Wednesday, July 01, 2009

அகதியாய் வந்த சிறுமி




அகதியாய் வந்த சிறுமியின் காயத்துக்குக்
கட்டுப்போடுகையில் சொன்னாள்
"குருதி தோய்ந்த உன் கரங்களால்
என்னைத் தொடாதே!"

பக்குவ‌மாய் எடுத்துச் சொன்னேன்
"நான் இந்திய‌ன் என்ற‌ ச‌ட்டையை
எப்போதோ கழற்றிவிட்டேன்" என்று

கோப‌த்தோடு கூறினாள்
"த‌மிழனாய் இருந்து ம‌ட்டும் என்ன‌ கிழித்தாய்?"
அழுகையோடு தொட‌ர்ந்தாள்
"என் த‌ந்தை முட‌மாக்க‌ப்பட்டார்
தாய் பைத்தியமானாள்
அண்ண‌ன் க‌ட‌த்த‌ப்ப‌ட்டான்
அக்காள் கெடுக்க‌ப்ப‌ட்டாள்
நான் மட்டும் தப்பிவந்தேன் எப்படியோ ..
தாய்நாடு ஈழ‌மென்றும்
த‌ந்தைநாடு பார‌த‌மென்றும்
என் தாய்க்கு அவ‌ள் தாய்
சொல்வாளாம் ஒரு கால‌த்தில்.
ஆனால் நீர் எம‌க்குச் செய்த‌து?"

மெதுவாய்த் தொட‌ர்ந்தேன்.
"போராட்ட‌ங்க‌ள் ஆர்ப்பாட்டங்க‌ள்
தீக்குளிப்புக‌ள் உண்ணாநிலைக‌ள்
ம‌னித‌ச் ச‌ங்கிலிகள்
எவையும் எட்டவில்லை
எமை ஆள்பவரின் செவிகளை
ஏன் தெரியுமா?"

மெதுவாய்க் காதில் சொன்னேன்
"இலங்கையில் மட்டுமல்ல‌
இந்தியாவிலும் தமிழரை எவரும்
மதிப்பதில்லை"

ஏளனமாய்ச் சிரித்துச் சொன்னாள்
"சொல்லித் தெரிய அவசியமில்லை
எல்லாம் தெரியுமெனக்கு
உன் மக்கள் ஓட்டுப் போட்ட லட்சணத்திலிருந்தே!
சொரணையற்ற இனமென்று
சொந்த நாட்டவரும் மதிக்க மாட்டார்கள் !
எமைக் கைவிட்ட சனமென்று
சகோதரமக்களும் மதிக்க மாட்டார்கள் !"

கையை உதறிவிட்டு எழுந்து சென்றாள்
காறியுமிழ்ந்த உணர்வுடன் அமர்ந்திருந்தேன் நான் !

Tuesday, February 10, 2009

ரிச்சி ஸ்ட்ரீட் aka நரசிங்கபுரம் தெரு


உங்களுக்கு சென்னையில் நரசிங்கபுரம் தெரு எங்கே இருக்கிறதென்று தெரியுமா? என்னப்பா சத்யம் திரையரங்கம் தெரியுமாங்கிற மாதிரி கேட்கிறங்கிறீங்களா? அது சென்னையில் எல்லாருக்கும் தெரிஞ்ச இடம் தான். அதுதான் ரிச்சி ஸ்ட்ரீட் என தமிழில்(!) அழைக்கபடும் மின்னணு சாமான்கள் விற்கப்படும் தெரு.

ஜவுளிகளுக்கு எப்படி ரங்கநாதன் தெருவோ அதைப் போல மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) பொருட்களுக்குப் பேர் போன தெரு ரிச்சி ஸ்ட்ரீட். ஒரிஜினல் சாமான்கள், ஒரிஜினலைப் போலவே இருக்கும் டுபாக்கூர் சாமான்கள், கம்பெனி ப்ராண்டட் சாமான்களைவிட தரமான மின்னணு சாதனங்களை இங்கே வாங்கலாம். கணிப்பொறிக்குத் தேவையான திருகாணி முதல் ப்ராசசர் வரை சகலமும் கிடைக்கும் தெரு.

இந்தத் தெரு 1974ல் வெறும் 5 கடைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இப்போது 900க்கும் மேற்பட்ட கடைகளுடன் ஒட்டு மொத்த சென்னை/தமிழகத்துக்கும் தேவையான மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் இடமாக உள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய மின்னணுப் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையாக உள்ளது. இங்கே கடை வைத்திருப்பவர்கள் முக்கால்வாசிப் பேர் குஜாராத்திகள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு (ரொம்பப் பெருமை ! ).

ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் அளவுக்கு இங்கேயும் கூட்டம் எல்லாக் கடைகளிலும் மொய்க்கிறது. பெரும்பாலான மக்கள் வாங்க வருவது கணினிக்குத் தேவையான பொருட்கள், USB pen drive, mobile memory card போன்றவை. இங்கே வாங்க முடியாத மின்னணு சாதனங்களே இல்லை எனலாம். நமக்குத் தெரிந்த எல்லா கம்பெனி ஐட்டங்களும், தெரியாத ஏகப்பட்ட சரக்குகளுக்கும் கிடைக்கின்றன. புதிதாக ஒரு கணினி வாங்க வேண்டும் என்றால் ஷோரூம் போய் அங்கே காட்டும் கணினியை வாங்குவதற்கு அதே configuration உடன் இங்கே 10000 குறைவாகவே வாங்கிவிடலாம்.

கணினி மட்டுமின்றி ’ரிச்சி ஸ்ட்ரீட் மேட்’ டிவிடி ப்ளேயர்கள், மெமரி கார்டுகள், மொபைல் போன்கள், கணினி உதிரி பாகங்கள் என வாரண்டி இல்லாத சரக்குகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. புதியன மட்டுமின்றி பழைய பொருட்களையும் சரி செய்து விற்கிறார்கள். கணினியில் அல்லது தனியாக Play station வைக்கத் தேவையான எல்லாப் பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. என்ன புது எலக்ட்ரானிக்ஸ் சாமான் வந்தாலும் அடுத்த நாளே இங்கே எதிர்பார்க்கலாம். ஒரிஜினலாகவோ அல்லது டுபாக்கூராகவோ !!! :)))

நான் ஒரு முறை மெமரி கார்ட் வாங்கப் போனபோது அந்தக் கடைக்காரர் ஒரு பேனாவை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார். என்ன வென்று பார்த்தால் அது ஒரு ரகசிய கேமராவுடன் உள்ள பேனா. 4 மணி நேர ரெக்கார்டிங் வசதியுடன் USB plug & play model. விலை வெறும் 700. இப்படி அன்றாட உபயோகத்துக்கு அல்லாத பல பொருட்கள் இங்கே மலிவாகக் கிடைக்கின்றன.


இப்படி எல்லாமே இங்கே கிடைத்தாலும் சில பிரச்சினைகளும் இங்கே இருக்கின்றன. முதலாவது டூப்ளிகேட் சாமான்கள். நாங்கள் ஒரு முறை ஆப்பிள் ஐபாட் வாங்கப் போன போது அந்தக் கடைக்காரன் ”ஒரிஜினலா, டூப்ளிகேட்டா?” என்றான் (ரொம்ப நல்லவன்) . இரண்டிலும் கொஞ்சமும் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியவில்லை. விலை மட்டுமே வித்தியாசம். டூப்ளிகேட் மூன்று மடங்கு விலை குறைவு. இது என்ன தங்கமா? உரசிப் பார்த்து வாங்க? அவன் ஒரிஜினல் என்று சொன்னதையே வாங்கித் தொலைத்தோம். ஒன்றும் பிரச்சினையில்லாமல் வருகிறது.

அடுத்தது இங்கே நிறைய கடைகள் இருப்பதால் எல்லாக் கடைகளிலும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். நாங்கள் புதிதாதகக் கணினி வாங்க வேண்டியிருந்ததால் நிறையக் கடைகளில் Configuration சொல்லி விலை விசாரித்தோம். ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது 600 ரூபாய் விலை வித்தியாசம் இருந்தது. பின்னர் 'Delta peripherals' என்ற கடையில் வாங்கி விட்டு 250 கொடுத்து மாடியில் ஒரு இடத்தில் எல்லா பாகங்களையும் மாட்டினோம். கடையில் இருக்கும் பொடியன் சர்வ சாதரணமாக எல்லாவற்றையும் மாட்டுகிறான்.

அடுத்தது வாரண்டி. வாங்கும் வரை ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டு பின்னால் எதாவது பிரச்சனை என்று அடுத்த நாள் போய்க் கேட்டால் “யார் நீ?” என்று கேட்பார்கள். இல்லையெனில் “கம்பெனி வாரண்டி. நாங்க எதுவும் பண்ண முடியாது” என்பார்கள்.

அடுத்த பிரச்சினை. கூட்டமாக உள்ள கடைகளில் நீங்கள் ஒரு சாமான் வாங்குவதற்குள் உங்களுக்கு பிபி ஏறி பின்னர் குளுக்கோஸ் தான் ஏற்றணும். பின்னே நீங்கள் எதாவது சாமான் கேட்டால் என்னவோ க்டன் கேட்ட மாதிரி கடையில் இருப்பவர்கள் மதிக்கவே மாட்டார்கள். ஒரு பத்து தடவை கேட்டு பின்னர் அங்கே இருப்பவன் கையைப் பிடித்து இழுத்துக் கேட்டால்தான் எடுத்துத் தருவான். எனவே ஹைபிபி மக்கள் தவிர்க்கவும். :)

சரி அப்படின்னா எதுக்கு இங்க போய் ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு தெரியாம ஒரு பொருளை வாங்குறதுக்கு நேரா ஷோரூமுக்குப் போய் வாங்கிரலாமே என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இங்கே ஒரிஜினல் சாமான்களும் விலை கம்மி. உதாரணத்துக்கு ஸ்பென்சரில் ஒரு கேமரா மெமரிகார்ட் 1GB 850 ரூபாய் சொன்னார்கள். அதே மெமரி கார்ட் 2GB 550க்கு ரிச்சி தெருவில் வாங்கினேன். எனவே நாம் நம்பிக்கையான கடையைத் தேர்ந்தெடுத்துப் போனால் ஒரு பிரச்சினையும் இல்லை.

என் அனுபவத்தில் கணினி உதிரி பாகங்கள், உதா. எலி, விசைப்பலகை, ஹெட்போன் மற்றும், USB pendrive, Mobile memory card போன்றவை வாங்க 'Oasis networks' என்ற கடையில் குறைவான விலைக்கு ஒரிஜினல் சாமான்களை வாங்கலாம். இது பிரதான வீதியிலேயே உள்ளது.

புதிய கணினிக்கு எல்லா பாகங்களும் வாங்கி பின்னர் தனியாகப் பொருத்த வேண்டுமானால் 'Delta peripherals' என்ற கடை உள்ளது. நாங்கள் விசாரித்தவரை இங்கே எல்லாப் பொருட்களும் விலை குறைவாகவே கிடைக்கின்றன. 'Oasis networks' க்கு எதிரில் கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸின் உள்ளே இருக்கிறது.

எந்தக் கடைக்குப் போனாலும் பிராண்ட் பெயரைச் சொல்லியே கேளுங்கள். உதா USB pendrive, Mobile memory card வாங்க வேண்டுமானால் Kingston, Transcend, Sandisk போன்றவை பிரபலமானவை. பேர் சொல்லாமல் கேட்டால் அவர்கள் வைத்திருக்கும் டுபாக்கூரைக் கொடுப்பார்கள். நினைவிருக்கட்டும் ஒரிஜினல் சாமான்கள் எப்பவும் மூடிய உறையில் (Sealed pack) மட்டுமே வரும். உறை கிழிந்திருந்தாலோ, இல்லாமல் இருந்தாலோ வாங்க வேண்டாம்.

குறிப்பாக ஆளே இல்லாத கடையில் வாய் நிறைய பீடா போட்டுக் கொண்டு ஷோக்காக எவனாவது உட்கார்ந்திருந்தால் அவன் கடைக்குப் போகவே வேண்டாம். கண்டிப்பாக அவன் டுபாக்கூர்தான். (அனுபவம் இருக்கில்ல !!!)

Monday, January 05, 2009

அபியும் நானும் அபிராமி மெகாமாலும்


புத்தாண்டு அன்னிக்கு படம் பார்த்தால் வருசம் பூராவும் படம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்கிற நல்ல நம்பிக்கையில் கண்டிப்பாகப் பார்க்கணும்னு நினைச்சிருந்த 'அபியும் நானும்' பார்க்கப்போனேன். என் தம்பி அபிராமி மெகா மால்ல பார்க்கலாம்னு சொன்னதால் அங்கேயே போக முடிவு பண்ணிக் கிளம்பிட்டோம். விளம்பரங்களில் வரும் படத்தலைப்பே ஒரு குழந்தை தன் கையெழுத்தில் எழுதியிருப்பது போல் அழகாகக் கவர்ந்ததால் ஒரு எதிர்பார்ப்பு.

என்ன மாலோ கன்றாவியோ நச நசன்னு இத்தினியோண்டு இடத்துல இம்புட்டுக் கடைகளா இதுல தியேட்டர்கள் வேற. சும்மா சுத்தி சுத்திக் கடைகளாக் க‌ட்டியிருக்காங்க. மாடிப்படியெல்லாம் சின்னதா ஒடுக்கமா வச்சி ... ச்சை... எரிச்சல்.

கவுண்டர்ல போய் டிக்கெட் கேட்டால் 10 மணிக் காட்சிக்குத்தான் இருக்குன்னு சொன்னாங்க. மணி 7 தானே ஆகுது அதுவரைக்கும் என்ன பண்றது? 'கிஸ்ஸிங் கார்ஸ்' விளையாடலாம்னு என் தம்பி நச்சரிச்சான். நாலு கழுதை வயசாகுது கார் ஓட்டி விளையாடணுமான்னு டிக்கெட் வாங்கப் போனா அங்க எட்டு கழுதை வயசானதெல்லாம் டிசர்ட் போட்டுக்கிட்டு வரிசையில நிக்கிறாங்க. ஏழு நிமிசம் விளையாடலாம்னு என் தம்பி சொன்னான். படு பாவிங்க கூட்டமா இருக்குன்னு நாலு நிமிசத்துலயே விரட்டி விட்டுட்டாங்க.

ஒரு வழியா பொழுதை ஒப்பேத்திட்டு திரையரங்குக்கு உள்ளே சென்றால் என்னடா வேற படத்துக்கு வந்துட்டமான்னு நினைக்கிற அளவுக்கு 'பஞ்சாமிர்தம்' பட விளம்பரம் ஒரு பத்து தடவை போட்டார்கள். அந்தப் படம் அபிராமி திரையங்க் உரிமையாளரின் தயாரிப்பாம். அடப் போங்கய்யா சன்டிவிக்காரனுங்கதான் காதல் கொண்டேன், தெனாவெட்டு, திண்டுக்கல் சாரதின்னு அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தரம் தொல்லை பண்றானுங்கன்னா நீங்களுமா?

ஒரு வழியாப் படத்தைப் போட்டாங்க. ஒரு அப்பா தன் புத்திசாலியான் செல்ல மகளின் மேல் கண்மூடித்தனாமான பாசத்துடன் இருக்கிறார். அவள் தான் தன் உலகம். அவள் இருப்பதால் தான் தனக்குப் பொழுதே போகிறது என எண்ணும் அளவிற்குப் பாசம். தன் மகளின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் தானே சில முடிவுகள் எடுக்கும்போது முதலில் அது சரியா தவறா என அப்பா எண்ணும் போது அது சரியே என மகள் தன் அப்பாவிற்கு உணர்த்துகிறாள்.

சாதாரண சைக்கிள் வாங்குவதற்குக் கூட முதலில் எதிர்ப்புக் காட்டும் அப்பா காதல் திருமணம் செய்து கொண்ட தன் பெற்றோரைப் போலவே தானும் ஒருவரைக் காதலிப்பாதாகச் சொன்னால்? அதுவும் காதலிப்பவர் சர்தார்ஜி என்றால்? வேண்டாவெறுப்பாக இருக்கும் தந்தையின் மனம் எப்படி மாறுகிறது என்ப‌தே கதை.

நாயகனும் காமெடியனும் பிரகாஷ்ராஜே. சொல்லியா கொடுக்கவேண்டும் சும்மா பின்னியிருக்கிறார். மகளாக த்ரிஷா. சின்ன வயது அபியாக வரும் குட்டிப்பாப்பாக்கள் எல்லாம் கொள்ளை அழகு. பிரகாஷ்ராஜிடம் அபியின் கதையைக் கேட்கும் சிறப்புத் தோற்றத்தில் பிருத்விராஜ். 'மொழி' படத்தைப் போலவே படம் முழுவதும் காட்சிகளிலும் வசனத்திலும் நகைச்சுவைப் பட்டாசு. மாப்பிள்ளையாகச் சர்தார்ஜியைக் காட்டும் போது திரையரங்கில் வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு. அதைப்போலவே கதை கேட்கும் பிருத்வியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

தொய்வில்லாமல் நகரும் காட்சியமைப்பு, பிச்சைக்காரராக வந்து பின் குடும்பத்தில் ஒருவராக‌ மாறும் நடிகர் குமரவேலுவின் வசனங்கள் செம காமெடி. படத்தின் வேகத்தைக் குறைப்பவை பாடல்கள் மட்டுமே. குமரவேலு அபியின் குடும்பத்தைப் பற்றிப் பாடும் ஒரு பாடல் மட்டுமே பரவாயில்லை.

ப்ரீகேஜி அட்மிசனுக்காகப் பிரகாஷ்ராஜ் வரிசையில் நிற்பதை முதல் நாள் படத்தில் பார்க்க அடுத்தநாள் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை கான்வென்ட்டில் அதைப்போலவே வரிசை. எல்கேஜி அட்மிசனாம். எனக்கு அடக்க முடியாத சிரிப்பு. (மவனே உனக்கும் அந்த நிலைமை வரும்டி!)

ரொம்பவும் எதிர்பார்க்காமல் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு நல்ல படத்தைப் பார்க்க நினைத்தால் கண்டிப்பாக அபியும் நானும் போகலாம்.

கடந்த வாரம் தனது பிறந்தநாளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடிய த்ரிஷாவுக்கு வாழ்த்துக்கள். லாபநோக்கில்லாமல் தரமான படங்களை மட்டுமே தர வேண்டும் என முடிவெடுத்திருக்கும் பிரகாஷ்ராஜிற்குப் பாராட்டுக்கள்.

அபியும் நானும் ‍- அட்டகாசம்.

Sunday, November 30, 2008

சென்னையில் ஒரு மழைக்காலம்


'சென்னையில் மழை பெய்யாது, வெயில் அதிகம், வேர்க்கும், தண்ணீர்ப்பஞ்சம் இருக்கும், ஊர் ரொம்ப அழுக்கா இருக்கும், அதெல்லாம் ஒரு ஊரா?' நீங்க அப்படி நினைக்கிற ஆளா?. குறிப்பா பெங்களூர் மக்கள் :). இவை எல்லாம் இருந்ததுதான். ஆனால் 2004 கோடைகால‌ம் வரை.

அதன்பிறகு 2004 மழைக்காலத்தில் கொட்டித்தீர்க்க ஆரம்பித்த மழை இப்பொழுது வரை வருடாவருடம் தொடர்கிறது. அதனால் சென்னையைப் பத்தி தப்பா நினைக்காம நடப்பு நிலவரத்தையும் தெரிஞ்சுக்கங்க. 2004க்குப் பிறகு இப்போ மீண்டும் நிஷாவின் கோரத்தாண்டவத்தால் சென்னை திரும்பவும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

ஏற்கனவே இரண்டு வாரங்கள் முன்பு மழை நன்கு பெய்து ஓய்ந்து போய் டிசம்பரில் வரவேண்டிய பனிக்காலம் முன்பே தொடங்கியிருந்தது. (உலகம் வெப்பமயமாதல் காரணமா?) இப்போ தொடர்ந்து ஐந்து நாட்களாகப் பெய்துவரும் மழையால் முதலில் மகிழ்ச்சியாயிருந்தாலும் வெள்ளம் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது, 90 பேர் பலி ஆகிய செய்திகளைப் படிக்கவும் நின்று போனது. இப்போதைக்கு மழை பெய்யாமலிருந்தால் போதும் என்று நினைத்தாலும் இதோ இப்போதும் விட்டு விட்டுப் பெய்து கொண்டுதான் இருக்கிறது. பெய்யெனப் பெய்யும் மழை. பெய்தும் கெடுக்கும் மழை.

2003ம் வருடம் டிசம்பரில்தான் நானும் பிராஜெக்ட் பண்ண‌ சென்னைக்கு வந்தேன். வடபழனியில் வீடு. இரண்டு படுக்கையறை வாடகை வெறும் 3600. 5 பேர் தங்கியிருந்தோம். அரசல் புரசலாக சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் தெரிந்திருந்தாலும் வாழக்கையே வெறுத்துப் போனது அப்போது தான். ஜனவரியில் நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை. நாங்கள் தங்கியிருந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் எல்லோரும் சேர்ந்து தண்ணீர் லாரியில் காசு கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தினோம். அதுவும் மகா மட்டமாக இருக்கும். கூவத்தின் ஓரத்தில் தெளிந்திருக்கும் தண்ணீரை எடுத்து வந்திருப்பானுங்களோன்னு நினைக்கத் தோணும். வெறும் ஒரு வாளித்தண்ணீரில் குளியல். ஒரு வாளித்தண்ணீரில் ஒரு வாரம் போட்டிருக்கும் உடைகளைத் துவைத்து அலசுவது என மகா கொடுமை.

அந்தக் கொடுமைக்கெல்லாம் விடிவு என்பது போல 2004ல் மழைக்காலத்தில் கொட்டித் தீர்த்தது மழை. ஊர் முழுவதும் வெள்ளமென்றாலும் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. அப்பொழுதிலிருந்து இதோ இப்போது வரை தண்ணீர்ப் பிரச்சினையெல்லாம் கிடையாது. தொடர்ந்து மழைபெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விட்டதால் வீடு வாடகையையும் கண்டமேனிக்கு உயர்த்தி விட்டார்கள். நாங்கள் இருந்த வீட்டின் தற்போதைய வாடகை 8500.

இந்த மழைக்காலத்தில் நான் இருக்கும் சூளைமேடு பகுதி எவ்வளவோ தேவலை. எப்பவும் போல வேளச்சேரி, மடிப்பாகம் பகுதிகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. வண்டியை வெளியில் எடுத்து 5 நாட்களாகிறது. ஸ்டெர்லிங் சாலை, கல்லூரி சாலைகளில் தண்ணீர் தேங்கிப் போய் நிற்கிறது. ஆச்சரியம் இவ்வளவு மழைக்குப் பிறகும் சூளைமேடு சப் வேயில் தண்ணீர் தேங்கவேயில்லை. கல்லூரி சாலையில் இருக்கும் அரசு அலுவலகங்கள், மகளிர் கிறித்தவக் கல்லூரி, சங்கர நேத்ராலயா போன்ற‌ கூறுகெட்ட குப்பைகள் உள்ளே தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றுகிறேன் என சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.

2000 ரூபாய் நிவாரணம் என அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் நிக‌ழ்ந்த‌து போல‌ திரும்ப‌வும் ஏதேனும் அச‌ம்பாவித‌ங்க‌ள் நிக‌ழ்ந்துவிட‌க்கூடாது. அர‌சு அலுவ‌ல‌கங்க‌ளுக்கு ம‌ட்டும் விடுமுறை என‌ ஒரு த‌லைப‌ட்ச‌மாக‌ ஆணை பிற‌ப்பித்த‌ அர‌சைக் க‌ண்டிக்கிறேன். ஏன் த‌னியார் அலுவ‌ல‌கங்க‌ளில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் நீச்ச‌லடித்தா அலுவ‌ல‌க‌ம் செல்ல‌ முடியும்? ;) . அடுத்த முறையாவது அளவோடு பெய்யட்டும் மழை.

வெயில், வேர்வையெல்லாம் இப்போ சென்னையில் இல்லையா எனக் கேட்கும் பெங்களூர் பெருமான்களே ஒரு வாரமா சென்னையில் ஓசி ஏசி தெரியுமா?

எப்பத்தான் உங்களுக்குப் புத்தி வரும்?


மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு அதற்குக் காரணமானவர்களை விட அதை முன் கூட்டியே தடுக்கத்தவறிய அரசாங்கத்தின் மீது தான் கடும் கோபம் வருகிறது. ஏற்கனவே சாமானியன் வாழமுடியாத நிலையை ஏற்படுத்திப் பெருமை தேடிக் கொண்ட இந்த அரசாங்கத்தால் எங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கையில் பயம் வயிற்றைக் கவ்வுவதை மறைக்கமுடியவில்லை.

புயல், மழை, சுனாமி பேரிடர்கள் என்றாலும் விதியின் பேரில் குற்றம் சொல்லிவிட்டு சும்மா இருக்கலாம். ஆனால் ரயில்நிலையம், ஹோட்டல் போகக்கூட மனதைரியம், உயிர் மேல் ஆசை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்யமுடியும்?

ஏற்கனவே இந்தியாவில் குண்டுவெடிப்பு நிகழாத முக்கிய நகரமே இல்லை என்னும் அளவுக்கு நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குப் பிறகும் இந்தக் கிழவர்களின் அரசாங்கம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றால் யாருடைய குற்றம் அது?

மும்பையை விட்டுத் தள்ளுவோம். தமிழகத்தில் பாதுகாப்பு கடந்த வார‌ம் வரை என்ன லட்சணத்தில் இருந்தது தெரியுமா? கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எப்பவும் பெயரளவுக்கு ஒரு சோதனை நுழைவு வைத்திருப்பார்கள். குண்டு வைப்பவன் தலைவாசல் வழியாகத்தான் வருவான் என்பது போல் எப்பவும் 5 போலீசார் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைப் போனவாரம் அங்கே காணவில்லை. காவலர்களும் இல்லை.

எழும்பூர் ரயில் நிலையத்தில் அதைவிட மோசம். பேருந்து நிறுத்தம் அருகில் கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டு பயணிகள் நடைமேடைக்கு சாலையிலிருந்து நேரடியாகப் போகுமாறு இருந்தது. அந்த இடத்தில் காவலர்களும் இல்லை. இவையிரண்டும் சில உதாரணங்கள்தான். தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலை என்றால் மதுரையில் கேட்கவா வேண்டும். மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் எடை தாங்காமல் சோதனை நுழைவாயில் கத்திக்கூப்பாடு போடுகிறது. அருகில் எந்த ஒரு காவலரும் இல்லை. இந்த மாதிரியான் ஓட்டை உடைசல் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு எப்போது முழுஅர்ப்பணிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நம்மவர்களுக்குத் தோன்றுமோ தெரியவில்லை.

இந்தியாவில் எல்லா இடங்களிலுமே இப்படித்தானா என்றால் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாகவே திருமலை திருப்பதியில் இருக்கிறது. மலையில் ஏறுவதற்குமுன் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி ஒவ்வொருவர் பைகளையும் சோதனை போடுகிறார்கள். பாதயாத்திரை செல்பவர்களுக்கும் முழுசோதனை நடக்கிறது. அத்தகைய பாதுகாப்பு எல்லா இடங்களிலும் இருந்தால் மட்டுமே இந்த மாதிரியான தாக்குதல்களைத் தடுக்கமுடியும்.

சந்திரனுக்கு விண்கலம் செலுத்தி மனிதனையும் அனுப்பும் திறமை வாய்ந்தவர்கள் இருக்கும் நாட்டில் கேவலம் பொது இடங்களில் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்றால் நம்மை ஆள்பவர்களின் முகத்தில் காறி உமிழத்தான் வேண்டும். :(

Sunday, November 09, 2008

WALL-E பார்த்துட்டீங்களா?


உலகம் 2800ல் எவ்வளவு நாஸ்தியாகிருக்கும் ? ரோபோவுக்கும் ரோபோவுக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் வால் ஈ படத்தின் கதை.

2800ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் குப்பையாகி மனித இனமே இல்லாமல் வெறிச்சோடிப்போய் எல்லோரும் பூமியைவிட்டே வெளியேறி வானவெளியில் ஒரு தனிஉலகம் அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். குப்பை என்றால் கொஞ்ச நஞ்ச குப்பை அல்ல. அனைத்தும் எலக்ட்ரானிக் குப்பை. மருந்துக்குக் கூட மரங்களே கிடையாது. எனவே குப்பைகளை எல்லாம் செங்கல்களை போல மாற்றி கோபுரம் கோபுரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி குப்பைகளைச் சேகரித்து அமுக்கி சதுரமாக, செங்கல்லாக மாற்றிக் கோபுரத்தில் ஏற்றும் பணி செய்யும் ஒரு குட்டி ரோபோட்தான் வால்‍-ஈ(wall-e).

மனிதர்கள் எல்லாம் பூமியை விட்டு வெளியேறிவிட்டாலும் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் தனக்கு இட்ட குப்பை பொறுக்கும் பணியை வால்-ஈ தொடர்ந்து செய்து வருகிறது. சுயமாக‌ சிந்திக்கும் அறிவும் நன்றாகவே உள்ளது. வால்-ஈ சூரியஒளி பேட்டரியால் இயங்கக் கூடியதால் அதற்குப் பகலில் மட்டுமே பணி. பணிக்குச் சென்று திரும்பியதும் ஓய்வெடுக்க ஒரு குப்பைலாரி கன்டெய்னர். அதைத் தன் வீடாகப் பயன்படுத்துகிறது. குப்பை பொறுக்கும் போது தனக்குப் பிடித்தமான அழகான பொருட்களை எல்லாம் சேகரித்து வீடு முழுவதும் அலங்கரித்து வைக்கிறது.

அப்படி ஒரு நாள் குப்பை பொறுக்கும் போது தான் திடீரென்று வானத்தில் இருந்து ஒரு ராக்கெட் வந்து பூமியில் வெள்ளை நிறத்தில் யாரையோ இறக்கி விட்டு விட்டுச் செல்கிறது. வேறு யார் கதாநாயகிதான். ஆம் அதுவும் ஒரு அழகான ரோபோட். வால்-ஈயைப் போல அல்லாமல் கொஞ்சம் பெரிய டால்பின் போன்று அழகான நடக்கும் ரோபோட். அதன் பெயர் ஈவா. ரொம்ப புத்திசாலி.

ஈவாவை வால்-ஈ மறைந்து மறைந்து நோட்டம் பார்க்கிறது. வால் ஈ தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்து விட்ட ஈவா டமால் என்று சுட்டுவிட பாவமாக வால்-ஈ ஈவா முன் வந்து நிற்கிறது. வால்-ஈ முந்தைய நூற்றாண்டு ரோபோட். ஈவா ப்ரெஷ் பீஸ். எனவே வால்-ஈயைப் பற்றி தானே ஸ்கேன் செய்து அறிந்து கொள்கிறது ஈவா.

இக்கட்டத்தில் வால்-ஈக்கு ஈவாவின் மேல் விருப்பு+காதல் வந்துவிட அதைத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் எல்லாப் பொருள்களையும் அதற்குக் காட்டுகிறது. அப்படித்தான் எடுத்து வைத்த ஒரு குட்டிச் செடியையும் வால்-ஈ ஈவாவுக்குக் காட்டுகிறது. அவ்வளவுதான் ஈவா அதைத் த‌டால் என்று பறித்து தன் உடலுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அந்த இடத்திலேயே தியானம் செய்வது போல் நின்றுவிடுகிறது. அசையவே இல்லை. வால் ஈக்கு ஒன்றும் புரியவில்லை. "ஈவா ஈவா" என்று கூப்பிட்டுப் பார்க்கிறது. ஈவாவின் உடலில் ஒரு பச்சைவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது.

திடீரென ஜடமாகிவிட்ட ஈவாவை வால்-ஈ வெயில், புயலிலிருந்து பாதுகாக்கிறது. சிலநாட்களில் ஈவாவைத் தேடி அதை விட்டுச்சென்ற ராக்கெட் வந்து அதை அழைத்துச் செல்கிறது. ஈவாவைப் பிரிய மனமில்லாத வால்-ஈ ராக்கெட்டில் புட்போர்ட் அடித்துத் தொங்கிக் கொண்டு செல்கிறது.

அந்த ராக்கெட் ஒரு கோள் மாதிரி இருக்கும் விணகலத்தின் உள்ளே செல்கிறது. அங்கே தான் மனிதர்கள் இருக்கிறார்கள் அதாவது பூமியிலிருந்து சென்றவர்கள். அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண‌ மனிதர்கள் இல்லை பரிணாம வளர்ச்சியில் எலும்புகள் எல்லாம் தேய்ந்து ரப்பர் ட்யூப் போன்ற கை கால்களை உடையவர்கள் (பரிணாமத் தேய்ச்சி?) . நடப்பதைக் கூட மறந்து போன எப்பவும் நாற்காலியில் அமர்ந்து உயிர் வாழ்பவர்கள். அவர்கள் உலகமே மிக மிக நவீனமானது. எல்லா வேலைகளுக்கும் ரோபோக்கள்தான்.

அந்த விண்கலத்திற்கும் ஒரு கேப்டன் உண்டு. அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி பூமிக்கு ரோபோக்களை அனுப்பி அங்கே மனிதர்கள் உயிர்வாழ சூழ்நிலை திரும்பிவிட்டதா என அறிவது. தலைமுறை தலைமுறையாக ரோபோக்கள் அனுப்பியும் இதுவரை பாசிட்டிவ் ரிசல்ட் இல்லை. ஆனால் இந்த முறை ஈவா அதைச் செய்திருக்கிறது. அதாவது பூமியிலிருந்து ஒரு தாவரத்தை அது எடுத்து வந்திருக்கிறது. எப்போது பூமியில் மனிதன் உயிர் வாழும் சூழ்நிலை வருகிறதோ அப்போது இவர்கள் எல்லோரும் பூமிக்குத் திரும்பிவிடவேண்டும் என்பது தான் கேப்டனுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.

தாவரங்கள் இருந்தால் கண்டிப்பாக மனிதர்கள் உயிர்வாழமுடியும் எனவே பூமிக்குத் திரும்பலாம் எனக் கட்டளை பிறப்பிக்க எண்ணும் வேளையில் அந்த விண்கலத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய ரோபோட் அதைத் தடுக்கிறது. அதை எப்படி கேப்டன், ஈவா, வால்-ஈ சேர்ந்து முறியடித்தார்கள் என்பது மிச்சக்கதை. (இப்பவே முக்கால்வாசி சொல்லியாச்சு, மிச்சத்தை டிவிடியில் பாருங்க :) )

படம் முழுவதும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன். வால்-ஈ யின் அப்பாவித்தனமான் செயல்கள் கலக்கல். ராக்கெட் பூமியை விட்டு வெளியே செல்லும் போது செயற்கைக்கோள் குப்பைகளை உடைத்துக் கொண்டு செல்லும் காட்சி சூப்பர். வால்-ஈ விண்கலம் முழுவதும் குப்பையாக்கி விட அதைத் துடைத்துக் கொண்டே துரத்தும் ரோபோ காட்சிகள் நல்ல நகைச்சுவை.

டிஸ்னி தயாரிப்பில் வந்திருக்கும் இந்தப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்.

Friday, November 07, 2008

கர்நாடக அரசுக்கும் சிங்கள அரசுக்கும் என்ன வித்தியாசம்?

கர்நாடகத்தில் ஒகேனக்கல் விட‌யம் தேர்தல் பிரச்சினையாக மட்டுமே பயன்படுத்தப்படும் தேர்தல் முடிந்ததும் காற்றோடு போய்விடும் என்று பார்த்தால் காவேரியை விட மிகப் பெரிய பிரச்சினையாகி வழக்கு, நடுவர் மன்றம் என்று இழுத்தடிக்கப்பட்டு திட்டம் பாடையில் ஏற்றப்படும் என்றே தோன்றுகிறது.

நேற்று கர்நாடக்த்தின் நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கொடுமையின் உச்சகட்டமாக ஒகேனக்கல் திட்டத்துக்கு நிதியுதவி செய்யும் ஜப்பான் வங்கிக்குக் கடிதம் எழுதி திட்டத்துக்கு ஆப்படிக்க இருப்பதாகக் கூறுகிறார். எவ்வளவு ஈனத்தனமான செயல் இது?? திட்டத்தில் சிக்கல் இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக ஜப்பான் வங்கி உதவிசெய்யாது என்றே தெரிகிறது.

ஆகக்கூடி ஒகேனக்கல் திட்டத்துக்குப் பால் ஊற்றும் வேளை வந்துவிட்டது என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஏனென்றால் மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே ஒகேனக்கல்லில் சர்வே நடத்த எப்படியோ அனுமதி வாங்கிவிட்டது கர்நாடக அரசு. தூங்குறீங்களா மதிப்பிற்குரிய 40 எம்பிக்களே, மத்திய அமைச்சர்களே, இணை அமைச்சர்களே??? இல்லை நாங்களும் காசு கொடுத்தாத்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்கிறீர்களா?

சர்வே நடத்த அனுமதி பெற்றபின் எடியூரப்பா சொல்கிறார் இப்போதுதான் முதன்முறையாக மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு கர்நாடக பாஜகவின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறதாம். எப்படியும் அடுத்த தடவை பாஜக ஆட்சிக்கு வந்தால் கர்நாடகம் மத்திய அரசின் செல்லப்பிள்ளையாகித் தொடர்ந்து தமிழகத்துக்குத் தொல்லைகள் கொடுக்கும்.

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று கூப்பாடுபவர்கள் ஒரு மாநிலம் அடுத்த மாநிலத்தை இப்படி குராதத்துடன் துரோகம் இழைப்பதையும் இதுதான் இந்திய இறையாண்மை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வார்களோ???

குறிப்பு : பின்னூட்டம் கூட போட முடியாத இடத்தில் இருந்து திருட்டுத்தனமாகப் பதிவெழுதுகிறேன். பதில் சொல்லலைன்னு கோவிச்சுக்காதீங்க நண்பர்களே !!