Friday, November 23, 2007

புரியாததுதான் கடவுளா?

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று நினைத்து நான் குழம்பிய குழம்பல்கள் இங்கே.

சரி. முதலில் கடவுள் இருக்கிறார் என ஏன் நம்பவேண்டும் என்ற காரணங்களைப் பார்ப்போம்.

1. மனித உடலை எடுத்துக் கொள்வோம். எவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது ஒவ்வொரு உறுப்பும்? என்னதான் பரிணாம வளர்ச்சி அது இது என்றாலும் இவ்வளவு கனகச்சிதமாக எப்படி சாத்தியமாகும்?

2. உலகில் எவ்வளவு புராணங்களும் இதிகாசங்களும் இருக்கின்றன. அவை அனைத்தும் பொய் சொல்கின்றனவா? நம் முன்னோர்கள் அந்த அளவு நம்மை ஏமாற்றுவார்களா என்ன?

3. அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் முன்னால் ஓர் இளைஞர் யோகாசனத்தின் மூலம் புவி ஈர்ப்பு விசையை மீறி அந்தரத்தில் நிற்பதைக் காட்டினார்கள். சாதாரண நமக்குத் தெரிந்த யோகாவின் உதவியால் இந்த அதிசயங்களைச் செய்ய முடிகின்றதெனில், நமக்குத் தெரியாத எவ்வளவோ கற்றிருந்திருக்கின்றனர் நம் முன்னோர்கள். அவர்களால் வானத்தில் கூட பறந்திருக்க முடியும் அல்லவா?

ஏன் கடவுள் இல்லையென நினைக்க வேண்டும்?
1. கடவுள் தான் மனிதனைப் படைத்தார் என்றால் அவர் எல்லா மனிதர்களையும் சமமாக அல்லவா நடத்தவேண்டும். ஏன் சிலர் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்? கடவுள் இருந்தால் அவர்களுக்கு உதவலாமே? ஏன் செய்வதில்லை.

மனிதன் என்பவனும் ஒரு விலங்குதான். ஆனால் அவனது வாழ்க்கைமுறை வேறு. அவனிடம் பணமில்லை எனவே கஷ்டப்படுகிறான். எனவே கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லலாம்.

2. கொடுமையான மரணங்கள் ஏன் நடக்கின்றன. உதாரணம் கும்பகோணம் தீ விபத்து, ஏர்வாடி தீ விபத்து. சாதாரண மனிதர்களாலேயே தாங்க முடியாத அந்த நிகழ்வுகள் ஏன் நடக்கின்றன? அதே போல் கோவிலுக்குச் சென்று திரும்பும் போதும் எத்தனை விபத்துக்கள் நடக்கின்றன? தன்னைத் தரிசிக்க வந்தவனை பத்திரமாக வீடு கொண்டு சேர்ப்பது கடவுளின் பொறுப்பல்லவா?

இவையும் தனிமனிதனின் கவனக்குறைவாலும், தற்செயலாகவும் நிகழ்பவை. எனவே கடவுளுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

3. இந்து சமயத்தில் (பிற சமயங்களிலும்) ஏன் இவ்வளவு சாதிப்பாகுபாடுகளும் சக மனிதனை இழிவாக சித்தரிக்கும் நிலையும் உள்ளது? கடவுள் இருந்தால் ஒரு வார்த்தை "என் முன் எல்லோரும் சமம். சாதிப் பாகுபாடுகள் கூடாது" என்று சொன்னால் அவரைத் தொழுபவர்கள் கேட்டுக் கொள்வார்களே? ஏன் செய்வதில்லை?

அட போப்பா! கடவுள் என்பதே மனிதன் தோற்றுவித்தது தான். அப்புறம் எப்படி கடவுள் வந்து நேரில் சொல்வார்?

4. நல்லவர்கள் கடைசி வரை கஷ்டப்பட்டு வாழ்ந்து முடிவதும், கெட்டவர்களும் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடிப்பவர்களும் சொகுசாகப் புகழோடு வாழ்வதும் ஏன்?

பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுகிறான். கடவுளாம் மண்ணாங்கட்டி.

5. உலகத்தில் ஏன் இத்தனை மதங்கள் இருக்கின்றன? எந்தக் கடவுள் உண்மை? இறந்தபிறகு சொர்க்கம், நரகம் என்றல்லாம் சொல்கிறார்கள். இந்து சமயத்தைப் பின்பற்றுபவனுக்கு ஒரு சொர்க்கம், கிறிஸ்தவருக்கு தனி சொர்க்கமா?

வெளங்கிரும்.

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விடுத்து கடவுளை நாம் எப்படி define செய்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பிறகு பார்க்கலாம்.

Wednesday, November 21, 2007

ஓசூர் - ராயக்கோட்டை - தர்மபுரி

பெங்களூரில் இருந்து ஊருக்குச் செல்லும் போது விழாக்காலங்கள் தவிர பிற நாட்களில் திட்டமிட்டெல்லாம் பயணம் செய்வதில்லை. வெள்ளிக்கிழமை மதியம் இங்கிருந்து பெங்களூர் - சேலம் - மதுரை - இராமநாதபுரம் என்று தமிழக அரசுப்பேருந்துகளில் மாறி மாறிப் பயணம் செய்வதுதான் வழக்கம். திரும்பி வருவதும் அவ்வாறே. முதுகு மற்றும் அதன் கீழிருக்கும் பகுதிகள் என்னவாகும் என்பது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை :) . மாதம் ஒருமுறை இப்படித்தான் பயணம்.

அன்றும் அப்படித்தான் சில்க் போர்டு அருகில் சேலம் பேருந்துக்காக ரொம்ப நேரம் நின்றும் வந்தபாடில்லை. எனவே ஓசூர் சென்று அங்கிருந்து சேலம் சென்று விடலாம் என்றெண்ணி ஓசூர் சென்றேன். அங்கிருந்தும் சேலத்துக்குப் பேருந்து இல்லை. தர்மபுரி வரை செல்லும் பேருந்துகள் மட்டுமே இருந்தன. ஆனால் அவை செல்லும் வழி வழக்கமாக நான் செல்லும் வழி கிடையாது.

வழக்கமாக பெங்களூரிலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழி இது தான். பெங்களூர் - ஓசூர் - கிருஷ்ணகிரி - தர்மபுரி - சேலம் - நாமக்கல் - கரூர் - திண்டுக்கல் - மதுரை - பரமக்குடி - இராமநாதபுரம். ஸ்ஸ்ஸ்ஸப்பா .. இப்பவே கண்ணைக் கட்டுதே :) . மொத்த பயண நேரம் 14மணி.

ஆனால் நான் ஏறிய பேருந்து கிருஷ்ணகிரி வழியாகச் செல்லாமல் இராயக்கோட்டை, பாலக்கோடு ஆகிய ஊர்கள் வழியே தர்மபுரி செல்வது. முதலில் யோசித்தாலும் சரி புதியதொரு வழியில் சென்றுதான் பார்ப்போமே என்று ஏறிவிட்டேன். வழக்கமாகச் செல்லும் வழியில் ஓசூர் தாண்டியதும் இருபது நிமிடங்கள் டீ குடிக்க நிறுத்தி விடுவார்கள். அதெல்லாம் நமக்குத்தான் தேவையில்லையே ஊர் போய்ச் சேர்ந்தால் போதும் :).

இந்த இரண்டு மணி நேரப்பயணத்தில் நான் பார்த்தவை நிறைய. முதலில் சமமான சாலையில் சென்றாலும் ஓசூர் தாண்டியதும் அழகாக மலையில் ஏற்ற இறக்கங்களில் பேருந்து சென்றது. மலையென்றால் கொடைக்கானல் அளவெல்லாம் கிடையாது. சும்மா சின்னகுன்றுகள் தான். இருபுறமும் பசுமையாக செடிகளும் மரங்களும் இருக்க நடுவில் ஏற்ற இறக்கமான சாலையில் பேருந்து விரைந்து சென்றது பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

தமிழகத்தில் என்றுமே மொழிப்பாகுபாடு பார்ப்பது கிடையாது என்பதற்கு இந்த வழியில் இருக்கும் கிராமங்களே சாட்சி. சாலையோர வழிகாட்டிப் பலகைகளில் பெரும்பாலான கிராமங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழ் மற்றும் தெலுங்கிலும், சில கிராமங்களின் பெயர்கள் தமிழ் மற்றும் கன்னடத்திலும் எழுதப்பட்டிருக்கின்றன. பள்ளிகள், வங்கிகள் அனைத்திலும் தமிழ், தெலுங்கு அல்லது கன்னடத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

ஓசூர் தமிழ்நாட்டில் இருந்தாலும் அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் தெலுங்குதான் போலும். பேருந்தில் அனைவரும் தெலுங்கில் தான் பேசிக் கொண்டிருந்தனர். அதே போல் நகரப் பேருந்துகளிலும் தமிழ், கன்னடம், தெலுங்கில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.

ஒருமணி நேரம் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள் ராயக்கோட்டை தாண்டியதும் காணாமல் போனது. தமிழகத்தின் தேசியமரமான கருவேலமரங்கள் கண்ணுக்குத்தெரிய ஆரம்பித்தன. சரி தான் போங்கப்பா எங்க போனாலும் இந்த உபயோகமில்லாத மரம்தானான்னு தூங்க ஆரம்பிச்சிட்டேன்.