Saturday, March 22, 2008

துரத்திய மரணம் ! அறியாத சுப்பு !

மரணம் மனிதனுக்கு இயற்கை தான். ஆனால் எதிர்பாராதவிதமாக அதை நேர்கொள்ளும் போது மரணிப்பவரைச் சார்ந்தவர்கள் தான் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். குடும்பத்தினர் ஒருபுறம் அவருக்கு வெளியில் பழக்கமானவர்கள் என மனரீதியான பாதிப்பும், நமக்கு எப்போது ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு அலைக்கழிக்கின்றன.

டிசம்பர் மாதம் பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்லும் போது ஓசூர் தாண்டியதும் ஒரு விபத்து. 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலையின் நடுவில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எதோ கனரக வாகனத்தில் அடிபட்டு இறந்து போயிருந்தார். நான் சென்ற பேருந்து சம்பவ இடத்தைக் கடந்து சென்ற போது சம்பவம் நிகழ்ந்து 10 நிமிடங்களுக்குள் தான் இருக்கும். அன்றைய பயணம் முழுவதும் அதே நினைப்பிலேயே முடிந்தது. இந்த நினைப்பிலிருந்து விடுபடவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது. அதன் பின்னர் செய்திகளில் விபத்து, மரணம் குறித்தவைகளைப் பார்க்கும் போது மனம் மிகவும் வருத்தப்பட்டது. முன்பெல்லாம் விபத்து, மரணச் செய்திகளைப் படிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பை விட ஒரு மரணத்தை நேரில் பார்த்தபின் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகவே இருந்தது.

அதன் பின்னர் சிலநாட்கள் கழித்து ஊரில் இருந்து பெங்களூர் திரும்பி வரும்போது எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணத்தையும் காண நேர்ந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்திருந்தார். தலையில் மட்டுமே அடி. தலைக்கவசம் அணிந்திருந்தார். ஆனால் முழுவதுமாக தலையை மறைக்காமல்,தொப்பி போல இருக்கும் தலைக்கவசம். ஒருவேளை தலைமுழுவதும் மறைக்கும் கவசம் அணிந்திருந்தால் நிச்சயம் உயிர் தப்பியிருப்பாராயிருக்கும். 2,3 நொடிகளுக்கு மேல் அந்த இடத்தைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். இந்த சம்பவத்தின் பாதிப்பும் சில நாட்கள் இருந்தது.


மேலே படத்தில் இருக்கும் பையனின் பெயர் சுப்பிரமணியன். ஊர் திருவண்ணாமலை. சென்னையில் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஃப்ரஷராக வேலைக்கு சேர்ந்தவன். வயது 23. நாங்கள் எல்லோரும் சுப்பு என்று அழைப்போம். நான் பெங்களூரில் வேலை கிடைத்ததும் அந்த அலுவலகத்தில் வேலையை விட்ட போது, என் பணிகள் அனைத்தையும் இவனிடம்தான் ஒப்படைத்துவிட்டு வந்தேன். மிகவும் அமைதியான பையன். அழகான சிரிப்பு. அதிர்ந்துகூட பேசமாட்டான். நான் செய்த எல்லா ப்ராஜக்ட்களையும் விளக்கிய போது கவனமாகவும், பொறுப்பாகவும் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டான். அதன்பின் குழுமடல்கள் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்தோம்.

சுப்பு இப்போது உயிருடன் இல்லை. :(

அந்த அலுவலகத்தில் ஒரு வருடம் பணிபுரிந்த பின் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் இருக்கும் விப்ரோவில் (பழைய MPower) கடந்த டிசம்பரில் வேலைக்குச் சேர்ந்தான். போனமாதம் அலுவகத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இரத்த வாந்தி எடுத்திருக்கிறான். உடனே நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்திருந்திருக்கிறார்கள். எல்லா பரிசோதனைகளும் முடிந்தபின் மருத்துவர்கள் சொன்னது அவனுக்கு ப்ரைன் ட்யூமர் இறுதி நிலை. மறுநாள் சாயங்காலம் சுப்பு உலகை விட்டுச் சென்றுவிட்டான்.

சுப்புவின் மரணம் நண்பர்கள் மூலம் தெரியவந்தபோது ஏற்பட்ட மனச்சங்கடங்களுக்கு அளவே இல்லை. இரண்டு நாட்கள் அலுவலகத்தில் வேலையே பார்க்க முடியவில்லை. பழைய நினைவுகளே ஆட்கொண்டன. 23 வயதில் மரணமா? ஏன் இப்படி? என்ன என்ன கனவுகள் கண்டிருப்பான்? தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? சுப்புவின் மரணம் அவனை நம்பியிருந்த குடும்பத்துக்கு பேரிடி தான்.

ப்ரைன் ட்யூமர் முதல்நிலையிலேயே கண்டுபிடித்திருந்தால் சரிசெய்திருக்க முடியும் என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். அதன் அறிகுறி கடுமையான தலைவலி இருக்குமாம். சுப்புவுக்கும் அப்படி இருந்து அறியாமையால் கவனிக்காமல் இருந்துவிட்டானோ?

எல்லோரும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். மரணம் எல்லோரையும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.
சிலரை ரொம்ப தூரத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. அது எப்பவும் சீரான வேகத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நமது வேகம் குறையும் போது நம்மைப் பற்றிக் கொள்கிறது.
சிலரை ரொம்ப அருகில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நாம் கொஞ்சம் வேகமாக ஓடினால் தப்பிக்கலாம்.
சிலரை மரணம் எதிர்நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது. இதை ஒன்றும் செய்ய முடியாது. விதி என்று கூட சொல்லிவிடலாம்.

ஆனால் தவிர்க்கக் கூடிய மரணங்களை ஏன் நம் உடல் நலத்தில் அக்கறை கொள்வதன் மூலம் தவிர்க்கக் கூடாது? நம் மரணத்தால் நம்மைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்வோம். எனவே உடல்நலத்தில் அக்கறை கொள்வோம் நண்பர்களே !!

Thursday, March 13, 2008

மழலையர் பாடல்கள் - அரும்புகளுக்காக



சிட்டு

சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் !
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு !!


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>




சேர்ந்து செய்வோம் !

துண்டு தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன் !

துண்டு துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய் பொம்மை செய்தனள் !

வண்ணத்தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர் !
சின்னப்பையன் கண்டனர்
சேர்த்துப் பூக்கள் செய்தனர் !

சிறிய பொருளும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே !
சின்னஞ்சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே !


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>


மரம் வளர்ப்போம்

தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறதே !
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறதே !

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வாபோல பழம் தருது !
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது !

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போல பழுக்கிறது !
சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே !


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>


நன்றி : சங்கீதா அக்கா

Wednesday, March 12, 2008

மிட்வீக் ஜொள்ளு

வீக்கென்டில் மங்களூரிலிருந்து சில ஜொள்ளுப்பார்ட்டிகள் நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் ஜொள்ளுப்பார்ட்ட்டிகளுக்காக பதிவு போட்டு நம் கவனத்தை வேறெங்கும் சிதறவிடாமல் செய்வதால் இந்த மிட்வீக் ஜொள்ளு.

அஞ்சாதே படத்தின் 'கத்தாழைக் கண்ணாலே குத்தாதே நீ என்னை' குத்துப்பாட்டு.
சித்திரம் பேசுதடியின் வாள மீன் பாட்டைப் போலவே டான்ஸ், கானா உலகநாதனுக்குப் பதில் பாண்டியராஜன், அதே போல இருட்டில் மூன்று பேர் உட்கார்ந்து இருக்கிறார்கள். ஜிப் போன மணிபர்ஸ் மாதிரி இந்த அம்மணி வாயை மூடாமல் குத்தாட்டம் போடுவதை என்ஜாய் பண்ணுவோமா?

Saturday, March 01, 2008

எழுத்தாளர் சுஜாதா - சில நினைவுகள்


சுஜாதா என்ற தமிழ் எழுத்துலகின் நட்சத்திரம் ஒன்று தன் ஒளியை நிறுத்திக் கொண்டுவிட்டது. வருத்தங்களும், சோகங்களும் நிரம்பிய முகங்களை தமிழ் வாசகர் வட்டத்தில் பார்க்கிறோம். இப்படிப்பட்ட மாமனிதரை நேரில் காணும் வாய்ப்பு ஒருமுறை சென்னையில் நான் பணிபுரியும் போது ஏற்பட்டது.

இரு வருடங்களுக்கு முன்பு சென்னையில் என் உடன் பணிபுரியும் நண்பனின் அண்ணனுக்குத் திருமணம். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் பாம்குரோவ் ஹோட்டலின் பின்புறம் உள்ள மண்டபத்தில்தான் திருமணம். அலுவலக நட்பு வட்டம் எல்லோரும் சென்றிருந்தோம். நாங்கள் போனது இரவு 7மணிக்கு மேல். எனவே உள்ளே போய் மணமக்களை வாழ்த்தி விட்டு சாப்பிடப் போகும் போது உடன் வந்திருந்த கேரளத்து டிம்சன் "கல்யாணத்துக்கு சுஜாதால்லாம் வந்திருக்கு"ன்னான். எங்க கிளையன்ட் ஒருத்தங்க பேரும் சுஜாதாதான். நாங்க பண்ற ப்ராஜட்க்கு யுஏடி எல்லாம் அவங்கதான் பண்ணுவாங்க. அதனால் நாங்க அவுங்கதான் வந்திருக்காங்க போல பொண்ணுக்கு சொந்தமா இருக்கும்னு நினைச்சிக்கிட்டோம்.

சாப்பிட்டு விட்டு வெளியே வந்தால் மண்டபத்துக்கு வெளியே சேர் போட்டு எழுத்தாளர் சுஜாதா யார் கூடவோ பேசிக் கொண்டிருந்தார். நான் தான் முதலில் கவனித்தேன். "டேய் சுஜாதாடா"ன்னு சொல்ல நண்பர்கள் எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். டிம்சன் "நான் தான் அப்பமே சொன்னனில்லை?"ன்னான். டக் இன் செய்த தொள தொள சட்டையுடன் எளிமையான தோற்றத்தில் உட்கார்ந்து ஒருவருடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தார். நாங்களும் அந்த இடத்தை விட்டுப் போக மனமில்லாமல் நாங்களும் அவருக்கு சற்று தள்ளி நாற்காலிகளில் அமர்ந்தோம்.

எனக்கு அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டுமென்று மிகுந்த ஆவல். ஆனால் கையில் பேப்பரோ, பேனாவோ இல்லை. சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அல்லவா? ரொம்பவே வருத்தமாகப் போய்விட்டது. அவரும் எங்களை அடிக்கடி கூர்ந்து கவனித்தார். நான் "அவரிடம் எதாவது பேசுவோம்" என்று சொன்னேன். எல்லோருக்கும் கூச்சம். என்ன பேசுவது என்று. யாரும் வரவில்லை. வேறுவழியின்றி நானும் விட்டுவிட்டேன். ஒருமணிநேரத்துக்கு மேல் அங்கே இருந்தோம். நாங்கள் கிளம்பிய போது மணி 9:30. நாங்கள் கிளம்பும் வரை சுஜாதா கிளம்பவில்லை. இப்பொழுது ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டோமே என்று தோன்றுகிறது.

போனவாரம் மதுரையிலிருந்து கிளம்பும் போது கொஞ்சம் நேரம் இருந்ததால் ரயில் நிலையம் பக்கத்தில் இருக்கும் சர்வோதய இலக்கியப் பண்ணைக்குச் சென்று சுஜாதா புத்தகங்களைத் தேடினேன். ஸ்ரீரங்கத்துக் கதைகளில் இரண்டு பக்கம் படித்து விட்டு "தள்ளுபடி ஏதும் இருக்கா?"ன்னு கேட்க அப்படியெல்லாம் ஏதும் இல்லை என்று சொன்னார்கள். எனவே நண்பனிடம் சொல்லி செல்வியில் தள்ளுபடியுடன் வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டே வந்துவிட்டேன்.

பின்னர் பொழுது போக்க கல்கி வாங்கிவிட்டு ரயிலில் வரும் போது படித்துக் கொண்டே வந்தேன். அதில் 'வாரம் ஒரு பாசுரம்' என்ற தொடரில் சுஜாதா எழுதிவருகிறார். அதைப் படிக்கும் போது சுஜாதா உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற தேசிகனின் பதிவு நினைவுக்கு வந்தது. இந்த நிலையிலும் தவறாமல் எழுதி வருகிறாரே என்று நினைத்துக் கொண்டேன். அவரது கடைசிப் படைப்பைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோணவில்லை.

சுஜாதாவின் படைப்புகளில் 'கரையெல்லாம் செண்பகப்பூ', 'கற்றதும் பெற்றதும்', 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்' மட்டுமே படித்திருக்கிறேன். இருந்தாலும் அவர் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. இன்னமும் நிறையப் படிக்க வேண்டும் என்று ஆவல். என் அண்ணன் அவர் குமுதத்தில் எழுதிய அறிவியல் தொடரின் பக்கங்களையெல்லாம் சேகரித்து வைத்த ஞாபகம் இருக்கிறது. அவரின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட்டால் எல்லாத் தரப்பு மக்களையும் எளிதில் சென்று அடையும். சாத்தியமா என்று தெரியவில்லை.

அமரர் கல்கியைப் போல் அமரர் சுஜாதாவுக்கும் தமிழ்மக்களின் நெஞ்சில் என்றும் நீங்காத இடம் உண்டு. அந்த தமிழ்த்தாயின் அருந்தவப்புதல்வனின் ஆன்மா திருவரங்கனின் உள்ளத்துள் ஐக்கியமாக எல்லோரும் வேண்டுவோமாக!

Tuesday, February 19, 2008

பதிவுலக க்விஸ் மற்றும் 'ஒரு (தி)தொரட்டியின் கதை'



கீழே கொடுத்திருக்கும் கேள்விக்கெல்லாம் சரியா பதில் சொன்னா 'கண்ணம்மா' கார்த்திக் பிரபு ஆறு மாசம் முன்னால நடந்த போட்டியில் எனக்கு பரிசா அனுப்புறேன்னு சொல்லி இன்னமும் அனுப்பிக்கிட்டிருக்கிற 'கணையாழியின் கடைசிப்பக்கங்கள்' அவர் அனுப்பியவுடன் பரிசாகக் கொடுக்கப்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :

நொந்தழல் கவின்னு அன்போட அழைக்கப்படுபவர்
1. செந்தழல் ரவி
2. வெந்தழல் பீவி
3. வெண்குழல் ஆவி

காண்டு கஜேந்திரன், பேண்டு பலராமன், புரளி மனோகர் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி விளிக்கப்படுபவர்
1. டோண்டு ராகவன்
2. மாண்டு மாதவன்
3. நண்டு நாயகன்

அய்யனார் என்பவர்
1. திருவள்ளுவர்
2. விவேகானந்தர்
3. கவிஞர் கம் பதிவர்

ராசி ஏழுமலை என அழைக்கப்படுபவர்
1. காசி ஆறுமுகம்
2. ஓசி ஏறுமுகம்
3. பாசி பரமசிவம்

TBCD ன்னா என்னா அர்த்தம்?
1. Tamilnadu Born Confused Dravidan
2. Thailand Born Confused Dravidan
3. TuBerClosis Disease

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்புக்கு பதிவுலக உதாரணம்
1. டோண்டு - லக்கிலுக்
2. காண்டு - கோலி காண்டு
3. செந்தழல் - க.கந்தசாமி

பொருத்துக :

யோனி,குறி -- சுண்டக்கஞ்சி மீட்டிங்
துக்ளக் ஆண்டுவிழா -- ஓசை செல்லா
சோ,மோடி -- 200000 ஹிட்கவுண்ட்
போய்ட்டு வாரேன் பார்ட் 2 -- சூடான இடுகைகள்
ரெஃப்ரெஷ் பட்டன், F5 கீ -- ஜோ,கோடி

கண்டுபிடிங்க :

மலேசியாவுக்குக் கீழே குடியிருப்பவர். சீனாக்காரப் பொண்ணை சாவடித்து சாரி டாவடித்து ஒன்னுக்கும் வழியில்லாமல் பூவை மட்டும் போட்டோ எடுத்து பிட்டுக்கு அனுப்பியவர். பதிவு போடுவதை மறந்து போனவர். எப்போதாவது பின்னூட்டங்களில் ஸ்மைலி போட்டு எஸ்கேப் ஆகிறவர். ப்திவுலகில் பழக்கமான என் நண்பனின் அண்ணன். அவர் யார்?

************************************************************************

கீழே இருக்கும் கதை போன மாசமே எழுதினது. ஊர் நெலவரம் சரியில்லாததால் போடலை. அதுனால லேட் ரிலீஸ்.

ஒரு தொரட்டியின் கதை !

பதிவுபுரம்னு ஒரு ஊர்ல ராசி ஏழுமலை ன்னு ஒருத்தர் இருந்தாராம். அவருக்கு தொரட்டி செஞ்சு விக்கிறதுதான் வேலையாம். அவருக்கு தன்னோட தொரட்டி செய்யுற திறமை மேல ரொம்ப பெருமையாம். ஊருக்குள்ள நாலஞ்சு தொரட்டிக் கடை இருந்தாலும் அவர் கடையைத் தேடித்தான் ரொம்ப மக்கள் வருவாங்களாம்.

ஒருநாளு ஊருக்குள்ள பெரிய மனுசானாத் திரியிற பா.சவக்குமார் அசலூர் திருவிழாக்குப் போயி தொரட்டியைக் கண்டுபுடிச்சதே எங்க ஊர்ல தான்னு பெருமையா சொல்லிக்கிட்டாராம். அதை ஆயாவூட்டுக்கு ஓசி சோறு சாப்பிடப் போன மரமண்டு ஒன்னு விசயம் கேள்விப்பட்டு ஊருக்குள்ளாற வந்து சொல்லிருச்சாம்.

உடனே ராசி ஏழுமலை தொரட்டியைப் பத்தி சொன்னீங்களே அதைச் செஞ்சவனை ஏன் சொல்லலைன்னு பஞ்சாயத்தக் கூட்டிட்டாராம். பஞ்சாயத்துல ராசி ஏழுமலையைப் பிடிக்காத ஆளுங்கல்லாம் மூஞ்சியைப் பொத்தி முக்காடு போட்டுக்கிட்டு கூட்டத்தோட கூட்டமா சவுண்ட் விட்டாங்களாம். கூட்டத்துல ஓரமா உக்காந்திருந்த KULA(a)குளா மட்டும் "தொரட்டி செய்யிறதுல இல்லை சூட்சுமம்.. மக்கள் அத தொரத்தித் தொரத்தி வாங்குறதுல தான் இருக்கு"ன்னு தத்துவமா பேசினாராம். அப்புறமா ஊருக்குள்ள எவன் நல்லா கைநாட்டு வைக்கிறான்னு போட்டி வச்சி அவனுக்கெல்லாம் எருது தர்றேன்னு சொன்னோமே என்னய்யா இன்னமும் எருதையும் காணோம் கருதையும் காணோம்னு எவனும் எதிர் கேள்வி கேட்டுறுவான்னு நெனச்சிக்கிட்டு கமுக்கமா உக்காந்துக்கிட்டாராம். "இந்தாளுக்கு இதே வேலையா போச்சுய்யா தொரட்டி நான் தான் செஞ்சேன் நல்லா வெரைட்டியா செஞ்சேன்னு புலம்புறதே பொழப்பு. பிரச்சனையை சட்டுபுட்டுன்னு பேசி முடிங்கய்யா"ன்னு எகிறுனாராம் அன்லக்கிகுக்.

"தொரட்டியை சொன்னா என்னய்யா அத செஞ்சவனை சொன்னா என்னய்யா எப்படின்னாலும் அது ஒன்னுதான்யா. தொரட்டிதான் ராசி ஏழுமலை! ராசி ஏழுமலைதான் தொரட்டி!"ன்னு திருவிளையாடல் வசனத்தைச் சொல்லி பஞ்சாயத்தை பைசல் பண்ணினாங்களாம். இந்தப் பிரச்சனை இப்பக்குள்ள முடியாது எப்பவுமே பொகைஞ்சிக்கிட்டு தான் இருக்கும்னு அவுங்களுக்குள்ளயே பேசிக்கிட்டு கலைஞ்சி போனாங்களாம் ஊர்க்காரங்க.

************************************************************************

கதை புரியாதவுங்க கீழே இருக்கிற சுட்டிகளை படிங்க. புரிஞ்சாலும் புரியும்.

சன் செய்திகள் நிஜம் தொடரில் தமிழ்ப்பதிவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி !
மூன் டிவிக்கு ஒரு காக்கா கதை!
'ப்ளாக்' பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி: சில கருத்துக்கள்.

யாரும் கோவிச்சிக்காதீங்க. ஜஸ்ட் ஃபார் ஃபன். குறிப்பா ராசி சாரி காசி சார் சீரியஸா எடுத்துக்காதீங்க. அப்புறம் என்னையும் 'யாரது? பதிவரா?'ன்னு கேட்டுறக்கூடாது ;) .

Monday, February 11, 2008

குமட்டுல குத்துறது எப்படி?

நாம அடிக்கடி ஒரு வாக்கியத்தைக் கேட்கிறோம். அதுதான் 'குமட்டுலயே குத்திருவேன்'ன்னு. அது என்னாங்க குமடு?? அப்படி எதாவது உறுப்பு நம்ம உடம்பிலே இருக்குதா? அது தான் இல்லை. குமட்டில் குத்துவது எப்படி என்று சொல்லித்தாரேன் கேளுங்க. நீங்களும் உங்கள் வீட்டில் பயன்படுத்தி ஆளுக்குத் தகுந்த மாதிரி பூரிக்கட்டை, தோசைக்கரண்டி கலவரங்களிலிருந்து தப்பியுங்கள்.

1. கையை சொடுக்குபோடுவது போல் வைத்துக் கொள்ளுங்கள். கட்டைவிரல் ஆள்காட்டி விரலுடன் சேர்ந்திருக்க வேண்டும்.
2. கணவன்/மனைவி/காதலன்/காதலி கன்னத்துக்கும் தாடைக்கும் இடையில் சரியாக கையைப் பக்கவாட்டில் வைத்துக் கொண்டு குத்தவும்.
3. எல்லா விரல்களையும் மடக்கிக் கொண்டு குத்து விட்டால் அது குமட்டுக்குத்து அல்ல. கும்மாங்குத்து.

இவ்வளவு தாங்க.

சரி. எப்பல்லாம் இதை பயன்படுத்தலாம்.

கணவனாக இருந்தால் மனைவி அம்மா வீட்டுக்கு ஒரு வாரம் போக வேண்டும் என்று சொன்னால் "உனக்கு எப்பவும் தமாசுதான். நான் இங்கே தனியாக இருந்து கஷ்டப்படுவேனேன்னு எப்படியும் திரும்பி வந்துருவே. அப்புறம் என்ன அம்மா வீடு ஆட்டுக்குட்டி வீடு" என்று இல்லாத பொய்களைச் சொல்லி குமட்டில் குத்தலாம்.

மனைவியாக இருந்தால் கணவனிடம் முக்கியமாக எதாவது நகை வாங்கிக் கேட்கும் போது பயன்படுத்தலாம். "ஏங்க எனக்கு அந்த நெக்லஸ் வாங்கணும்னு பேசிக்கிட்டிருந்தோமே?". உடனே கணவன் "அது எனக்கு போனஸ் வந்தவுடனே வாங்கலாம்" ன்னு சொன்னா "போங்க உங்களுக்கு எப்பவுமே குறும்புதான். போனஸ்தான் போன மாசமே வந்துருச்சே பேங்க் ஸ்டேட்மெண்ட் வீட்டுக்கு வந்தப்போ பார்த்தேன்" என்று சொல்லி பொய் சொன்னதுக்காக குமட்டில் ஒரு குத்து விடலாம்.

காதலியாக இருந்தால் காதலன் "எப்போ நமக்குக் கல்யாணம்"னு கேட்டால் எதுவுமே சொல்லாமல் ஒரு குத்து விட்டாலே போதும். காதலன் புரிந்து கொண்டு அவர் மனசுக்குள்ளேயே சொல்லிக் கொள்வார் "அதானே அதுக்காகவா காதலிக்கிறோம்"னு.

சமீபத்தில் (மெய்யாலுமே கொஞ்ச நாளைக்கு முன்னால) சில வயதான மனிதர்களை அவர்களின் மனைவிமார்கள் குமட்டில் கும்மாங்குத்து குத்தி கொடுமைப்படுத்துவதாகத் தெரிகிறது. ஏன் இப்படியெல்லாம்?? ப்ளீஸ் விட்டுறுங்க.

இதில் உள்குத்து, வெளிக்குத்து எல்லாம் இல்லை. குமட்டுக்குத்து மட்டுமே உள்ளது. ;)

தஞ்சை பெரிய கோவில் பிரம்மாண்டமாய் ! பிரம்மாண்டமாய் !


போன வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராமேஸ்வரம் சென்று வந்தது தான் என் முதல் பதிவாக மலர்ந்தது. அது போல இந்த வருடமும் ஒரு கோவிலுக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்து இதுவரை பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் மட்டுமே பார்த்திருந்த தஞ்சை பெரிய கோவிலுக்கு செல்லவேண்டும் என்று முடிவு செய்தேன்.

கூட வருவதாக சொல்லியிருந்த நண்பன் கடைசி நேரத்தில் கழன்று கொள்ள நான் மட்டும் இராமநாதபுரத்தில் இருந்து தனியே புறப்பட வேண்டியதாயிற்று. ஆறு மணி நேரப் பயணத்திற்குப் பின் தஞ்சை சென்றடையும் போது காலை மணி 11. பிரம்மாண்டமான கோபுரம் வரவேற்க ஆச்சரியத்துடன் உள்ளே சென்றேன்.

பெருவுடையார் சன்னிதி்





சன்னிதியின் கூரையில் ஒரே கல்லில் செய்யப்பட்ட கல் வளையம்



பொன்னியின் செல்வராகிய இராஜராஜ சோழர், சோழர் பெருமையை தமிழுலகம் என்றென்றும் பேசவேண்டும் என்று பெருமிதத்துடன் கட்டிய பிரம்மாண்டக் கோவில். முதலில் சுவாமியைத் தரிசித்து விட்டுப் பின்னர் சுற்றிப் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் முதலில் பிரம்மாண்ட நந்தியையும், பின்னர் பெருவுடையார் (பிரகதீஸ்வரர்) சன்னிதியையும் சென்று தரிசித்தேன். மிகப்பெரிய சிவலிங்கம். எட்டி எட்டிப் பார்த்து தரிசிக்க வேலையே வைக்காமல் வாயிலிலிருந்தே நல்ல தரிசனம் கிடைத்தது. கூட்டமும் குறைவு. சிறப்பு தரிசனம், தர்ம தரிசனம் என்ற பேச்சே இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை. சாமியைப் பார்க்க அடிதடி இருந்தால் தானே இந்த முறைகளெல்லாம் தேவை?

பின்னர் பிரகாரத்தை சுற்றி வந்து விநாயகர், முருகர், குரு, சண்டிகேஸ்வரர் மற்றும் பெரியநாயகி (பிரஹன்நாயகி) சந்நிதிகளுக்கும் சென்று தரிசித்தேன். பின்னர் கோவிலைச் சுற்றி வந்து சிற்பங்களைப் பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் ஆரம்பித்தேன். பெருவுடையார், நந்தி, பெருவுடையார் சன்னிதியின் மேல் கலசம் இருக்கும் பெரிய விமானம் எல்லாமே ஒரே கல்லால் செய்யப்பட்டவை என்று தெரிந்தபோது ஆச்சரியமே மிஞ்சியது.

பெரிய நந்தி



ஒரு கல்வெட்டு



கோவிலின் ஒரு பகுதி



கோவிலின் வெளிச்சுவர், பிரகாரச்சுவர் என எல்லா இடங்களிலும் கல்வெட்டுகள், கல்வெட்டுகள் மட்டுமே. அதனால் தான் தொல்பொருள் ஆய்வுத்துறை வசம் இந்தக் கோவில் இருக்கிறது. இவை அனைத்தும் இராஜராஜசோழன் காலத்தவை. அவரின் ஆட்சிக்கால சிறப்பையும், கொடைகளையும் இதில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். பெருவுடையார் சன்னிதியைச் சுற்றி முழுவதும் அழகழகான சிற்பங்கள் உள்ளன. பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் பெருவுடையார் சன்னிதியின் உட்புறம் இருக்கும் சுவர்களிலும் பெரிய பெரிய தூண்களிலும் சிற்பங்களே இல்லாமல் வெறுமனே இருக்கின்றன. காரணம் தெரியவில்லை. ஒருவேளை சிற்பங்களால் கோபுரத்தைத் தாங்கி நிற்கும் தூண்களின் வலிமை குறையக் கூடும் என்ற காரணமாக இருக்கலாம்.

அழகான சில ஓவியங்கள்





கோவிலின் உள்புறம் நாயன்மார்கள் மற்றும் 108 சிவலிங்கங்கள் இருக்கும் சுற்று மண்டபம் முழுவதும் அழகழகான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நம் ஆட்கள் அதன் அருமை தெரியாமல் தங்கள் பெயர்களையும், I love you என்றெல்லாம் ஓவியங்களின் மேல் கிறுக்கி வைத்திருக்கிறார்கள். :(

பூங்கா மற்றும் நடைபாதை




கோவிலில் கவனித்த இன்னொரு முக்கியமான விசயம் சுத்தம். ஒரு சிறிய காகிதம் கூட இல்லாமல் அவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். அறநிலையத்துறை கவனிக்கவும். அப்புறம் கோவிலின் வெளிச்சுவருக்கும், உள்சுற்றுச் சுவருக்கும் இடையில் அருமையான பூங்கா மற்றும் நடைபாதை. கோவிலின் வெளிச்சுவருக்கு வெளியே ஒரு கோட்டை போன்ற அமைப்பும், ஒரு அகழி போன்ற வாய்க்காலும் காணப்படுகிறது. இது அகழி அல்லது கோவிலின் பின்புறம் பக்கவாட்டில் இருக்கும் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் வரும் வாய்க்காலாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அழகிய குதிரை



அழகான பூதம்



இந்தக் கோவில் ஒரு புராதனச் சின்னம்



கோவில் வரலாறு



தோளில் நார்ப்பையுடனும் கையில் கேமராவுடனும் சுற்றிக் கொண்டிருந்த என்னிடம் "போட்டோ எடுத்துத் தருவீங்களா? எவ்வளவு?" என்று கேட்டு வெறுப்பேற்றினார் ஒரு வேலூர்க்காரர். :). மதியம் 2மணிக்கு எல்லாவற்றையும் பார்த்து விட்டு, வசந்தபவனில் சாப்பிட்டு விட்டு, தஞ்சை வராமல் டேக்கா கொடுத்த நண்பனைப் பார்க்க திருச்சிக்கு பேருந்தில் ஏறினேன்.