Monday, December 31, 2007

தொல்லை கொடுக்கும் கனவுகளும், பல்லி விழுந்த பலன்களும்

எனக்கும் பல சமயங்களில் (இன்னமும்) இரண்டு கனவுகள் தோன்றி என்னைத் தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்துவிடுகின்றன. அதில் முதலாவது நான் நண்பர்களுடன் சேர்ந்து வெண்குழல்வத்தியை ஆழமாக இழுத்து வட்ட வட்டமாகப் புகைவிடுவது போலத் தோன்றுவது. கனவிலேயே, வீட்டிற்குப் போனால் மாட்டிக் கொள்வோமே என்றும் சரி ஹால்ஸ் ஒன்று வாங்கிப்போட்டுக் கொள்ளலாம் என்று யோசனையும் தோன்றும். அவ்வளவுதான் பட்டென முழித்துப் பார்த்தால் நடுநிசியைத் தாண்டியிருக்கும். இதில் முக்கியமான விசயம் என்னன்னா எனக்கு தம்மடிக்கும் பழக்கம் கிடையாது. பொதுவாக சிலர் தாங்கள் விரும்பும் ஒரு விசயம் கனவில் தோன்றும் என்று சொல்லுவார்கள். எனக்கு அப்படியெதுவும் தம்மடிப்பதில் விருப்பமில்லை. இருந்தாலும் ஏன் இந்தக் கனவு வருகிறதுன்னு தெரியவில்லை.

அடுத்தது நான் இன்னமும் பள்ளியில் படிப்பது போலவும் இன்னும் சிறிது நாளில் பரீட்சை நடக்கப்போவது போலவும் "ஐயையோ சமூக அறிவியல் பாடம் இன்னமும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லையே!" என்று மிகவும் கவலைப்படுவது போலவும் தோன்றும். பள்ளியைவிட்டு வெளியேறி பத்து ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இந்தக் கனவும் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் சமூக அறிவியல் எல்லாம் பத்தாம் வகுப்பில்தான். அதிகாலையில் நிகழும் கனவுகள் பலிக்கும் என்று வேறு சொல்வார்கள். இந்தக் கனவுகள் திரும்பத் திரும்ப வருகின்றனவே தவிர வேற ஒன்னும் செய்யலை. பொதுவாக கனவை வெளியில் சொல்லிவிட்டால் பலிக்காது என்று சொல்வார்கள். நான் வெளியில் சொல்லிவிட்டேன். இனியாவது அவை தொல்லை கொடுக்காமல் இருக்குமா எனப் பார்ப்போம்.

அடுத்த தொல்லை இந்தக் கிரகப்பெயர்ச்சிப் பலன்கள். முதலில் குருப்பெயர்ச்சி வந்தது. அடுத்து சனிபெயர்ச்சி. இப்போ புது வரவு ராகு-கேது பெயர்ச்சி. இது போதாதென்று தின, வார, மாத மற்றும் பிறந்தநாள் பலன்கள் வேறு. இதில் எதை நம்புவது எதை விடுவது என்று மகா குழப்பமாக உள்ளது. முதலில் தினத்தந்தியில் வார பலன்கள் மட்டும் படித்து வந்தேன். அதில் அவன் நாலு சொல்லியிருந்தால் அதில் ஒன்று பலித்தது. அப்படி எதுவும் பலிக்கவில்லையென்றாலும் நடந்த சம்பவங்களை ராசிபலன்களுடன் பொருத்திப்பார்க்கும் மனநிலை தோன்றியவுடன் அவற்றைப் படிப்பதை நிறுத்தி விட்டேன். என்னைப் பொறுத்தவரை எந்தப் பலன்களையும் நம்பாமல் சாமியை மட்டும் கும்பிட்டு விட்டு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

இணைய விகடனில் போட்டிருந்த குருப்பெயர்ச்சிப் பலன்களில் சிம்மராசிக்கு எல்லாம் சூப்பர், டக்கர் என்று போட்டிருந்தார்கள். அதற்கு ஒருவர் பின்னூட்டம் போட்டுக் கிழித்திருந்தார். "ஏன்யா இரண்டு மாசம் முன்னாலதான் சனிப்பெயர்ச்சிக்கு மகா கேவலமா பலன்கள் போட்டிருந்த. அடுத்த சனிப்பெயர்ச்சி அடுத்த வருசம் தான். இப்ப என்னன்னா குரு பெயர்ச்சி பலன்ல ஆகா ஓகோ போட்டிருக்கீங்க. இதில் எது உண்மை? எதை நாங்கள் நம்புவது?"ன்னு. அவர் கேட்பதும் சரிதானே? இதற்கு விகடனின் பதில் மவுனம்.

அடுத்து நாள்காட்டியில்‌ ப‌ல்லி விழும் ப‌ல‌ன்னு ஒன்னு போட்டிருக்காங்க. ப‌ல்லி சுவ‌ரில் இருந்து த‌வ‌றி ந‌ம்ம‌ மேல‌ விழுந்துட்டா அதுக்கு என்ன‌ ப‌ல‌ன்னு சொல்லியிருப்பாங்க‌. நான் எட்டாம் வ‌குப்பு ப‌டிக்கும்போது வீட்டில் அம‌ர்ந்து பாடம் ப‌டித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ப‌ல்லி என‌து இட‌து கையில் விழுந்துவிட்ட‌து. அடடா என‌ நினைத்து கையைக் க‌ழுவிவிட்டு நாள்காட்டியைத் திருப்பிப்பார்த்தால் அதில் போட்டிருந்த‌ ப‌ல‌ன் என்ன‌ தெரியுமா ?

இடது கை - ம‌ர‌ண‌ம்.

ஐயையோன்னு ப‌த‌றி அடிச்சி ப‌ல்லி இட‌து கையில்தான் விழுந்த‌தான்னு ந‌ல்லா உறுதி செய்த‌பிற‌கு, ச‌ரி வ‌ல‌து கைக்கு என்ன‌ன்னு பார்த்தா ம‌றுபடியும் அதிர்ச்சி தான்.

வ‌ல‌து கை - ம‌ர‌ண‌ம்.

ஒரு வேளை ப‌ல்லிக்குத்தான் அந்த‌ப் ப‌ல‌னோ என்ன‌மோ? :))) ன்னு மனசைத் தேற்றிக்கொண்டேன். அப்ப‌டின்னாலும் ப‌ல்லி நாள்காட்டியெல்லாம் ப‌டிக்குமா என்ன‌?

நான் நம்பாத மற்றொரு விசயம் வாஸ்து. ஏன் இந்த‌ வாஸ்தெல்லாம் இப்போ வ‌ந்த‌துதானே. அந்த‌க் கால‌த்திலெல்லாம் ம‌னையடி சாஸ்திர‌ம் என்ற‌ திசை அடிப்ப‌டையிலான‌ முறை வைத்துத்தான் பெரிய பெரிய வீடுகள் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். அதே வீடுகளை அதைக் கட்டியவர்களின் மகன்களும், பேரன்களும் இடித்து அலங்கோலமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்துப்படி தென்மேற்குத்திசையில் வீடு உயரமாயிருக்க வேண்டும் என்பதற்காக மொட்டைமாடியில் செங்கற்களை கோபுரம் போல அடுக்கிவைத்திருக்கின்றனர் சிலர். அவை கீழே விழுந்து எவர் மண்டையையாவது உடைத்தால்தான் தெரியும் வாஸ்துவும் அதனால் கிடைக்கும் பலன்களும். வாழ்க்கையில் சில தோல்விகள் வரும்போது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அலைவர்களை இந்த வாஸ்துவாதிகள் கெட்டியாகப் பிடித்து விடுகிறார்கள்.

இவை எல்லாமே சிந்திக்கவைக்கும் விசயங்கள் தான். இன்றளவும் என்னாலும் நம்பமுடியாத சில வியப்பூட்டும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதை அப்புறமா சொல்லுறேன்.

Saturday, December 29, 2007

தமிழ்நாட்டுல பிறந்துட்டு டாஸ்மாக்குன்னா என்னன்னு தெரியலன்னா தூக்குல தொங்கு !

ஆர்குட் ஒரு சமுதாய வலைத்தளம்கிறது ரொம்பவே சரிதான். நாலும் இருந்தாத்தான் சமுதாயம். அதுனாலதான் தமிழ்நாட்டுத் தண்ணி வண்டிங்க எல்லாம் ஒரு குழுமத்தில இருக்காங்க.

அட ஆமாம். டாஸ்மாக்குக்கும் ஒரு குழுமம் இருக்குங்க. அதில் 1001 பேர் உறுப்பினர்கள். செம ரகளையாக இருக்கு குழுமம். "தமிழ்நாட்டுல பிறந்துட்டு டாஸ்மாக்குன்னா என்னன்னு தெரியலன்னா, தூக்குல தொங்கு"ன்னு சொல்றாங்க அதுல.

அதன் தொடர்புடைய குழுமங்கள் எல்லாம் ரம், ஒயின், பீர் குழுமங்கள் தான். இது பத்தாதுன்னு "தண்ணியைப் போட்டுட்டு வீட்டுக்குப் போவீங்களா இல்ல அங்கயே குப்புற விழுந்துருவீங்களா?" "சரக்குக்கு சூப்பர் சைட்டிஷ் எது?" "சிறந்த சரக்கு எது?" "சரக்கடிக்க சிறந்த இடம் எது?"ன்னு கருத்துக்கணிப்பு வேற. பார்க்க படங்கள்.





இக்குழுமத்தின் முகவரி http://www.orkut.com/Community.aspx?cmm=7519409

ம். யாரையும் குறை சொல்ல முடியாது. ஏன்னா சமுதாயம்னா நாலும்தான் இருக்கும்.

Thursday, December 27, 2007

'ஐ' க்குப் பதில் 'அய்' ஏன்?

'ஐ' அல்லது 'ஐ' சேர்ந்த உயிர் மெய் எழுத்துக்களை எழுதும் போது சிலர் 'ஐ'க்குப் பதில் 'அய்' என்று எழுதுகின்றனர்.

உதாரணம்
மையம் - மய்யம்

இது ஏன்? இப்படி எழுதுவது சரி என்று பள்ளியில் தமிழ் இலக்கணப் புத்தகங்களில் படித்ததாகவும் நினைவில்லை. பொதுவாக தூய தமிழில் எழுதுபவர்கள் வடமொழிஎழுத்துக்களைத் தமிழ்ப்படுத்தி எழுதுவர் (உ-ம். ராமதாஸ் - ராமதாசு). அதைப் போல 'ஐ' என்பது தமிழ் எழுத்து என்பது மறந்து போய் வடமொழி எழுத்து என்று நினைத்து ;) இப்படி எழுதுகிறார்களா அல்லது தங்களைப் பிறரிடமிருந்து தனியே இலக்கியவாதிகளாகக் காட்டிக் கொள்ள இப்படி எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. அல்லது ஏற்கனவே எதாவது இலக்கண விதிகள் இருக்கின்றனவா?

சரி இப்படியே போனால் என்னாவாகும் என்பது கீழே.

ஐஸ்வர்யா - அய்ஸ்வர்யா
ஐடியா - அய்டியா
ஐயம் - அய்யம்
பண்ணை- பண்ணய்
கலைஞர் - கலய்ஞர்

நான் யாரய்யும் குறய்சொல்லவில்லய். எனக்குப் புரியவில்லய். தயவு செய்து விளக்கவும். ;)

Thursday, December 20, 2007

ப்ளாக்கரில் other option நீக்கம் ! பதிவர்கள் மகிழ்ச்சி !

மு.கு - சன் செய்திகள் போல வாசிக்கவும்.

ப்ளாக்கரில் other option மூலம் பின்னூட்டம் இடும் முறை நீக்கப்பட்டுவிட்டது. இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழ் வலைப்பதிவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்பு ப்ளாக்கரில் other optionல் பின்னூட்டம் இடுபவரின் பெயரையும், அவரது வலைப்பக்க முகவரியைச் சொல்வதற்கும் (Name, Website) இரண்டு Text boxகள் இருந்தன. இதனால் போலியாகப் பலபதிவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களது பெயரில் அவர்களது வலைத்தளமுகவரியையோ அல்லது அவர்கள் profile எனப்படும் பதிவர்ர் தகவல் பக்கத்தின் முகவரியையோ கொடுத்துப் பின்னூட்ட்ம் போட்டுவிட்டு அந்த பதிவர்களுக்குத் தொல்லையும் சிரமமும் கொடுத்துவந்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்பதிவர்கள் எலிக்குட்டி மற்றும் புகைப்பட சோதனைகளைக் கண்டுபிடித்து உலக ப்ளாக்கர் வரலாற்றில் அழிக்கமுடியாத இடம் பிடித்தனர். இருந்தாலும் இவையெல்லாம் தெரியாத பல புதிய பதிவர்கள் அந்த அப்பாவிப் பதிவர்கள் மேல் கோபம் கொண்டிருந்து அவர்கள் பதிவுகளில் பின்னூட்டம் போடாமல் புறக்கணித்தும், பதிவுகளை Flag செய்தும் வந்தனர்.

இப்போது அந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் வகையிலும், தமிழ் வலைப்பதிவர்களிடையே நல்லுறவை வளர்க்கவும் ப்ளாக்கர் முடிவு செய்து other optionக்குப் பதிலாக இப்போது Nickname என்று ஒரே ஒரு text box மட்டுமே கொடுத்துள்ளது. இதனால் யாரும் யாருடைய வலைப்பக்க முகவரியையோ, பதிவர் தகவல் பக்கத்தின் முகவரியையோ கொடுத்துப் பின்னூட்டம் போட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ் வலைப்பதிவர்கள் சிலர் "இது எப்போதோ செய்திருக்கவேண்டியது. சில வருடங்கள் முன்பே செய்திருந்தால் சில பல ரணகளங்களைத் தவிர்த்திருக்கலாம். எப்படியோ வரவேற்கவேண்டிய ஒன்று" என்றனர். மேலும் சில அனானிகளை அனானியாகத் தொடர்பு கொண்டு கேட்டபோது "தங்கள் புரட்சி தொடரும்" என்றும். "Nickname, Anonymous optionகளைக் கொண்டே பலரையும் கலாய்ப்பது தொடரும்" என்றும் தெரிவித்தனர்.

பொன்வண்டு - ஃபாதர் நியூஸ்

Thursday, December 13, 2007

சிந்திக்க வைத்த 'அன்பே சிவம்'

கடவுள் எல்லோருக்கும் பொதுதான். அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் ஒன்று எனக்கு மிகவும் பிடிக்கும். "காசு கொடுப்பதால் ஒருவனுக்கு ஒரு காரியத்தை நிறைவேற்றிக் கொடுத்தால் அவர் கடவுள் அல்ல. கூலி.". எல்லாம் நம் மனதில் தான் இருக்கிறது. நாம் நல்லது செய்தால் கடவுள் நமக்கும் நல்லது செய்வார் என்று எண்ணுவதே சரி. அதை விடுத்து உண்டியலில் பணம் போடுவதும், குடம் குடமாகப் பாலாபிசேகம் செய்தாலும் அதில் நமது சுயநலமே ஒளிந்திருக்கிறது என்பது அந்தக் கடவுளுக்குத் தெரியாதா என்ன?

சரி அப்போ கடவுள் இல்லையா? இப்படியெல்லாம் திடீர்னு கேட்டா எப்படி? குழந்தையாயிருக்கும் போதே கடவுள் நம்பிக்கையை சொல்லியிருக்கிறார்கள் வீட்டில். எனவே அந்த நம்பிக்கையையும் விடமுடியாது. பகுத்தறிந்து பார்த்தால் கடவுள் எல்லாம் கிடையாது என்றே ஒருபுறம் தோன்றுகிறது. அதையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. ஏனென்றால் சிறு வயதில் ஏற்பட்ட கடவுள் நம்பிக்கை.

சிறுவயதில் ஏற்பட்ட நம்பிக்கையை ஆராய்ந்தால் அதில் பல ஓட்டைகள். வாராவாரம் கோவிலுக்குப் போ, விளக்கேற்றி வழிபடு எதாவது தோஷம் இருந்தால் பரிகாரம் செய் என்றெல்லாம். நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பகுத்தறிவினால் கடவுளை ஆராயும் போது ஒரு கடவுள் எல்லா மக்களையும் சமமாக அல்லவா நினைக்க வேண்டும்? அவர் எதற்கு சிலருக்கு மட்டும் துன்பங்களைத் தருகிறார்? வெள்ளிக்கிழமை எலுமிச்சையில் விளக்கேற்றினால் துன்பங்களை நீக்குவார் என்பதெல்லாம் சும்மா (எலுமிச்சையில் விளக்கேற்றினால் கடவுளுக்கு என்ன கிடைக்கப்போகிறது? அவர் என்ன அவ்வளவு அல்பமா?) என்றெல்லாம் தோன்றுகிறது.

எனவே கடவுள் நம்பிக்கையையும் விடமுடியாமல் பகுத்தறிவையும் விடமுடியாமல் கடவுளுக்குப் புதிய அர்த்தம் கொடுக்கிறோம். அதுதான் "கடவுள் எல்லோரையும் சமமாக நினைக்கிறார். அவருக்கு இந்த சடங்குகள் எல்லாம் தேவையில்லை. நமக்கு நாம் நல்லவனாக இருந்தால் - மனசாட்சிக்கு விரோதமின்றி - கடவுளே நம்மை ஏற்றுக்கொள்வார்" என்று கடவுள் நம்பிக்கையையும், பகுத்தறிவையும் சேர்த்து ஒரு புதிய விளக்கம் தரவேண்டியிருக்கிறது.

நானும் கடவுள் நம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகும் ஒருவன்தான்.

Sunday, December 09, 2007

கவர்ந்திழுத்த கல்கியின் படைப்புகள்



நூலகத்தில் வார, மாத இதழ்கள் போரடிக்க ஆரம்பித்த போது கொஞ்சமாக பிற பதிப்பகங்கள் வெளியிடும் புத்தகங்கள் பக்கம் பார்க்கத் தொடங்கினேன். அப்பொழுது சின்ன சின்னக் கதைகள் அடங்கிய புத்தகங்களை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். அனைத்தும் சிறுவர்களுக்கான நீதிக்கதைகள் தான். பின்னர் பஞ்ச தந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள் என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினேன் :).

ஒருமுறை அப்படிப் புத்தகங்களைத் தேடியபோது மாட்டியது தான் 'அப்புசாமி படம் எடுக்கிறார்'. ஏற்கனவே பாக்கியம் ராமசாமியின் சில கதைகளை வார இதழ்களில் படித்திருந்ததால் இந்தப் புதினத்தை ஆவலுடன் படித்தேன். ஒரே சிரிப்புதான் வீட்டில் நாவலைப் படிக்கும் போது. அப்புசாமி, சீதாப்பாட்டி, ரசகுண்டு அடிக்கும் லூட்டி யப்பப்பா. சரியான நகைச்சுவை நாவல். பின் 'மதன் ஜோக்ஸ்' பாகம்1 & 2 ஆகியவையும் படித்தேன். எல்லாம் தரமான நகைச்சுவை. இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா? என்று எண்ண வைத்தவை. முன்ஜாக்கிரதை முத்தண்ணா, சிரிப்புத்திருடன் சிங்காரவேலு அப்புறம் ஒரு சின்னப்பையன் லூட்டி அடிப்பது (பெயர் மறந்து போச்சு).

இப்படி சின்னப்புள்ளைத்தனமாகவே இருந்த என்னையும் மாற்றியது கல்கியின் எழுத்துக்கள் தான். கல்லூரியில் இளங்கலை படிக்கும் போது விடுமுறைக்கு என் சித்தி வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கே என் சித்தப்பா கல்கியின் 'பொன்னியின் செல்வன்' 6 பாகங்களையும் வர்த்தமானன் பதிப்பகத்தில் இருந்து வாங்கியிருந்தார். பொன்னியின் செல்வன் அருமையான புதினம் என்று பள்ளியில் பாடங்களில் படித்தது. "எதுக்கு சித்தப்பா பொன்னியின் செல்வன் வாங்கியிருக்கீங்க?". "நான் சின்னவனா இருக்கும் போது இதெல்லாம் கிடைக்காதுடா. நூலகத்தில் தான் இருக்கும். அதுவும் ஒரு பாகம் இருந்தால் இன்னொன்னு இருக்காது. அப்படியே கிடைத்தாலும் ஒரு வாரத்தில் திரும்பக் கொடுக்கணும். ரொம்ப ஆசையா இருக்கும். ஆனா படிக்கக் கிடைக்காது. ரொம்ப நல்லா இருக்கும். அதுனாலதான் இப்போ வாங்கியிருக்கேன்"ன்னு என்னிடத்தில் ஆசையைத் தூண்டிவிட்டுட்டார்.

முதலில் என்னப்பா இது சுத்தமான தமிழில் இருக்குன்னு கொஞ்சம் கஷ்டப்பட்டு ரெண்டு பக்கம் படிச்சா சும்மா பிச்சுக்கிட்டு போகுது கதை. வந்தியத்தேவன் வீராணம் ஏரிக்கரையில் குதிரையில் வருவது தொடங்கி ஆழ்வார்க்கடியான், அருள்மொழிவர்மர்(இராஜராஜ சோழர்), குந்தவை, வானதி, பழுவேட்டரையர்கள், நந்தினி, கந்தமாறன், சேந்தன் அமுதன், பூங்குழலி, ஆதித்த கரிகாலன் என்று அனைவரையும் நேரில் பார்த்து, அவர்கள் செய்வதையெல்லாம் நேரில் பார்ப்பது போல ஒரு தோற்றத்தை உண்டு பண்ணியது பொன்னியின் செல்வன். விடாமல் 18 நாட்கள் தொடர்ந்து படித்து நாவலை முடித்தேன். அதற்கப்புறம்? திரும்பவும் இன்னொரு முறை படிக்கத் தொடங்கினேன் :). இன்றளவும் என் மனதில் மட்டுமல்ல தமிழர்களின் மனதில் முதலிடம் எப்போதும் பொன்னியின் செல்வனுக்குத்தான். கல்கி என்ற இப்படிப்பட்ட மாமனிதர் நம்மிடையே வாழ்ந்தார் என்பது தமிழர்க்கு எவ்வளவு பெருமை.

அடுத்துக் கொஞ்சநாள் எதுவும் படிக்க முடியாமலே இருந்தது. பின் வேலை தேடி சென்னைக்கு வந்தபோது என் அண்ணனின் அறையில் என் அண்ணனின் நண்பர் 'பார்த்திபன் கனவு'ம், 'சிவகாமியின் சபதமு'ம் வாங்கிவைத்திருந்தார். ஆனால் நான் படித்தால் என் அண்ணனுக்குக் கோபம் வரும். "ஒழுங்கா வேலை தேடுறதுக்குப் படி" என்பான். எனவே என் அண்ணன் வேலைக்குப் போன பிறகு பார்த்திபன் கனவு எடுத்துப் படிப்பேன். பின்னர் எனக்கும் வேலை கிடைத்த பிறகு தைரியமாக சிவகாமியின் சபதமும் எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். சிறந்த நாவல். ஆனால் பொன்னியின் செல்வன் அளவுக்கு இல்லையோ? என்று எண்ணுவேன். ஒருவேளை சிவகாமியின் சபதத்தை முதலில் படித்திருந்தால் பொன்னியின் செல்வன் சரியில்லையோ? என்று சொல்லியிருக்கக்கூடும் :). அதெல்லாம் சும்மா இதுவும் நல்ல புதினம்தான் என்று கொஞ்சநாள் ஆகவும் புரியத்தொடங்கியது. 'அலை ஓசை' சரித்திர நாவலோ என எண்ணி படிக்க ஆவலுடன் புரட்டிய எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமே. ஆனாலும் முழுவதையும் விரும்பிப் படித்தேன்.

பின்னர் சாண்டில்யனின் 'யவனராணி'யும், 'மன்னன் மகளு'ம் படிக்கக் கிடைத்தன. நல்ல விறுவிறுப்பான நாவல்கள் தான். ஆனால் வர்ணனைகள்? அப்பப்பா அவ்வளவு 'A'. கல்கியின் நாவல்களில் கொஞ்சம் கூட இந்த மாதிரி வர்ணனைகள் இல்லை. அவ்வளவு நல்ல எழுத்தாளர் அவர். இந்த வகையிலும் கல்கியின் மதிப்பு நம்மிடையே உயர்ந்து விடுகிறது.

இப்போது கல்கியின் நாவல்களை PDFல் படிக்கிறேன். காலத்தின் கோலம்? 'கள்வனின் காதலி', 'தியாக பூமி', 'சோலைமலை இளவரசி', 'பொய்மான் கரடு', 'மோகினித்தீவு' மற்றும் சிறுகதைகள் என அனைத்தையும் கணினியில்தான் படித்தேன்.

இந்த முறை புத்தகக் கண்காட்சியில் குறைந்தது ஐந்து, ஆறு புத்தகங்களாவது வாங்கிவிட வேண்டும் என எண்ணியிருக்கிறேன். சுஜாதாவின் 'ஸ்ரீரங்கத்து தேவதை'களில் மனதைப் பறிகொடுத்த நான், இந்த முறை முன்னொரு காலத்தில் தூர்தர்ஷனில் பார்த்த 'என் இனிய இயந்திரா'வும் வாங்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறேன்.

அனைத்து கல்கியின் நாவல்கள் மற்றும் சிறுகதைகளுக்கு இங்கே கிளிக்கவும்.

Friday, December 07, 2007

முகமூடி வீரர் மாயாவி


பள்ளியில் படிக்கும் போதே எனக்கு புத்தகங்கள் படிப்பதில் ரொம்பவே ஆர்வம் இருந்தது. (பாடப் புத்தகங்கள் அல்ல :) ). என் அண்ணன் மட்டும் நூலகத்திற்குச் சென்று வந்து "இன்னிக்கு நான் 'ஜலதீபம்' படித்தேனே. இருபது பக்கம்" என்று சொல்லும் போது தான் எனக்கும் அந்த ஆர்வம் தொற்றியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

என் அண்ணனுக்கும் எனக்கும் அப்பவே பங்காளிச் சண்டை. நான் அவனுடன் சேர்ந்து நூலகத்துக்குப் போறதெல்லாம் நடக்காத காரியம். நான் நூலகத்திற்குத் தனியாகச் சென்றால் நூலகர் அனுமதிக்கவில்லை. நான் சின்னப்பையன் புத்தகங்களைக் கிழித்து விடுவேன் என்று நூலகர் எண்ணியிருப்பார் போல. நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அவர் இல்லாத நேரத்தில் விகடனை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தபோது "டேய் புத்தகத்தை வைடா" என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தால் நூலகர் நிற்கிறார். "அண்ணே!" என்றேன் பயத்துடன். "வைச்சுட்டுப் போடா!" என்று விரட்டியபோது கண்களில் நீர் முட்டியது.

பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் நூலகத்துக்குள்ளேயே நுழைய முடிந்தது. நூலகத்தில் அமர்ந்து சோறு, தண்ணியில்லாமல் வார இதழ்களைப் படித்துக் கொண்டிருப்பேன். பாக்யாவில் கேள்வி-பதில் பகுதியில் பாக்யராஜ் சொல்லியிருக்கும் குட்டிக்கதைகளை விரும்பிப் படிப்பேன். அப்புறம் ராணி காமிக்ஸ். இதில் வரும் முகமூடி வீரர் மாயாவி கதையும், ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் கதையும் மிகவும் பிடிக்கும்.

முகமூடி வீரர் மாயாவி ஆப்பிரிக்காவில் காட்டுக்குள் இருந்து கொண்டு அங்குள்ள விலங்குகளையும், மலைவாழ்மக்ககளையும் காப்பாற்றுவார். அவரது இருப்பிடம் மண்டை ஓட்டுக் குகை. அவருக்குத் துணை ஒரு ஓநாய். அதன் பெயர் மறந்துவிட்டது. காட்டுக்குள்ளே இருந்தாலும் நாட்டில் நடக்கும் எல்லா விசயங்களும் அவருக்குத் தெரியும். மண்டை ஓட்டுக் குகைக்குள் ஒரு பெரிய நூலகம், அவரது முன்னோர்களது கல்லறைகள் எல்லாம் இருக்கும். கொள்ளைக்காரர்களுக்கும் விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கும் அவர் சிம்ம சொப்பனம். அவர் கையில் ஒரு மண்டை ஓடு பொறித்த மோதிரம் அணிந்திருப்பார். அவர் சண்டை போடும் போது எதிராளியின் முகத்தில் அதை வைத்து ஒரு குத்து விடுவார். அவ்வளவுதான் அந்த மண்டைஓட்டுக் குறி அவன் முகத்தில் பதிந்து விடும். அதை யாராலும் அழிக்க முடியாது. எதிராளி தப்பித்தாலும் மண்டை ஓட்டுக் குறியைக் கொண்டு பின்னர் எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் மக்கள். மாயாவிக்கு ஒரு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உண்டு. ஒவ்வொரு மாயாவியும் இறக்கும் போதும் தனது பொறுப்பைத் தனது மகனிடம் விட்டுச் செல்வது வழக்கம். இப்படித்தான் தலைமுறை தலைமுறையாக மாயாவியின் தோற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாயாவியின் அதிரடியிலும், தீமையை எதிர்க்கும் சாகசத்தாலும் நான் அவருக்கு ரசிகனானேன்.

ஜேம்ஸ்பாண்ட் கதைகள் அப்படியே இப்போது வரும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போலத்தான். கொஞ்சம் சாகசம், குடி, கும்மாளம் என்று. கடைசியில் "007 உங்களாலதான் இதையெல்லாம் செய்யமுடியும்" என்ற வசனத்தோடு கதை முடியும்.

பின்னர் கொஞ்ச நாளில் ராணி காமிக்ஸ் பதிப்பு நிறுத்தப்பட்டது. பின் எங்கள் நூலகத்தில் லயன், முத்து காமிக்ஸ் வாங்க ஆரம்பித்தனர். மாயாவியை என் தலைவனாக நினைத்ததாலோ என்னவோ அந்த காமிக்ஸ் புத்தகங்களில் என் மனம் நிலைக்கவில்லை.

அப்புறம் எனக்கு அந்தக் காலகட்டத்தில் (1993-95) ஜூனியர் விகடன் மூலமாகத்தான் அரசியல் அறிமுகம் ஆனது. ஜெயலலிதாவும், அமைச்சர்களும் பண்ணும் அட்டகாசங்கள், வெளிப்படையான ஊழல்களை ஜூவியில் படிக்கும் போது ஒரு வெறியைக் கிளப்பியது. திமுக-தமாகாவை வெளிப்படையாகவே ஆதரித்து வீட்டில் பேசிய போது "இந்த வயசிலேயே என்ன அரசியல்?" என்று திட்டு விழுந்தது. இப்போ அந்த இதெல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைன்னு தெரிஞ்சு போச்சு. :)

இப்படி சின்னப்புள்ளையாத் திரிஞ்ச என்னைப் புதினங்கள் படிக்கத் தூண்டியவர் கல்கி. சரி போதும். இன்னொரு பதிவாப் போட்டுடலாமா?

Friday, November 23, 2007

புரியாததுதான் கடவுளா?

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று நினைத்து நான் குழம்பிய குழம்பல்கள் இங்கே.

சரி. முதலில் கடவுள் இருக்கிறார் என ஏன் நம்பவேண்டும் என்ற காரணங்களைப் பார்ப்போம்.

1. மனித உடலை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது ஒவ்வொரு உறுப்பும்? என்னதான் பரிணாம வளர்ச்சி அது இது என்றாலும் இவ்வளவு கனகச்சிதமாக எப்படி சாத்தியமாகும்?

2. உலகில் எவ்வளவு புராணங்களும் இதிகாசங்களும் இருக்கின்றன. அவை அனைத்தும் பொய் சொல்கின்றனவா? நம் முன்னோர்கள் அந்த அளவு நம்மை ஏமாற்றுவார்களா என்ன?

3. அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்னால் ஓர் இளைஞர் யோகாசனத்தின் மூலம் புவி ஈர்ப்பு விசையை மீறி அந்தரத்தில் நிற்பதைக் காட்டினார்கள். சாதாரண நமக்குத் தெரிந்த யோகாவின் உதவியால் இந்த அதிசயங்களைச் செய்ய முடிகின்றதெனில், நமக்குத் தெரியாத எவ்வளவோ கற்றிருந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். அவர்களால் வானத்தில் கூட பறந்திருக்க முடியும் அல்லவா?

ஏன் கடவுள் இல்லையென நினைக்க வேண்டும்?
1. கடவுள் தான் மனிதனைப் படைத்தார் என்றால் அவர் எல்லா மனிதர்களையும் சமமாக அல்லவா நடத்தவேண்டும். ஏன் சிலர் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் இருந்தால் அவர்களுக்கு உதவலாமே? ஏன் செய்வதில்லை.

மனிதன் என்பவனும் ஒரு விலங்குதான். ஆனால் அவனது வாழ்க்கைமுறை வேறு. அவனிடம் பணமில்லை எனவே கஷ்டப்படுகிறான். எனவே கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லலாம்.

2. கொடுமையான மரணங்கள் ஏன் நடக்கின்றன. உதாரணம் கும்பகோணம் தீ விபத்து, ஏர்வாடி தீ விபத்து. சாதாரண மனிதர்களாலேயே தாங்க முடியாத அந்த நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன? அதே போல் கோவிலுக்குச் சென்று திரும்பும் போதும் எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன? தன்னைத் தரிசிக்க வந்தவனை பத்திரமாக வீடு கொண்டு சேர்ப்பது கடவுளின் பொறுப்பல்லவா?

இவையும் தனிமனிதனின் கவனக்குறைவாலும், தற்செயலாகவும் நிகழ்பவை. எனவே கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

3. இந்து சமயத்தில் (பிற சமயங்களிலும்) ஏன் இவ்வளவு சாதிப்பாகுபாடுகளும் சக மனிதனை இழிவாக சித்தரிக்கும் நிலையும் உள்ளது? கடவுள் இருந்தால் ஒரு வார்த்தை "என் முன் எல்லோரும் சமம். சாதிப் பாகுபாடுகள் கூடாது" என்று சொன்னால் அவரைத் தொழுபவர்கள் கேட்டுக் கொள்வார்களே? ஏன் செய்வதில்லை?

அட போப்பா! கடவுள் என்பதே மனிதன் தோற்றுவித்தது தான். அப்புறம் எப்படி கடவுள் வந்து நேரில் சொல்வார்?

4. நல்லவர்கள் கடைசி வரை கஷ்டப்பட்டு வாழ்ந்து முடிவதும், கெட்டவர்களும் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடிப்பவர்களும் சொகுசாகப் புகழோடு வாழ்வதும் ஏன்?

பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். கடவுளாம் மண்ணாங்கட்டி.

5. உலகத்தில் ஏன் இத்தனை மதங்கள் இருக்கின்றன? எந்தக் கடவுள் உண்மை? இறந்தபிறகு சொர்க்கம், நரகம் என்றல்லாம் சொல்கிறார்கள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவனுக்கு ஒரு சொர்க்கம், கிறிஸ்தவருக்கு தனி சொர்க்கமா?

வெளங்கிரும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விடுத்து கடவுளை நாம் எப்படி define செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பிறகு பார்க்கலாம்.

Wednesday, November 21, 2007

ஓசூர் - ராயக்கோட்டை - தர்மபுரி

பெங்களூரில் இருந்து ஊருக்குச் செல்லும் போது விழாக்காலங்கள் தவிர பிற நாட்களில் திட்டமிட்டெல்லாம் பயணம் செய்வதில்லை. வெள்ளிக்கிழமை மதியம் இங்கிருந்து பெங்களூர் - சேலம் - மதுரை - இராமநாதபுரம் என்று தமிழக அரசுப்பேருந்துகளில் மாறி மாறிப் பயணம் செய்வதுதான் வழக்கம். திரும்பி வருவதும் அவ்வாறே. முதுகு மற்றும் அதன் கீழிருக்கும் பகுதிகள் என்னவாகும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை :) . மாதம் ஒருமுறை இப்படித்தான் பயணம்.

அன்றும் அப்படித்தான் சில்க் போர்டு அருகில் சேலம் பேருந்துக்காக ரொம்ப நேரம் நின்றும் வந்தபாடில்லை. எனவே ஓசூர் சென்று அங்கிருந்து சேலம் சென்று விடலாம் என்றெண்ணி ஓசூர் சென்றேன். அங்கிருந்தும் சேலத்துக்குப் பேருந்து இல்லை. தர்மபுரி வரை செல்லும் பேருந்துகள் மட்டுமே இருந்தன. ஆனால் அவை செல்லும் வழி வழக்கமாக நான் செல்லும் வழி கிடையாது.

வழக்கமாக பெங்களூரிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழி இது தான். பெங்களூர் - ஓசூர் - கிருஷ்ணகிரி - தர்மபுரி - சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் - மதுரை - பரமக்குடி - இராமநாதபுரம். ஸ்ஸ்ஸ்ஸப்பா .. இப்பவே கண்ணைக் கட்டுதே :) . மொத்த பயண நேரம் 14மணி.

ஆனால் நான் ஏறிய பேருந்து கிருஷ்ணகிரி வழியாகச் செல்லாமல் இராயக்கோட்டை, பாலக்கோடு ஆகிய ஊர்கள் வழியே தர்மபுரி செல்வது. முதலில் யோசித்தாலும் சரி புதியதொரு வழியில் சென்றுதான் பார்ப்போமே என்று ஏறிவிட்டேன். வழக்கமாகச் செல்லும் வழியில் ஓசூர் தாண்டியதும் இருபது நிமிடங்கள் டீ குடிக்க நிறுத்தி விடுவார்கள். அதெல்லாம் நமக்குத்தான் தேவையில்லையே ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் :).

இந்த இரண்டு மணி நேரப்பயணத்தில் நான் பார்த்தவை நிறைய. முதலில் சமமான சாலையில் சென்றாலும் ஓசூர் தாண்டியதும் அழகாக மலையில் ஏற்ற இறக்கங்களில் பேருந்து சென்றது. மலையென்றால் கொடைக்கானல் அளவெல்லாம் கிடையாது. சும்மா சின்னகுன்றுகள் தான். இருபுறமும் பசுமையாக செடிகளும் மரங்களும் இருக்க நடுவில் ஏற்ற இறக்கமான சாலையில் பேருந்து விரைந்து சென்றது பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

தமிழகத்தில் என்றுமே மொழிப்பாகுபாடு பார்ப்பது கிடையாது என்பதற்கு இந்த வழியில் இருக்கும் கிராமங்களே சாட்சி. சாலையோர வழிகாட்டிப் பலகைகளில் பெரும்பாலான கிராமங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழ் மற்றும் தெலுங்கிலும், சில கிராமங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் கன்னடத்திலும் எழுதப்பட்டிருக்கின்றன. பள்ளிகள், வங்கிகள் அனைத்திலும் தமிழ், தெலுங்கு அல்லது கன்னடத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

ஓசூர் தமிழ்நாட்டில் இருந்தாலும் அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் தெலுங்குதான் போலும். பேருந்தில் அனைவரும் தெலுங்கில் தான் பேசிக் கொண்டிருந்தனர். அதே போல் நகரப் பேருந்துகளிலும் தமிழ், கன்னடம், தெலுங்கில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.

ஒருமணி நேரம் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் ராயக்கோட்டை தாண்டியதும் காணாமல் போனது. தமிழகத்தின் தேசியமரமான கருவேலமரங்கள் கண்ணுக்குத்தெரிய ஆரம்பித்தன. சரி தான் போங்கப்பா எங்க போனாலும் இந்த உபயோகமில்லாத மரம்தானான்னு தூங்க ஆரம்பிச்சிட்டேன்.

Monday, September 17, 2007

நாமும் பங்கேற்கலாமே 'மதுரைத் திட்டத்தில்' !



வலைப்பதிவர்களில் நிறையப் பேருக்கு மதுரைத் திட்டம்(Project Madurai) பற்றித் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். மதுரைத்திட்டம் என்பது தமிழில் இருக்கும் நூல்களை எல்லாம் மின் தொகுப்பிற்கு மாற்றுவதாகும். அதாவது புத்தகங்களில் இருக்கும் நூல்களைக் கணினியில் படிக்க வகை செய்வதாகும். ஏற்கனவே பல தன்னார்வலர்கள் பங்கேற்று நிறைய நூல்கள் மின் தொகுப்பாக மாற்றம் செய்யப்பட்டுவிட்டன. இப்போது இத்திட்டம் எல்லோரும் பங்கெடுக்கும் வகையில் DP-PM (Distriputed Proof Reading - Project Madurai) என்னும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இதன்மூலம் ஆர்வம் மிக்க எவரும் பங்குகொண்டு நூல்களை மின் தொகுப்பாக மாற்றும் இத்திட்டத்திற்கு உதவலாம். நாம் நேரடியாக தட்டச்சுதல் மற்றும் ஏற்கனவே பிறர் தட்டச்சு செய்த பக்கங்களை சரிபார்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபடலாம்.

இத்திட்டத்தில் பங்கேற்பது மிகவும் சுலபம்.

1. முதலில் http://groups.yahoo.com/group/pmadurai/ என்ற சுட்டிக்குச் சென்று மதுரைத்திட்டம் மடற்குழுவில் உறுப்பினராகுங்கள்.
2. பிறகு http://www.projectmadurai.org.vt.edu - யில் ஒரு பயனர் கணக்கு துவங்க வேண்டும்.
3. பின்னர் தற்போது மின் தொகுப்பாக மாற்றம் செய்யப்படும் நூல்களில் நமக்கு விருப்பமான நூலைத் தெரிவு செய்து அதில் நமது பங்களிப்பாக தட்டச்சு/சரிபார்த்தல் தேர்வு செய்ய வேண்டும்.
4. பின்னர் அந்த நூலின் ஒவ்வொரு பக்கமும் படங்களாகத் தோற்றமளிக்கும். அவற்றைப் பார்த்துத் தட்டச்சு செய்ய வேண்டும்.
5. ஏற்கனவே பிறர் தட்டச்சு செய்த பக்கங்களையும் இதே முறையில் சரிபார்க்கலாம்.

முழுக்க முழுக்க ஒருங்குறியே பயன்படுத்தப்படுகிறது. எ-கலப்பை அல்லது தமிழ்99 தட்டச்சு முறை தெரிந்த எவரும் பங்கேற்று நம்மால் இயன்றதைச் செய்யலாம்.

நாம் ஒரு பக்கத்தைத் தட்டச்சு செய்யும் போது அந்தப் பக்கம் மற்றொரு பயனருக்குத் தோற்றமளிக்காது. ஒரு பக்கம் என்றால் நிறைய இருக்குமோ என எண்ண வேண்டாம். அதிகபட்சம் இருபது முதல் இருபத்தைந்து வரிகளே உள்ளன. ஒரு பக்கம் தட்டச்சு செய்ய 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது. (நான் கொஞ்சம் மெதுவாகத் தட்டச்சுவேன்).

கீழே உள்ள நூல்கள் தற்சமயம் மின் தொகுப்பாக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.



ஒரு நூலின் ஒவ்வொரு பக்கமும் படங்களாகத் தெரியும். நாம் அவற்றைப் பார்த்து தட்டச்சு செய்து சேமிக்க வேண்டும்.


ஒரே சமயத்தில் இரண்டு பேர் ஒரே பக்கத்தைத் தட்டச்சிட முடியாது. கீழே பார்க்கவும்.


மதுரைத்திட்டத்தில் தொகுக்கப்படும் நூல்கள் விக்கிநூல்களிலும் தொகுக்கப்படுகின்றன.

தமிழார்வமிக்க பதிவர்கள் பங்கேற்கலாமே!

ஏற்கனவே மின் தொகுப்பாக மாற்றப்பட்ட நூல்களின் தொகுப்பு இங்கே.

மேலும் விபரங்களுக்கு மதுரைத்திட்டத்தின் வலைப்பதிவைப் பார்க்கவும்.

Thursday, September 13, 2007

ஆர்குட்டில் தமிழ் !




கூகுள் கொஞ்சம் கொஞ்சமாக தனது சேவைகளை பிராந்திய மொழிகளில் மாற்றி வருகிறது. அதன் சமுதாய வலைத்தளமான ஆர்குட்டில் இப்போது எல்லாம் தமிழில் தெரிகிறது. நீங்களும் தமிழில் வேண்டுமானால் 'Settings -> Language -> தமிழ்' தேர்வு செய்யவும். ஆனால் இது தனித்தமிழ் அல்ல. தமிங்கிலம் தான். தனித்தமிழ் வேண்டி கூகுளுக்குத் தெரிவிக்க ஏதேனும் வழி உள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லவும்.




Monday, September 10, 2007

நாகர்கோவில் நண்பர்கள் - 2

கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சிணை கேட்டால் நமக்கு மயக்கம் வரும் அல்லது வயிறெரியும். பின்னே கொஞ்ச நஞ்சமா கொடுக்கிறார்கள். லட்ச,லட்சமா அதுவும் பத்தின் மடங்கில்தான். இது குறித்து என் அறை நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அவனிடம் "அப்புறம் நீதான் நல்லா செட்டில் ஆயாச்சே! பொண்ணு பார்க்கச் சொல்ல வேண்டியதுதான?"ன்னேன்.
"நான் எதுக்கு தேடிப் போகணும். எல்லாம் தானா வரும். இப்போதைக்கு என்னோட மதிப்பு எழுபது லட்ச ரூபாய்."ன்னு சிரிச்சான்.
"என்னது எழுபது லட்சம்?"
"எனக்குக் கிடைக்கும் வரதட்சணை"
"டேய்ய்ய்ய்ய்ய்ய்... அம்புட்டாடா குடுப்பாங்க" நம்பமுடியாமல் கேட்டேன்.
"ஆமா சும்மாவா மாசம் அம்பதாயிரம் சம்பாதிக்கிறோம்ல"
"அதுக்காக எழுபது லட்சம் எவண்டா குடுப்பான். சும்மா கதை விடாதே"
"அடப்போடா.. நான் எதுவுமே கேடக வேண்டியதில்லை. எல்லாம் தானா வரும். முப்பது லட்சம் ரொக்கம். ஒரு நாப்பது லட்சத்துக்கு சொத்து. ஒரு கார். ஒன்றரை கிலோ நகை"

நான் மயங்கிவிட்டேன். இன்னொரு நண்பன் தொடர்ந்தான்.

"என் அக்காவுக்கு நாங்கள் பார்த்தது துபாய் மாப்பிள்ளை. நகை இரண்டு கிலோ. எங்க வாழைத்தோப்பிலும், இரப்பர் தோப்பிலும் ஒரு பகுதி. அதோட மதிப்பு ஐம்பது லட்சம். முப்பது லட்சம் ரொக்கம். இவ்வளவும் கொடுத்தோம்". சோடா குடுத்தால் கூட தெளியாத மயக்கம் வந்துவிட்டது.

தமிழ்நாட்டிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம் என்று சொல்கிறார்கள். படிப்பறிவு அதிகம் இருந்தால் இதெல்லாம் குறையத்தான் வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது.

அடுத்து நான் என் நண்பனிடம் ஒரு பிட்டைப் போட்டேன். "நான் உங்க ஊரில் கல்யாணம் செய்துக்கிட்டா என்னடா குடுப்பாங்க?". "உனக்கெல்லாம் எவன் பொண்ணு குடுப்பான் எங்க ஊருல இருந்து? எங்க பார்த்தாலும் ஏரி,குளம்னு எங்க ஊரு. கண்மாய்க்குள்ளயே ஊத்துத் தோண்டித் தண்ணியைப் பாக்குறவுங்க நீங்க. சான்ஸே இல்லை. அதே மாதிரி, பொண்ணு அல்லது மாப்பிள்ளை பார்த்தால் அது எங்கள் மாவட்டத்துக்குள்ளேயே பார்ப்பார்கள். அதிகபட்சம் பாளையங்கோட்டை வரைதான் எங்க லிமிட்"ன்னு கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

"அதே போல மாப்பிள்ளைகளையெல்லாம் தலையில் தூக்கி வைத்து மரியாதை கொடுப்பார்கள் உங்க ஊரில். இங்கெல்லாம் அப்படியில்லை. அவரும் வீட்டில் ஒரு உறுப்பினர் அவ்வளவுதான். உங்க ஊரில் மாப்பிள்ளை வந்தால் மாமியார் சமையல்கட்டை விட்டு வெளியே வரமாட்டார். இங்கு மாமியார் மாப்பிள்ளையின் முன்னால் கால் மேல் கால் போட்டு பரீட்சைப் பேப்பர் திருத்திக் கொண்டிருப்பார். இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம். ஆனால் நீங்கள் அப்படி எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். இன்னொன்னு சொல்றேன். இரண்டு பசங்க ஒரு வீட்டில் இருந்தால், அதுவும் படித்திருந்தால் அந்தக் குடும்பம் பிற்காலத்தில் கோடீஸ்வரக் குடும்பம்.வரதட்சணை அவ்வளவு வரும்." என்றான் நண்பன்.

அதே போல உறவுமுறைக்குள் திருமணம் என்றால் முகம் சுளிக்கிறார்கள். மாமா மகள், அத்தை(மாமி-ன்னு சொல்லுவார்கள் பேச்சு வழக்கில்) மகனையெல்லாம் திருமணம் செய்யும் வழக்கம் இல்லை. மாமா மகள், அத்தை மகன்களுடன் சகோதர உண்ர்வுடன்தான் பழகுகிறார்கள். அடுத்து இவர்கள் கேரளத்தில் பெண் கொடுப்பதோ, எடுப்பதோ அரிதாம். கேட்டால் அவர்கள் மதிக்கமாட்டார்கள் என்கிறார்கள்.

இவர்கள் இப்படி வரதட்சணை வாங்குவதைப் பார்த்து எரிச்சலாக இருந்தது. அந்த எரிச்சல் இப்படிப் பகல் கொள்ளை அடிக்கிறார்களே என்பதால் வந்ததா அல்லது எனக்கு இப்படியெல்லாம் கிடைக்காதே என்ற பொறாமையால் வந்த வயிற்றெரிச்சாலா என்பது தெரியவில்லை. ;) . சும்மா தமாசுக்கு. வரதட்சணை வாங்குவது கேவலம் என்பதே என் எண்ணம்.

எங்க ஊர் நிலைமையை நினைத்துப் பார்த்தேன். அதிகபடசம் ஒரு லட்சம் குடுப்பார்கள். அதுவும் வம்படியாகக் கேட்டால் தான். ஒரு நடுத்தரக் குடும்பம் என்றால் நாற்பது பவுன் நகை போடுவார்கள். ரொம்பப் பெரிய பணக்காரக் குடும்பம் என்றால் கார் கொடுப்பார்கள். அவ்வளவுதான்.

சரி போதும் வரதட்சணை புராணம்.

என்பீல்ட், புல்லட் போன்ற வண்டிகள் தான் இவர்களின் முதல் காதலிகள். கல்லூரியில் படிக்கும் பெரும்பாலான இந்த ஊர்ப்பசங்களின் கனவு அவைகளாகத் தான் இருக்கின்றன. என்னதான் மலையாளப் படம் பார்த்தாலும், மலையாளம் பேசினாலும் தமிழன் என்ற உணர்வு மேலோங்கியே இருக்கிறது. சந்தேகம் இருந்தால் சென்ற இடுகையின் பின்னூட்டங்களைப் பார்க்கவும். அடுத்த விசயம் இவர்கள் மற்ற மாவட்டத் தமிழர்களை (குறிப்பாக மதுரை) "ஏய் பாண்டிக்காரா" என்று நக்கலுக்குக் கூப்பிடுவார்கள். என்ன தான் மலையாளம் பேசினாலும் இவர்கள் கேரளாவுக்குப் போனால் இவர்களும் 'பாண்டி' தான் மலையாளிகளுக்கு. பாண்டியின் அர்த்தம் என்னன்னு தெரியவில்லை. யாராவது சொல்லுங்கள்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் சில ஊர்களின் பெயர்கள் வித்தியாசமானவை.
'தொளையாவட்டை (எழுதியிருப்பது சரியா?)
களியக்காவிளை
தக்கலை'
முதலிரண்டும் தான் வாய்க்குள் நுழையாமல் பேஜார் செய்தவை. அடுத்துப் பழக்கமாகிவிட்டது. வேறு ஏதாவது ஊர் பெயர் இப்படியிருந்தால் சொல்லுங்கள்.

இங்கு ஊர் சுற்றிப் பார்க்க ஏகப்பட்ட இடங்கள் உள்ளனவாம். எல்லோருக்கும் தெரிந்த திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, விவேகானந்தர் மண்டபம் தவிர நிறைய இடங்கள் உள்ளனவாம். கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஏரிகளும், குளங்களும் நிறையவே காணப்படுமாம். நான் நேரில் பார்த்ததில்லை. நண்பர்கள் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போவதற்குத்தான் நேரமில்லை. போய்ட்டு வந்து அதைப் பற்றியும் எழுதுகிறேன்.

நண்பர் ஜோ அவரது பதிவில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் அழகான புகைப்படங்களைப் போட்டிருக்கிறார். இங்கேயும் போய்ப் பாருங்கள்.

Thursday, September 06, 2007

இணையத்தில் தமிழ் வானொலிகள்

இணையத்தில் தமிழ் வானொலி கேட்க எல்லோருக்குமே விருப்பம் இருக்கும். கீழே உள்ள கோப்பைத் தரவிறக்கி மீடியா பிளேயரிலோ அல்லது வின்ஆம்ப்பில் கேளுங்கள்.

கிட்டத்தட்ட எல்லா இணையத் தமிழ் வானொலிகளின் முகவரிகளும் இந்தக் கோப்பில் உள்ளன.

கோப்புக்கு இங்கே கிளிக்கவும்.

நாகர்கோவில் நண்பர்கள் - 1

நண்பர்கள் எல்லோருக்கும் உண்டு. எனக்குக் கொஞ்சம் அதிகமாகவே உண்டு. பள்ளி, கல்லூரி நண்பர்கள் எல்லோரும் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். நான் இப்பொழுது சொல்லப்போவது என்னுடைய நாகர்கோவில் நண்பர்களைப் பற்றித் தான்.


நாகர்கோவில் என்றொரு ஊர் உண்டு அங்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பது நான் கல்லூரியில் முதுகலை படிக்கும்போது தான் தெரியும். விடுதியில் தங்கிப்படிக்கும் போது என் அறைத் தோழர்கள் மனோ மற்றும் மைக்கேல். இவர்கள் தமிழகத்தின் தென் கடைக்கோடி கன்னியாகுமரி மாவட்டக்காரர்கள். முதன் முதலில் தமிழை வித்தியாசமாகப் பேசக் கேட்டது இவர்களிடம் தான். இளங்கலை அருப்புக்கோட்டையில் படித்ததால் எல்லோரும் மதுரை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்துதான் வந்திருந்தோம். எனவே அங்கு வித்தியாசமான தமிழ் உச்சரிப்பைக் கேட்க முடியவில்லை.

நாகர்கோவில்காரர்கள் வெப்பத்தைத் தாங்கமுடியாதவர்கள். மைக்கேல் எப்போதும் நீர்யானை மாதிரி தண்ணீரில் ஊறுவான். இரண்டு முறை குளிப்பது, ஸ்டடி அவரில் பத்து தடவை பாத்ரூமுக்குப் போய் தண்ணில் விளையாண்டுட்டு வருவது அலும்புவான். கேட்டால் "ஒரே சூடு மக்கா!" என்பான். இவர்கள் தமிழை மலையாளம் கலந்து பேசுவார்கள். அநியாயத்துக்கு ஊர்ப்பெருமை பேசுவார்கள்.

இவர்களையும் வாழைப்பழத்தையும் பிரிக்க முடியாது. ஒரு நாள் கல்லூரி எதிரில் இருக்கும் பெட்டிக்கடையிலிருந்து கொண்டு "மக்கா, இங்க என்ன பழம் கிடைக்குது? எங்க ஊருல எல்லாம் வகைவகையாக் கிடைக்கும். கேட்டியா?" என்றான். "எனக்குத் தெரிஞ்சதெல்லாம் நாட்டுப்பழம், ரஸ்தாளி, பூவன் பழம், பச்சைப்பழம் மட்டும் தான். வாழைப்பழத்துல கூட உங்க ஊர் முன்னால இருக்காடா?"ன்னேன். "ஆமா கேளு" ன்னு ஒரு லிஸ்ட்டே சொன்னான்.

"யாத்தம்பழம்
ரசகதளி
மாவுகதளி
பாளையங்கொட்டை
செந்துளுவன்
மோரிஸ்
மட்டி
சிங்கன்
பேயன்பழம்
வெள்ளைத்துளுவன்
மொந்தம்பழம்
கற்பகவள்ளி
பூங்கதளி"


அசந்துட்டேன். "அப்புறம் இங்க கிடைக்கிற பழமெல்லாம் எங்க ஊருல நாங்க தின்னவே மாட்டோம். இப்பப்பாரு ஒரு மேஜிக். இந்தப் பழத்தோட நுனியில விரலை வச்சு அமுக்குனா பழம் மூணாப் பிரியும் பாரு"ன்னுட்டு அமுக்கிக் காட்டினான் பழம் மூன்றாகப் பிரிந்தது. "அட! வாழைப்பழத்துல இவ்வளவு விசயம் இருக்கா?"ன்னு வாயைப் பிளந்தேன். "எல்லாம் எங்க ஊருல கத்துக்கிட்டது மக்கா!"ன்னான்.

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் பெரும்பாலும் கிறித்தவர்கள் நிறைந்த பகுதி. எல்லோரும் அந்தக் காலத்திலேயே பட்டப்படிப்பை முடித்துவிட்டு பெரும்பாலும் ஆசிரியர் பணியிலும், அரசு வேலையிலும் இருப்பவர்கள். எனவே பிள்ளைகளின் கையில் தாராளமாகப் பணம் புரளும். எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக அசையாத சொத்து இருக்குமாம். மைக்கேல், மனோவுக்கு இரப்பர் தோட்டம் இருக்கிறதாம்.

இவர்கள் பேசும் சில தமிழ் வார்த்தைகள் நமக்கு வித்தியாசமாகத் தெரியும்.
கருக்கு - இளநீர்
தூத்துதல் - வீட்டைப் பெருக்குதல்
சவட்டீருவேன் - மிதிப்பேன்
நாசம் ஆயிரும் - வீணாகிவிடும்
தொட்டெடுத்து - பக்கத்தில்

அப்புறம் எல்லா வாக்கியத்திலும் 'கேட்டியா?' என்று கடைசியாக சேர்த்துக் கொள்வார்கள். "மக்கா! இந்த ஊர் ரொம்ப மோசம் கேட்டியா?" இப்படி. இவர்கள் ஊரிலெல்லாம் தண்ணீர்ப் பஞ்சம் என்பதே கிடையாதாம். எனக்கு ஒரே பொறாமை. இருக்காதே பின்னே. நானெல்லாம் ஒரு குடம் தண்ணீரை அடிபம்பில் அடித்து அதிலே குளித்த ஆளு.


மலையாளத் திரைப்படத்தைப் பற்றி விவரமாக அலசி ஆராய்வார்கள். நமக்கு கொட்டாவி வரும். மோகன்லாலை மிகவும் புகழ்ந்து பேசுவார்கள்.


அடுத்து இந்த மக்களிடம் முக்கியமானது இவர்கள் வாங்கும்/கொடுக்கும் வரதட்சணை.


((அடுத்த பதிவில் சொல்லுறேன்))


பி.கு: நாகர்கோவில்காரங்க யாரும் சண்டைக்கு வந்துராதீங்க.. உங்க ஊரை உயர்வாத்தான் சொல்லியிருக்கேன். அப்படி எதாவது தப்பா இருந்தா அது எங்க ஊரிலெல்லாம் அந்த மாதிரி இல்லையே என்று எனக்கு வந்த பொறாமையே காரணமாயிருக்கும்.

Tuesday, September 04, 2007

அப்பாவியின் போட்டி ! கமெண்ட் போடு் ! டொமைன் வெல்லு !

அப்பாவி தனது பிளாகில் “கமெண்ட் செய்யுங்கள், பரிசு வெல்லுங்கள்” என்ற போட்டியை ஆரம்பித்துள்ளார். இப்போட்டியில் பங்குபெற அவ்ரது இந்த பதிவுக்கு ஜஸ்ட் ஒரு மறுமொழி செய்தால் போதும்.

மேலும் விபரங்கள் அவரது பிளாகில்>>

Monday, August 20, 2007

நாங்கள்லாம் ஜெயில் பறவைங்க .. தெரியுமுல்ல ..

"லஞ்சம் வாங்கினதுக்காக சிறையில் போட்டாலும் நான் திருந்த மாட்டேன். லஞ்சம் வாங்குவது என் பிறப்புரிமை. நாங்கள்லாம் ஜெயில் பறவைங்க .. தெரியுமுல்ல .." என்பது போல் போன வாரம் இராமநாதபுரத்தில் ஒரு அரசு அதிகாரி செய்த செயல் மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் இருக்கும் அரசு அலுவலகங்களில் ஒன்று பொதுப்பணித்துறை - கட்டிடம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம் (Public Works Department - Building Construction and Maintenance). இங்கு செயற்பொறியாளராகப் (Executive Engineer) பணிபுரிபவ(ந்தவ)ர் வள்ளிமுத்து. இராஜபாளையத்துக்காரர். சில வருடங்களாக இராமநாதபுரத்தில் பணிபுரிந்து வருகிறார். பைசா சுத்தமாக பெர்சண்டேஜ் கணக்குப் பண்ணி லஞ்சம் வாங்குவதில் கில்லாடியாம்.

பொதுவாக எல்லா அரசு அலுவலகங்களிலும் ஒப்பந்தகாரர்களுக்குப் பில் பாஸ் பண்ணும் போது, அலுவலர்கள் ஒப்பந்தகாரர் கொடுக்கும் அன்பளிப்புத் தொகையை அவர்களுக்குள் பங்கு போட்டுக் கொள்வது வழக்கம். இவர் கொஞ்சம் பேராசைக்காரர் போல.

அப்படித்தான் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கும் வேலையை குத்தகைக்கு எடுத்த ஒப்பந்தகாரரிடம் 20,000 லஙஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டார். முதலில் ஒப்பந்தகாரரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார். அவர் கொடுக்க மறுக்கவே, பணிகளைத் தாமதமாகச் செய்வதாக சுமார் ஒரு லட்சம் அபராதம் போட்டுவிட்டாராம். பின்னர் மீண்டும் லஞ்சம் கேட்கவே அந்த ஒப்பந்தகாரர் முதலில் 10,000 மட்டும் கொடுத்திருக்கிறார். அதெல்லாம் பத்தாது இன்னும் 10,000 வேணும் என்று அதிகாரி கேட்கவே, பொறுமையிழந்த ஒப்பந்தகாரர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்ய முடிவு செய்துள்ளார்.

இவர் ஏற்கனவே இதே போல் வருவாய்த் துறையில் இரண்டு அதிகாரிகளையும், பொதுப்பணித்துறையில் இரண்டு அதிகாரிகளையும் லஞ்சம் கேட்டதற்காக மாட்டிவிட்டிருக்கிறாராம். தைரியமானவர்தான். ஒப்பந்தகாரர் லஞ்ச

ஒழிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்கும் முன்னர் அந்த அலுவலகத்தில் இருந்த சில நெருக்காமான ஊழியர்களிடம் தான் அதிகாரியை ரெண்டில் ஒன்று பார்க்கப் போவதைத் தெரிவித்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அதிகாரியிடம் பக்குவமாக விசயத்தைச் சொல்லியிருக்கின்றனர். "லஞ்சம் வாங்கீராதீங்க. மாட்டிக்குவீங்க. அந்தாளு மோசமானவர். ஏற்கனவே இது மாதிரிப் பண்ணியிருக்காரு. நீங்க எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில் ஓய்வு பெறப் போகிறீர்கள். நல்ல பேரோட நீங்க போகணும் சார்" என்று கெஞ்சாத குறையாகச் சொல்லியிருக்கின்றனர். "என்னய்யா பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்க. நான் இவன மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கேன்" என்று தெனாவெட்டாகப் பதில் சொல்லியிருக்கிறார்.

மறுநாள் ஒப்பந்தகாரர் 10,000 லஞ்சப் பணத்தைக் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக் கொண்டார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்களிடம் புகார் வந்தவுடன், அவர்கள் கொடுக்கும் பணத்தைத் தான் அந்தக் குறிப்பிட்ட அதிகாரியிடம் கொடுக்க வேண்டுமாம். அந்த ரூபாய் நோட்டுக்களின் எண்களைக் குறித்து வைத்திருப்பராம். அதுபோல ரூபாய் நோட்டுக்களின் மீது ஏதோ பொடி ஒன்றையும் தடவி இருப்பார்களாம். கவரில் இருந்து பணத்தை எடுத்துத் தொட்டவுடன் கையில் ஏதோ வண்ணமாக ஒட்டிக்
கொள்ளுமாம். இதைத் தான் கையும் களவுமாகப் பிடிப்பது என்கிறார்களோ?

பின் காவல்துறை அவர் தங்கியிருந்த அறையைச் சோதனை போட்ட போது கவர் பிரிக்காமல் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சப் பணம் சிக்கியது. பின்னர் பிடிபட்ட அதிகாரியை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது பெயிலில் எடுக்க யாரும் வரவில்லை. அரசு அலுவலர் சங்கமும் ஒதுங்கிக் கொண்டது. அதிகாரிக்கு மிகவும் நெருங்கிய நண்பரான ஒரு உதவிப் பொறியாளர் வந்து பெயிலில் எடுத்து வந்திருக்கிறார்.

இதற்கு அப்புறம்தான் ஹைலைட். வீட்டுக்கு வந்த அதிகாரி சும்மா இருக்காமல் மற்றொரு ஒப்பந்தகாரருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது பில்களையெல்லாம் வீட்டுக்குக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார். அந்தப் பிலகளில் முன்தேதியிட்டுக் கையொப்பமிட்டு அவரிடம் 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறார். :O . ரிஸ்க் எடுக்குறது இவருக்கு ரஸ்க் சாப்புடுறமாதிரி போல.

என்ன தில்லு? என்ன தெனாவெட்டு? கொஞ்சம் கூடக் குற்ற உணர்வு இல்லாமல் கைதாகி வீட்டுக்கு வந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் லஞ்சம் வாங்கியிருக்கிறார். விசயத்தை மோப்பம் பிடித்த காவல் துறை அந்தாளைப் பெயிலில் எடுத்த அதிகாரியைப் பிடித்து ஏறிவிட்டார்களாம். "அவனெல்லாம் பாவம்ன்னு நீ அவனுக்கு பெயில் எடுத்தியே? இப்பப் பாரு பயமேயில்லாம திரும்பவும் லஞ்சம் வாங்கியிருக்கான். நான் திரும்பவும் கேஸ் போட்டால் அது உனக்குத் தான் சிக்கல். ஒழுங்கா இருக்கச் சொல்லு அவனை" என எச்சரித்திருக்கிறார்கள்.

இப்போ அந்த அலுவலகத்தில் இருக்கும் எல்லா அதிகாரிகளும் ஒட்டு மொத்தமாக அருகில் உள்ள ஊர்களுக்கு மாற்றல் கேட்கும் முடிவில் இருக்கிறார்களாம். ஏன்னா பார்க்கிற எல்லோரும் "உங்க EE லஞ்சம் வாங்கி மாட்டிக்கிட்டாராமே? நீங்களும் அந்த மாதிரி வாங்கி மாட்டிக்காதீங்க" என்று அறிவுரை கூறுகிறார்களாம்.

மேலே சொன்னது இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. ஒரு வாரம் விடுப்பு போட்டுட்டு வூட்டுல குந்தினுருந்ததுனால தாமதம்.

Thursday, August 16, 2007

பதிவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? - ஒரு ஜாலி கற்பனை

சும்மா கலாய்ப்புக்குத் தான். நம்ம பதிவர்கள் எல்லோரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தபோது தெரிந்தவை. ரெடி ஸ்டார்ட்.

பாலபாரதி - அடுத்த பதிவர் பட்டறையில் எந்தப் பத்திரிக்கையாளரையும் உப்புமா பேச்சுக்குக் கூப்பிடக்கூடாது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பொன்ஸ் - தன் profileல் போட நல்ல யானை படங்களை நெட்டில் தேடிக்கொண்டிருக்கிறார். ஓடிப்போன எலிக்குட்டியைப் பிடிக்க பல்கலைக்கழகம் முழுவதும் பொறி வைக்கலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறார்.

ரவிசங்கர் - விக்கிபீடியா, விக்சனரி, தமிழ்மணம் என்று மாற்றி மாற்றிப் பார்த்தாலும் ஃபிரஷ்ஷாக இருக்கிறார்.

அபி அப்பா - கிடேசன் பார்க்கில் உட்கார்ந்து கொண்டு 49,50,51 என பின்னூட்டங்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். கால் மணி நேரமாகப் பின்னூட்டம் வராததால் கை நடுக்கம் ஆரம்பிக்கிறது அவருக்கு.

குசும்பன் - அடுத்து யாரைக் கலாய்க்கலாம் என்று லேப்டாப்பில் அர்னால்ட் படத்தையும், பதிவர்களின் படங்களையும் வைத்துக் கொண்டு, யார் தலையை அர்னால்ட் படத்தில் பொருத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். இறுதியில் அபி அப்பாவின் படத்தைத் தேர்வு செய்கிறார்.

லக்கி லுக் - தன் கிழிந்து போன டவுசரை டெய்லர் கடையில் கொடுத்துத் தைத்துக் கொண்டிருக்கிறார். "என்னப்பா இவ்வளவு மோசமாக் கிழிஞ்சிருக்கு" என டெய்லர் கேட்க, "செருப்பால அடிப்பேண்டா, ஒழுங்கா வேலையைப் பாரு" எனப் பதிலளிக்கிறார்.

அய்யனார் - சீரியசாக யோசித்துக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரது கவிதையைப் படித்துக் கொண்டிருக்கும் பதிவர் ஒருவர் தலையைச் சொறிந்து கொண்டிருக்கிறார்.

இளவஞ்சி - பின்நவீனத்துவமாகப் பின்னூட்டம் எழுத, எதிர்த்துக் கேள்வி கேட்டவர் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடுகிறார்.

வ.வா.ச - அடுத்து யாரை அட்லாஸ் வாலிபராகப் போடுவது என்று மெயிலில் டிஸ்கசன் நடந்து கொண்டிருக்கிறது. தலயின் ரெக்கமெண்டுகளை சகட்டுமேனிக்கு ரிஜக்ட் செய்கிறார்கள் அப்ரசண்டுகள்.

கண்மணி - டீச்சர் எப்படா கேப்பு கிடைக்கும், கும்மியடிக்கலாம் என்று மைக்ராஸ்கோப்பினால் தமிழ்மணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்பல்லாம் அவருக்கு 'புலி'யோதரை .. சாரி .. புளியோதரை-ன்னாலே அலர்ஜியாம் !

செந்தழல் ரவி - கொரியாவில் எடுத்த பிகர் படங்களை லேப்டாப்பில் பார்த்துப் பெருமூச்சு விடுகிறார்.

டோண்டு - சமீபத்தில் 1970ல் தான் பிறந்தநாள் கொண்டாடியதைப் பற்றிப் பதிவெழுத வேண்டும் என்று நினைக்கிறார்.

'டெக்' தீபா - மேடம் பிளாக்கிங்கில் PHD வாங்கிவிட வேண்டுமென்று கொலைவெறியோடு ஜாவா ஸ்கிரிப்ட் கோட் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

இராம் & இம்சையரசி - என்னோட சங்கம் தான் பெருசு என்று மாற்றி மாற்றிப் பின்னூட்டங்களில் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஓசை செல்லா - அவரது வீட்டுக்குள் இருந்து ஊ ஆ என சத்தம் வருகிறது. வெள்ளை நிற உடையில் கராத்தே பழகிக் கொண்டு இருக்கிறார். அதைத் தனது கேமராவில் பதிவும் செய்கிறார்.

மாலன் - பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட இனிமேல் எடுக்கக் கூடாது என்று துண்டைப் போட்டுத் தாண்டி சபதம் செய்கிறார்.

"போடுவார் மொக்கை என்றென்றும் அஃதிலார்
பதிவரல்லார் மொக்கை போடாதவர்" என்று ஒருவர் டைப்படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் பின் மண்டையில் பொளேர் என்று ஒரு அடி விழுகிறது. "what are you doing? Always reading blogs and typing in tamil. First I will tell the admin to block this blogger". அடி விழுந்தது எனக்குத்தான். கொடுத்தவர் என் மேனேஜர்.

Monday, August 13, 2007

இராமேஸ்வரம்-மானாமதுரை அகலரயில்பாதை துவக்கவிழா! மக்கள் உற்சாகம்! - வீடியோ மற்றும் படங்கள்


பணிகள் முடிவடைந்தும் நான்கு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த இராமேஸ்வரம்-மானாமதுரை அகலரயில் பாதை அர்ப்பணிப்பு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. குறிப்பாக இராமநாதபுரத்தில் ஒரு வாரமாக மிகவும் எதிர்பார்க்கப்பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் இரயிலை வரவேற்கத் தயாரானார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாதலால் இராமநாதபுரம் இரயில் நிலையம் முழுவதும் ஒரே கூட்டம். மக்கள் மாலை 4 மணி முதல் இரயிலைப் பார்க்க வந்து குவிந்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்ததால் சில இளசுகள் பெண்கள் இருக்குமிடத்திற்கு சென்று "இரயில் வந்துருச்சு.. இரயில் வந்துருச்சு.. " என்று கூவி விட்டு எஸ்கேப் ஆவதும், பெண்கள் ஓடிச் சென்று பார்த்துவிட்டு அசடு வழிந்து திரும்பிக் கொண்டுமிருந்தனர்.

பின்னர் இரயில் இராமேஸ்வரத்திலிருந்து மாலை 5:00 மணிக்குப் புறப்பட்டு சரியாக 6:15 மணியளவில் இராமநாதபுரம் வந்தடைந்தது. மக்களின் கொண்டாட்டத்துக்கு அளவேயில்லை. இதுவரை இரயிலையே பார்க்காதவர்கள் போல ஒரே அமர்க்களம். கட்சிக்காரர்கள் யாரும் இல்லாததால் தொல்லையில்லாமல் இருந்தது. எல்லோரும் மதுரைக்கு சோனியாவையும், கருணாநிதியையும் பார்க்க சென்று விட்டனர். இல்லையென்றால் வாழ்க கோசமும், தள்ளு முள்ளும் இருந்திருக்கும்.

ஏற்கனவே ஐந்து முறை ஒத்திப் போடப்பட்டு, ஆறாவது முறையாகத் திட்டமிடப்பட்டு முடிந்திருக்கிறது. இப்போதைக்கு சேது எக்ஸ்பிரஸ் மட்டும் மதுரை வழியாக சென்னைக்குத் தற்காலிகமாகச் செல்கிறது. திருச்சி-காரைக்குடி-மானாமதுரை அகலப்பாதை பணிகள் முடிந்ததும் வழக்கமான வழியில் செல்லும். மேலும் மதுரைக்கு இரண்டு பாசஞ்சர் இரயில்களும் விடப்பட்டுள்ளன. கருணாநிதி, சோனியா, லல்லு பிரசாத் போன்றோர் மதுரையிலிருந்து இரயிலைத் துவக்கி வைத்தார்கள்.

இந்த இரயில் துவக்கவிழாவிற்குத் தலைவர்களை அழைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டதாம் இரயில்வே அதிகாரிகளுக்கு. முதலில் ஏப்ரல் 1ல் (சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்)துவக்கவிழா இருக்கும் என இணை அமைச்சர் வேலு தெரிவித்தார். இப்போது ஆகஸ்ட் ஆகிவிட்டது.

வதந்திகளுக்கும் பஞ்சம் இல்லை. அப்துல் கலாம் வருகிறார் என்றார்கள். சட்டமன்றப் பொன்விழாவில அவர் கலந்து கொள்ளாததால், கருணாநிதி அப்துல் கலாம் வந்தால் தான் அந்த விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் என்று சொன்னதாகவும், இது தெரிந்து கலாம் விழாவைத் தவிர்த்து விட்டதாகவும், பின் சோனியா ஒப்புதல் பெற்று இராமேஸ்வரத்தில் ஏற்பாடுகளைச் செய்து விட்டு, பின்னர் பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று சொல்லப்பட்டாலும், 'இராமேஸ்வரம் சென்டிமென்ட்' - வந்தால் பதவி போய்விடுமாம் - காரணமாக மதுரைக்கு விழா மாற்றப்பட்டதாகவும் சொன்னார்கள். நல்லவேளை இவர்கள் யாரும் இராமேஸ்வரம் வரவில்லை. நகரம் தப்பித்தது.

134கிமீ தொலைவுள்ள ஒரு அகலப்பாதை திறப்புவிழாவுக்கு இவ்வளவு தடபுடல் தேவையா? இராமேஸ்வரம் வராமல் மதுரையிலிருந்து இரயிலைத் துவக்குவதற்கு, டெல்லியிலிருந்தே அதைச் செய்திருக்கலாம். எது எப்படியோ இரயில் வந்தாச்சு.

நம்ம ஊர் மக்கள் எத்தனையோ பேர் துவக்கவிழாவைப் பார்க்கமுடியாமல் போயிருக்கலாம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம். அவர்களுக்காக நான் எடுத்த வீடியோவும், சில படங்களும் கீழே. பார்த்து மகிழுங்கள்.


இராமேஸ்வரத்திலுருந்து இராமநாதபுரம் வரும் இரயிலை உற்சாகக் குரலெழுப்பி வரவேற்கும் மக்கள்



இரயில் இராமநாதபுரத்திலுருந்து மதுரை கிளம்புகிறது



புதிதாகக் கட்டப்பட்ட இராமநாதபுரம் இரயில் நிலையம்


இரயிலை வரவேற்கக் கூடியிருந்த மக்கள் கூட்டம்

























Wednesday, August 08, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 5


தொடர் முடிந்து திரை போடுற நேரம் வந்தாச்சு. எனவே இப்பதிவில் சில பொதுவான விசயங்களை மட்டும் சொல்லிடுறேன். போன பதிவில் என் அனுபவத்தில் ஒரு வங்கியின் ஏமாற்று வேலையையும், ஒரு வங்கியின் நல்ல மனசையும் பற்றி சொல்வதாகச் சொல்லியிருந்தேன்.

என்னிடம் சுமார் எட்டு வங்கிகளின் கடன் அட்டைகள் உள்ளன. அதில் ஏபிஎன் ஆம்ரோ வங்கியின் அட்டையும் ஒன்று. அதை நான் உபயோகிப்பதில்லை. ஆனால் முதல் மாதம் பில்லில் 150 ரூபாய் செலுத்தவேண்டும் என்று போட்டிருந்தார்கள். நான் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது "அது இன்சூரன்ஸ் சார். நீங்கள் கட்டுறதுன்னா கட்டலாம். இல்லைன்னா தேவையில்லை" என்றனர். எதற்கு இன்சூரன்ஸ்? அதை எதற்கு இவர்கள் பில்லில் போடுகின்றனர்? ஒருவேளை கட்டினால் எப்படி அந்தப் பணத்தைத் திரும்ப வாங்குவது? நான் எந்த இன்சூரன்ஸும் கட்டுவதாக அட்டைக்கு விண்ணப்பித்திருந்த போது குறிப்பிடவில்லையே? என நான் கேட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. அந்த மாதம் நான் அட்டையை உபயோகிக்காததால் நான் சுலபமாக பில்லில் அந்த 150ரூபாய் விசயத்தைக் கண்டுபிடித்துவிட்டேன். இப்போ ஒரு 10,15 முறை அட்டையை உபயோகித்துப் பொருள்கள் வாங்கியிருந்தால் பில்லில் அந்த 150ரூபாயை இன்சூரன்ஸை நாம் சரியாகக் கண்டுபிடிப்பது கடினம் தான். என்னைப் பொறுத்தவரை இது அந்த வங்கியின் ஏமாற்று வேலையே!

அப்புறம் நான் ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையும் வைத்திருக்கிறேன். எனது சேமிப்புக் கணக்கு அந்த வங்கியில் இருந்ததால் முதலில் என் அனுமதி பெறாமலேயே எனக்கு ஒரு கடன் அட்டையை அனுப்பிவிட்டார்கள். கடுப்பில் ரொம்ப நாள் அதை உபயோகிக்காமலேயே வைத்திருந்தேன். பின்னர் சில மாதங்கள் கழித்து 1000 ரூபாய்க்கு அந்த அட்டையை உபயோகித்துப் பொருள் வாங்கினால் ஒரு வெள்ளி விளக்கு (Silver Diya) பரிசு என்று தூண்டில் போட்டனர். நானும் 1000 ரூபாய்க்கு மொபைல் ரீசார்ஜ் செய்து விட்டேன். சரியாக அடுத்த மாதம் ஒரு சிறிய வெள்ளி விளக்கு பார்சலில் அனுப்பிவிட்டனர். என்ன முதலில் படத்தில் பெரியதாகப் போட்டிருந்தனர். வந்திருந்தது அதில் கால்வாசிதான். பின்னர் ஒருதடவை பில் கட்ட மறந்துபோனதால் Late Fee என்று சுமார் 400 ரூபாய் போட்டு விட்டார்கள். தொடர்பு கொண்டு பேசியதும் Genuine Customer(?!) என்பதால் அதை விலக்கிவிட்டனர். எனது கடன் அட்டை வாழ்வில் நான் இதுவரை Late Fee கட்டியதில்லை எனற பெருமையைக் காப்பாற்றிக் கொடுத்தது அந்த வங்கி. அதற்காக நான் அந்த வங்கி நல்ல வங்கி என்று கூறவில்லை. எனது நண்பர்கள் சிலர் அந்த வங்கியைப் பற்றிக் குறைகளும் கூறுகின்றனர்.



அடுத்து HSBC, CITI, HDFC, ICICI, DEUTSCHE, ABN AMRO, STANDARD CHARTED, SBI. இந்த வங்கிகளின் கடன் அட்டைகள் அனைத்தும் நான் வைத்திருக்கிறேன். இவை போக Add-on என்ற பெயரில் வந்து சேர்ந்த அட்டைகளும் வேறு உள்ளன.அதனால் இந்த அட்டைகளை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஒரு வீடு கட்டலாம் என முடிவு செய்து பெவிகால் மட்டும் வாங்கி அந்த அட்டைகளை ஒட்டி ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். இன்னும் இரண்டு அட்டைகள் தேவை கூரை போடுவதற்கு. வீடு கட்டி முடிந்தவுடன் சொல்கிறேன். பால் காய்ச்சும் போது எல்லோரும் கண்டிப்பாக வரவேண்டும். :)

(முற்றும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 4
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

Thursday, August 02, 2007

தமிழக அரசுப் பேருந்துகளில் பட்டையைக் கிளப்பும் 'போக்கிரி' !




கடந்த வாரம் ஊருக்குப் போகும் போதும், திரும்பி வரும் போதும் ஐந்து முறை பேருந்தில் பயணம் செய்ததில் மூன்று முறை 'போக்கிரி' படத்தைப் பேருந்துகளில் பார்க்க நேர்ந்தது.முதலில் சேலத்திலிருந்து மதுரை வரும் போதும், பின்னர் திரும்பும் போது இராமநாதபுரத்திலிருந்து மதுரை வரும் போதும், பின் மதுரை-ஓசூர் பேருந்திலும் பார்க்க வேண்டிய நிலை. இது போதாதென்று உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் ஞாயிறன்று மதியம் சிறப்புப் படமாக ஒளிபரப்பி மகிழ்வித்தார்கள்.

மதுரை-ஓசூர் பேருந்தில் மக்களின் ஏகோபித்த வேண்டுகோளுக்கிணங்க கொஞ்ச நேரத்தில் படம் நிறுத்தப்பட்டது. ஏனென்றால் எல்லோரும் சொன்ன காரணம் "எத்தனை தடவைங்க இந்தப் படத்தைப் பார்ப்பது?. எல்லா பஸ்ஸிலும் இதைத் தான் போடுறாங்க".

ம். சரி. ஏதோ நமக்கு லாபம். நான் இதுவரை போக்கிரி படம் பார்க்கவில்லை. நான் கடைசியாக திரையரங்கில் பார்த்த விஜய் படம் 'காதலுக்கு மரியாதை'. மத்ததெல்லாம் பைசா செலவில்லாமல் உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் அல்லது இப்படி பேருந்துகளில் பார்த்தது தான்.

படம் பார்க்கும் போது 'லொள்ளு சபாவின் பேக்கிரி' வேறு ஞாபகத்திற்கு வந்து சீரியஸ் காட்சிகளிலும் சிரிப்பை வரவழைத்தது. தலைப்பிலிருந்து தொடங்குது இவர்கள் அட்டகாசம். 'பேக்கிரி - 100% ஒன்னுமில்ல'. படத்தை இவர்கள் நக்கலடிக்கவில்லை. ஐயோ பாவம் விஜய்யைத்தான்.

லொள்ளு சபாவின் பேக்கிரியில் சில காட்சிகள்.

ஜீவா (விஜய்) : ஏண்ணா! அந்தக் காலம் நம்பியார், அசோகன் படத்தில தான் பொம்பளைகளை வச்சு வில்லத்தனம் பண்ணுவாங்க. நீங்க என்னடானா இப்பவும் அதே மாதிரி பண்றீங்க?
சாமிநாதன் (குரு) : நீ கூடத்தான் ரொம்ப வருசமா ஒரே மாதிரி நடிச்சுக்கிட்டிருக்க.. நாங்க எதாவது சொல்றமா? வந்தா வந்த வேலைய மட்டும் பாரு!


ஜீவா அலிபாயைப் பார்க்க நடந்து வருகிறார்.
சேச்சு (அலிபாய்) : என்னடா, தமிழ், தமிழ்ன்னு ஓவரா பில்டப் குடுத்தீங்க .. சப்பையா நடந்து வர்றான்.
ஜீவா (விஜய்) : அண்ணா! பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லாததால அப்புடி இருக்குங்கண்ணா! இப்போப் பாருங்கண்ணா .. பேக் கிரவுண்ட் மியூசிக்கோட எவ்வளவு பில்டப்பா வர்றேன்னு ..
(பேக் கிரவுண்ட் மியூசிக்குடன் ஸ்டைல் பண்ணிக் கொண்டே வருகிறார் ஜீவா)
சேச்சு (அலிபாய்) : புரிஞ்சிபோச்சு. பேக்கிரவுண்ட் மியூசிக், எபெக்ட் எல்லாம் இருந்தாத் தான் நீ தமிழு.. இல்லன்னா டுமிலு.


ஜீவாவை அடிக்க வில்லன்கள் வருகிறார்கள்.
ஜீவா (விஜய்) : நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன்
வில்லன் 1 : டேய்! உன் பேச்சை நீயே கேக்கலன்னா அடுத்தவன் எப்படிடா கேப்பான்?
வில்லன் 2 : அவ்வளவு கேவலமா பஞ்ச் டயலாக் பேசுறாண்ணே!


அப்புறம் விஜய் சண்டை போடும் போதும், பாடல் காட்சிகளிலும் வரும் போது, திரையரங்கில் ஆடியன்ஸ் தூங்குவது போலக் காட்டுவார்கள். விஜய் 'ஆடுங்கடா என்ன சுத்தி' பாட்டு பாடும் போது திரையரங்கில் எல்லோரும் எழுந்து வெளியே போவார்கள்.

ஜீவா : அண்ணா ! அண்ணா ! எங்கண்ணா போறீங்க?
பார்வையாளர் : இப்பத்தான் சண்டையை முடிச்ச.. அடுத்து எப்புடியும் பாட்டுத் தான். அதுக்குள்ள போய் ஒரு தம் போட்டுட்டு வந்துடுறோம்.
ஜீவா : அண்ணா ! அண்ணா ! இருங்கண்ணா ..
பார்வையாளர் : இருக்க முடியலன்னுதாண்டா போறோம்.. புரிஞ்சிக்கடா ..
ஜீவா : அண்ணா ! அண்ணா ! ப்ளீஸ்ண்ணா ..
பார்வையாளர் : என்னப்பா இந்தப் பையன் இந்த மாதிரி தொல்லை பண்றான். எல்லாரும் உக்காருங்கப்பா !
(எல்லோரும் தூங்குகிறார்கள்)

ஜீவா ஆடிப்பாடுகிறார்.

பார்வையாளர் : நிறுத்து.. நிறுத்து.. போன படத்துலயும் இந்த மாதிரி தான் பாட்டு பாடுன.. இந்த படத்துலயும் அதே பாட்டு தான் பாடுற.. ஏன் எப்பவுமே ஒரே மாதிரி பண்ற?
ஜீவா : எந்த பாட்டுன்னா?
பார்வையாளர் : எந்தப் பாட்டா? (சிவகாசியின் 'நீ எந்த ஊரு நான் எந்த ஊரு' பாடலைப் பாடுகிறார்)
ஜீவா : மெட்டு ஒன்னுதாண்ணா.. ஆனா பாட்டு வரியெல்லாம் வேற மாதிரி இருக்கில்ல?
பார்வையாளர் : டேய்! இதுக்குத் தாண்டா அப்பவே எந்திருச்சி வெளிய போறோம்னு சொன்னோம். நீ தாண்டா வலுக்கட்டாயமா எங்கள உக்காரச் சொன்ன..
ஜீவா : நீங்க போறதுன்னா போங்கண்ணா! நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டன்னா என் பேச்சை நானே கேக்க மாட்டேன். ஆடி முடிச்சிட்டுத் தான் விடுவேன்.
பார்வையாளர் : நீ ஆடுறதுன்னா ஆடு. எல்லாரும் தூங்குறது தூங்குறதுதான்.

இப்படி ஒரே ரகளை தான் பேக்கிரியில்.

அடடா! என்னமோ சொல்ல வந்து என்னமோ ஆகிருச்சே! உள்ளூர்த் தொலைக்காட்சியை விடுங்கள். பேருந்துகள் அதுவும் அரசுப் பேருந்துகளில் திருட்டு விசிடியில் என்ன தைரியத்தில் ஒரு புதுப் படத்தை ஒளிபரப்புகின்றனர் என்று தெரியவில்லை. ஒரு வேளை கலைஞர் டிவிக்கு 'போக்கிரி' படத்தின் ரைட்ஸ் எதுவும் கிடைக்கவில்லையோ என்னவோ? எது எப்படியோ அடுத்து சிவாஜி படத்தையும் இப்படி பேருந்துகளில் ஒளிபரப்பினால் ஒரு 50 ரூபாய் லாபம்.

லொள்ளு சபா பேக்கிரி YouTubeலும் இருக்கு. கொஞ்சம் சைடுல பாருங்கள்.

Wednesday, August 01, 2007

உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தி !

உலகம் முழுவதும் உள்ள புத்தக ஆர்வலர்களுக்கு ஓர் நற்செய்தி. மின் தொகுப்பினால் ஆன புத்தகங்களின் கண்காட்சி http://worldebookfair.com/ என்ற இணைய தளத்தில் உள்ளது. கட்டற்ற (No Copyrights) சுமார் 3,30,000 புத்தகங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருப்பதாக இந்த இணைய தளம் கூறுகிறது. 100க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ள புத்தகங்கள் இங்கு தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கணினி சம்பந்தமான புத்தகங்கள் இங்கே உள்ளன. http://worldebookfair.com/Technical_eBook_Colleciton.htm

தமிழ் மின் தொகுப்புப் புத்தகங்களும் இந்த இணைய தளத்தில் உள்ளன. அந்த தளத்தில் தேடினால் கிடைக்கின்றன. இவை அனைத்தும் மதுரை திட்டத்தில் தொகுக்கப்பட்டவையே.

மேலும் தமிழ் மின் தொகுப்பிலான புத்தகங்களை 'மதுரைத் திட்ட'த்தின் இணைய தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அந்த தளத்தின் சுட்டி கீழே.

http://www.tamil.net/projectmadurai/akaram_uni.html

'பூங்கா'வில் ஏடிஎம் தொடர் - தமிழ்மணத்திற்கு நன்றி

எனது ஏடிஎம் தொடர்பான இடுகைகள் இந்த வாரம் பூங்காவில் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்மணத்திற்கும், பூங்காவிற்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

http://poongaa.com/content/view/1992/1/

Tuesday, July 31, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 4

ஏடிஎம் பற்றிக் கொஞ்சம் தெளிவாகவே பார்த்தாச்சு. அடுத்து EDC (Electornic Data Capture Machine) எனப்படும் இயந்திரம் எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போம்.

EDC என்பது வேறொன்னும்மில்லங்க. நாம கடையில் சாமான் வாங்கும் போது நமது அட்டையை ஒரு இயந்திரத்தில் தேய்க்கிறார்களே அந்த இயந்திரம் தான். இதுவும் ஏடிஎம் போல Switch -உடன் தொடர்பு கொண்டிருக்கும். நாம் அட்டையைத் தேய்த்தவுடன் தொலைபேசி ஊடகத்தின் வாயிலாக வங்கியைத் தொடர்பு கொண்டு தகவலை வாங்கித் தரும். Telephone network இந்த மாதிரியான Data Transferக்கும் பயன்படுகிறது.

இப்போ திநகரில் இருக்கும் கடைகள் எல்லாவற்றிலும் கண்டிப்பாக ஒரு EDCயாவது இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் EDCயெல்லாம் NAC(Network Access Controller) எனப்படும் பெட்டியுடன் இணைந்திருக்கும். ஒவ்வொரு வங்கியும் NAC எனப்படும் பெட்டியை ஒவ்வொரு பகுதி அல்லது ஊருக்கும் வைத்திருப்பார்கள். எப்படின்னா ஒவ்வொரு NACக்கிற்கும் ஒரு தொலைபேசி எண் இருக்கும். அந்த NACக்கின் தொலைபேசி எண் EDCயில் பதிவு செய்யப்பட்டிருக்கும். நாம் அட்டையை EDCயில் தேய்க்கும் போது அது அந்த NACக்கினுடைய எண்ணுக்கு டயல் செய்யும். பின்னர் EDCயானது ஏடிஎம் போலவே ஒரு தகவலை(Request Message) NAC வழியாக Switchக்கு அனுப்பி வங்கியிலிருந்து தகவலைப் (Response Message) பெற்றவுடன் Charge Slip எனப்படும் ரசீதினைத் தரும்.

மேலதிகத் தகவலுக்குப் படத்தைப் பார்க்கவும்.



சரி. அடுத்து கடன் அட்டைகளை வைத்து என்ன செய்யலாம், செய்யக்கூடாதுன்னு பார்ப்போம்.

1. ஓசியில கிடைக்குதுன்னு அட்டைகளை வாங்கிக் குவிக்க வேண்டாம். ஒன்று அல்லது இரண்டு அட்டைகள் போதும். ஒரு அட்டையில் 20000 வரை உபயோகிக்கலாம் என்றால் இரண்டு அட்டைக்கு 40000 ஆச்சு. ஒரு மாதத்திற்கு இதற்கு மேலா தேவைப்படும்?

2. ரொம்ப முக்கியம் ஒரு கடன் அட்டையை வைத்து இன்னொன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டாம். இது ஏன்னா நீங்கள் உங்களது கடன் அட்டையின் முன்,பின் பக்கங்களை நகல் எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி செய்தால் உங்கள் அட்டையின் பின்புறம் இருக்கும் CVV2வும் அதில் தெரியும். CVV2 நமக்காக Online shopping செய்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ரகசிய எண். அதைப் போய் முன் பின் தெரியாத ஒருவரிடம் கொடுக்கலாமா? அந்த நபர் அதை வைத்து கோல்மால் செய்து விட்டால் கஷ்டம். அதனால் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

3. Balance Transfer தயவு செய்து வேண்டாம். சேவை வரி,Processing Fee என்று ஒரு 200, 250 பிடுங்கிவிடுவார்கள்.

4. இப்போது Verified By Visa (VBV), Mastercard Secure போன்ற பாதுகாப்பான Online shopping வழிமுறைகள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன. அவற்றில் பதிவு செய்து கொண்டு விட்டால் Online Shoppingக்கு ரொம்பவே பாதுகாப்பு.

5. Online Shopping செய்த பிறகோ அல்லது Onlineல் பயணச்சீட்டு முன்பதிவு செய்த பிறகோ மறக்காமல் Signout செய்த பிறகு இணைய உலாவியை மூடுங்கள்.

6. அதேபோல் வங்கிகள் நாம் கடன் அட்டையை உபயோகிப்பதைப் பொறுத்து Points வழங்குவார்கள். அதிகம் செலவு செய்தால் அதிக Points கிடைக்கும் என்பது உண்மை. நூறு ரூபாய்க்கு ஒரு Point என்று வைத்தால் 1000 Pointச் கிடைக்க நாம் 100000 செலவு செய்ய வேண்டும். பின்னர் அந்த Pointsக்கு ஏற்றவாறு நமது கடன் அட்டை பில்லில் தள்ளுபடி கிடைக்கும். அதாவது தள்ளுபடி 1000 ரூபாய். இந்த 1000 ரூபாய் தள்ளுபடிக்கு செலவு செய்ய வேண்டியது 100000 ரூபாய். நான் சொல்வது Cash back Credit card. சில வங்கிகள் இந்த வசதியும் தராது. அவர்கள் ஒரு லிஸ்ட் அனுப்புவார்கள். அதிலிருக்கும் பாடாவதிப் பொருளை வாங்கி நமது Pointsஐக் கழித்துக் கொள்ளலாம் என்பார்கள். எனவே Pointsக்காக செலவழிக்க வேண்டாம்.

யப்பப்பா. இப்படி பயமுறுத்துறியேங்கிறீங்களா? கடன் அட்டைகளால் நன்மைகளும் உண்டுங்க. மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் கடன் அட்டைகள். மாதக்கடைசியில் கையில் பணம் இல்லாதபோது உபயோகித்துவிட்டு பின் சம்பளம் வந்தவுடன் சுலபமாக செலுத்திவிடலாம். என்ன வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது. கை அரிப்பு எடுத்தால் சொரிந்து கொள்ளவும். கடன் அட்டையை உபயோக்கிக்க வேண்டாம். :)

சரி. வங்கிகள் வாடிக்கையாளர்களை ரொம்பவே ஏமாற்றுகின்றன என்பது பொதுவாக எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டு. என் அனுபவத்தில் ஒரு வங்கியின் ஏமாற்று வேலையையும், ஒரு வங்கியின் நல்ல மனசையும், அப்புறம் கிரெடிட் கார்டுகளை வைத்துத் தான் நான் ஒரு வீடே கட்டிக் கொண்டிருக்கிறேன் அது எப்படி என்பதையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(அடுத்த பதிவில் முடியும்)


ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

Thursday, July 26, 2007

விஜய.டி.ராஜேந்தரின் புதிய அவதாரம் !

தசாவதாரம் படத்தில் கமல் பத்து வேடங்களில் கலக்குவதால் தனது அடுத்த படத்தில் விஜய.டி.ராஜேந்தர் தனது கெட்டப்பை மாற்றி வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளார். இன்று அந்த கெட்டப்பின் ஸ்டில்ஸ் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று கீழே.















ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3

முந்தைய பதிவுகளில் ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னும், அது எப்படி நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்குதுன்னும் பார்த்தோம். இப்போ ஒரு வங்கியின் ஏடிஎம்மில் வேறொரு வங்கியின் அட்டையை உபயோகித்தால் எப்படிப் பணம் வருதுன்னு பார்க்கலாம்.

உதாரணத்துக்கு ஒரு சிட்டி வங்கியின் ஏடிஎம்மில் ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையை உபயோகித்தால் அது எப்படி செயல்படுதுன்னு பார்க்கலாம். ஏடிஎம்க்கு நமது அட்டையை வைத்து அது எந்த வங்கியின் அட்டை என்றெல்லாம் கண்டுபிடிக்கத் தெரியாது. ஆகவே நாம் பணம் கேட்டால் வழக்கம் போல் ஒரு தகவலை உருவாக்கி அதை ஏடிஎம் கண்ட்ரோலருக்கு அனுப்பி வைக்கும். ஏடிஎம் கண்ட்ரோலர் அந்தத் தகவலை Switchக்கு அனுப்பி வைக்கும்.

Switch தான் அந்தத் தகவலில் இருக்கும் அட்டை எண் அந்த வங்கியினுடையதா அல்லது வேறு ஏதாவது வங்கியினுடையதா எனக் கண்டுபிடிக்கும். அது ஒன்றும் பெரிய வித்தை எல்லாம் இல்லைங்க.உங்களது அட்டை எண்ணின் முதல் 6 இலக்கங்களை 'வங்கி அடையாள எண்' (BIN - Bank Identification No) என அழைப்பர். இந்த BINஐ வைத்துத் தான் அது அந்த வங்கியின் அட்டையா அல்லது பிற வங்கியின் அட்டையா எனக் கண்டுபிடிக்கும்.

உதாரணத்துக்கு நீங்கள் சிட்டி வங்கி டெபிட் அட்டை வைத்திருக்கிறீர்களா?. அதில் உங்கள் அட்டையின் முதல் 6 இலக்கங்கள் 508159,508125,508126 என்ற மூன்றில் ஒன்றாகத் தான் இருக்கும். சரி தானே?. இதே போல் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட இலக்கங்களைத் தங்களுக்காக வைத்திருப்பார்கள். Switch எப்படி மற்ற வங்கியின் அட்டைகளைக் கண்டுபிடிக்கிறது? ரொம்ப சிம்பிள். ஒரு வங்கி 3 BIN வைத்திருக்கிறதென்றால் அவை தவிர மற்றவையெல்லாம் பிற வங்கியினுடையது தான் அல்லவா? :) . இந்த லாஜிக்கில் தான்.

சரி. அந்த அட்டை பிற வங்கியின் அட்டை என்று கண்டுபிடித்தாயிற்று. அப்போ அந்தத் தகவலை அந்தக் குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்ப வேண்டும். எப்படி அனுப்புவது?. இங்கே தான் உதவிக்கு வருகின்றன விசா மற்றும் மாஸ்டர் கார்ட்.

விசாவும், மாஸ்டர் கார்டும் ஏஜெண்ட்கள். அவற்றின் வேலையே இந்த மாதிரி வங்கிகளுக்கிடையில் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பது தான். எனவேதான் நாம் உலகில் எங்கு சென்றாலும் நமது அட்டையை ஏடிஎம்மில் உபயோகித்தால் பணம் கிடைக்கிறது. விசா, மாஸ்டர் கார்ட் போல பல ஏஜண்ட்கள் (Diners, American Express) உள்ளன. தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் மிகவும் பிரபலமானவை விசா மற்றும் மாஸ்டர் கார்ட் தான்.

சரி. ஓவர் டு Transaction. Switch அந்தத் தகவலை விசாவிற்கோ அல்லது மாஸ்டர் கார்டுக்கோ அனுப்பும். உங்கள் அட்டை விசா அட்டை என்றால் அட்டை எண் '4'லும், மாஸ்டர் கார்ட் அட்டை என்றால் அட்டை எண் '5'லும் ஆரம்பிக்கும். சரிதானே? உங்கள் அட்டை எண் '4'ல் ஆரம்பித்தால் விசாவுக்கும், '5'ல் ஆரம்பித்தால் மாஸ்டர் கார்டுக்கும் Switch அனுப்பி வைக்கும்.

விசா அல்லது மாஸ்டர் கார்டு உங்கள் அட்டைக்குச் சொந்தமான வங்கியைத் தொடர்பு கொண்டு உங்கள் தகவலுக்கான பதிலை (Response message) பெற்றுத் தரும்.அப்புறம் என்ன ஏடிஎம் பணத்தை வாரி வழங்கும். நல்லாப் புரியணும்னா கீழே இருக்கிற படத்தைப் பாருங்க.



முக்கியமான விசயம் இவையெல்லாம் இரண்டு, மூன்று வினாடிகளுக்குள் நடந்து முடிந்துவிடும். என்னே அறிவியலின் வளர்ச்சி. அவ்வளவுதாங்க ஏடிஎம் வேலை பார்க்கிற விதம். அடுத்த பதிவில் Switch, Online shopping மற்றும் சில பாதுகாப்பு முறைகள் குறித்து சொல்கிறேன்.

(தொடரும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

Wednesday, July 25, 2007

கணினி ஓவியப் போட்டிக்கு எனது படம்

ஓவியமெல்லாம் அஞ்சாவது படிக்கிறப்ப 'வாழ்க்கைக் கல்வி' பாடத்துக்காக வரைஞ்சது. அதுக்கப்புறம் இப்பத்தான். அதுனால சின்னப்புள்ளத்தனமா கணினி ஓவியப் போட்டிக்கு ஒரு படம்.

தலைப்பு : மழையில் ஒரு பயணம்



Tuesday, July 24, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2

நீங்கள் ஏடிஎம்மில் அட்டையை சொருகியவுடன் Card Reader கருப்புப் பட்டையில் இருக்கும் விபரங்களை எடுத்து தற்காலிகமாக சேமித்து வைத்துக் கொள்ளும் என சொல்லியிருந்தேன். அதன் பிறகு உங்களது நான்கிலக்க கடவுச்சொல்லைத் (PIN) தருமாறு கேட்கும். பின்னர் உங்களுக்குத் தேவையான தொகையைக் கேட்கும்.

இவ்வாறு அட்டையிலிருந்தும், நம்மிடம் இருந்தும் பெற்ற விசயங்களையெல்லாம் மொத்தமாக சேர்த்து ஒரு தகவலை (Request Message) உருவாக்கும். அந்தத் தகவலில் நமது அட்டை எண், காலாவதியாகும் தேதி, உருமாற்றப்பட்ட (Encrypt செய்யப்பட்ட) நமது கடவுச்சொல், நமக்குத் தேவையான தொகை ஆகிய எல்லாமும் இருக்கும். இப்படி ஏடிஎம் தகவல்களை உருவாக்குவதற்கு ஒரு ISO 8580 என்ற ஒரு முறை உள்ளது. உலகில் உள்ள எல்லா ஏடிஎம்களும் இதே முறையில் தான் தகவல்களை உருவாக்கும். இந்தத் தகவலை உருவாக்குவதற்கான மென்பொருள் ஏடிஎம்மில் நிறுவப்பட்டிருக்கும்.

பின்னர் அந்தத் தகவலை ஏடிஎம் கண்ட்ரோலர் (ATM Controller) என்ற மென்பொருளுக்கு அனுப்பும். இந்த கண்ட்ரோலர் தான் ஒரு வங்கியின் அனைத்து ஏடிஎம்களையும் கட்டுப்படுத்தும் மென்பொருள் ஆகும். ஒரு வங்கிக்கு இந்தியாவில் சுமார் 400 ஏடிஎம்கள் இருந்தாலும் ஒரு ஏடிஎம் கண்ட்ரோலர் தான் இருக்கும். ஏடிஎம் கண்ட்ரோலர் ஒரு Centralised software ஆகும். இது கணினி மென்பொருள் வல்லுனர்களால் அந்தந்த வங்கியின் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும்.

ஏடிஎம் கண்ட்ரோலர் சில அடிப்படை சோதனைகளை மட்டும் அந்தத் தகவலில் செய்து விட்டு பின்னர் அந்தத் தகவலை Switch எனப்படும் மென்பொருள் பகுதிக்கு அனுப்பும். Switch என்பது ஏடிஎம் கண்ட்ரோலர், Internet banking, விசா, மாஸ்டர் கார்ட் போன்ற பிறவற்றுடனும் தொடர்பு கொண்டிருக்கும். அவை பற்றி பின்னர் தெளிவாக சொல்கிறேன்.

பின்னர் Switch ஏடிஎம் அனுப்பிய அந்தத் தகவலை பிரித்து மேயும். அந்தத் தகவலின் எல்லாப் பகுதிகளும் சரியாக இருக்கிறதா (Message format validation) செய்யும். உதாரணத்திற்கு, அட்டை எண் கண்டிப்பாக 14,16 அல்லது 19 இலக்கங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அப்புறம் CVV1 என்று சொன்னேன் இல்லையா? அது எல்லாம் சரிதானா என்று algorithm உபயோகித்து சரி பார்க்கும். இந்த மாதிரி பல வேலைகளை switch செய்யும். வங்கிக்கான மென்பொருள்களில் Switch மிகவும் முக்கியமானதாகும். அது பற்றி பின்னர் சொல்கிறேன்.

பின்னர் நமது கடவுச்சொல்லை சரிபார்க்க RACAL/HSM (Host Security Module) என்னும் ஒரு வன்பொருளுக்கு அனுப்பும். அந்த வன்பொருளில் உள்ள மென்பொருள் ஒரு algorithm உபயோகித்து நாம் கொடுத்த கடவுச்சொல் சரிதானா எனப் பார்க்கும். சரி என்றால் அடுத்து நேராக அந்தத் தகவலை Switch வழியாக நமது வங்கிக் கணக்கு விபரங்கள் இருக்கும் Databaseக்கு அனுப்பும்.

அங்கே நமது வங்கிக் கணக்கில் நாம் கேட்ட அளவு பணம் இருக்கிறதா என சோதனை செய்து விட்டு திரும்பவும் ஒரு தகவலை (Response message) அனுப்பும். அதாவது 'இவன் கணக்கில் பணம் உள்ளது. ஆகவே இவனுக்குப் பணம் கொடு ஏடிஎம்மே' என்பது போல ஒரு தகவல். அந்தத் தகவல் திரும்பவும் Switch, ஏடிஎம் கண்ட்ரோலர் வழியாக ஏடிஎம்மை வந்தடைந்து ஏடிஎம் அந்தத் தகவலைச் சரிபார்த்தவுடன் நமக்குப் பணத்தை வாரி வழங்கும்.

கீழே இருக்கும் படத்தைக் கிளிக்கிப் பார்த்தால் புரியும்.


இன்னொரு முக்கியமான விசயம் நமது கடவுச் சொல் (PIN) எந்த ஒரு இடத்திலும் வங்கியினால் சேமித்து வைக்கப்பட்டிருக்காது. வைக்கவும் கூடாது. எல்லாம் RBI உத்தரவு. ஆகவே தான் RACAL/HSM அந்தக் கடவுச்சொல் சரியா, தவறா என்று மட்டுமே பார்க்கும். வேறு எங்குமே சேமித்து வைக்காது.

சரி. மேலே சொன்னது எல்லாம் நமது வங்கிக் கணக்கு எந்த வங்கியில் இருக்கிறதோ அதே வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் நடைபெறும் முறை. அதாவது ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையைக் கொண்டு ஹெச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முறை. அப்ப சிட்டி பேங்க் அட்டையை வைத்து ஹெச்டிஎப்சி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் என்ன ஆகும்? அது அடுத்த பதிவில்.

(தொடரும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1


Wednesday, July 18, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

நான் இரண்டு வருடங்கள் Banking domain-ல வேலை பார்த்ததுனால ஓரளவுக்கு ஏடிஎம்,கடன்/வங்கிக் கணக்கு அட்டை, இணைய வியாபாரம்(?) (Online shopping) இதிலெல்லாம் கொஞ்சம் ஞானம் உண்டு. அவை பற்றித் தான் எழுதலாம்னு இருக்கேன். படிக்கிறவுங்க சும்மா போகாம, புரிஞ்சுதா இல்லையாங்கிறதையும், ரொம்ப Technical terms உபயோகிக்கிறேனாங்கிறதையும் கருத்தாகச் சொல்லிவிட்டுப் போங்கள்.சந்தேகங்கள் இருந்தாலும் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இப்போது ஏடிஎம் வசதியில்லாத வங்கியே இல்லைன்னு சொல்லலாம். நாம் ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பித்த உடனே அல்லது கடன் அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு நமக்கு ஒரு பிளாஸ்டிக் அட்டையை வழங்குவார்கள். அதைதான் நாம் ஏடிஎம் அல்லது கடையில் சாமான் வாங்கும் போது பணத்துக்குப் பதிலாக உபயோகிக்கிறோம். இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். (அப்புறம் எதுக்கு நீ வேற ஒரு தடவை சொல்றன்னு கேட்கக் கூடாது. அப்பத்தான ஒரு flow கிடைக்கும்). அந்த அட்டையில் அப்படி என்ன இருக்குன்னு தெரிந்து கொள்வோம்.

அந்த அட்டையில் உங்கள் அழகான முகம், அட்டை எண், காலாவதியாகும் தேதி போக பின்னால் ஒரு கருப்புப் பட்டையிருக்கும். அதன் பேர் Magnetic Stripe. பிளாப்பியில் இருக்கிறதல்லவா அதேதான். தண்ணீரில் போட்டால் கூட ஒன்றும் ஆகாது(போட்டுப் பார்த்துட்டு ஒப்பேந்து போச்சுன்னா நான் பொறுப்பில்லை). அந்தக் கருப்புப் பட்டையிலும் நமது கார்டு எண், காலாவதியாகும் தேதி போக CVV1(Card Verification Value 1) என்ற ரகசிய எண்ணும் இருக்கும். இது ஒவ்வொரு கார்டுக்கும் வேறாக இருக்கும். உங்களுக்குக் கொடுப்பதற்காக அட்டை செய்யும் போதே அந்த ரகசிய எண்ணை அந்த கருப்புப் பட்டையில் பதிந்து விடுவார்கள்.இது எதற்காக என்றால் ஒருவருடைய அட்டை எண்ணும், காலாவதியாகும் தேதியும் தெரிந்துவிட்டால் வேறு யார் வேண்டுமானாலும் போலி அட்டை செய்து கொள்ளமுடியுமல்லவா? அதைத் தடுக்கத்தான்.

CVV1 என்று இருக்கிறதே CVV2 வேறு இருக்கிறதா என்றால் ஆமாம். உங்கள் அட்டையைத் திருப்பிப் பார்த்தால் கருப்புப் பட்டையின் கீழ் நீங்கள் கையெழுத்திடுவதற்காக வெள்ளை நிறத்தில் ஒரு பட்டையிருக்கும். அதில் கடன் அட்டை என்றால் உங்கள் அட்டை எண்ணும், வங்கிக் கணக்கு அட்டை என்றால் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணும் அதைத் தொடர்ந்து ஒரு 3 இலக்க எண்ணும் இருக்கும். அது தான் CVV2. இது எதுக்குன்னா இணையத்தில் உபயோகப்படுத்துகிற போது நம்மளோட அட்டைதானா இல்ல போலியான்னு கண்டுபிடிக்கிறதுக்காக. இதுவும் ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபடும். இது ஒவ்வொன்றின் பயன் பற்றியும் பின்னால் விபரமா சொல்கிறேன். இப்போ ஏடிஎம் பற்றிப் பார்க்கலாம்.

ஏடிஎம்ங்கிறது கொஞ்சம் ஹைடெக் அலமாரி. NCR, Diebold நிறுவனங்கள தான் இவைகளின் தயாரிப்புக்குப் புகழ் போனவை. ஏடிஎம் மிகவும் உறுதியானது. அதன் கண்ணாடியைக் கூட யாரும் எளிதில் உடைக்க முடியாது.அதற்குள் ஒரு கணினி இருக்கும். அது தான் நாம் பார்க்கும் screen எல்லாம் காட்டும். விசைப்பலகைக்குப் பதில் நாம் அமுக்கும் எண்கள் கொண்ட Key Pad இருக்கும். அப்புறம் ஒரு Card Reader. நாம ஒரு துவாரத்தில் நமது அட்டையை சொருகுகிறோமே அது தான். அது தான் நமது அட்டையின் பின்னால் இருக்கும் கருப்புப் பட்டையில் இருக்கும் விபரங்களைப் படித்து தற்காலிகமாகச் சேமித்து வைத்துக் கொள்ளும்.

அப்புறம் ஒரு பெட்டகம் (Locker). அதில் தான் பணம் வைக்கும் Slots இருக்கும். ஏடிஎம்மில் பணம் இல்லையென்றால் இந்த பெட்டகத்தைத் திறந்து ஒவ்வொரு Slotடிலும் 1000,500,100 என்று வைத்து எந்த ஸ்லாட்டில் எந்த ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன என்பதை ஏடிஎம்-மின் கணினியில் பதிந்து விடுவார்கள். மாற்றிப் பதிந்து விட்டால் சீன் தான். 500 எடுப்பவனுக்கு 1000மும், 1000 எடுப்பவனுக்கு 100ம் போகும். அதனால் இதை செய்யும் போது கவனமாக இருப்பார்கள். குறிப்பாக இந்தியாவில் தற்போதுள்ள ஏடிஎம் வகைகளில் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் வசதியும், எந்த ரூபாய் நோட்டு என்று அறிந்து கொள்ளும் வசதியும் கிடையாது. வெளிநாடுகளில் இருக்கலாம் என நினைக்கிறேன்.

மேலும் ரசீது கொடுக்கும் ஒரு ஸ்லாட்டும், ஏடிஎம்மில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக EJ (Electronic Journal) எனப்படும் காகித ரோலும் இருக்கும். இந்தக் காகித ரோலில நாம் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலோ, ஏடிஎம்மைத் திறந்தாலோ, நாம் என்ன செய்தாலும் அந்தக் காகித ரோலில் எழுதிக் கொண்டே வரும். காகிதம் தீர்ந்து போனால் கூட memoryயில் பதிந்து வைத்துக் கொண்டு காகித ரோலை மாட்டின உடனே 'ஒரு கடமை தவறாத காவல்துறை அதிகாரி' போல கட கட வென எழுதித் தள்ளிவிட்டு தான் மறுவேலை பார்க்கும். இது விமானங்களில் இருக்கும் கருப்புப் பெட்டி போல் பின்னால் என்ன பிரச்சினையென்றாலும் பார்த்துத் தெரிந்து கொள்ள உதவும்.

அப்புறம் ஒரு குப்பைத் தொட்டி. இது எதுக்குன்னா உங்களுக்கு ரசீது கொடுக்கும் போதோ, அல்லது பணம் கொடுக்கும் போதோ கிழிந்து அல்லது எசகு பிசகாக மாட்டி விட்டாலோ அதை அப்படியே உள்ளே இழுத்து இந்தக் குப்பைத் தொட்டியில் போட்டு விடும். இது போக பணம் கொடுக்கும் Cash dispenser, பணம் அல்லது செக் டெபாசிட் செய்ய உதவும் Slotகளும் இதில் உள்ளன.

ஆக இவ்வளவு சாமான் சட்டுகளும் ஒரு ஏடிஎம் பெட்டியில் உள்ளன. சரி அட்டையைப் போட்டவுடனே கொஞ்ச நேரத்தில் எப்படிப் பணம் வருது? அது அடுத்த பதிவில்.

(தொடரும்)

Sunday, July 15, 2007

மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா! மக்களின் மத்தியில் காமராஜா!

இன்று ஜூலை15. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம். தமிழக அரசு இந்நாளை இனிவரும் ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாட வேண்டுமென்று அறிவித்திருக்கிறது. மிகவும் வரவேற்கத்தக்கதே.

இவ்வாறு காமரஜர் பிறந்தநாளைப் பள்ளிகளில் கொண்டாடுவது நான் படித்த பள்ளியில் காலகாலமாக நடந்து வரும் ஒன்று. அது நாடார் சமுதாயத்தினர் நடத்தி வந்த பள்ளி. பெருந்தலைவர் பிறந்ததினத்தின் முதல் நாள் எங்கள் பள்ளியில் இருக்கும் ஆளுயர காமராஜர் படத்தை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பிப்பதிலிருந்து பள்ளி களை கட்டிவிடும். பின்னர் கொஞ்சநேரத்தில் தலைமை ஆசிரியரிடமிருந்து வரும் சுற்றறிக்கையில் மறுநாள் எல்லோரும் கண்டிப்பாக சீருடை அணிந்து வரவேண்டும், ஒழுங்காக இத்தனை மணிக்கு பள்ளியில் இருக்கவேண்டும் என்ற கட்டளைகளுடன் நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பொரி வழங்கப்படும் என்ற தூண்டிலும் இருக்கும்.

மறுநாள் காலையில் பள்ளிக்குள் நுழையும்போதே "மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா மக்களின் மத்தியில் காமராஜா" என்ற பாடல் வரவேற்கும். அந்தப் பெரிய காமராஜர் படம் சைக்கிள் ரிக்சாவில் வைக்கப்பட்டு பெரிய ரோஜா மாலையினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் அனைவருக்கும் காமராஜர் படம் போட்ட கொடி தரப்பட்டு அனைவரும் சட்டையில் குத்திக் கொள்வோம். அடுத்தவன் கொடி குத்திவிடச் சொன்னால் குத்தி விடுகிற சாக்கில் குண்டூசியால் நறுக்கென மார்பில் குத்தி விட்டு தெரியாமடா என்று சொல்லி வெறுப்பேற்றுவோம். எல்லா வகுப்பு மாணவர்களும் வரிசையில் நிற்க தலைமையாசிரியர் உரையுடன் தேசியக் கொடியேற்றப்பட்டு பின்னர் ஊர்வலம் தொடங்கும். கைகூப்பியபடியுள்ள காமராஜர் படத்துடன் செல்லும் ரிக்சாவைத் தொடர்ந்து தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்கள் காக்கி சீருடையுடன் முதலில் செல்ல அவர்கள் பின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வெள்ளை சீருடையிலும் பன்னிரெண்டாம் வகுப்பு, பதினொன்று என்று வந்து ஆறாம் வகுப்பில் முடியும். எங்கள் பின்னால் ஆண்கள், பெண்கள் தொடக்கப்பள்ளிகளின் மாணவ, மாணவிகளும் கடைசியாக அனைவரும் எதிர்பார்க்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் ஊர்வலம் செல்லும் வழியில் வந்து இணைந்து கொள்வர்.

இதற்கிடையில் கமுதியில் இருக்கும் காமராஜர் சிலையைப் பற்றிச் சொல்லவேண்டும். யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் பெரிய சிலையாக சாலை ஓரத்தில் மிகவும் பாதுகாப்பாக கம்பீரத்துடன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதியில் அமைத்திருப்பர். முக்கியமான விசயம் அந்தப் பெரிய சிலைக்கும் வேட்டி, சட்டை அணிவித்து இருப்பர். நான் ஒரு நாள் கூட வேட்டி சட்டை இல்லாமல் பார்த்ததில்லை. பிறந்த நாளன்று புது வேட்டி சட்டையுடன் ஏகப்பட்ட மாலைகளுடன் சிலை அழகாக இருக்கும்.

ஓவர் டு ஊர்வலம். இரண்டு மூன்று நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் மட்டும் பந்தாவாக ரிக்சாவின் அருகிலேயே நடந்து செல்வர். ஏனென்றால் ரிக்சாவில் ஒலிப்பெருக்கி மாட்டி காமராஜர் புகழ்பாடும் பாடல்களை அவர்கள் தான் கேசட் மாற்றிப் போட்டு இயக்குவார்கள். மற்றவர்களை அருகிலேயே விடமாட்டார்கள். இவ்வாறாக பட்டையைக் கிளப்பும் ஊர்வலம் நாடார் பஜார், செட்டியார் பஜார், முஸ்லிம் பஜார், தெற்குத் தெரு, மேட்டுத் தெரு வழியாக அமர்க்களமாகச் செல்லும். அனைத்தும் சாதிப்பெயராக இருக்கிறதே என எண்ண வேண்டாம். கமுதியில் அவை மூன்றும் தான் முக்கிய வீதிகள்.

வழியில் சில பெரியவர்கள், வயதான பெண்கள் மட்டும் காமராஜர் படத்தைப் பார்த்துக் கையெடுத்து வணங்குவார்கள். எனக்கு அப்போதெல்லாம் வியப்பாக இருக்கும். சில வீடுகளின் வெளியில் காமராஜர் படம் வைத்து மாலையிட்டு ஏகப்பட்ட மிட்டாய்களை அருகில் தட்டுகளில் வைத்திருப்பார்கள். ஊர்வலத்தில் செல்லும் நாங்கள் போட்டி போட்டு அவற்றை எடுத்துக் கொள்வோம். இப்படி நாங்கள் ஊர்வலமாக வரும் போது எங்கள் எல்லோரது வீடுகளிலுமிருந்து ஆட்கள் வெளியில் வந்து எங்கள் ஊர்வலத்தைப் பார்ப்பார்கள். நாங்கள் அவரவர் வீடு வரும் போது அப்பா, அம்மாக்களைப் பார்த்து கையசப்பதும், வீட்டுக்குள் ஓடிச் சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்து திரும்பவும் ஊர்வலத்தில் கலந்து கொள்வதும் நடக்கும். எங்கள் உடற்கல்வி ஆசிரியருக்கு மட்டும் இது எல்லாம் பிடிக்காது. உர்ரென்று முறைத்தபடியே எங்களுடன் வருவார்.

ஒருவழியாக ஊர்வலம் முடியும் போது பிற பள்ளி மாணவ, மாணவிகளெல்லாம் அடுத்தடுத்து கழன்று கொள்ள நாங்கள் கடைசியாகப் பள்ளிக்கு வந்து சேருவோம். சிறிது நேரம் கழித்து வகுப்புவாரியாக பொரி விநியோகம் நடைபெறும். அதைத் தின்பது கொஞ்சமாகவும், தெருவில் சிதறுவது அதிகமாகவும் சேட்டைகள் செய்து கொண்டே வீட்டினைச் சென்றடவோம். இவ்வாறாக எனது பள்ளிக்காலம் முழுவதும் பன்னிரெண்டு ஆண்டுகள் பெருந்தலைவர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மரியாதை செய்திருக்கிறேன். பள்ளி முடித்து கல்லூரியில் பயின்ற போது இவ்வாறான ஊர்வலம் சாலையோரம் எனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கடந்து சென்ற போது எங்கள் அனைவருக்குமே பழைய நினைவுகள் வந்து ஆட்கொண்டன. அதைக் காட்டிக் கொள்ளாமல் ஊர்வலத்தில் இருந்த மாணவர்களுக்குக் கையசைத்துவிட்டு நின்றோம். இப்போது அந்தப் பெருந்தலைவரின் பிறந்தநாளன்று, தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு அவரது குணத்தில் பத்து சதவீதமாவது கிடைக்கவேண்டும் என எண்ணிக் கொள்கிறேன்.

Thursday, July 12, 2007

கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது

சிறுவயதில் எனக்கு மரம், செடி வளர்த்தல் என்றால் மிகவும் விருப்பம். ஆனால் நாங்கள் சொந்த ஊரில் இருந்தபோது எங்கள் வீட்டில் அதற்கான இடம் கிடையாது. ஆனாலும் காலியான பாலித்தீன் பைகளில் மண் நிரப்பி காட்டுரோஜா(இப்போ பட்டுரோஸ்?!)ச் செடிகளை வளர்த்து வந்தேன். இசை கேட்டால் செடி நன்றாக வளரும் என்பதால் எங்கள் வீட்டு வானொலி இருக்குமிடத்துக்கு அருகில் சன்னலுக்கு வெளியே வைத்து வளர்த்து வந்தேன். ஆனாலும் மரம் வளர்ப்பது என்பது ஓரு கனவாகவே இருந்து வந்தது.

பின்னர் வேறொரு வீட்டிற்கு மாறியபோதும் இதே நிலைதான் என்றாலும், வீட்டிற்கு முன்புறம் நிறைய காலி இடமிருந்ததால் மரம் வளர்க்கும் ஆசை மீண்டும் முளைத்தது. வீட்டு வாசலுக்கு அருகில் ஒரு மரம் வளர்க்கப் போகிறேன் என அம்மாவிடம் சொல்லி வைத்தேன். "என்ன மரம்டா?"ன்னு கேட்டபோது "வேப்பமரம்" என்றேன். மறுநாள் காலையில் என் அம்மா இடுப்பில் தண்ணீர்க் குடமும், கையில் சிறிய வேப்பங்கன்றையும் வைத்திருந்தார்கள். தண்ணீர் பிடிக்கும் குழாயடியில் இருந்து எடுத்து வந்ததாகச் சொன்னார்கள். இரண்டு இலைகள் மட்டுமே முளைத்திருந்த சிறிய செடி அது.

பின்னர் ஒரு காலி பாலித்தின் பையில் மண் நிரப்பி அதில் ஊன்றி வீட்டின் பின்புறம் வெயில் படும் இடத்தில் வைத்து வளர்த்து வந்தேன். ஒரு மரம் மட்டும் போதுமா? இன்னொன்றும் வளர்ப்போம் என எண்ணி பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்த மரமான மயில் கொன்றை மரத்தின் விதைகளை சேகரித்துக் கொண்டு வந்து முளைக்கவைத்தேன். தினமும் தண்ணீர் ஊற்றியும் வேப்பமரம் மட்டுமே வளர்ந்தது. மயில் கொன்றை முளைக்கவே இல்லை. பின் விதையைத் திரும்ப எடுத்து தண்ணீரில் மூன்று நாட்கள் ஊற வைத்த பின் அது லேசாக முளைக்கத் தொடங்கியதும் திரும்பவும் பையில் வைத்து வளர்த்து வந்தேன்.

சில நாட்களில் இரண்டும் நன்கு பெரியனவாக வளர்ந்து விட்டன. தரையில் ஊன்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. எங்கள் வீட்டு வாசலில் ஒரு மரம் மட்டுமே வைக்க இடமிருந்ததால் வேப்பமரத்தை மட்டும் வீட்டு வாசலில் வைப்பது என்றும் மயில் கொன்றை மரத்தை எங்கள் வீட்டு எதிரில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து வளர்ப்பது என்றும் முடிவு செய்தோம். அதன்படியே மரக்கன்றுகளுக்கு வேலியெல்லாம் போட்டு தினமும் தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து வந்தேன். இரண்டு வருடங்களில் மிகவும் நன்றாகவே வளர்ந்து விட்டன.

பின்னர் அந்த ஊரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது எனது நண்பர்கள், தெரிந்தவர்கள், ஆசையாய் வளர்த்த மரங்கள் என எல்லோரையும் பிரிய வேண்டியதாயிற்று. கிளம்பும் முன் வீட்டு வாசலில் இருந்த வேப்பமரத்தையும், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று மயில் கொன்றை மரத்தையும் நன்றாக ஒருமுறை பார்த்துவிட்டு வந்தேன்.
பின்னர் இராமநாதபுரத்தில் தற்காலிகமாக ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான் மதுரையில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். பிறகு வேறொரு வீடு பார்த்திருப்பதாகவும் வீடு நன்றாக இருப்பதாகவும், அங்கு ஒரு ஆச்சரியம் எனக்காக இருப்பதாகவும் என் அம்மா தொலைபேசியில் சொன்னார்கள். நான் எனது நண்பர்கள் யாராவது பக்கத்து வீட்டில் இருக்கிறார்களா என்று கேட்டதற்கு நீ வந்து நேரடியாகப் பார் என்று சொல்லிவிட்டார்கள். நானும் என்னடா இது என்னவாக இருக்கும் என எண்ணியபடியே அந்த வாரம் ஊருக்கு வந்தபின் புது வீட்டைப் பார்க்கக் கிளம்பினேன்.

உண்மையிலேயே ஆச்சரியம் தான். அந்த வீட்டின் வாசலில் ஒருபுறம் வேப்பமரமும், மறுபுறம் மயில்கொன்றை மரமும் இருந்தன. கிட்டத்தட்ட நான் எங்கள் சொந்த ஊரில் வளர்த்த மரங்களின் அளவிலேயே இருந்தன. அம்மா "பார்த்தாயா! இது தான் நான் சொன்ன ஆச்சரியம்"ன்னார்கள். "என்னால் நம்பவே முடியவில்லை" என்றேன். "நீ கஷ்டப்பட்டு இரு மரங்களை வளர்த்தாய். அதன் பலன் உனக்குச் சேரவேண்டியது. அது நீ எங்கிருந்தாலும் உனக்குக் கிடைக்கும் "
ன்னு அம்மா சொன்னார்கள். இன்றும் அந்த மரங்கள் என்னதான் வெயில் அடித்தாலும் வீட்டுக்குள் குளுமையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இப்போதும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றால் எனது மரங்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவது வழக்கம்.