Friday, July 29, 2022

DMK's attitude towards BJP and the end of Congress era - 29-Jul-2022



The core supporters of
DMK - mainly religious minorities and periyarists - must be shocked to see the change in the attitude and the hospitality given by DMK and its leader MK Stalin to PM Modi during the Chennai Chess Olympiad 2022. But it's not surprising to the many Tamil nationalists, NTK cadres, and neutral political analysts. The DMK was expected to gradually shift its support to the BJP, but it happened so early after 15 months of winning the TN state elections. There will be no more surprises if the DMK joins forces with the BJP in the upcoming LS elections in 2024.

This was even predicted by the famous Tamil cartoonist Bala after the TN state elections last year. In one of his tweets, he said, "DMK will take the sideline and show a soft corner towards BJP. The so-called DMK supportive progressive front liners will keep mum."

Also, journalist and political analyst Savukku Sankar has mentioned in his many interviews that the BJP's only claim to the DMK is to leave the Congress party alone without making an ally in the upcoming LS elections. Because the TN Congress is a party with no cadres but plenty of leaders. Until now, Congress' journey has been carried out by either of the Dravidian parties, DMK or ADMK.

Congress does not have the vote bank in TN to win at least a single MP seat. So, the DMK will be forced by the BJP to abandon the Congress and not form an alliance to end the Congress era in India. The ADMK party, already a known pet of the BJP, would not have the courage to add Congress as their ally against their big boss's wishes.

So, the 2024 LS elections are a survival battle for Congress and decide the fate of its future.

Saturday, February 18, 2012

படம் பார்க்கும் ஆசையைக் காலி செய்யும் ஆன்லைன் விமர்சனங்கள்


மெரினா படம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என எண்ணியிருந்தேன். எப்பவும் விமர்சனங்களை மேலோட்டமாகப் படிக்காமல் டக்கென கடைசி வரிக்குச் சென்று பஞ்ச் லைனைப் படித்துவிடுவது வழக்கம்.

அப்படித்தான் மெரினா படம் வெளியான அன்று காலையில் இணையத்தில் யாராவது கண்டிப்பாக விமர்சனம் எழுதியிருப்பார்கள் என்று தேடிப்பார்த்து ஒரு சைட்டின் உள்ளே நுழைந்தேன். வழக்கத்திற்கு மாறாக மெரினா படத்தின் மேலிருந்த எதிர்பார்ப்பால் கொஞ்சம் உள்ளே பாராட்டி எழுதியிருப்பார்கள் என எண்ணி விமர்சனத்தைப் படிக்க ஆரம்பித்தால், டைட்டில் முதல் என்டு கார்டு வரை ஒரு சீன் விடாமல் எழுதி விமர்சனம் என்ற பெயரில் ஒரு முழுப்படத்தையே தந்து என் எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் காலி செய்துவிட்டார்கள்.

ஏங்க இப்படி? இணையத்தில் வெளிவரும் இவற்றை விமர்சனமாக எடுத்துக் கொள்வதா அல்லது முழுப்படத்தின் எழுத்து வடிவமாகக் கொள்வதா?

இதற்கு முன் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தின் முழுக்கதையையும் ஒரு பதிவர் ஒரு வரியில் அதையும் முதல் வரியில் எழுதியிருந்தார். (நான் இந்திப் படம் பார்க்கவில்லை) .
'சாமானியன் ஒருவன் தீவிரவாதிபோல் நடித்து தீவிரவாதிகளை சிறையிலிருந்து விடுவிக்கச் செய்து அவர்களைக் கொல்கிறான்'

இதைப் படித்ததற்கப்புறம் நான் திரையில் பார்த்தபோது எனக்கு கொஞ்சமும் படத்தில் விருப்பமே இல்லை.

அதனால் இப்பவும் சொல்றேன். இனிமேல் விமர்சனமா அல்லது முழுப்படத்தின் கதையா என்பதை தயவு செய்து தலைப்பிலாவது தெரிவியுங்கள். உங்கள் சைட் பக்கம் வராமல் தலை தெறிக்க ஓடிவிடுவோம்.

ரொம்ம்ம்ம்ம்ப நன்றிங்க.

Tuesday, April 19, 2011

கிரிக்கெட் தோல்விக்காக பழிவாங்கப்பட்ட மீனவர்கள் - தொடரும் சோகம் !!!


இப்படியும் கூட நடக்குமா என எண்ணவைக்கிறது சமீபத்தில் நடந்திருக்கும் நான்கு மீனவர்களின் படுகொலை. ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்த அன்று இரவு காணாமல் போனார்கள்.

மறுநாள் அவர்களுடன் மீன்பிடித்த மீனவர்கள் சொல்லிய தகவல் மிகவும் அதிர்ச்சியானது.இலங்கை கடற்படையினர் தாங்கள் மீன்பிடிக்கும் போது வந்து மிரட்டியதாகவும், 'இன்றைய போட்டியில் இலங்கை தோற்றால் தொலைந்தீர்கள்' என நம் மீனவர்களை சம்பந்தமில்லாத விசயத்தைச் சொல்லி மிரட்டியிருக்கிறார்கள்.

அவர்கள் சொல்லியது போலவே 4 மீனவர்கள் விக்டஸ், ஜான்பால், அந்தோணிராஜ், மாரிமுத்து ஆகியோர் அன்று கரை திரும்பவில்லை. அவர்களைத் தேடும்பணியில் நம் கடலோரக்காவல் படையும் ஈடுபடவில்லை. பின்னர் தன்னார்வ மீட்புக்குழு அந்த மீனவர்களைக் கடலில் தேடினார்கள்.

இந்நிலையில் ஒரு மீனவரின் உடல் யாழ்ப்பாணம் அருகில் கரை ஒதுங்கியது. மற்ற இரு மீனவர்கள் உடல் தொண்டியிலும், இன்னொருவரின் உடல் புதுக்கோட்டையிலும் கரை ஒதுங்கியது. அவர்களது உடலில் தாக்கி சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்கள் அதிகமாகவே இருந்துள்ளன. ஒரு மீனவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு மீனவரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்படி தங்களுக்கு சம்பந்தமே இல்லாத இலங்கை அணியின் கிரிக்கெட் தோல்விக்கு மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈழத்தமிழர்களை எக்காரணமின்றி பொழுதுபோக்குக்காக கொலை செய்து பழக்கப்பட்ட இலங்கை கடற்படையினர் இப்போது கை அரிப்பெடுத்து நம் மீனவர்களைக் கொலை செய்வதை எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

எப்போதும் மீனவர்கள் தாக்கப்படும் போது எழும் கோபமும், ஆத்திரமும் இப்பவும் எல்லோரிடமும் ஏற்படுகிறது. அதைத் தவிர நம்மால் என்ன செய்யமுடிகிறது?

தமிழக அரசு வழக்கம்போல 5 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல் விட்டுவிட்டது.

இந்த விசயத்தை இப்போது பாஜக கையில் எடுத்திருப்பது மட்டுமே கொஞ்சம் ஆறுதல் தருகிறது. இவ்வளவு நாள் வரை தமிழ்நாட்டுப் பிரச்சினைகளை தனிநாட்டுப் பிரச்சினையாகப் பார்த்த வட இந்திய ஊடகங்கள் கொஞ்சம் இந்தப் பிரச்சினையைப் பேச ஆரம்பித்திருக்கின்றன.

என்ன நடந்து என்ன செய்ய? இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழி சொல்பவர்கள் யார்? தினம் தினம் செத்துப் பிழைக்கும் மீனவர்களின் வாழ்வுக்கு வழி சொல்பவர்கள் யார்?

Saturday, April 16, 2011

இலங்கைக்கு தமிழகம் மின்சாரம் - திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிவோம் !!!

காங்கிரஸ் அரசுக்கு தமிழர்களும், தமிழ்நாட்டவர்களும் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லை. தினம் தினம் எங்கள் ஊர் மீனவர்களைக் கொன்று கொண்டிருக்கும் சிங்களநாய்களுக்கு நம் தமிழ்நாட்டிலேயே மின்சாரம் எடுத்து அதைக் கடல் வழியாகவே இலங்கை கொண்டு செல்கிறார்களாம்.

பார்க்க - http://www.dinamalar.com/News_Detail.asp?Id=224804

!@#$. இதற்கு திமுகவும் துணை போவதுதான் கொடுமை. கருணாநிதி அவர்களே இதற்கு மேல் நீங்கள் செய்யும் இனத்துரோகம் என்னவாக இருக்கும்? சிங்களநாய்கள் ஈழத்தை முழுவதும் ஆக்கிரமித்து வளங்களைச் சுரண்டிக் கொண்டிருப்பது பத்தாது என்று, கடைத்தேங்காயை எடுத்துக் கொடுத்தது போல இப்போதைய மீனவர் பிரச்சினைக்கு முழுக்காரணமாக இருக்கும் தமிழகத்தின் கச்சத்தீவை அப்பன் வீட்டுச் சொத்தைப்போல் எடுத்துக் கொடுத்துவிட்டு, இப்போது மீனவர்கள் கொல்லப்படும் போதும் காங்கிரஸ் பேய்கள் வாய்மூடி இருப்பதும், இப்போது தமிழ்நாட்டிலேயே மின்சாரம் எடுத்து அதை சிங்களநாய்களுக்கு வழங்குவதும் எவ்விதத்தில் நியாயம்?

கடல் மூலம் மின்சாரம் வழங்க முதல்கட்ட சோதனை முடிந்து, மண் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதாம். இங்கிருப்பதை எடுத்து நம் எதிரிக்குக் கொடுப்பதில் காங்கிரஸ் !@#$$களுக்கு என்னதான் சந்தோசமோ?

இத்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இதற்கு முழுவதும் துணை போகும் தமிழக அரசைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்.

எனவே தமிழக மீனவர்களைக் காக்க பதிவுலகம் போராடியது போல, நம்மால் முடிந்த அளவு பதிவுகள் எழுதி நம் கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து பதிவர்கள் ட்விட்டர் மூலமும், நம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் பேனர்களைப் பதிவில் இட்டும் தம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

Friday, April 15, 2011

நீரா ராடியாவின் தமிழகத் தொடர்புகளை விளக்கும் படம்



படத்தைக் கிளிக்கினால் பெரிதாகத் தெரியும்.


ராசா, கனிமொழி, ராசாத்தி அம்மாள், அவரது ஆடிட்டர் ரத்தினம், சாதிக் பாட்சா ஆகியோர் நீரா ராடியா மற்றும் அவர் மூலம் கொண்டிருக்கும் தொடர்புகளை விளக்கும் படம்.

இணையத்தில் ஸ்பெக்ட்ரம் குறித்துத் தேடியபோது, Outlookல் கிடைத்தது. திமுக சாராத பிற தமிழ் ஊடகங்கள் கூட இந்த மாதிரி ஏன் வெளிப்படையாக செய்திகள் வெளியிடத் தயங்குகிறார்கள்?

Thursday, April 14, 2011

ராடியா வாக்குமூலம் - சரத்பவார் சிக்குகிறார்


ஸ்பெக்ட்ரம் மெகா ஊழலில் அடுத்த குற்றவாளியாகும் கொடுப்பினை மத்திய அமைச்சர் சரத்பவாருக்குக் கிடைக்கும் போலிருக்கிறது.

இன்று நீரா ராடியா சிபிஐ விசாரணையில் சரத்பவாரின் குடும்பத்தினர் தான் ஸ்பெக்டரம் அலைவரிசையை குறைந்த விலைக்கு வாங்கிய 'டிபி ரியாலிட்டி' நிறுவனத்தை நடத்துகிறார்கள் என்ற தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இந்த சரத்பவார் தான் மத்திய அமைச்சர் பதவியை விட ஐசிசி தலைவர் பதவியைப் பெரிதும் விரும்பி தன் பணக்காரப் புத்தியைக் காட்டியவர். இன்றைய விலைவாசி உயர்வுக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் மக்களைத் தவிக்கவிட்டிருக்கும் முட்டாள் அமைச்சர். வீணாகும் தானியங்களை மக்களுக்குக் கொடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்லியபோதும், 'அதெல்லாம் வாய்ப்பில்லை' என்று சொல்லி, 'நாங்கள் என்ன உனக்கு யோசனையா சொல்கிறோம்? இது கட்டளை' என்று நீதிபதிகள் செவிட்டில் அறைந்தபின் தானியங்களை மாநில அரசின் பொது விநியோகத்திட்டத்திற்கு வழங்கியவர்.

வயதானவர் என்பதற்காக இவர் செய்யும் செயல்களை எல்லாம் பொறுத்துக் கொள்ளவா இவரைத் தேர்ந்தெடுத்தார்கள்?

அடுத்தபடியாக ராடியா கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் கொடுக்கப்பட்டது குறித்த தகவல்களையும் சொல்லியிருக்கிறார்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் கவலையெல்லாம் அன்னா ஹசாரே கஷ்டப்பட்டு கொண்டுவரத் துடிக்கும் ஜன லோக்பால சட்டம் இந்தப் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவேண்டும். அதைவிடுத்து எதிர்க்கட்சிகள் சரத்பவார் மேல் நடவடிக்கை எடு என பாராளுமன்றத்தை முடக்கிவிடுமோ என்பதுதான்.

ஜன லோக்பால் வரட்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பெருசுகளும், நேற்று அரசியலுக்கு வந்த காளான்களும் தண்டிக்கப்படட்டும்.

Wednesday, April 13, 2011

சாமானியருக்கும் உதவும் Google Maps Mobile !!!



Google செய்து வரும் வித்தியாசமான முயற்சிகள் அனைவராலும் பாராட்டப்பட்டு வரவேற்கப்படுபவையே.

அந்த வகையில் Google இன் ஒரு சேவை சிறப்பான வகையில் அமைந்துள்ளது. அது தான் Google Maps.

நாம் கணினியில் Google Maps மூலம் ஒரு இடத்தையோ அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கும் செல்லும் சாலை வழியையோ அறிந்து கொள்ளமுடியும்.

இதைவிட இன்னொரு சிறப்பம்சம் Google Maps இன் Mobile Application இல் உள்ளது. அது நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைக் காட்டும். நம் அலைபேசியில் Google Maps வைத்திருந்தால் அது ஒரு நீலநிறப் புள்ளியாக நாம் இருக்கும் இடத்தைக் காட்டும்.

நாம் பயணம் செய்யும் போது அந்த நீலப்புள்ளி நம்முடன் நகர்ந்து கொண்டே வரும்.

இது எப்படி செயல்படுகிறது என்றால், நம் அலைபேசி தற்சமயம் தொடர்பு கொண்டிருக்கும் அலைபேசி கோபுரம் அமைந்திருக்கும் 'Latitude and Longitude' ஐ வைத்து நாம் இருக்கும் இடத்தை Maps இல் காட்டுகிறது. எனவே நாம் பயணம் செய்யும் போது தானாகவே மாறிக் கொள்கிறது.

என் அனுபவத்தில் இது முக்கியமாக பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் மிகவும் உதவியாக உள்ளது. நடுராத்தியில் பேருந்து அல்லது ரயில் எந்த ஊரில் இருக்கிறது என்பதை இதன் மூலம் சுலபமாக அறிந்து கொள்ள முடியும்.

எனவே இன்றே முயன்று பாருங்கள்.

அலைபேசி வழியாக http://m.google.co.in/maps

கணினி வழியாக http://www.google.co.in/mobile/maps

இந்த வசதியை உபயோகிக்க GPRS அவசியம்.

Monday, April 04, 2011

கொலைவெறி கவிதைகள்


ரீபில் தீர்ந்த பேனா போல்
வீணாய்க் கிடக்குது நம் காதல் !
தூக்கிவீச மனமில்லை
சும்மானாலும் வைத்திருக்கிறேன் !
--------------
வெயிலடித்தால்
நிழலில் ஒதுங்குகிறாய் - அந்த
நிழலும் அடித்தால்
என் மனதில் ஒதுங்கு
-------------
ஐம்பது ரூபாய்க்கு
ரீசார்ஜ் செய்து
அரைமணி நேரம் பேசினோம்
அப்புறம் அப்புறம்
என்பது மட்டும்
ஐநூறு தடவை
-------------
குளிரடித்தால்
போர்த்திக்கலாம்
போர்வையால்!
குளிர் காய்ச்சலையே
தருகிறாயே - உன்
பார்வையால் !
-------------
சிலந்தி பின்னிய வலையில்
விழும் விட்டில் பூச்சி போல
உன் கண்கள் பின்னிய வலையில்
குழிக்குள் விழுந்தேன் சாலையில்
---------------
அதிகார மய்யத்தின் மேல்
அமர்ந்திருக்கும் நீ
எப்போது வருவாய் கீழே இறங்கி?
அண்ணாந்து பார்த்து பார்த்து
கழுத்து வலிக்கிறது
------------------
தம்பி உடையான்
படைக்கு அஞ்சான்
உன் தம்பியைப் பார்த்தால்
எனக்குத் தொடையும் நடுங்குகிறது
-----------------
தினமும் குளி என்று
அம்மா சொல்லியும் கேட்காத நான்
உனக்காக இன்று
தீக்குளிக்கவும் தயாராயிருக்கிறேன்
------------------
சுடிதார் போட்டு
சூப்பராகப் போகும் நீ
குழாயடியில் மட்டும் ஏன்
தலையில் கரகம்
இல்லாமல் ஆடுகிறாய்
------------------

இங்கு கொலைவெறிக் கவிதைகள் ஆர்டரின் பேரில் எழுதித் தரப்படும்.

Wednesday, March 30, 2011

வைகோ - மீண்டு(ம்) வருக !!!


துரோகத்தையும், வஞ்சகத்தையும் மட்டுமே தன் அரசியல் வாழ்வில் எதிர்கொண்டவர்.

தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரப் பிரச்சினைகள் அனைத்துக்கும் குரல் கொடுத்தவர்.

ஈழத்தமிழர் பிரச்சினைகளை தமிழக மக்களிடையே கொண்டு சென்றதில் முக்கியப் பங்காற்றியவர்.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைக்காக கேரள அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்திப் பலமுறை சிறை சென்றவர். பலமுறை இப்பிரச்சினை குறித்து தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படவேண்டும் என நடைபயணம் சென்றவர்.

அத்தனை மீடியாக்களாலும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டவர். இவர் எத்தனை முறை நடைபயணம் சென்றாலும் எந்த டிவியிலும் இவர் முகமோ செய்தியோ வராது.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மூடக்கோரி - எந்த சமரசத்துக்கும் இடம் கொடாமல் - உச்சநீதிமன்றத்தில் தானே வாதாடி வெற்றிபெற்றவர்.

சேது சமுத்திரத் திட்டத்துக்காக நாடாளுமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்தவர். ஆனால் பேர் வாங்கியது வேறு சிலர்.

சிறந்த பேச்சாளர். மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

சொந்தலாபங்களைத் தவிர கருணாநிதியோ, ஜெயாவோ மக்கள் நலனுக்காக ஸ்டன்ட் தவிர உருப்படியாக எதாவது செய்திருக்கிறார்களா ?

வைகோ செய்த மிகப்பெரிய தவறு ஒன்றே ஒன்றுதான். திமுக, அதிமுகவுக்கு எதிரான மாற்று சக்தியாக தன்னை நினைக்காமல் திமுகவை எதிர்க்க அதிமுகவுடனும், அதிமுகவை எதிர்க்க திமுகவிடனும் கூட்டணி வைத்ததுதான்.

நடந்தது இருக்கட்டும்.

வைகோ அவர்களே ! மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனும் நீங்கள் மக்களுக்காகக் குரல் கொடுத்ததையும், தமிழகத்திற்காக, தமிழர்களின் நலனுக்காக நீங்கள் நடத்திய போராட்டங்களையும் மறக்க மாட்டான்.

ஃபீனிக்ஸ் பறவை போல எழுந்துவாருங்கள் வைகோவே !!!

Saturday, March 19, 2011

திருப்பதி - திருச்சானூர் - காளஹஸ்தி





நிகழும் சர்வதாரி வருடம் ஆடித் திங்கள் 31ம்நாள் (ஆகஸ்ட் 15). மூணு நாள் விடுமுறை இருந்ததால திருப்பதி போகலாம்னு ரெண்டு வாரத்துக்கு முன்னமே திட்டம் போட்டு டிக்கெட் எல்லாம் எடுத்து வச்சிருந்தோம். ஆகஸ்ட் 14 (வியாழக்கிழமை) இரவு மெஜஸ்டிக்ல 9:15க்கு பேருந்து. ஆனா பாருங்க அன்னிக்குன்னு பார்த்து பெங்களூர்ல சரியான மழை. அதுனால எந்த பஸ்ஸுமே ஒழுங்கா மெஜஸ்டிக் வரலை. அப்படின்னு இப்படின்னு எங்க பஸ்ஸைத் தேடி இரவு 1:30 வரை அழைந்தது தான் மிச்சம். கண்ணுல படவே இல்லை.

சரி வேற வழியில்லைன்னு எதாவ்து ஒரு திருப்பதி பஸ்ல நின்னுக்கிட்டுனாலும் போய்ச் சேருவோம்னு முடிவு பண்ணி ஒரு பஸ்ல ஏறுனோம். ஆனா பாருங்க எங்க நல்ல நேரம் நடத்துனருக்கும் இன்னும் மூனு பசங்களுக்கும் நடந்த சண்டையில், கடுப்பான நடத்துனர் அந்தப் பசங்களுக்குப் பதில் எங்களை உட்காரச் சொல்லிட்டார். நல்லவேளை. ஆறு மணி நேரத்துக்கும் மேல மழையில் நனைஞ்சி மெஜஸ்டிக்ல சுத்தினதால கால் எல்லாம் பயங்கரமா வலிக்க ஆரம்பிச்சிருச்சி. அதுனால உட்கார்ந்தவுடனே சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கியாச்சு.

ஆகஸ்ட் 15 காலையில் பார்த்தா சிரஞ்சீவி ஜிலேபியோட போஸ் கொடுக்கிறார். கட்சி ஆரம்பிக்கப் போறாராம்ல. தெலுங்கு எழுத்தெல்லாம் வாசிக்க ரொம்ப சுலபமா இருக்கு. கன்னட எழுத்துக்களும், தெலுங்கு எழுத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்னுதான். சரி மேட்டருக்கு வருவோம்.

திருப்பதி பேருந்து நிலையத்துல போய் தரிசன டிக்கெட் எடுத்துக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தோம். ஆனா பாருங்க ஒரு ஆட்டோக்காரன் வந்து "வாங்க அலிப்பிரி போனா அங்க இருக்கிற கவுண்டர்ல கூட்டமே இருக்காது"ன்னு சொன்னான்னு ஏறிப்போனோம். அங்க பார்த்தாலும் கொஞ்சம் கூட்டமாத்தான் இருந்துச்சி. சரின்னு நின்னோம். சும்மா ரெண்டு மணி நேரம் கால்வலிக்க நின்னோம். அதாவது 7:30 - 9:30. கடைசியா நாங்க கவுண்டருக்குப் போய்ச்சேரும் போது தரிசன் டிக்கெட் முடிஞ்சி போச்சின்னு கவுண்டரை மூடிட்டாங்க.

உண்மையிலேயே அப்பத்தாங்க எனக்குக் கால் வலிக்க ஆரம்பிச்சிச்சி. நானும் எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நிக்கிறது. என்னடா இது கிளம்புனதுல இருந்து ஒரே சோதனையா இருக்குன்னு ஏழுமலையானை நினைச்சிக்கிட்டு தர்ம தரிசனம் பார்த்துவிடலாம்னு விக்கிரமாதித்தன் மாதிரி மலைக்கு பஸ் ஏறிட்டோம்.

அங்க போய் லாக்கர் பிடிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் திரும்பவும் வரிசை. ஒரு வழியா குளிச்சி முடிச்சி தர்ம தரிசனம் போறதுக்கு வரிசைக்குப் போனா மயக்கமே வந்துருச்சி. சும்மா ஒரு 30000 பேர் வரிசையில நிக்கிறாங்கப்பா. இவ்வளவு நேரம் அஞ்சா நெஞ்சனா இருந்த நானே ஒரு நிமிசம் சாமி பார்க்க முடியாமப் போயிருமோன்னு கலங்க ஆரம்பிச்சது அங்கதான்.

கடைசியா மெயின் என்ட்ரன்ஸ் போய் குறுக்கு வழியில உள்ள போகமுடியுமான்னு பார்த்தால், அங்க இருக்கிற போலீஸ் லத்தியைக் கொண்டு அடிக்க வாராங்க. வேற வழியில்லாம 'எங்க நண்பர்கள் எல்லாரும் உள்ள இருக்காங்க சார். நாங்க வெளிய மாட்டிக்கிட்டோம். ப்ளீஸ் உள்ள விடுங்க சார்னு' பொய் சொல்லி கெஞ்ச ஆரம்பிச்சிட்டோம். முதலில் எதுக்கும் போலீஸ்காரர்கள் மசியல. எங்க நிலைமையை நினைத்துப் பரிதாபப்பட்ட ஒரு போலீஸ் மட்டும் அரைமணி நேரம் கழித்து உள்ளே விட்டார்.

அப்பாடா எப்படியோ உள்ள வந்தாச்சுன்னு நினைச்சப்போ மணி மதியம் 3. எப்பவும் தர்ம தரிசனத்தில் 8 மணி நேரம் மண்டபத்தில் அடைச்சி வச்சிருந்து அதுக்கப்புறம் தான் திறந்து விடுவாங்க. அதுக்கப்புறம் வரிசையில் நின்னு சாமி பார்க்கிறதுக்கு ஒரு மணி நேரம் கூடுதலா ஆகிரும்.இப்பவும் அதுபோலத்தான் 11:30க்குத் திறந்து விட்டாங்க. ஓடிப்போய் லட்டு கவுண்டர்ல நின்னா ஒரு லட்டுதான்னு சொல்லிட்டாங்க.

அப்புறம் வரிசையில நின்னு சாமி பார்க்கிறதுக்கு 12:30 ஆகிருச்சி. நம்ம என்ன எடியூரப்பாவா? ஒரு மணி நேரம் உட்கார்ந்து சாமி கும்பிடுறதுக்கு? ஐந்து முதல் பத்து நொடிகள் தான் சாமி தரிசனம். அதுவும் உயரம் குறைவா இருந்ததால குதிச்சிக் குதிச்சி வேற பார்க்க வேண்டிய நிலைமை. சும்மா சொல்லக்கூடாது. உண்மையிலேயே சன்னிதியில் ஒரு ஆள் நிக்கிற மாதிரி அவ்வளவு தெளிவான தோற்றத்தில் பெருமாள். வேண்டுதலையெல்லாம் நிறைவேற்றுங்க சாமின்னு கும்பிட்டுட்டு லட்டையும் வாங்கிட்டு திரும்பவும் போய் தூங்குறதுக்கு 2 மணி ஆகிருச்சி.

காளஹஸ்தீஸ்வரர் - ஞானபிரசூனாம்பிகை


தூக்கம்னா தூக்கம் பேய்த் தூக்கம். திரும்பவும் 6:30க்கு எழுந்திருச்சி, குளிச்சி கிளம்பியாச்சு. வெளியில ஒரு கடையில் வாந்தி வர்ற டேஸ்ட்ல இருந்த இட்லியும், வடையும் சாப்பிட்டுட்டு கீழே போய் முதலில் திருச்சானூர் போய் பத்மாவதி தாயாரைக்ல் கும்பிட்டோம்.

இந்த ஊரில் இருப்பவர்கள் 100% தமிழர்களாம். ஆங்காங்கே தமிழில் பெயர்ப்பலகைகளையும் பார்க்க முடிந்தது. பின்னர் திரும்பவும் திருப்பதி வந்து அங்கிருந்து காளஹஸ்தி போய்ச் சேர்ந்தோம். காளஹஸ்தி கோவில் ரொம்பவே பெருசு. அப்புறம் சிற்ப வேலைப்பாடெல்லாம் நல்லா இருக்கு. இங்க ராகு-கேது தோசம் இருக்கிறவங்க பிரார்த்தனை செய்து வழிபட்டால் தோசம் நீங்கும் என்பது ஐதீகம் என்பதால் சரியான கூட்டம். சிறப்பு தரிசன கூப்பன் வாங்கியே எங்களால 1 1/2 மணி நேரம் கழிச்சி தான் சாமி பார்க்க முடிந்தது.

பின்னர் அங்கிருந்து கிளம்பி திருப்பதி வந்து சாப்பிட்டுட்டு மதியம் 3 மணிக்கு பெங்களூர் பஸ் ஏறினோம்.

டிட் பிட்ஸ் :
  • திருமலையில் மண்டபத்தில் தங்கியிருந்த போது சுடச்சுட சாம்பார் சாதம், பால் எல்லாம் இலவசமாகக் கொடுத்தார்கள்.
  • ஒரு ராஜஸ்தான் கோஷ்டி தலையில் உருமாக் கட்டுடன் அங்கே டிவியில் போட்ட இராமாயணத்தைப் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். நம்ம ஊர் மக்கள் எவ்வளவோ தேவலை. படிப்பறிவு சுத்தமாக இல்லை போலும். ஆனாலும் இந்தி மட்டும் தெரிகிற தைரியத்தில் ரயிலேறி வந்திருக்கிறார்கள். நம் மக்களை விட இன்னும் 50 வருசம் பின் தங்கியே அவர்கள் இருந்தார்கள்.
  • திருப்பதி பேருந்து நிலையம் எதிரில் பாலாஜி உட்லன்ட்ஸ் உணவகத்தில் கொஞ்சம் சுவையான உணவு முப்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது.


குறிப்பு : 2008ல் எழுதி பதிவிட மறந்தது.

Monday, February 07, 2011

'அய்யனார்' படத்தின் 'பனியே!' பாடல் ..


சமீபத்தில் வெளியான 'அய்யனார்' படம் அந்த அளவு வெற்றி பெறவில்லை. கதாநாயகனாக 'ஈரம்' படத்தின் 'ஆதி' நடித்திருந்தார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் 'தமன்'. தலைவர் யாருமல்ல. பாய்ஸ் படத்தில் ட்ரம்ஸ் வாசிக்கும் குண்டு பையன் தான்.


இவர் மிக அருமையாக இசை அமைத்துள்ளார். இப்படத்தில் 'கவிப்புயல்' தாமரை அவர்கள் தன் அருமையான வரிகளால் தூயதமிழில் வழமை போல் ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.


இந்தப்பாடல்தான் 'பனியே! பனியே! என் இதயம் புல்நுனியா?' எனத்துவங்கும் அருமையான பாடல்.

தினமும் நான்கைந்து முறை தொடர்ச்சியாகக் கேட்கிறேன். நீங்களும் இந்தப் பாடலை மறக்காமல் கேட்டு மகிழுங்கள். :)

http://mp3.tamilwire.com/ayyanar-2010.html

Wednesday, February 02, 2011

கண்ணாடி மாற்ற நேராக ஆப்டிகல்ஸ் செல்பவரா நீங்கள்? ஒரு நிமிசம் ..


என் கண்ணில் திடீரென ஒரு பிரச்சினை. கண்ணாடி அணிந்திருக்கும் எனக்கு எதையாவது கூர்ந்து பார்த்தாலோ, படித்தாலோ கண் கூசியும், வலிக்கவும் செய்தது.

தொடர்ந்து ஒருவாரமாக இந்தப் பிரச்சினை இருந்ததால் கண்ணில் பிரச்சினையாக இருக்கும் என சந்தேகித்து கண் மருத்துவரிடம் சென்றேன்.

முதலில் ஒருமணிநேரத்தில் நான்கு முறை கண்ணில் சொட்டு மருந்து ஊற்றி பின் மருத்துவரிடம் அனுப்பினார்கள்.

என் பிரச்சினையைக் கேட்டபிறகு, கண்ணில் லென்சுகளை மாற்றி மாற்றி எழுத்துக்களைப் படிக்கச் சொன்னார்.

பின் அவர் கேட்ட முதல் கேள்வி "கண் மருத்துவரை இதற்கு முன்னால் எப்பொழுது பார்த்தீர்கள்?"

சத்தியமாக எனக்கு நினைவில்லை. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இருக்கும். கல்லூரியில் படிக்கும் போது ஒருமுறை அருப்புக்கோட்டையில் முதன்முதலில் கண் பார்வைக் குறைபாட்டிற்காகச் சென்றேன்.

சொன்னால் காறித்துப்புவார் என்பதால் "2 வருடம் முன்பு சென்று பார்த்தேன்" என்று சொன்னேன்.

"எந்த மருத்துவரைப் பார்த்தீர்கள்?"
"இங்கு இல்லை. பெங்களூரில்" - இதுவும் பொய்.
"சரி. கடைசியாக கண்ணாடி எப்போது 'பவர்' செக் செய்து மாற்றினீர்கள்? எங்கு மாற்றினீர்கள்?"
"போன வருடம் ஜிகேபி ஆப்டிகல்சில் 'பவர்' செக் பண்ணி மாற்றினேன்"
"ஏன் கண் மருத்துவரைச் சென்று பார்க்கவில்லை?"

மாட்டிக் கொண்டேன்.

"சொல்லுங்கள். ஏன் கண் மருத்துவரைச் சென்று பார்க்கவில்லை?"

மௌனம்.

"உங்கள் கண்ணில் தற்போதுள்ள குறைபாடு -2.75. ஆனால் நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடியின் பவர் -3.5. நீங்கள் ஆப்டிகல்ஸ் சென்றால் அங்கிருப்பவர்கள் ஒன்றும் மருத்துவர்கள் இல்லை. வியாபாரிகள். அவர்கள் எப்படி சரியான பவரைச் சொல்லமுடியும்? நீங்கள் உங்கள் கண்ணின் குறைபாட்டை விட அதிக பவர் உள்ள கண்ணாடி அணிந்திருப்பதால் தான் கண் வலிக்கிறது" என்றார்.

எனக்கு இப்படி எல்லாம் பிரச்சினை இருக்கும் என்பதே அப்போது தான் புரிந்தது.

எனவே கண்ணாடி அணிந்திருப்பவர்கள் இலவசமாக ஆப்டிகல்ஸில் பவர் செக் செய்து கொள்ளலாம் என நினைத்து அங்கே சென்றால் எந்த லட்சணத்தில் செய்வார்கள் என்பதைப் பாருங்கள்.

பவர் செக் செய்தபின், எனக்கு வேறு எந்தக் குறையும் கண்ணில் இல்லை எனவும், பவர் செக் அல்லது பார்வைக்குறைபாடு என்பது கண்ணில் உள்ள பிரச்சினையில் 5% மட்டுமே எனவும், இனி பவர் செக் செய்ய ஏதாவது ஒரு கண் மருத்துவரை மட்டுமே சென்று பாருங்கள் என்றும் அறிவுறுத்தினார். ரூ.200 மட்டுமே வாங்கினார்.

கண் நம் உடலின் முக்கிய உறுப்பு. அதில் குறைபாடு என்றால் கஞ்சத்தனம் காட்டவேண்டாம். அதை எனக்கு உணரவைத்த மருத்துவர் குமரனுக்கு நன்றி.

Thursday, January 27, 2011

தமிழக மீனவர்கள் கொலை - புறக்கணிப்போம் இலங்கையை !!


ஒருவரா இருவரா? இதுவரை 400 க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு விட்டார்கள். முதலில் விடுதலைப்புலிகள் என்று நினைத்து சுட்டோம் என்றார்கள். இப்போது போர் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் தாக்குதல்கள் நிகழ்ந்தால் இது தமிழர்கள் மீதான காழ்ப்புணர்வே தவிர வேறென்ன?

கையாலாகத மாநில அரசையும், வேண்டுமென்றே கள்ளத்தனமாக மவுனமாக இருக்கும் மத்திய அரசையும் இனியும் மீனவர்களும், நாமும் நம்பியிருக்க வேண்டுமா?

எங்கள் ஈழச்சகோதரர்களை எல்லாம் அழித்தாகிவிட்டது. இன்னும் ரத்தவெறி கொண்டு திரியும் இலங்கைக்கு வேறு வகையில் ஆப்படிக்க வேண்டும். உலகநாடுகள் பொருளாதாரத் தடை விதிக்காவிட்டால் என்ன? நாம் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இலங்கைக்கு எந்தவிதத்திலும் மறைமுகமாக உதவமாட்டோம் என உறுதி கொள்ள வேண்டும்.

பின்வரும் எல்லாம் நம்மால் நிச்சயம் செய்ய முடியும் செயல்கள் தான்.

1. சுற்றுலாவிற்கு இலங்கையைப் புறக்கணிப்பது. உலகத் தமிழர்கள் யாரும் இலங்கைக்குச் சுற்றுலா செல்லாமல் புறக்கணிக்க வேண்டும். தன் பொருளாதாரத்தில் பெரும் பங்கு சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் இலங்கைக்கு இது நிச்சயம் பேரிழப்பு.

2. இலங்கையின் 'ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமான சேவையைப் புறக்கணித்தல். மிக முக்கிய நிமித்தமாகச் செல்ல நேர்ந்தாலும் பிற விமானசேவை நிறுவனங்களை உபயோகித்தல்.

3. இலங்கை வங்கியைப் புறக்கணித்தல். சென்னையில் இருக்கும் இலங்கை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகள வேறு வங்கிகளுக்கு மாற்றுதல்.

4. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் இருக்கும் 'ஶ்ரீலங்கன் ட்ரேட் சென்டர்' வணிக நிறுவனத்தைப் புறக்கணித்தல்.

5. இலங்கையிலிருந்து வரும் சிங்கள மாணவர்களுக்கு தங்குவதற்கு வீடுகள் தராமல் புறக்கணித்தல்.

6. விரைவில் தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்குத் துவங்க இருக்கும் பயணிகள் கப்பல் சேவையைப் பயன்படுத்தாமல் இருத்தல். இது நாம் ஈழ, தமிழகத் தமிழர்களை வெறுக்கும் காங்கிரஸுக்கு வைக்கும் வேட்டு.

7. எந்த ஒரு இலங்கைத் தயாரிப்பையும் பயன்படுத்தாதிருத்தல்.

தமிழனமே ! ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது வெட்கமில்லாமல் காங்கிரசைத் தேர்ந்தெடுத்தோம்! இப்போது நம் தமிழகத் தமிழர்கள் கொல்லப்படும் போதாவது சொரணையுடன் இருப்போம் !!

வாக்களித்தபின் உறுதிச்சீட்டு - தேவையில்லாத முறை


இந்தியத் தேர்தல் ஆணையம் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதிய முறையைக் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறது.

நம் வாக்கு யாருக்கு இயந்திரத்தில் பதிவானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் வாக்களித்தபின் ஒரு சீட்டினில் அச்சிட்டு வெளியிடும் முறையை ஆய்வு செய்து வருவதாகச் சொல்லியிருக்கிறது.

ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யமுடியும் என்ற பிரச்சினை உள்ள நிலையில் நம் வாக்கு யாருக்குப் பதிவாகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தால் அது நல்லதுதான்.

ஆனால் இதில் இன்னொரு முக்கியமான மறுபக்கமும் உள்ளது. இப்பொழுது எல்லாம் தங்கள் கட்சிக்கு வாக்களிப்பதற்கு கிராமங்களில் ஒரு வாக்கிற்கு ஆயிரக்கணக்கில் பணம் தரப்படுகிறது.

எனவே காசு கொடுத்த கட்சியினர் வாக்களித்தபின் இந்தச் சீட்டை வாங்கிப் பார்த்து தங்கள் கட்சிக்குத் தான் வாக்களித்திருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். காசு வாங்கிவிட்டு மாற்றுக் கட்சிக்கு வாக்களித்திருந்தால் 'டின்' கட்டிவிடுவார்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும்.

வாக்காளர்களும் பலகட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு 'உங்களுக்குத் தான் போட்டேன்.. உங்களுக்குத் தான் போட்டேன்..' என்று ஏமாற்றவும் முடியாது :).

எனவே முதலில் எந்தக் கட்சி காசு தருகிறதோ - குறைவாக இருந்தாலும் - வாங்கிவிட்டால் அவர்களுக்கு ஓட்டு போட்டே ஆகவேண்டிய நிலை உருவாகும். 'ஏன் மாமு அவசரப்பட்ட ... ரெண்டு நாள் பொருத்திருந்தா இந்தக் கட்சி இரண்டு மடங்கு காசு கொடுத்திருப்பான்ல..' என்று அதிகம் காசு வாங்கியவர்கள் வெறுப்பேற்றுவார்கள். :)

குடும்பத்தில் கணவர் அரசு ஊழியர். திமுக ஆதரவாளராக இருப்பார். அவர் மனைவி எம்ஜிஆர் விசுவாசியாக அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டிருந்தாலும், கணவரிடம் 'கலர் டிவி தந்த கருணாநிதிக்குத் தான் போட்டேன்' என்று புருடா விட்டிருப்பார். கணவரின் கைக்கு இந்தச் சீட்டு கிடைத்தால் வீட்டிற்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் நடக்கும்.

நம் அளிக்கும் வாக்கு நமக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய ரகசியமான ஒன்று. அதை அடுத்தவரும் பார்க்கும் வகையில் அச்சிட்டுத் தரத் தேவையில்லை. காசு வாங்கிய யாரும் தங்களை ஏமாற்ற முடியாது என்ற நிலை உருவாகும் என்பதால் தான் அரசியல் கட்சிகள் எதுவும் இந்த முறையை எதிர்க்கவில்லை. மின்னணு வாக்குமுறையையே எதிர்த்தவர்கள் இப்போது மட்டும் வாய் மூடி இருப்பது ஏன்?

எனவே தேர்தல் ஆணையம் வேறு முறையை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

Wednesday, January 26, 2011

WI5 - பட்டையைக் கிளப்பும் இணைய இணைப்பு சேவை !!



இப்பொழுது தான் புதிதாக மடிக்கணினி வாங்கியிருக்கிறேன். இணைய இணைப்பிற்காக கணினி வாங்குவதற்கு முன்பிருந்தே விசாரித்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலான இணையசேவை வழங்கும் நிறுவனங்கள் ரிலையன்ஸ், பிஎஸ்என்எல், டாடா போட்டான், எம்டிஎஸ் எம்பிளேஸ் ஆகியவை டேடா கார்டு 1500 முதல் 2500 வரை சொல்கிறார்கள். அதன்பிறகு மாதாமாதம் 750 ரூபாய் 516kbps வேகத்தில் சேவை அளிப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் இவ்வளவு காசு கொடுத்து நமக்குக் கட்டுபடியாகாது என்பதால், என்ன செய்யலாம் என யோசித்த போது, என் அறையின் கதவில் ஒரு விளம்பரத்தாள் சொருகப்பட்டிருந்தது. அதில் WI5 என்ற நிறுவனம் இணையவசதி செய்து தருவதாக குறிப்பிட்டிருந்ததால் அவர்களுக்குத் தொலைபேசினேன். அடுத்த ஒருமணி நேரத்தில் இணைய இணைப்பு கொடுத்துவிட்டார்கள்.

அதே போல மாதக்கட்டணமும் மிகவும் குறைவு. ரூ.250 முதல் பிளான்கள் உள்ளன. நான் ரூ250 திட்டத்தில் சேர்ந்துள்ளேன். முக்கியமான விசயம் இணைப்பு கொடுப்பதற்கான கட்டணம் (Installation charges) எதுவும் இல்லை. 256kbps 2GB தரவிறக்க அளவு. 30 நாள் அல்லது 2GB தரவிறக்கம். எது முதலில் முடிகிறதோ அப்பொழுது திரும்பவும் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இது ஒரு ப்ரீபெய்டு சேவை. மாதாமாதம் 30ம் தேதி பணம் கட்டுவதற்குப் பதில் 1ம் தேதி பணம் கட்டி அந்த மாதம் முழுவதும் உபயோகித்துக் கொள்ளலாம். நான் உபயோகித்தவகையில் மிகவும் நன்றாகவே உள்ளது.

இன்றைய தேதியில் WI5 மட்டுமே இவ்வளவு குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கிறது.

எனவே இணைய இணைப்பு வேண்டியிருந்தாலோ, அல்லது மாற்ற நினைத்தாலோ தாரளமாக WI5க்கு மாறுங்கள்.

http://www.wi5.in/

Monday, January 24, 2011

பெங்களூரில் நாய்த் தொல்லை


கடந்த வாரம் பெங்களூரில் 2 வயது சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிக் கொன்ற சம்பவம் ரொம்பவே மனதைப் பாதித்தது. எவ்வளவு நாள் தான் பொறுப்பது இந்த நாய்ப் பிரச்சினைக்கு. அதுவும் பெங்களூரில் ரொம்பவே ஓவர். பெங்களூரின் நாய்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு அவற்றைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இங்கே இருக்கும் நாய்கள் நம்ம ஊர்த் தெருநாய்கள் மாதிரி சோப்ளாங்கி நாய்கள் அல்ல. நன்றாக கொழுக் மொழுக் என்று செர்லாக் பேபி மாதிரி இருக்கும் மலை நாய்கள் வகையைச் சேர்ந்தவை. பயம் என்பது அறவே கிடையாது. சாதாரணமாக நம் ஊரில் நாய்களை கையை ஓங்கி விரட்டினால் பயப்படுவது மாதிரி நடிக்கவாவது செய்யும். இங்கு அப்படி செய்தால் நம்மைப் பார்த்து முறைக்கும். கல்லெடுத்து அடிக்கப் போனால் குலைத்துக் கொண்டு கடிக்க வந்துவிடும்.

இந்திய அரசியல் சட்டப்படி விலங்குகளுக்கு துன்பம் செய்தல் கூடாது என்பது குறித்து ஒரு தனிப் பிரிவே உள்ளதாம். இங்கு நாய்களைக் கொல்லக்கூடாது ஆனால் கட்டுப்படுத்தலாம் என்ற வகையில் பெங்களூர் மாநகராட்சியிலும் சிலவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதாவது நாயைக் கஷ்டப்பட்டுப் பிடித்து அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து விட்டுவிடுவார்கள். ரேபிஸ் தடுப்புஊசி எல்லாம் போடுவார்கள். எதற்கு என்றால் கடித்தால் ரேபிஸ் பரவாமல் இருக்க. ஆனால் குழந்தைகள் கடியின் கொடூரம் தாங்காமல் இறந்துவிடுகிறார்கள். ஆக இந்த முறைகள் எல்லாம் வேலைக்கே ஆகாது. ஒரே வழி பாரபட்சம் இல்லாமல் அவற்றைக் கொல்வதே.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால் பிறகு ஏன் நாய்களின் எண்ணிக்கை வருடாவருடம் கூடுகிறது? ஆண்டவனுக்கே வெளிச்சம். பெங்களுரில் நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கிட்டத்தட்ட கூவம் அளவுக்கு ஓடும் சாக்கடைகளும், தெருவுக்கு நாலு இருக்கும் பேக்கரிகளும் அனுமதியின்றிப் பெருத்துவிட்ட கசாப்புக் கடைகளும் ஒரு காரணம். ஏற்கனவே பல குழந்தைகளைப் பெங்களூரின் நாய்கள் கடித்துக் கொலை செய்தது நமக்குத் தெரியும். இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமும் நீலச்சிலுவைச் சங்கத்தினரே. நாயைக் கொல்லக்கூடாது என்று கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி ஒருநாள் மட்டும் நாய்களுக்கு முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் போஸ் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

எங்கள் ஊரில் மார்கழி மாதம் நாய்களை சுருக்கு போட்டுப் பிடித்து கழுத்தில் விஷஊசி போட்டுக் கொல்வார்கள். யாரும் அங்கே எதிர்ப்பது இல்லை. ஏனென்றால் நீலச்சிலுவை சங்கம் போன்ற வெட்டி அமைப்புகள் அங்கே இல்லை. நகரத்தின் பணக்காரர்களான நாய்க்காதலர்கள் இது போன்ற அமைப்புகளில் இருந்து கொண்டு கோசம் போட்டு போஸ் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள். அவர்கள் குழந்தைகள் எல்லாம் கணினியில் மட்டுமே விளையாடும். சாமானியர்களின் குழந்தைகள் அல்லவா தெருவில் விளையாடும்? பிறகு எப்படி அவர்களுக்கு இது பற்றிப் புரியும்?

இந்த நாய்களிடம் இருந்து தப்பித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. பிரதான சாலையில் அலுவலக வண்டியை நிற்கச் சொல்லிவிட்டு சந்து பொந்துகளின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தேன். சொன்னால் நம்பமாட்டீர்கள் ஒரு திருப்பத்தில் சுமார் முப்பது நாய்கள் இருக்கும். ஆட்டு மந்தை போல நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அதிர்ச்சியில் பின்வாங்கி பின் வண்டி ஓட்டுனருக்கு தொலைபேசி என் வீட்டின் அருகே வரச் சொல்லிப் பின் அலுவலகம் சென்றேன்.

நீலச்சிலுவைச் சங்கத்தினர் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்றால் அவற்றைத் தனியிடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். விலங்குகளுக்கு சரணாலயம் மாதிரி. ஏற்கனவே கோரமங்களாவில் தெருவில் திரியும் பசு மற்றும் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும் ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றைப் பராமரிக்க ஒரு காப்பகம் உண்டு. அது போல இவர்களும் செய்யலாம்.

அதை விடுத்து நாயைக் கொல்லாதே அது தெருவில்தான் திரியும் என்று சொல்வதும், கார் ஓட்டினால் விபத்தே நடப்பது இல்லையா? அதற்காக யாருமே கார் ஓட்டுவதில்லையா? அது போலத்தான் நாய்க்கடிக்கொலைகளும் சாதாரணம் என்று அபத்தமாக ஒப்பிட்டுப் பேசுவதும் தேவையில்லாதது. நான் ஒன்றும் நாய்களைப் பிடிக்காதவனோ வெறுப்பவனோ அல்ல. நானும் தெருநாய்களுக்கு சோறு போட்டு வளர்த்தவன்தான்.

உதாரணமாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கிருஷ்ணகிரி-கன்னியாகுமரி சாலையில் இருக்கும் அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன. எதற்காக? மக்களின் வசதிக்காக. அதுபோலத்தான் இதுவும். மக்களுக்குச் சிரமம் தந்தால் நாய்களைக் கொல்வதில் என்ன தவறு?

குன்னூரில் இதே போன்று ஒரு சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிப்போட அவனது முகமே விகாரமாகி இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொஞ்சம் சரிசெய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு மக்கள் போராட்டம் நடத்திய பிறகும் நாய்களைக் கொல்ல நீலச்சிலுவைச்சங்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் மக்கள் வித்தியாசமாக ஒரு யோசனை செய்து அவர்களின் மூக்கை உடைத்தார்கள். அதாவது ஆட்டுக் குடலை துண்டு துண்டாக வெட்டி அதனுள் விசத்தை வைத்து தெருக்களில் போட்டு விட்டார்கள். அதைத் தின்ற நாய்கள் செத்து ஒழிந்தன. நீலச்சிலுவைச் சங்கத்தினரின் முகத்தில் ஈயாடவில்லை.

இனியும் இவர்கள் தொல்லை தொடர்ந்தால் குன்னூர் மக்களை நாமும் பின்பற்ற வேண்டியதுதான். அல்லது 'ரக்த ஜ்வால ..' எனத் தொடங்கும் பைரவர் ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டு தெருவில் நடமாடவேண்டியது தான்.

Sunday, May 09, 2010

ராஜன் புரோட்டா ஸ்டால்



ஊரில் உத்தமராஜன் என்றால் எல்லோருக்கும் தெரியும். காரணம் அவர் கட்சியில் இருந்தார். அரசியல் என்றால் என்னவென்று தெரியுமுன்பே உத்தமராஜனையும் அவரது கட்சிப்பற்றையும் பார்த்து அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொண்டோம் என்றால் அது பொய்யில்லை.

உத்தமராஜன் என் வகுப்புத்தோழன் காந்திராஜனின் தந்தை. பிறக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியைக் கையில் பிடித்தபடியே வந்திருப்பாரோ என்று கூட நினைக்கத் தோன்றும். அப்படி ஒரு விசுவாசமான திமுக தொண்டர். வாட்டசாட்டமான உருவம். முறுக்கு மீசை. விரலில் கலைஞர் படம் போட்ட தடிமனான மோதிரம். தேய்த்த வெள்ளை வேட்டி சட்டை. வேட்டியில் கறுப்பு சிவப்பு கரை. அவரது ட்ரேட்மார்க் அடையாளம் ஒரு மிதிவண்டி. வண்டியின் ஹெட்லைட்டில் மஞ்சள் கலர் ஸ்கார்ப். இரண்டு ரிவர்வியூ கண்ணாடிகள். சக்கரத்தின் கம்பிகளில் கறுப்பு சிவப்பு மணிகள். சைக்கிளின் பின்புறம் சிவப்பு விளக்கின் மேலே உதயசூரியனின் படம். மிதிவண்டியின் கைபிடியின் இரண்டுபுறமும் ஒலிநாடாவைக் கொத்தாக வெட்டி காற்றடித்தால் சரசரவென சத்தத்துடன் செல்லுமாறு செய்திருந்தார். மிதிவண்டியின் செயின் கார்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று கறுப்பு சிவப்பு மையினால் எழுதப்பட்டிருக்கும்.

நாங்கள் எல்லோரும் ஒரே தெருதான். நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். தெருவில் விளையாடும் போது தண்ணீர் தவித்து காந்தியின் வீட்டுக்குப் போக நேர்ந்தால் வீட்டின் நடுப்பத்தியில் மாட்டப்பட்டிருக்கும் பெரிய பெரிய கலைஞர் படங்கள் ஒரு வித்தியாமான உணர்வை ஏற்படுத்தும். ராஜன் ஒன்றும் கட்சியின் பொறுப்புகள் எதிலும் இருக்கவில்லை. ஆனால் கட்சியின் உண்மையான விசுவாசி என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். உத்தமராஜனுக்கு ஊரில் இருக்கும் ஒரே திரையரங்கின் எதிரில் ஒரு புரோட்டாக் கடை இருந்தது. சிறிய கடை என்றாலும் சுவையான சால்னாவுடன் புரோட்டா கிடைக்கும் என்பதால் கூட்டம் நிரம்பி வழியும். கடையிலும் எல்லா இடத்திலும் கலைஞர்தான். கடையின் பெயர் கூட கறுப்பு சிவப்பில்தான் எழுதப்பட்டிருக்கும்.

காந்தியிடம் பேசும்போதெல்லாம் "ஏண்டா உங்க அப்பாவுக்கு கருணாநிதின்னா ரொம்ப பிடிக்குமாடா? உங்க வீடு பூராம் கலைஞர் படமா இருக்கு??"ன்னு ஆச்சரியத்துடன் கேட்டோம். "அவருக்கு கலைஞரை மட்டும் யாராவது குறை சொன்னால் கெட்ட கோவம் வரும்டா.. அடிபின்னிருவார்" ன்னான். எங்கள் நண்பர் குழுவில் இருந்த துடுக்கு ரீகன் மட்டும் "டேய் உங்க அப்பா இன்னிக்கு மதியம் வீட்டில் இருக்கிறப்போ நான் 'கலைஞர் ஒழிக'ன்னு உங்க வீட்டு வாசலில் நின்னு கத்துவேன். உங்கப்பா என்ன செய்றார்னு பார்ப்போம்"ன்னு சவால் விட, எங்களுக்கும் ஆவல் அதிகமாகி நடப்பதைப் பார்ப்போம்னு கமுக்கமா இருந்துட்டோம்.

அன்னிக்கு மதியம் ரீகன் காந்தி வீட்டு வாசலில் நின்று "கலைஞர் ஒழிக" அப்படின்னு கத்த, நடுப்பத்தியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த உத்தமராஜன் திடுதிடுவென வாசலுக்கு வந்து ரீகனின் பிடறியில் ஒரு அறைவிட்டார். சற்றும் எதிர்பார்க்காத ரீகன் பொறி கலங்கிப் போய் அழுது கொண்டே ஓட்டமெடுத்தான். பொன்னம்மாள் அக்கா வீட்டு மாட்டுக் கொட்டகைக்குப் பின்னால் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்குக் குப்பென வேர்க்க ஆரம்பித்தது.

அதன்பின் சிவருடங்களில் உத்தமராஜனின் தம்பிகள் பெரிய ஆட்களாகிவிட அவர்களின் உழைப்பால் ராஜன் புரோட்டா ஸ்டால் ஊருக்குள் மேலும் நான்கு இடங்களில் கிளைகளைத் தொடங்கியது. வருடங்கள் அதிகமாக ஆக ராஜனின் கட்சிப்பற்று கூடிக்கொண்டே போனது. ஊருக்குள் கட்சியின் முக்கியமான நிதி ஆதாரமாக மட்டுமே இருந்த ராஜன், கட்சியில் எந்தப் பதவியும் கேட்டு வாங்கவில்லை. உண்மையான விசுவாசிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்குக் கட்சியில் பதவிகள் வாங்கிக் கொடுக்கும் ஒரு ஏணியாகவே இருந்தார்.

வருடங்கள் ஓடின. 2001 தேர்தல் நிதிக்கு கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் கொஞ்சம் அதிகமாகவே பணம் கொடுத்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக தோல்வி. விரக்தியாலும், தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையினாலும் அதிகமாகக் குடித்து விட்டு வந்து தன் வீட்டின் கூரை மேல் தானே கல்லை விட்டு எறிந்து சத்தம் போட்டு புலம்பிக் கொண்டிருந்தார். காந்தியும் காந்தியின் அம்மாவும் அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுத்திண்ணையில் உட்கார வைத்த போது சின்னக் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டார். காந்தியின் தம்பி ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதது கூட அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்தத் தேர்தல் முடிவினால் அவர் மிகவும் மனமுடைந்து போய்விட்டார்.

ராஜனின் தம்பிகளுக்கு இந்த அரசியல் எல்லாம் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அண்ணனை எதிர்த்துப் பேசமுடியாமல் இருந்தனர். இப்போது தேர்தலுக்காக எக்குத்தப்பாகப் பணத்தைச் செலவு செய்ததால் கடுப்பான அவர்கள் "எங்களிடம் கேட்காமல் எப்படி பொதுப்பணத்தில் இருந்து கட்சிக்குக் கொடுக்கலாம்?" என்று சண்டை போட்டு அவரவர்கள் தனித்தனியே கடைகளைப் பிரித்துக் கொண்டு போய்விட்டார்கள். ராஜனின் வணிகம் இப்போது ஒரு கடையுடன் சுருங்கிவிட்டது. மூன்று பெரிய பிள்ளைகள் வேறு. நாங்கள் கல்லூரியில் சேர்ந்தபோது காந்தி பள்ளிப்படிப்புடன் நின்று விட்டு கடையைப் பார்த்துக் கொண்டான்.

நானும் அதன்பின்னர் இளங்கலை, முதுகலை படிப்புகள் முடித்து ஊரையும் காலி பண்ணிப் போய்விட்டதால், நிறையப் பேருடன் தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மூன்று மாதங்கள் முன்பு துபாயில் இருக்கும் முத்துவிடம் இணைய அரட்டையின் போது எதேச்சையாக காந்தியைப் பற்றி விசாரிக்க "டேய் அவங்க அப்பா இப்பவெல்லாம் முந்தி மாதிரி இல்லடா .. ரொம்ப மாறிட்டார்டா .. ஊருக்குப் போய் ஒருதடவை காந்தியைப் பாருடா.. உன்னை ரொம்ப கேட்டான்" என்று சொன்னதும் எனக்கும் ஊருக்குச் செல்லும் ஆவல் ஒட்டிக் கொண்டது.

பங்குனிப் பொங்கல் விழாவிற்கு ரொம்ப வருடங்கள் கழித்து இந்த வருடம் போன போது காந்தியின் புரோட்டாக் கடைக்குப் போனேன். வெளியில் ராஜனின் ட்ரேட்மார்க் சைக்கிளைக் காணவில்லை. அதற்குப் பதில் ஒரு பழைய சைக்கிள் எந்தவித அலங்காரமும் இல்லாமல் செயின் கார்டில் வெள்ளைப் பெயிண்டில் 'ராஜன் புரோட்டா ஸ்டால்' என்று எழுதப்பட்டிருந்தது. கடையின் உள்ளே பெரிய பெரிய கலைஞர் படங்கள் எல்லாம் கழட்டப்பட்டு, ராஜன் இளைஞராக இருக்கும் போது கலைஞருடன் எடுத்துக் கொண்ட கறுப்பு வெள்ளைப் படம் மட்டும் மாட்டப்பட்டிருந்தது. உள்ளே ராஜன் கல்லாவில் நின்று கொண்டிருந்தார். கரைவேட்டி இல்லை. ஆனால் கலைஞர் படம் போட்ட மோதிரம் போட்டிருந்தார். முறுக்கு மீசையில் ஏகப்பட்ட நரைமுடிகள். பார்த்ததும் "ஏய் வாப்பா வாப்பா என்ன ஆளையே காண்றதில்லை? சொந்த ஊரை மறக்கக் கூடாதுப்பா"ன்னு அறிவுரை கூறினார்.

"அப்படியெல்லாம் இல்லை அப்பா ! வேலை அதிகமாக இருப்பதால் வரமுடிவதில்லை"ன்னு மழுப்பி, "காந்தி எங்கே?" "பலசரக்கு வாங்கப் போயிருக்கான்பா. நீ சாப்பிடு அதுக்குள்ள வந்துருவான்"ன்னு சொல்லி அவரே இலை எல்லாம் எடுத்துப் போட்டு மூன்று புரோட்டாக்களை பிய்த்துப் போட்டு மணக்கும் சால்னாவை அதில் ஊற்றிவிட்டுப் போனார். ஒரு வெட்டு வெட்டிவிட்டு கல்லாவில் நின்று கொண்டிருந்த அவரிடம் "எப்படி அப்பா ! இப்படி மாறிட்டீங்க?" "எதைச் சொல்ற கட்சி வேட்டி கட்டுறதில்லையே அதையா? அட ஆமாம்பா கட்சிப்பாசம், கொள்கையெல்லாம் மனசளவில் மட்டுமே இருக்கு. ஓட்டு மட்டும் என் தலைவனுக்கு மறக்காம போட்டுடுறோம்". "எனக்கு விவரம் தெரிஞ்சதிலயிருந்து கட்சியில் இருக்கீங்களே அப்பா! கண்டிப்பா அதுக்கான பலன் ஒருநாள் கிடைக்கும். கவலைப்படாதீங்கப்பா". "ஹஹாஹா ! அதுவும் இன்னிக்கு நடந்திருச்சுப்பா !" அப்படின்னு சொல்லி அன்றைய முரசொலியை எடுத்துக் காண்பித்தார்.

'பத்து வருடங்களுக்கு மேல் கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்தவர்களுக்காக பொற்கிழி வழங்கப்படும்' என்ற செய்தியுடன் மாவட்டவாரியாக அவர்களது பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் இராமநாதபுரம் மாவட்டத்தின் கீழே உத்தமராஜனின் பெயர் மூன்றாவதாக இருந்தது. நான் அவரைப் பெருமிதத்துடன் பார்த்தேன். அவர் கையில் இருந்த மோதிரத்தில் கலைஞர் சிரித்துக்கொண்டிருந்தார்.

Saturday, May 01, 2010

பதிவு போட வச்ச பரபரப்பு செய்திகள்


ரொம்ப நாள் ஆகிட்டே போகுது பதிவு போட்டு.... சரி கிடைச்ச நேரத்துல சின்னதா ஒன்னு ... சமீபத்தில் பரபரப்பான செய்திகளுக்குப் பஞ்சமே இல்லை.

முதல்ல நித்யானந்தா. எனக்கு எப்ப்வுமே சாமியார்கள் மேல ஒரு கரிசனமோ ஈர்ப்போ இருந்ததே இல்லை. ஏன்னா நான் சின்னப்புள்ளயா (இப்போ மட்டும் வளந்துட்டமாக்கும்..ம்க்கும்..) இருந்தப்போ சங்கராச்சாரியார் என்ற ஜெயேந்திரர் வந்திருந்தார். கோவில்ல ஏதோ பிரசங்கமெல்லாம் பண்ணினார். 'சாமியை யாரும் தொடாதீங்கோ' என்ற அதட்டலுக்கு நடுவில் பக்தர்கள் ஆசிபெற துடித்துக் கொண்டிருந்தார்கள். நான் பக்கத்தில் ஏதோ வேன் இருக்கே என்று போய்ப் பார்த்தேன். சகல வசதிகள், ஏசி, படுக்கை, சமயலறை, இரு உதவியாளர்கள் கிட்டத்தட்ட மினி வீடு மாதிரி இருந்தது. சாமியார்னாலே கஷ்டப்படணும் ஓட்டாண்டியா நின்னு மக்களுக்கு அறிவுரை சொல்லணும்கிற பிம்பம் மனசுல பதிஞ்சு போனதால எனக்கு அப்பலருந்தே சாமியார்களைப் பார்த்தால் பிடிக்காமப் போச்சு. சரி அப்ப ஓட்டாண்டியா நிக்கிற சாமியார்களைப் பிடிக்குமான்னா அதுவும் இல்லை. சும்மா சாமி பேர சொல்லிட்டு பிச்சை எடுக்கிறானுக பாரு என்றுதான் தோணும். :‍)

நித்யானந்தா மட்டுமல்ல ... இந்த பணக்கார கார்ப்ரேட் சாமியார்கள் எல்லாருமே அழிக்கப்படவேண்டும். பக்தர்களை போதைக்கு அடிமையாக்கி வைத்திருக்கும் கல்கி, தான் போகும் இடமெல்லாம் பணக்காரர்களின் வீடுகளில் பூஜை செய்கிறேன் பேர்வழி என்று பணத்தைத் திருடும் அமிர்தானந்தமயி, (பங்காரு, ரவிசங்கர், ஜக்கிவாசுதேவ் எல்லாம் பிராடுகளான்னு தெரியல்.. யாராவது சொல்லுங்க) இன்னும் குறிசொல்றேன்னு போட்டி போட்டு ஆளுக்கு ஒரு அம்மனையும், கருப்பசாமியையும், அகத்தியரையும், ஆஞ்சநேயர் பெயரைச் சொல்லியும் பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரர்களும் ஒழியவேண்டும்.

மனஅமைதி வேணும்னா கோவிலுக்குப் போ, கண்ட கருமம் பிடிச்ச நாய்கள்ட்டயும் ஏன் காசைக் கொண்டு போய் கொட்டுறீங்க. ரொம்ப பணம் இருந்தா என் அக்கவுன்ட் நம்பர் தாரேன் அதுக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுங்க. வெட்டிப்!@#$$க....

சானியா‍‍ சோயப் மாலிக். ஏன் எல்லாரும் இந்தியா பாகிஸ்தான்னு சண்டை போடுறாங்கன்னு தெரியல.. இதே ஒரு பாகிஸ்தான் பொண்ணு இந்தியாவுக்கு கல்யாணமாகி வந்தா பத்திரிக்கைகள் 'மருமகளே வருக!' என எழுதியிருக்கும். அதே நேரம் சானியா சோயப் ஆயிஷா எல்லாமே அவங்க குடும்ப விசயம். அதுக்குப் போயி இந்த வ(ம)ட இந்திய ஊடகங்கள் இவ்வளவு பெருசு பண்றாங்கன்னு தெரியல. எதற்கும் அஞ்சாமல் துணிச்சலுடன் சண்டையிட்டு விவாகரத்து பெற்று சோயப்பின் முகத்திரையைக் கிழத்த ஆயிஷா பாராட்டுக்குரியவர். வெட்கக்கேடான ஒருவிசயம் சானியா சோயப் விசயம் பீக்ல இருந்தப்போ நக்சல் தாக்குதலில் 53 ராணுவ சகோதர்கள் கொல்லப்பட்டது இந்த மட இந்திய மீடியா நாய்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டதுதான். நாசமாப் போக.

அடுத்து ஐபிஎல் லலித்மோடி. ஐயா செம கில்லாடி. கிரிக்கெட் விளையாட்டின் ஒவ்வொரு சின்னவிசயத்தையும் பைசாவாக மாற்றியவர். 'தேனெடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா?' பிசிசிஐக்கு 5000 கோடின்னா எனக்கு 500 கோடின்னு நல்லா கமிசன் அடிச்சு ஜமாய்ச்சிருக்கார். இப்போ போயி வருமானவரி சோதனை பண்றாங்களாம். ஒன்னியும் பண்ணமுடியாது. பின்னால ஏகப்பட்ட்ட கைகளுக்குப் பங்கு இருக்கு போல. ஐயா இவனுங்க இப்படி கோடிக்கணக்குல வ்ரி ஏமாத்தியிருக்கானுகளே, 2007ல் எனக்கு நீங்க 4200 ரூபா கூடுதலா செலுத்துன வரியை திரும்பத் தரணுமே எப்பத் தரப்போறீங்க?

தமிழ்நாட்டில் அழகிரி. சானசே இல்லை. திமுக தலைவர் தேர்தல் வந்தால் போட்டியிடுவேன்னு சொல்லி குட்டையைக் குழப்பிட்டு ஜாலியா வெளிநாடு போயிட்டார். தமிழ்ல தான் நாடாளுமன்றத்துல பேசுவேன்னு அடம்பிடித்து தமிழுக்கு அங்கே இடம்வாங்கிக் கொடுத்தால் புண்ணியமாப் போகும்.

ஸ்டாலின் மேல் எப்பவுமே ஒரு மரியாதை உண்டு. இரு நாட்களுக்கு முன் தவறான சிகிச்சையால் கண்பார்வை பாதிக்கப்பட்ட தங்கை சுரேகாவின் சிகிச்சைக்கு முழுச் செலவையும் ஏற்று தான் ஒரு சிறந்த மனிதநேயமிக்க மனிதர் என்று உணர்த்தியிருக்கார். இதுபோல தன் பேர்கூட வெளிய வராம எவ்வளவோ பேர் உதவிகள் செய்றாங்க. அவங்களுக்கும் ஒரு வணக்கம்.

ஐபிஎல்ல சென்னை வென்றது மகிழ்ச்சி. அதிலும் 'வெற்றி தமிழ்நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம்' என்ற ஹைடன் பேச்சு ஹைலைட். தோத்துப் போன‌ மும்பை பசங்க மேட்ச் பிக்சிங்னு புலம்புறதெல்லாம் ஓவர். போனதடவை நாங்க ராஜஸ்தான்கிட்ட தோத்தப்ப இப்படியா புலம்பினோம். சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு... :)

இன்னும் இருக்கு ... அப்புறமா சொல்றேன்.

ஓட்டப் போட்டுட்டுப் போங்க சாமி ....

Friday, April 09, 2010

Bear Grylls - பயம் அறியான் !!


Bear Grylls - பேர் கிரில்ஸ். இந்தப் பெயர் உங்களுக்கு மிகவும் பரிச்சயமாக இருக்கும் நீங்கள் டிஸ்கவரி சேனலை விரும்பிப் பார்ப்பவர் என்றால். இவர் தான் 'ஆபத்தை அரவணைக்கும் அசகாய சூரர்' என்ற அடைமொழியுடன் Man vs Wild என்ற நிகழ்ச்சியில் சாதித்துக் காட்டுபவர்.

தன்னந்தனியே காட்டிலோ, பாலைவனத்திலோ, பனிப்பிரதேசத்திலோ, கடலிலோ, தீவிலோ, ஆற்று வெள்ளத்திலோ நாம் மாட்டிக் கொண்டால் எப்படி சமயோசிதமாகச் சிந்தித்தும், இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை மட்டுமே வைத்து அந்தச் சூழலிலிருந்து உயிர் தப்பிப்பது என்பதைக் காட்டுவது தான் இந்த Man vs Wild.

இந்த நிகழ்ச்சியில் தான் இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளும் மனிதராக வந்து கலக்கும் ஹீரோதான் Bear Grylls - பேர் கிரில்ஸ். யார் இவர்? இவருக்கு ஏன் இந்த வெட்டி வேலை?

Bear Grylls - பேர் கிரில்ஸ் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 35 வயதாகும் இவர் பிரிட்டனின் விமானப்படையில் பணியாற்றியவர். 24 வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் ஆங்கிலேயர். ஆபத்துகளை எதிர்நோக்கி அவற்றில் இருந்து மீண்டுவருவதில் கரைகண்டவர். அபாயங்களைக் கண்டு அஞ்சாதவர். ஏன் அதைப் பற்றியே சிந்திக்காதவர்.

தான் இராணுவத்தில் பணியாற்றியபோது கற்றுத் தரப்பட்ட உபாயங்களைக் கொண்டும் , தானாக அறிந்தவற்றைக் கொண்டும் இவர் இந்த நிகழ்ச்சியில் ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொண்டு அவற்றை வெல்கிறார்.

விமான விபத்துகளில் சிக்கியும், போர்க்காலங்களில் வேறுவழியின்றி தனிமையில் மாட்டிக் கொள்ள் நேரிடும் வீரர்கள் எப்படி அந்த சூழலை எதிர்கொண்டு உயிருடன் மீண்டு வருவது என்பதை மக்களுக்கு உணர்த்தவேயாம்.

அப்படி என்ன தான் இவர் சொல்லித் தருகிறார்? அதுதான் Survival Techniques.
மனிதன் உயிர்வாழ நெருப்பு அவசியம். கையில் தீப்பெட்டியோ, லைட்டரோ இல்லாத நிலையில் எப்படி நெருப்பு பற்ற வைப்பது, எப்படி காட்டுக்குள் குடில் அமைப்பது, எந்த‌ வ‌கையான‌ செடிக‌ள், ப‌ழ‌ங்க‌ள், காளான்க‌ளைச் சாப்பிட‌லாம், சூழலை உணர்ந்து எப்படி தப்பிப்பது உதாரணமாக ஆற்று வெள்ளம் திடீரென் அதிகமானால் அதை எப்படி உணர்வது போன்றவை.

மனிதர் வெளுத்துக் கட்டுகிறார். மலையேறுவதில் கில்லாடி. இண்டு இடுக்குகளில் நுழைந்து, கும்மிருட்டாய் வௌவால்கள் நிறைந்த குகைக்குள் அலைந்து, நீருக்குள் மூழ்கி என தன் சாகசத் திறமைகளால் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறார்.

இவர் பச்சையாக சாப்பிடாத பூச்சிகள், பாம்புகள், நத்தைகள், மீன்கள், தவளை, பல்லிகள் கிடையாது. 'புரதச்சத்து அதிகம் கிடைக்கும்' என்று எல்லாத்தையும் அப்படியே கடித்துத் தின்பார். ஏன் ஒருமுறை தண்ணீர் தாகம் என்று பாலைவனத்தில் சிறுநீரையும் குடித்தார். இதெல்லாம் செய்தால்தான் இக்கட்டான சூழலில் நாம் உயிர் வாழமுடியும் என்று சொல்கிறார். நமக்காக பாவம் மனிதர் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?? இவர் வீட்டில் எப்படித்தான் பொறுத்துக் கொள்கின்றனரோ? சும்மா சொல்லக் கூடாது ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உலகம் முழுவதும்.

இவ்வளவு திறமைகள் இருந்தும் மனிதர் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் மாட்டியிருக்கிறார். முதன்முதலாய் இவரது நிகழ்ச்சி ஒளிபரப்பனபோது இவர் காட்டுக்குள் தனியே இருப்பது போல காட்டியவுடன், 'தனிமனிதனுக்கு எப்படி தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இப்படி தவிக்கவிடலாம்?' என்று சர்ச்சை எழுந்திருக்கிறது. அதன் பின்னர்தான் 'தனிமனித பாதுகாப்பு சட்டவிதிகளின் படி பாதுகாப்பு' வழங்கப்படுவதாக நிகழ்ச்சி துவங்கும் முன்னர் போட ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுவாவது பரவாயில்லை. தான் நடத்தும் நிகழ்ச்சியின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் ஒரு உண்மை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு இவரது இமேஜ் அதலபாதாளம் சென்றுவிட்டது. அது என்ன? இவரைப் போன்றே 'Les Stroud - லெஸ் ஸ்ட்ராடு' என்றொரு 'காட்டுவாசி' இருக்கிறார். இவரது ரசிகர்களுக்கும், Bear Grylls - பேர்ல் கிரில்ஸின் ரசிகர்களுக்கும் இணையத்தில் ஒரே முட்டல் மோதல் தான். ஏன் இப்படி? Bear Grylls - பேர்ல் கிரில்ஸ் உண்மையிலே திறமையானவரா அல்லது அப்படி முன்னிறுத்தப்படுகிறாரா? Bear Grylls vs Les Stroud யார் சிறந்த காட்டுவாசி அல்லது ஆபத்துகளை வெல்பவர்? இதல்லாம் அடுத்த பதிவில் பார்க்கலாமே?

Friday, January 08, 2010

பசுமை இல்ல வாயுக்கள் - நம் பங்களிப்பு என்ன ?


பசுமை இல்ல வாயுக்கள் அப்படின்னா என்ன? கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும். பூமியை மிதமான சூடான வெப்பத்தில் வைத்திருக்கும் வாயுக்களே அவை. இந்த வாயுக்களால்தான் பூமியில் தாவரங்களும், உயிரினங்களும் தோன்றின. இல்லையெனில் பூமி வெறும் பனிக்கோளமாகவே இருந்திருக்கும். இந்த வாயுக்களால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 33 டிகிரியாக உள்ளது.

இந்த வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் உயிரினங்கள் அழியும். துருவப்பகுதிகள் உருகத் துவங்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும். இந்த வாயுக்கள் அதிகரிக்க என்ன காரணம்? சுலபமான விடை மனிதனின் ஆதிக்கம்.

கீழே உள்ள 10 காரணிகள் தான் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணம்.

1. மின் உற்பத்தி நிலையங்கள் - 25%
நிலக்கரி மற்றும் எண்ணையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் உலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு.

2. காடுகள் அழிப்பு - 20%
விவசாயம் மற்றும் குடியேற்றங்களுக்காக காடுகள் அழிப்பு. இதனால் பசுமைஇல்ல வாயுக்கள் உறிஞ்சப்படாமல் பூமியில் இருக்கின்றன.

3. போக்குவரத்து - 13%
வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

4. எரிபொருள் உற்பத்தி - 6.3%
பெட்ரோல் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு

5. உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் - 6%
பயிர்களுக்குப் போடப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நைட்ரேட் ஆக்சைடை வெளியிடுகின்றன

6. பண்ணைகள் - 5%
பண்ணைகளில் உள்ள மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் வெளியிடும் மீத்தேன்

7. சிமெண்ட் உற்பத்தி - 4%
பெருகிவரும் குடியேற்றங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் சிமெண்ட் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறதி. இந்த ஆலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணி.

8. விமானங்கள் - 3.5%
விமான எரிபொருளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு

9. இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தி - 3.2%
இந்த தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

10. குப்பைகளும் கழிவுகளும் - 3%
குப்பைகளில் வெளிப்படும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு


இந்த வாயுக்களின் உற்பத்தியைக் குறைக்கத்தான் உலகநாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன. இவையெல்லாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் ம்ட்டுமே முயன்று தீர்வு காண முடியும் என்றல்ல.


அன்றாட வாழ்வில் சாதாரண மக்களாகிய நாமும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறோம். தனிமனிதனாக நாமும் நம்மால் முயன்ற அளவு இவற்றைத் தவிர்க்க முடியும். சிறிய விசயங்கள்தான் மிகப்பெரும் பலன் தரும். ஒவ்வொரு வீட்டிலும் முயன்றால் சிறுதுளி பெரு வெள்ளம்.

1. சாதாரண விளக்குகளுக்குப் பதில் CFL விளக்குகளைப் பயன்படுத்துதல். இதனால் மின்சாரப் பயன்பாடு குறையும். உற்பத்தியும் அதிக அளவில் தேவையிருக்காது.

2. மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி ஆகியவை பயன்படுத்துதல். Energy Star முத்திரை 3க்கு மேல் இருப்பதை வாங்கலாம்.

3. அலுவலகக் கணினிகளை Stand byல் வைக்காமல் இயக்கத்தை முழுவதும் நிறுத்திவிடுதல்

4. ஏசிகளின் பில்டரை அடிக்கடி சுத்தம் செய்யலாம்.

5. தண்ணீர் சுடவைக்கும் இயந்திரங்களுக்குப் பதிலாக சூரிய ஒளி வெந்நீர் அடுப்புகளைப் பயன்படுத்தலாம். தண்ணீரை எப்போதும் 50 டிகிரிக்கு மேல் சுடவைக்க அவசியமில்லை.

6. துணிகள் அதிகம் இருந்தால் மட்டும் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்

7. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். பிக் ஷாப்பர் பைகள் மிகவும் வசதியானவை. கடைகளில் கொடுக்கும் பாலித்தீன் பைகளைத் தவிர்க்கலாம்.

8. குப்பைகளைப் பாலித்தீன் பைகளில் சேகரிக்கும் பழக்கத்தை மாற்றி குப்பைவாளிகளில் மட்டும் சேகரிக்கலாம். பாலித்தீன்களை எரிக்கும் போது வெளிவரும் வாயுக்கள் அதிக தீமை விளைவிப்பவை.

9. வாகன உபயோகத்தை முடிந்த அளவு குறைக்கலாம். Car pooling எனப்படும் முறையில் நண்பர்கள் சேர்ந்து ஒரு வாகனத்தை உபயோகிக்கலாம்.

10. வார இறுதி நாட்களில் பேருந்துகளை மட்டும் பயணத்துக்குப் பயன்படுத்தலாம். நெரிசலும் இருக்காது தானே??

11. சிக்னல்களில் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

12. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மரம் வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் டன் கணக்கில் கார்பன் டை ஆக்சைடை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது


இதுபோன்ற செயல்கள் டென்மார்க் நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. டென்மார்க் தன் மின் உற்பத்திக்கு காற்றாலைகளையே பெரும்பாலும் பயன்ப்டுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டத் தடையும் உள்ளது. டென்மார்க் உலகுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.அதனால் தான் தலைநகர் கோபன்ஹகனில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.

பிரிட்டன் போர்னியோ, நியூகினியா தீவிலுள்ள அடர்ந்த காடுகளை விலைக்கு வாங்கி அங்கு மரங்களை வெட்டத் தடைசெய்யும் படி அந்நாட்டு அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


நம் அரசாங்கமோ சாலை விரிவாக்கம், நான்கு வழிச் சாலை என இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டித்தள்ளிவிட்டது :( . அரசை நம்பிப் பயனில்லை நாமே முயன்றால் தான் உண்டு.

தகவல் கோர்வை - இணையம்