Wednesday, September 09, 2009

சாண்டில்யனின் கடல்புறா - 1


கலிங்க நாடு. தற்போதைய ஆந்திராவின் வடபகுதியையும், ஒரிசாவின் தென்பகுதியையும் கொண்ட நாடு. அதன் மன்னன் பீமன். இந்நாட்டின் முக்கியத் துறைமுகம் பாலூர்பெருந்துறை. கலிங்க நாட்டில் தமிழ்மக்களுக்கு போதிய பாதுகாப்பின்மையும், அநீதியும் இழைக்கப்படுகின்றன. ஏனென்றால் கலிங்கத்துக்கும் சோழநாட்டிற்கும் பகை.

எனவே சோழ நாட்டு மன்னன் வீரராஜேந்திரர்(இராஜேந்திர சோழரின் மகன்) சமாதானத்தை வேண்டி கருணாகரன் என்ற இளைய பல்லவனைத் தூதுவனாக அனுப்புகிறார். அவன் கப்பலில் புகாரிலிருந்து பாலூர்பெருந்துறை வருகிறான். துறைமுகத்தில் தன் உயிர் நண்பனும் சோழ-சாளுக்கிய இளவரசனான அநபாயன் (பின்னாளில் முதலாம் குலோத்துங்கச் சோழன்) கலிங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டிடுப்பதை அறிந்து சினம் கொண்டு பீமனுக்கு எதிராக வாய்ச் சண்டையை ஆரம்பிக்க அது வாள்ச்சண்டையில் முடிகிறது.

கலிங்கத்து வீரர்களிடமிருந்து தப்பி வெளிநாட்டவர் தங்கியிருக்கும் விடுதி ஒன்றில் ஒளிந்து கொள்கிறான். கதாநாயகியை அறிமுகம் செய்ய இதை விட ஒரு நல்ல சமயம் வேண்டுமா? அந்த விடுதியில் தங்கியிருப்பவர் ஸ்ரீவிஜயத்தின் இளவரசரான குணவர்மர் மற்றும் அவர் மகள் காஞ்சனா. ஸ்ரீவிஜயம் இன்றைய சுமத்ரா, இந்தோனேசியா. குணவர்மர் அவர் தம்பி ஜெயவர்மனால் வஞ்சிக்கப்பட்டு அரியணையில் ஏறமுடியாமல் கடாரத்த்தின்(மலேசியா) இளவரசராகவே உள்ளார். எனவே வாரிசுச் சண்டையைத் தீர்த்துவைக்க இராஜேந்திரசோழரின் உதவியை நாடி சோழநாடு செல்வதற்காக பாலூரில் ரகசியமாகத் தங்கியிருக்கிறார்.

கலிங்கமும், ஸ்ரீவிஜயமும் நட்பு நாடுகள். எனவே பீமனும், ஜெயவர்மனும் நண்பர்கள் என்பதையும் நினவில் கொள்க. எனவேதான் குணவர்மர் ரகசியமாகத் தங்கியிருக்கிறார். காஞ்சனாவின் அறையில் ஒளிந்திருக்கும் இளையபல்லவனுக்கும், காஞ்சனா, குணவர்மருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. இளையபல்லவனை மோப்பம் பிடித்த கலிங்கவீரர்கள் விடுதிக்கு வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி சோழநாடு ஒற்றனான வணிகன் சேந்தனின் வீட்டிற்குச் செல்கிறான். அதற்குள் அங்கே சேந்தனும் கலிங்கவீரர்களிடம் சிறைப்ப்ட்டிருக்கிறான். இளையபல்லவனும் சிறைப்படுகிறான். நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

சிறையிலிருக்கும் இளையபல்லவனுக்கு அநபாயன் ’அவர்களை எப்படியாவது மீட்பதாகச்’ செய்தி அனுப்புகிறான். சிறையிலிருக்கும் அநபாயர் எப்படித் தன்னைச் சிறைமீட்பார் என யோசிக்கிறான் பல்லவன். எல்லாத் தடைகளையும் மீறி நீதிமன்றத்தில் காஞ்சனாவின் உதவியுடன் அட்டகாசமாக அனைவரையும் சிறைமீட்கிறார் அநபாயன். தப்பிச் செல்லும் அனைவரும் பாலூருக்கு வெளியில் கடற்கரைக் கிராமத்தில் தங்குகிறார்கள். பின்னர் காஞ்சனாவிற்கும் இளையபல்லவனுக்கும் காதல் அரும்புகிறது.


(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.)

சோழநாட்டு இளவரசனும், தூதுவனும், ஒற்றர்களும் தப்பிய செய்தியால் கலிங்கம் முழுவதும் கடும் பாதுகாப்பு இடப்படுகிறது. எனவே தரைவழியாக சோழநாடு செல்வது இயலாத காரியம். கடல்வழியாக மட்டுமே செல்லமுடியும். ஆனால் அங்கும் பாதுகாப்பு பலமாயிருக்குமென்பதால் திட்டமிட்டு சாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

இப்போதுதான் அறிமுகமாகிறான் அமீர். அரபு நாட்டவன். கதையின் மிகமுக்கியமானவன். அநபாயரின் நண்பன். அமீர் அவர்களை எப்படியாவது தப்பவைப்பதாக வாக்குறுதி கொடுத்து, அவர்களைத் தன் குருவும், கொள்ளையன் என்றும், மாவீரன் என்றும் அறியப்பட்ட அகூதா என்னும் சீனத்துக் கடலோடியிடம் அழைத்துச் செல்கிறான். அகூதா பெரும் வணிகர். கப்பல்களுக்குச் சொந்தக்காரர்.

அநபாயர், இளையபல்லவன், குண்வர்மர், காஞ்சனா, சேந்தன் ஆகிய அனைவரும் மாறுவேடத்தில் அகூதாவின் ஊழியர்கள் போல பாலூர்த் துறைமுகத்தில் நுழைந்து அனைத்துக் காவலையும் உடைத்து பூம்புகார் செல்லும் மரக்கலத்தில் ஏறித் தப்பிப்பது என்பது திட்டம். மிகவும் ஆபத்தான திட்டம். இதனால் ஓரிருவர் இறக்கும் வாய்ப்பும் உள்ளது. துறைமுகவாயிலில் இவர்களின் வேடம் கலையவே ஆரம்பிக்கிறது சண்டை. இளையபல்லவன் சண்டையில் பலத்த காயமடைகிறான். அவனால் மரக்கலம் செல்லமுடியாமல் கடற்கரையிலேயே விழுந்துவிடுகிறான். அநபாயர், குணவர்மர், காஞ்சனா மட்டுமே மரக்கலத்தை அடையமுடிகிறது. அமீரும், சேந்தனும் மரக்கலத்தில் ஏறாமல் கடற்கரையின் மற்றொரு பகுதியை நோக்கி ஓடுகிறார்கள். அடுத்து என்ன நடந்தது??????

அதை அடுத்த பாகத்தில் தான் பார்க்கவேண்டும் :)))))


பட்டையைக் கிளப்பும் இப்புதினத்தில் நிறைய அருமையான சரித்திரத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

1) இராஜேந்திரசோழருக்குப் பின்னர் இரண்டாவது முறையாகக் கடாரமும், ஸ்ரீவிஜயமும் சோழர்களால் வெல்லப்பட்டிருக்கிறது.

2) இளையபல்லவன் பின்னாளில் ’கருணாகர தொண்டைமான்’ எனப் பெயர் கொண்டு கலிங்கத்தின் மீது படையெடுத்து கலிங்கத்தை அழிக்கிறான். செயங்கொண்டார் இப்போரை வைத்துத்தான் ‘கலிங்கத்துப்பரணி’ பாடியிருக்கிறார்.

3) அடுத்தது நாடுகளின் பெயர்கள். இந்த ஆயிரம் ஆண்டுகளில் நாடுகளின் பெயர்கள் எவ்வளவு மாறிவிட்டன.
ஸ்ரீவிஜயம் - இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா
கடாரம் - மலேசியா
நக்காவரம் - நிக்கோபார் தீவுகள்
அட்சயமுனை - Banda Aceh (தமிழில் எப்படிச் சொல்வது??)

இன்னும் பல.....

சாண்டில்யன் அவர்கள் எழுதினால் கவர்ச்சி இல்லாமலா??? இதிலும் நிறைய இருக்கிறது. காஞ்சனாதேவியின் அறிமுகத்தில் மூன்று
பக்கங்களில் அவள் அழகு வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இளையபல்லவன், காஞ்சனாதேவி காதல் காட்சிகளும் நிறைய உள்ளன. ;)

ஆமாம் அது என்ன கடல்புறா?? தெரியலங்க... ஒரு வேளை காஞ்சனாதேவியைத்தான் அப்படிச் சொல்கிறாரோ?? (தெரிந்தவர்கள் சொல்லவேண்டாம் :) ) ஒரே ஒரு இடத்தில் மட்டும் இளையபல்லவன், காஞ்சனாதேவியிடம் ‘வீட்டுப்புறா காட்டுபுறா கடல்புறா’ என்கிறான். அவ்வளவு தான்...

விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எழுதப்பட்டிருக்கும் இப்புதினம் சரித்திர ஆர்வம் கொண்ட அனைவரும் வாசிக்கலாம்.

கடல்புறா இணையத்தில் படிக்க - http://kadalpuraaonnet.blogspot.com