிவிட்டு அழகர் கோவிலின் உள்ளே சென்றால் இங்கும் கூட்டமில்லை. சனிக்கிழமையாதலால் பூஜைகள் நடந்து கொண்டிருந்ததன. கொஞ்ச நேரத்தில் அது முடியவும் அழகரையும் தரிசித்துவிட்டு பிற சன்னிதிகளையும் தரிசித்து விட்டு வெளியில் வந்தால் நம் முன்னோர்களின் குறும்பு. பூஜை முடிந்து வாழைப்பழம் வைத்திருந்தவர்களையெல்லாம் விரட்டிக் கொண்டிருந்தனர்.

பழமுதிர்ச்சோலை

அழகர்மலையின் மேலே முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை உள்ளது. இங்கு செல்வதற்கு அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதியில் இருப்பது போல. மலைப்பாதையில் பத்து நிமிடப் பயணம். பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இறக்கிவிடுகிறார்கள். இந்த முருகன் கோவில் கொஞ்சம் சிறியது தான். விநாயகர், முருகர், பெருமாள் சன்னிதிகள் மட்டுமே உள்ளன.

இராக்காயி அம்மன் கோவில்

பழமுதிர்ச்சோலையில் இருந்து அதே மலைச்சாலையில் ஒரு பத்து நிமிடம் நடந்தால் நூபுரகங்கை எனப்படும் வற்றாத தீர்த்தக்கிணறு மற்றும் அதை ஒட்டி இருக்கும் இராக்காயி அம்மன் கோவிலையும் தரிசிக்கலாம். எல்லோரும் தீர்த்தக் கிணற்றில் குளித்து விட்டு வந்து தரிசிக்கிறார்கள். நான் தலையில் தெளித்துக் கொண்டு இராக்காயி அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் என் புயல்வேக ஆன்மீகப் பயணம் முடிவுக்கு வந்தது. அப்போது மணி 12:10.

வௌவால் தெரியுதா?



அழகர்மலையின் அழகிய தோற்றம்



திரும்பவும் மலையில் இருந்து இறங்கி அழகர்கோவில் சென்று பின் பெரியார் நிலையத்தில் இறங்கி, சாப்பிட்டு விட்டு டவுன்ஹால் சாலை பிரேமாவிலாஸில் அல்வா சாப்பிட்டுவிட்டு விடுதிக்குச் சென்று பேய்த்தூக்கம் போட்டேன்.

மதுரையில் கண்ட மாற்றங்கள்
1. பண்பலை வானொலிகள்
2. மாற்றம் செய்யப்பட்ட பெரியார் நிலையம் மற்றும் புதிய மேம்பாலம்
3. ஏகப்பட்ட ஏர்பஸ்கள். இரண்டுமடங்கு கட்டணம்.
4. தங்கரீகல் திரையரங்கு மாற்றம் செய்து கட்டப்படுகிறது. DTS,ACயுடன்.
5. டவுன்ஹால் சாலையில் ஒரு தேநீர் 4 ரூபாய். அநியாயம்.

என்றும் மாறாதது
வாங்கண்ணே என்னும் மக்களின் அன்பு. (ஐஸ் ஐஸ்... நானெல்லாம் உங்களுக்கு அண்ணனா? எப்பவும் அன்புத்தம்பிதேன்)

பெருமாள் தெப்பம் - டவுன்ஹால் சாலை

இந்த அழகான தெப்பக்குளம் நேதாஜி சாலைக்கும் டவுன்ஹால் சாலைக்கும் இடையில் இருக்கிறதென்றால் நம்பமுடிகிறதா? தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமித்து விட்டதால் இப்பொழுது தெப்பக்குளத்துக்குப் போக வழியே கிடையாது.

சின்ன சந்தேகம்
ஏன் அழகர்கோவில் கருப்பசாமி சன்னிதியில் சிலை வழிபாடு இல்லை? யாருக்காவது தெரியுமா?

பதிவர் சந்திப்பு
மதுரை வந்ததிலிருந்தே பதிவர் டிபிசிடியின் நடவடிக்கைகள் மர்மமாகவே இருந்தன. முதலில் நான் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என்று சொன்னபோது என் கைப்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு திடீரென்று ஒருநாள் "நான் டிபிசிடி பேசுறேன். இது தான் என் கைப்பேசி எண்" என்று சொல்லிவிட்டு நான் "அப்புறம்" என்பதற்குள் டீங் டீங் டீங். தொடர்பைத் துண்டித்துவிட்டார். அப்புறம் இரண்டு நாட்களாக பேச்சு மூச்சைக் காணோம்.

சந்திப்புக்கு முதல் நாள் தொலைபேசி "எங்க சந்திப்பு நடத்துறீங்க?"ன்னு கேட்க "நாளைக்கு சந்திப்புக்கு நாளைக்குத்தான் முடிவு பண்ணனும்" அப்படின்னு மர்மச்சிரிப்பு சிரிக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி.'நான் அவசரமாக போடி போகிறேன். என்னால் உங்களைச் சந்திக்க முடியாது' என்று. பின்னூட்ட பாணியில் ஒரு சோக ஸ்மைலியை அவருக்கு குறுஞ்செய்தியில் அனிச்சையாக அனுப்பிவிட்டேன்.

ஆகக் கூடி சந்திப்பு இருக்குன்னு ஆசையைக் கிளப்பிவிட்டு கடைசியில் எஸ்ஸாகிப் போன டிபிசிடியின் நடவடிக்கைகளில் சந்தேகமும் ஒரு வித பதற்றமும் இருப்பதால் எதற்கும் மலேசியா காவல்துறை அவர்மேல் ரெண்டு கண்ணையும் வைப்பது நல்லது. சந்திப்பு இல்லாததால் சாவகாசமாகக் கிளம்பி இரவு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.