Sunday, November 30, 2008

சென்னையில் ஒரு மழைக்காலம்


'சென்னையில் மழை பெய்யாது, வெயில் அதிகம், வேர்க்கும், தண்ணீர்ப்பஞ்சம் இருக்கும், ஊர் ரொம்ப அழுக்கா இருக்கும், அதெல்லாம் ஒரு ஊரா?' நீங்க அப்படி நினைக்கிற ஆளா?. குறிப்பா பெங்களூர் மக்கள் :). இவை எல்லாம் இருந்ததுதான். ஆனால் 2004 கோடைகால‌ம் வரை.

அதன்பிறகு 2004 மழைக்காலத்தில் கொட்டித்தீர்க்க ஆரம்பித்த மழை இப்பொழுது வரை வருடாவருடம் தொடர்கிறது. அதனால் சென்னையைப் பத்தி தப்பா நினைக்காம நடப்பு நிலவரத்தையும் தெரிஞ்சுக்கங்க. 2004க்குப் பிறகு இப்போ மீண்டும் நிஷாவின் கோரத்தாண்டவத்தால் சென்னை திரும்பவும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

ஏற்கனவே இரண்டு வாரங்கள் முன்பு மழை நன்கு பெய்து ஓய்ந்து போய் டிசம்பரில் வரவேண்டிய பனிக்காலம் முன்பே தொடங்கியிருந்தது. (உலகம் வெப்பமயமாதல் காரணமா?) இப்போ தொடர்ந்து ஐந்து நாட்களாகப் பெய்துவரும் மழையால் முதலில் மகிழ்ச்சியாயிருந்தாலும் வெள்ளம் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது, 90 பேர் பலி ஆகிய செய்திகளைப் படிக்கவும் நின்று போனது. இப்போதைக்கு மழை பெய்யாமலிருந்தால் போதும் என்று நினைத்தாலும் இதோ இப்போதும் விட்டு விட்டுப் பெய்து கொண்டுதான் இருக்கிறது. பெய்யெனப் பெய்யும் மழை. பெய்தும் கெடுக்கும் மழை.

2003ம் வருடம் டிசம்பரில்தான் நானும் பிராஜெக்ட் பண்ண‌ சென்னைக்கு வந்தேன். வடபழனியில் வீடு. இரண்டு படுக்கையறை வாடகை வெறும் 3600. 5 பேர் தங்கியிருந்தோம். அரசல் புரசலாக சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் தெரிந்திருந்தாலும் வாழக்கையே வெறுத்துப் போனது அப்போது தான். ஜனவரியில் நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை. நாங்கள் தங்கியிருந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் எல்லோரும் சேர்ந்து தண்ணீர் லாரியில் காசு கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தினோம். அதுவும் மகா மட்டமாக இருக்கும். கூவத்தின் ஓரத்தில் தெளிந்திருக்கும் தண்ணீரை எடுத்து வந்திருப்பானுங்களோன்னு நினைக்கத் தோணும். வெறும் ஒரு வாளித்தண்ணீரில் குளியல். ஒரு வாளித்தண்ணீரில் ஒரு வாரம் போட்டிருக்கும் உடைகளைத் துவைத்து அலசுவது என மகா கொடுமை.

அந்தக் கொடுமைக்கெல்லாம் விடிவு என்பது போல 2004ல் மழைக்காலத்தில் கொட்டித் தீர்த்தது மழை. ஊர் முழுவதும் வெள்ளமென்றாலும் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. அப்பொழுதிலிருந்து இதோ இப்போது வரை தண்ணீர்ப் பிரச்சினையெல்லாம் கிடையாது. தொடர்ந்து மழைபெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விட்டதால் வீடு வாடகையையும் கண்டமேனிக்கு உயர்த்தி விட்டார்கள். நாங்கள் இருந்த வீட்டின் தற்போதைய வாடகை 8500.

இந்த மழைக்காலத்தில் நான் இருக்கும் சூளைமேடு பகுதி எவ்வளவோ தேவலை. எப்பவும் போல வேளச்சேரி, மடிப்பாகம் பகுதிகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. வண்டியை வெளியில் எடுத்து 5 நாட்களாகிறது. ஸ்டெர்லிங் சாலை, கல்லூரி சாலைகளில் தண்ணீர் தேங்கிப் போய் நிற்கிறது. ஆச்சரியம் இவ்வளவு மழைக்குப் பிறகும் சூளைமேடு சப் வேயில் தண்ணீர் தேங்கவேயில்லை. கல்லூரி சாலையில் இருக்கும் அரசு அலுவலகங்கள், மகளிர் கிறித்தவக் கல்லூரி, சங்கர நேத்ராலயா போன்ற‌ கூறுகெட்ட குப்பைகள் உள்ளே தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றுகிறேன் என சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.

2000 ரூபாய் நிவாரணம் என அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் நிக‌ழ்ந்த‌து போல‌ திரும்ப‌வும் ஏதேனும் அச‌ம்பாவித‌ங்க‌ள் நிக‌ழ்ந்துவிட‌க்கூடாது. அர‌சு அலுவ‌ல‌கங்க‌ளுக்கு ம‌ட்டும் விடுமுறை என‌ ஒரு த‌லைப‌ட்ச‌மாக‌ ஆணை பிற‌ப்பித்த‌ அர‌சைக் க‌ண்டிக்கிறேன். ஏன் த‌னியார் அலுவ‌ல‌கங்க‌ளில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் நீச்ச‌லடித்தா அலுவ‌ல‌க‌ம் செல்ல‌ முடியும்? ;) . அடுத்த முறையாவது அளவோடு பெய்யட்டும் மழை.

வெயில், வேர்வையெல்லாம் இப்போ சென்னையில் இல்லையா எனக் கேட்கும் பெங்களூர் பெருமான்களே ஒரு வாரமா சென்னையில் ஓசி ஏசி தெரியுமா?

எப்பத்தான் உங்களுக்குப் புத்தி வரும்?


மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு அதற்குக் காரணமானவர்களை விட அதை முன் கூட்டியே தடுக்கத்தவறிய அரசாங்கத்தின் மீது தான் கடும் கோபம் வருகிறது. ஏற்கனவே சாமானியன் வாழமுடியாத நிலையை ஏற்படுத்திப் பெருமை தேடிக் கொண்ட இந்த அரசாங்கத்தால் எங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கையில் பயம் வயிற்றைக் கவ்வுவதை மறைக்கமுடியவில்லை.

புயல், மழை, சுனாமி பேரிடர்கள் என்றாலும் விதியின் பேரில் குற்றம் சொல்லிவிட்டு சும்மா இருக்கலாம். ஆனால் ரயில்நிலையம், ஹோட்டல் போகக்கூட மனதைரியம், உயிர் மேல் ஆசை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்யமுடியும்?

ஏற்கனவே இந்தியாவில் குண்டுவெடிப்பு நிகழாத முக்கிய நகரமே இல்லை என்னும் அளவுக்கு நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குப் பிறகும் இந்தக் கிழவர்களின் அரசாங்கம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றால் யாருடைய குற்றம் அது?

மும்பையை விட்டுத் தள்ளுவோம். தமிழகத்தில் பாதுகாப்பு கடந்த வார‌ம் வரை என்ன லட்சணத்தில் இருந்தது தெரியுமா? கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எப்பவும் பெயரளவுக்கு ஒரு சோதனை நுழைவு வைத்திருப்பார்கள். குண்டு வைப்பவன் தலைவாசல் வழியாகத்தான் வருவான் என்பது போல் எப்பவும் 5 போலீசார் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைப் போனவாரம் அங்கே காணவில்லை. காவலர்களும் இல்லை.

எழும்பூர் ரயில் நிலையத்தில் அதைவிட மோசம். பேருந்து நிறுத்தம் அருகில் கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டு பயணிகள் நடைமேடைக்கு சாலையிலிருந்து நேரடியாகப் போகுமாறு இருந்தது. அந்த இடத்தில் காவலர்களும் இல்லை. இவையிரண்டும் சில உதாரணங்கள்தான். தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலை என்றால் மதுரையில் கேட்கவா வேண்டும். மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் எடை தாங்காமல் சோதனை நுழைவாயில் கத்திக்கூப்பாடு போடுகிறது. அருகில் எந்த ஒரு காவலரும் இல்லை. இந்த மாதிரியான் ஓட்டை உடைசல் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு எப்போது முழுஅர்ப்பணிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நம்மவர்களுக்குத் தோன்றுமோ தெரியவில்லை.

இந்தியாவில் எல்லா இடங்களிலுமே இப்படித்தானா என்றால் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாகவே திருமலை திருப்பதியில் இருக்கிறது. மலையில் ஏறுவதற்குமுன் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி ஒவ்வொருவர் பைகளையும் சோதனை போடுகிறார்கள். பாதயாத்திரை செல்பவர்களுக்கும் முழுசோதனை நடக்கிறது. அத்தகைய பாதுகாப்பு எல்லா இடங்களிலும் இருந்தால் மட்டுமே இந்த மாதிரியான தாக்குதல்களைத் தடுக்கமுடியும்.

சந்திரனுக்கு விண்கலம் செலுத்தி மனிதனையும் அனுப்பும் திறமை வாய்ந்தவர்கள் இருக்கும் நாட்டில் கேவலம் பொது இடங்களில் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்றால் நம்மை ஆள்பவர்களின் முகத்தில் காறி உமிழத்தான் வேண்டும். :(

Sunday, November 09, 2008

WALL-E பார்த்துட்டீங்களா?


உலகம் 2800ல் எவ்வளவு நாஸ்தியாகிருக்கும் ? ரோபோவுக்கும் ரோபோவுக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் வால் ஈ படத்தின் கதை.

2800ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் குப்பையாகி மனித இனமே இல்லாமல் வெறிச்சோடிப்போய் எல்லோரும் பூமியைவிட்டே வெளியேறி வானவெளியில் ஒரு தனிஉலகம் அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். குப்பை என்றால் கொஞ்ச நஞ்ச குப்பை அல்ல. அனைத்தும் எலக்ட்ரானிக் குப்பை. மருந்துக்குக் கூட மரங்களே கிடையாது. எனவே குப்பைகளை எல்லாம் செங்கல்களை போல மாற்றி கோபுரம் கோபுரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி குப்பைகளைச் சேகரித்து அமுக்கி சதுரமாக, செங்கல்லாக மாற்றிக் கோபுரத்தில் ஏற்றும் பணி செய்யும் ஒரு குட்டி ரோபோட்தான் வால்‍-ஈ(wall-e).

மனிதர்கள் எல்லாம் பூமியை விட்டு வெளியேறிவிட்டாலும் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் தனக்கு இட்ட குப்பை பொறுக்கும் பணியை வால்-ஈ தொடர்ந்து செய்து வருகிறது. சுயமாக‌ சிந்திக்கும் அறிவும் நன்றாகவே உள்ளது. வால்-ஈ சூரியஒளி பேட்டரியால் இயங்கக் கூடியதால் அதற்குப் பகலில் மட்டுமே பணி. பணிக்குச் சென்று திரும்பியதும் ஓய்வெடுக்க ஒரு குப்பைலாரி கன்டெய்னர். அதைத் தன் வீடாகப் பயன்படுத்துகிறது. குப்பை பொறுக்கும் போது தனக்குப் பிடித்தமான அழகான பொருட்களை எல்லாம் சேகரித்து வீடு முழுவதும் அலங்கரித்து வைக்கிறது.

அப்படி ஒரு நாள் குப்பை பொறுக்கும் போது தான் திடீரென்று வானத்தில் இருந்து ஒரு ராக்கெட் வந்து பூமியில் வெள்ளை நிறத்தில் யாரையோ இறக்கி விட்டு விட்டுச் செல்கிறது. வேறு யார் கதாநாயகிதான். ஆம் அதுவும் ஒரு அழகான ரோபோட். வால்-ஈயைப் போல அல்லாமல் கொஞ்சம் பெரிய டால்பின் போன்று அழகான நடக்கும் ரோபோட். அதன் பெயர் ஈவா. ரொம்ப புத்திசாலி.

ஈவாவை வால்-ஈ மறைந்து மறைந்து நோட்டம் பார்க்கிறது. வால் ஈ தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்து விட்ட ஈவா டமால் என்று சுட்டுவிட பாவமாக வால்-ஈ ஈவா முன் வந்து நிற்கிறது. வால்-ஈ முந்தைய நூற்றாண்டு ரோபோட். ஈவா ப்ரெஷ் பீஸ். எனவே வால்-ஈயைப் பற்றி தானே ஸ்கேன் செய்து அறிந்து கொள்கிறது ஈவா.

இக்கட்டத்தில் வால்-ஈக்கு ஈவாவின் மேல் விருப்பு+காதல் வந்துவிட அதைத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் எல்லாப் பொருள்களையும் அதற்குக் காட்டுகிறது. அப்படித்தான் எடுத்து வைத்த ஒரு குட்டிச் செடியையும் வால்-ஈ ஈவாவுக்குக் காட்டுகிறது. அவ்வளவுதான் ஈவா அதைத் த‌டால் என்று பறித்து தன் உடலுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அந்த இடத்திலேயே தியானம் செய்வது போல் நின்றுவிடுகிறது. அசையவே இல்லை. வால் ஈக்கு ஒன்றும் புரியவில்லை. "ஈவா ஈவா" என்று கூப்பிட்டுப் பார்க்கிறது. ஈவாவின் உடலில் ஒரு பச்சைவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது.

திடீரென ஜடமாகிவிட்ட ஈவாவை வால்-ஈ வெயில், புயலிலிருந்து பாதுகாக்கிறது. சிலநாட்களில் ஈவாவைத் தேடி அதை விட்டுச்சென்ற ராக்கெட் வந்து அதை அழைத்துச் செல்கிறது. ஈவாவைப் பிரிய மனமில்லாத வால்-ஈ ராக்கெட்டில் புட்போர்ட் அடித்துத் தொங்கிக் கொண்டு செல்கிறது.

அந்த ராக்கெட் ஒரு கோள் மாதிரி இருக்கும் விணகலத்தின் உள்ளே செல்கிறது. அங்கே தான் மனிதர்கள் இருக்கிறார்கள் அதாவது பூமியிலிருந்து சென்றவர்கள். அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண‌ மனிதர்கள் இல்லை பரிணாம வளர்ச்சியில் எலும்புகள் எல்லாம் தேய்ந்து ரப்பர் ட்யூப் போன்ற கை கால்களை உடையவர்கள் (பரிணாமத் தேய்ச்சி?) . நடப்பதைக் கூட மறந்து போன எப்பவும் நாற்காலியில் அமர்ந்து உயிர் வாழ்பவர்கள். அவர்கள் உலகமே மிக மிக நவீனமானது. எல்லா வேலைகளுக்கும் ரோபோக்கள்தான்.

அந்த விண்கலத்திற்கும் ஒரு கேப்டன் உண்டு. அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி பூமிக்கு ரோபோக்களை அனுப்பி அங்கே மனிதர்கள் உயிர்வாழ சூழ்நிலை திரும்பிவிட்டதா என அறிவது. தலைமுறை தலைமுறையாக ரோபோக்கள் அனுப்பியும் இதுவரை பாசிட்டிவ் ரிசல்ட் இல்லை. ஆனால் இந்த முறை ஈவா அதைச் செய்திருக்கிறது. அதாவது பூமியிலிருந்து ஒரு தாவரத்தை அது எடுத்து வந்திருக்கிறது. எப்போது பூமியில் மனிதன் உயிர் வாழும் சூழ்நிலை வருகிறதோ அப்போது இவர்கள் எல்லோரும் பூமிக்குத் திரும்பிவிடவேண்டும் என்பது தான் கேப்டனுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.

தாவரங்கள் இருந்தால் கண்டிப்பாக மனிதர்கள் உயிர்வாழமுடியும் எனவே பூமிக்குத் திரும்பலாம் எனக் கட்டளை பிறப்பிக்க எண்ணும் வேளையில் அந்த விண்கலத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய ரோபோட் அதைத் தடுக்கிறது. அதை எப்படி கேப்டன், ஈவா, வால்-ஈ சேர்ந்து முறியடித்தார்கள் என்பது மிச்சக்கதை. (இப்பவே முக்கால்வாசி சொல்லியாச்சு, மிச்சத்தை டிவிடியில் பாருங்க :) )

படம் முழுவதும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன். வால்-ஈ யின் அப்பாவித்தனமான் செயல்கள் கலக்கல். ராக்கெட் பூமியை விட்டு வெளியே செல்லும் போது செயற்கைக்கோள் குப்பைகளை உடைத்துக் கொண்டு செல்லும் காட்சி சூப்பர். வால்-ஈ விண்கலம் முழுவதும் குப்பையாக்கி விட அதைத் துடைத்துக் கொண்டே துரத்தும் ரோபோ காட்சிகள் நல்ல நகைச்சுவை.

டிஸ்னி தயாரிப்பில் வந்திருக்கும் இந்தப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்.

Friday, November 07, 2008

கர்நாடக அரசுக்கும் சிங்கள அரசுக்கும் என்ன வித்தியாசம்?

கர்நாடகத்தில் ஒகேனக்கல் விட‌யம் தேர்தல் பிரச்சினையாக மட்டுமே பயன்படுத்தப்படும் தேர்தல் முடிந்ததும் காற்றோடு போய்விடும் என்று பார்த்தால் காவேரியை விட மிகப் பெரிய பிரச்சினையாகி வழக்கு, நடுவர் மன்றம் என்று இழுத்தடிக்கப்பட்டு திட்டம் பாடையில் ஏற்றப்படும் என்றே தோன்றுகிறது.

நேற்று கர்நாடக்த்தின் நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கொடுமையின் உச்சகட்டமாக ஒகேனக்கல் திட்டத்துக்கு நிதியுதவி செய்யும் ஜப்பான் வங்கிக்குக் கடிதம் எழுதி திட்டத்துக்கு ஆப்படிக்க இருப்பதாகக் கூறுகிறார். எவ்வளவு ஈனத்தனமான செயல் இது?? திட்டத்தில் சிக்கல் இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக ஜப்பான் வங்கி உதவிசெய்யாது என்றே தெரிகிறது.

ஆகக்கூடி ஒகேனக்கல் திட்டத்துக்குப் பால் ஊற்றும் வேளை வந்துவிட்டது என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஏனென்றால் மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே ஒகேனக்கல்லில் சர்வே நடத்த எப்படியோ அனுமதி வாங்கிவிட்டது கர்நாடக அரசு. தூங்குறீங்களா மதிப்பிற்குரிய 40 எம்பிக்களே, மத்திய அமைச்சர்களே, இணை அமைச்சர்களே??? இல்லை நாங்களும் காசு கொடுத்தாத்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்கிறீர்களா?

சர்வே நடத்த அனுமதி பெற்றபின் எடியூரப்பா சொல்கிறார் இப்போதுதான் முதன்முறையாக மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு கர்நாடக பாஜகவின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறதாம். எப்படியும் அடுத்த தடவை பாஜக ஆட்சிக்கு வந்தால் கர்நாடகம் மத்திய அரசின் செல்லப்பிள்ளையாகித் தொடர்ந்து தமிழகத்துக்குத் தொல்லைகள் கொடுக்கும்.

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று கூப்பாடுபவர்கள் ஒரு மாநிலம் அடுத்த மாநிலத்தை இப்படி குராதத்துடன் துரோகம் இழைப்பதையும் இதுதான் இந்திய இறையாண்மை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வார்களோ???

குறிப்பு : பின்னூட்டம் கூட போட முடியாத இடத்தில் இருந்து திருட்டுத்தனமாகப் பதிவெழுதுகிறேன். பதில் சொல்லலைன்னு கோவிச்சுக்காதீங்க நண்பர்களே !!

Sunday, November 02, 2008

சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் அடுத்த நூற்றாண்டிலாவது முடியுமா?

சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் 1996-97ம் ஆண்டுகளுக்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சேலம்‍-நாமக்கல்-கரூர் நகரங்களை இணைப்பதாகும். தற்சமயம் முக்கிய மாவட்டத்தலைநகரமான நாமக்கல் நகரத்தில் தொடர்வண்டிநிலையமோ இருப்புப் பாதையோ இல்லை.

இத்திட்டத்துக்கான அடிக்கல் அப்போதைய மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சர் நிதிஷ்குமார் அவர்களால் 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி நாட்டப்பட்டது.

இந்த இருப்புப்பாதையின் மொத்த தூரம் 85 கிமீ. இதனால சேலம், மல்லூர், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர் ஆகிய நகரங்கள் இணைக்கப்படும். திட்டத்துக்கான மொத்த செலவு 136 கோடி இந்திய ரூபாய்கள் ஆகும். இதில் முக்கியமாக காவேரி ஆற்றின் குறுக்கில் மோகனூரையும் வாங்க‌ல் ஊரையும் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்ட வேண்டும்.

தற்சமயம் தென்மாவட்டங்களிலிருந்து வரும் புகைவண்டிகள் சேலம் செல்வதற்கு கரூரிலிருந்து ஈரோடு சென்று அங்கிருந்து சேலம் செல்லவேண்டும். இதனால் கூடுதலாக 45கிமீ தூரமும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கூடுதலாகவும் ஆகும்.

சரி இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதே இந்தத் திட்டம் முடிந்து புகைவண்டிகள் ஓட ஆரம்பித்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. :(. காரணம் கூறுகெட்ட அரசாங்கம் செய்த ஒரு செயல் தான்.
இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலங்கள் ‍ பெரும்பாலும் விவசாயிகள் ‍ இடமிருந்து கையகப்படுத்தும் போது அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்க முன்வந்த தொகை-அதிகமில்லை ஜென்டில்மென்-ஒரு சதுராடிக்கு 0.63 பைசா. (இவனுங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?)

காவேரி ஆற்றுப் படுகையில் அமைந்திருக்கும் வளம் கொழிக்கும் நிலங்களை இப்படிக் கேவலமான் முறையில் விவசாயிகளிடமிருந்து பெற்று விடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் இதை எதிர்த்துப் பலரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்ததால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நாமக்கல் நீதிமன்றம் ஒரு சதுர அடி ரூ211 என்ற விலையில் அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. இருப்பினும் மேலும் சில வழக்குகளை விவசாயிகள் தொடர்ந்ததால் இத்திட்டம் காலவரையற்று ஒத்தி வைக்கப்பட்டு பல வருடங்களாக தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் ஏதும் நிதி ஒதுக்கப்படவில்லை.

கடந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சர் வேலு தெரிவிக்கையில் சுமுகமான முறையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஒரு சில அதிகாரிகளஇன் பொறுப்பற்றதனத்தால் தேவையில்லாத வழக்குகள் போடப்பட்டு திட்டம் தாமதமானதுடன் இன்னும் செயல்படுத்தப்படவும் இல்லை என்பதுதான் வருந்தத்தக்கது.

நாமக்கல், மோகனூர் சுற்றுவட்டார நண்பர்கள் வருத்தத்துடன் இத்தகைய தகவ்ல்களைத் தெரிவித்ததால் இதை எழுதும் எண்ணம் ஏற்பட்டது.

Tuesday, August 12, 2008

கன்னடத்துக்கு செம்மொழி - குறுக்கே நிற்கிறதா தமிழ்?

ಕನ್ನಡ


மீண்டும் ஓர் பெரிய சர்ச்சை. தமிழகப் பேருந்துகள் மறிப்பு, சரக்குந்துகள் மீது கல்வீச்சு என கர்நாடகம் திரும்ப ஆரம்பித்து விட்டது. காரணம் கன்னடம் செம்மொழி ஆகக் கூடாது என்று தமிழகத்தில் ஒரு தனிநபர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். கன்னடர்கள் கேட்பது "ஏன் உங்கள் தமிழ் மட்டும் தான் உசத்தியா? எங்கள் மொழிக்கெல்லாம் செம்மொழி மரியாதை தரக்கூடாதா?" என்று.

பிரச்சினை தமிழக அரசு தான் திட்டமிட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாகத் திசை திருப்பப்பட்டு கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் பாதிக்கப்படும் சூழல் வருவதற்கு முன் தமிழக அரசு "எங்களுக்கும் வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஒரு தனிநபர் தொடர்ந்த வழக்கு" என்று தெளிவான விளக்கத்தைத் தக்க காலத்தில் அளித்தது. இல்லையென்றால் இந்நேரம் கர்நாடகத்தில் எல்லாக் கட்சிகளும் மீண்டும் போர்க்கோலம் பூண்டிருக்கும்.

முதலில் செம்மொழி என்றால் என்ன? 2000 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் இருக்கும் மொழிக்குத்தான் செம்மொழி மரியாதை கிடைக்கும். இதற்கென்று மத்தியஅரசால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் அடங்கிய குழு பரிந்துரையை ஆய்வு செய்து செம்மொழி மரியாதையை வழங்கும்.

ஏற்கனவே தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாம் நம் தமிழ்மொழிக்கு இந்த அந்தஸ்து வழங்கப்பட்டு விட்டது. காரணம் சொல்லவா வேண்டும்? 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறள் உள்ளிட்ட நூல்களும், இலக்கியங்களும் கொட்டிக்கிடப்பதே காரணம்.

பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒருமுறை சொன்னார் "தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு அதன் தோற்றம் 2000 ஆண்டுகள் எனக் குறைக்கப்பட்டு விட்டது" என்று. உண்மைதான் திருக்குறள் உள்ளிட்ட இலக்கணப்பிழையின்றி எழுதப்பட்ட இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டிருந்தால் தமிழ் மொழி தோன்றியிருக்கும் காலத்தை வருடங்களால் கணக்கிடமுடியாது.

செம்மொழி மரியாதை கிடைப்பதால் என்ன லாபம்? சும்மா ஒரு கவுரவம் தான். இது போக தமிழ்மொழி ஆராய்ச்சிகள் நடக்க மத்திய அரசும் நிதியுதவி செய்யும்.

'அதற்காக தமிழும், கன்னடமும் ஒன்றா? தமிழையும் கன்னடத்தையும் ஒரே இடத்தில் வைத்துப் பார்ப்பதா? தமிழில் இருந்து தோன்றியது தானே கன்னடம்?' என்ற மனநிலையில்தான் ஒரு வழக்கறிஞர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

இருக்கலாம். கன்னடர்கள் அவர்கள் மொழியும் செம்மொழி ஆக வேண்டும் என விரும்புகிறார்கள். அதற்கான பரிந்துரையையும் செம்மொழி ஆய்வு மையத்திடம் வைத்திருக்கிறார்கள். அதை ஆய்வு செய்து செம்மொழி அந்தஸ்து வழங்கலாமா வேண்டாமா என்று அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.


எந்த மொழி செம்மொழி ஆனால் நமக்கென்ன? ஏற்கனவே தமிழ் செம்மொழி ஆகிவிட்டதே? கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நமக்கென்ன? தமிழின் பாரம்பரியமும் மதிப்பும் குறைந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. நம் மத்திய அரசு செம்மொழி என்று சொல்லித்தான் தமிழ் மிகவும் தொன்மைவாய்ந்த மொழி என்று உலகுக்குத் தெரியவேண்டிய அவசியம் இல்லை. நமக்குத் தெரியாமலே எத்தனையோ நாடுகளில் தமிழ் மதிக்கப்பட்டு வருகிறது.

இன்றும் நமக்குத் தெரியாத எத்தனையோ நாடுகளின் சிற்றலை வானொலி ஒலிபரப்பில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்தது ஒரு மணி நேரம் ஒலிபரப்பப்படுகின்றன. நயாகரா நீர்வீழச்சியின் வரவேற்புப் பலகையில் 'நல்வரவு' என்று தமிழில் எழுதியிருக்கிறார்கள். சொல்லப்போனால் பச்சைத் தமிழர்களான நாம் தான் அதன் அருமை தெரியாமல் இருக்கிறோம். மருந்துக்குக் கூட அம்மா, அப்பா என்று சொல்லாத எத்தனையோ பேர் சென்னையில் இருக்கிறார்கள்.

இது போன்ற தேவையில்லாத வழக்குகள் தமிழர்-கன்னடர் உறவை மேலும் மோசமாக்கும். எப்படா வாய்ப்பு கிடைக்கும் தமிழர்களை எதிர்த்துக் களம் இறங்கலாம் எனத் திரியும் நாராயணகவுடா,பிரவீன் ஷெட்டி தலைமையிலான கன்னட ரக்சன வேதிகே, வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவாளியா கட்சி போன்ற இனவெறி அமைப்புகளுக்கு நாமே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது போலவும் ஆகிவிடும்.

எனவே இந்த வழக்கு நமக்குத் தேவையில்லாத ஒன்று. காவேரி விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஒகேனக்கல் விசயத்தில் நாம் பாதிக்கப்படுகிறோம். நாம் எதிர்க்கிறோம். ஆனால் இந்தச் செம்மொழி விசயத்தில் தமிழுக்கோ, தமிழகத்துக்கோ, தமிழர்களுக்கோ எந்தவித இழப்பும் பாதிப்பும் இல்லை. வழக்குத் தொடர்ந்திருப்பவர் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றால் அது கர்நாடகத் தமிழர்களைப் பல பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும்.

தாய்மொழியைப் போற்றுவோம். பிற மொழியைத் தூற்றாமலிருப்போம்.

Friday, August 08, 2008

டிட் பிட்ஸ் 08-08-08

பீஜிங் ஒலிம்பிக்ஸ்



இன்னிக்குத்தான் பீஜிங் ஒலிம்பிக்ஸ் ஆரம்பிக்குது. இந்தியாவுக்கு எதாவது ஒரு பதக்கமாவது கிடைக்கனும்னு கடவுளை வேண்டிக்கிறேன். விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்காமலும், பேரளவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தையும் வைத்திருக்கும் நமது அரசாங்கத்துக்குக் கடும் கண்டனங்கள். இதனால்தாலன் 100 கோடி பேர் ஒரு வெண்கலப்பதக்கத்துக்கு வாயைப் பார்த்து நிக்கிற நிலமை இருக்கு. :(

குருவி + விஜய் + காமெடி = தொல்லை


சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டி மாதிரி ஒரு பார்வர்ட் மின்னஞ்சலில் வந்த குருவி காமெடியை யூட்யூபில் வலையேற்றிவிட அதைத் தொடர்ந்து விஜய்யின் விசிலடிச்சான் குஞ்சுகள் கொடுக்கும் பின்னூட்டத் தொல்லைகள் தாங்கமுடியவில்லை. கெட்ட வார்த்தையில் திட்டுவது முதல் 'மவனே உனக்கு சங்கு'தான்னு மிரட்டுறது வரை பின்னூட்டம் போட்டுக் கொல்லுகிறார்கள். நீங்களே பார்த்துட்டு சொல்லுங்க இந்த வீடியோவில் அப்படி என்ன தவறு இருக்கு??




வில்லு படம் ப்ளாப் ஆக பிரபுதேவாவுக்கு பாலாபிசேகம் செய்து வழிபடுவோமாக !

பாவம் + பரிதாபம் = நயன்தாரா



மறுபடியும் நயனைக் குறிவைத்து யாரோ ஒரு வலைப்பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டுவிட்டார்களாம். பாவம். அவருக்கு மட்டும் ஏன் தான் இவ்வளவு பிரச்சினைகளோ?

விஷாலுடன் சுற்றுவது பொறுக்காமல் கடுப்பான சிம்புதான் இந்த வேலையைச் செய்திருப்பார் என்று சொல்லாமல் இருந்தால் சரி. சைபர் கிரைம்ல புகார் கொடுங்க மேடம். யார்னு கண்டுபிடிச்சி முட்டிக்கு முட்டி தட்டிருவாங்க.

லிங்க் கொடுன்னு யாரும் எனக்குப் பின்னூட்டம் போட வேண்டாம்னு கேட்டுக்குறேன். ஏன்னா எனக்குத் தெரியாது. ;)

குசேலன் + ரஜினி = குப்பை



தமிழகத்தில் வசித்து வரும் ரஜினி என்ற கன்னடநடிகருக்கு யாராவது பபுள்கம் அல்லது ஆரஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுங்கள். வாய் நமநமன்னு இருக்கிறதால் தான் எதாவது வருத்தம், மன்னிப்புன்னு கேட்டு நம்ம உயிரை வாங்குகிறார். அவர் பின்னால் வால் பிடித்துத் திரியும் விசிலடிச்சான் குஞ்சுகள் திருந்தினால் சரி. ஒரே மகிழ்ச்சி குசேலன் குப்பை என்ற செய்தி. இப்படி சந்தோசப்படுவதால் நான் கமல் ரசிகர் என்று எண்ண வேண்டாம். நான் இன்னும் தசாவதாரம் பார்க்கவில்லை. :)


இன்னிக்குத் தேதி 08-08-08 இதே போல இன்னொரு நாள் வர இன்னும் ஒருவருசம் + ஒரு மாதம் காத்திருக்கணும். எனவே வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தநாளில் ஒரு பதிவைப் பதிஞ்சி வச்சிக்கலாம்னு ஒரு பதிவு. :)

Thursday, August 07, 2008

'சூப்பர்'மணியபுரம் !





மதுரை என்ற வார்த்தையைக் கேட்டவுடன் எனக்குள் ஓர் ஆர்வம் எப்பவும் தொற்றிக் கொள்வது உண்மை. அது ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. வாழ்க்கையின் முக்கியகட்டமான கல்லூரிக்காலத்தை நண்பர்களுடன் மதுரையில் கழித்ததால், அந்த நினைவுகளை மறக்கமுடியாமலும் திரும்பவும் அந்தக் காலகட்டத்துக்குள் செல்ல முடியாமலும், அதற்கான வடிகாலாக மதுரை குறித்த செய்திகள், திரைப்படங்கள் மேல் எப்பவும் ஆர்வம் காட்டுவதுண்டு.

அந்த வகையில் காதல் திரைப்படத்திற்கு அடுத்து சுப்ரமணியபுரம் என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. மதுரை என்றாலே மீனாட்சியம்மன் கோவில், தெப்பக்குளம், அண்ணே என்ற பாசச்சொல்லை மட்டும் காட்டாமல் அதற்கும் மேலாக முப்பது வருடங்களுக்கு முன்னிருந்த வாழ்க்கைமுறையையும், நமக்கு முந்தைய தலைமுறையின் இளமைக்கால வாழ்க்கையையும் திரையில் காட்டியிருப்பதற்காகவே இந்தப் படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம். 1980ம் காலகட்டம் இன்றைய அரைக்கிழவர்களின் இளமைக்காலம்.

படத்தைப் பாராட்டி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துவிட்டன. இந்தப்பதிவு படத்திற்கான விமர்சனம் இல்லை. இது போன்ற இயல்பான கதையமைப்பும், கவரும் அம்சங்களும் கொண்ட திரைப்படங்கள் மக்களிடம் வரவேற்பும், வெற்றியும் பெறும் போது நம்மை அறியாமல் நமக்குள் தோன்றும் ஒருவித மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.

  • ஐந்திலக்கத் தொலைபேசிஎண்
  • குழாய் ஒலிபெருக்கி
  • வஜ்ரதந்தி, காளிமார்க், டார்டாய்ஸ் விளம்பரங்கள்
  • ரப்பர் செருப்பு
  • பெல்பாட்டம் பேண்ட், நீளக்காலர் சட்டை
  • தாவணிப்பெண்கள்
  • பாண்டியன் நகரப்பேருந்து
  • கூடைச்சேர்
  • கதவு வைத்த பெட்டியில் இருக்கும் தொலைக்காட்சி
  • சித்ரஹார், ஒலியும் ஒளியும்

இவையெல்லாம் சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் கண்ணில்பட்ட்வை.

மொத்தத்தில் சுப்ரமணியபுரம் வீட்டிலிருக்கும் பழைய புகைப்பட ஆல்பத்தைப் புரட்டிப்பார்த்த உணர்வு !

தமிழ்த்திரையுலகில் எப்போதாவது வரும் இது போன்ற படங்களைத் திருட்டு விசிடியில் பார்க்காமல் தாராளமாகத் திரையரங்கில் சென்று பார்க்கலாம்.

இயக்குனர் சசிகுமார், ஒளிப்பதிவாளர் கதிர், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோருக்குப் பாராட்டுக்களும், நன்றிகளும் :)

உளியின் ஓசை, குருவி போன்ற சப்பையான படங்களை இன்னமும் முதலிடத்தில் வைத்து அழகுபார்த்துக்கொண்டு சுப்ரமணியபுரம் படத்துக்கு மூன்றாம் இடம் கொடுக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்குக் கண்டனங்கள்.

Wednesday, July 30, 2008

'அஞ்சாநெஞ்சன்' சம்சு !




சம்சு என்கிற சம்சுதீன் தான் நாங்கள் பள்ளியில் படிக்கும்போது எல்லா வகுப்புகளிலும் வகுப்புத்தலைவன் அதாவது க்ளாஸ் லீடர். தான் பிறப்பெடுத்ததே வகுப்பில் ஒழுக்கத்தைக் கட்டிக்காக்கத்தான் என்பது போல அவன் செய்யும் அலும்புகள் தாங்கமுடியாது.

க்ளாஸ் லீடரின் கடமைகளான காலையில் வருகைப்பதிவு எடுப்பது, கரும்பலகையைச் சுத்தம் செய்வது, தினமும் பதிவு=45 வருகை=43 மலர்=102 இதழ்=64 என்று எழுதுவது, பையன்களிடம் காசு வாங்கி வகுப்புக்குச் சொந்தமாகப் பிரம்பு (அப்பவே சொந்தச் செலவில் சூனியம்!), கரும்பலகையை அழிக்க டஸ்டர் வாங்குவது என அவன் வேலைப்பட்டியல் நீளும். இது போக நாங்கள் எல்லோரும் இரண்டாவது பீரியட் முடியவும் சூச்சூ போனால் அவன் மட்டும் வகுப்பில் அமர்ந்து காவல் காப்பான். அதாவது வேற வகுப்பு பையன்கள் யாரும் வந்து எதையும் திருடிரக்கூடாதாம் அதுக்காக. மேலும் எப்பவும் நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் வாங்குவதாலயும், வாத்தியார்கள் காலால் இட்ட வேலையைத் தலையால் செய்வதாலும் ஒவ்வொரு வருடமும் அவனே வகுப்புத்தலைவனாக வாத்தியாரின் ஒருமனதாக மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தான்.

சம்சுவின் நடவடிக்கைகளால் மிகவும் பாதிக்கப்பட்டது முதல் பெஞ்சில் அமர்ந்திருக்கும் நோஞ்சான் பசங்களான நான்,யோகானந்த் என்ற யோகு, பேரையூர் சுரேஷ் மற்றும் எங்கள் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் நண்பர்கள்தான். வகுப்பில் மூன்று வரிசைகளாகப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அதிலும் நடுபெஞ்சில் அமர்ந்திருக்கும் நாங்கள் தான் அவன் இம்சையினால் பாதிக்கப்பட்டது. நாங்கள் முதல்பெஞ்சில் அமர்ந்திருந்ததால் நன்றாகப் படிக்கிற பசங்க என்று தப்பால்லாம் நினைக்கப்படாது.

நான் குட்டை+சோடாபுட்டி வேறு. யோகுவும் சுரேஷும் அதே. அதான் காரணம். அப்படி என்னன்ன இம்சையெல்லாம் சம்சுவால் எங்களுக்கு வந்தது? வகுப்பில் ஒவ்வொரு பீரியட் முடிந்ததும் போர்டின் முன்னால் வந்து நின்று கொண்டு "டாய் யாரும் பேசாதீங்க. பேர் எழுதுவேன்" என்பான். பின்பெஞ்சில் கழுதை மாதிரிக் கத்திக்கொண்டிருப்பதெல்லாம் அவன் கண்ணுக்குத் தெரியாது.

நான் சுரேஷிடம் "இப்ப என்ன அறிவியல் பீரியடாடா?" அப்படின்னு மெல்லமாக் கேட்டால், கழுகு கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல என்பேரை போர்டில் எழுதிப்போட்டுவிடுவான். "டேய் இப்ப என்னடா அடுத்து என்ன பீரியட் அப்புடின்னுதான்டா கேட்டேன்" என்று வாக்குவாதம் பண்ணினால் மறுபடியும் என்பேரை எழுதிபோட்டுவிடுவான். அதாவது லீடர் சொல்லியும் கேட்காமல் பேசினேன்னு அர்த்தமாம். அடுத்து வரும் வாத்தியாரிடம் இரண்டு அடி வாங்கவேண்டும்.

இது பராவாயில்லை. போர்டு அழிக்க டஸ்டரைக் காணவில்லையென்றால் முதல் பெஞ்சில் இருக்கும் எங்கள் யார் நோட்டையாவது எடுத்து டர்ர்ர்ர்ன்னு பேப்பர் கிழித்து போர்டை கீச் கீச்னு சத்தம் வர அழிப்பான். நாங்கள்லாம் நோஞ்சான் வேறு. அவனை எதிர்த்து என்ன செய்யமுடியும்? சுரேஷ் ஒருமுறை நோட்டைக் கிழித்ததற்கு கெட்டவார்த்தையில் திட்ட அவன் பேரை போர்டில் எழுதி அடைப்புக்குறிக்குள் கெட்டவார்த்தை என்று எழுதிப்போட்டுவிட்டான். மாயா என அழைக்கப்பட்ட கணக்கு வாத்தியார் அடி பின்னிவிட்டார்.

விதியை நொந்துகொண்டு சம்சுவின் இம்சைகளைத் தாங்கிக் கொண்டிருந்தபோது ஒருநாள் காலையில் அறிவியல் பீரியட் பாதியில் எங்கள் வகுப்பு வாசலில் ஒருபையன் காக்கி பேண்ட், வெள்ளைச்சட்டை, டக்இன் செய்து பெல்ட் போட்டுக்கொண்டு "எக்ஸ்க்யூஸ்மி சார்!" அப்படின்னு கூப்பிட்டான். 'யாருப்பா இது துர இங்கிலீசெல்லாம் பேசுது'ன்னு நாங்க வாயைப் பொளந்து பார்க்க "மே ஐ கம் இன் சார்?" அப்படின்னு மறுபடியும் ஆங்கில ஆசிட்டை வீசினான்.

"என்னப்பா வேணும்?" - வாத்தியார்.

"சார் என் பேரு மணிகண்டன். புதுசா சேர்ந்திருக்கேன் சார்"

"சரி உள்ள வாப்பா". வந்தவன் எங்கள் பெஞ்சில் நெரித்துக் கொண்டு உட்கார்ந்தான். பீரியட் முடிந்ததும் சம்சிடம் "டேய் எங்களுக்கே இடம் இல்லை. இவனைப் போய் பின்னால உக்காரச் சொல்லுடா" னு சொன்னால், "போங்கடா .. எலிக்குட்டி மாதிரி எல்லாரும் இருந்துக்கிட்டு முழு பெஞ்சும் வேணுமா? அவன் இங்கதான் இருப்பான்னு" சர்வாதிகாரக் கட்டளை போட்டுட்டான்.

பின் மெதுவாக மணிகண்டனிடம் அவன் பூர்வீகம் விசாரிக்க, அவன் சென்னையில் ஆங்கில வழியில் படித்தவனாம். அவன் அப்பா வேலை பார்க்கும் இடத்தில் கோல்மால் பண்ணிவிட தண்ணியில்லாக் காடுன்னு எங்க ஊருக்கு அனுப்பிட்டாங்களாம். எப்பவும் அவன் தான் முதல் ரேங்க் வாங்குவானாம்.




விசயம் சம்சுக்குக் கேள்விப்பட்டு பேயடித்தது போலாகிவிட்டான். என்னடா இது நமக்குப் போட்டியா ஒரு படிக்கக்கூடிய பையன் வந்திருக்கானேன்னு ரொம்பவும் பயந்து போய்ட்டான். அவன் பயப்படறது தெரிஞ்சதும் நாங்க ஒரே குஷியாகிட்டோம். எப்பவும் மணிகண்டனோடவே சுத்துறது, ஒன்னா சேர்ந்துதான் வீட்டுக்குப் போறது ன்னு திரிஞ்சோம்.

நம்ம தான் 'ஏபிசிடி எங்கப்பன் தாடி' ன்னு ஆங்கிலம் பேசுற ஆளாச்சே! ஆனால் அவன் ஆங்கிலத்தில் பேசி , ஆங்கிலத்தில் வாய்ப்பாடு சொல்லி, ஆங்கிலத்தில் கெட்டவார்த்தை பேசி என ஆங்கிலத்தில் பொளந்து கட்டினான். சம்சுக்கு சரியான ஆப்புடா என நினைச்சிருந்தோம்.

அவனிடம் சம்சுவைப் பற்றி சொல்லியிருந்தோம். "டேய் நீ மாதப் பரிட்சையில சம்சுவை விடக் கூட மதிப்பெண் வாங்கி நீ இந்தக் க்ளாஸ் லீடரா வரணும்டா"ன்னு அடிவாங்கின கையைத் தடவிப் பார்த்துக்கொண்டே சொல்லிவச்சிருந்தோம். மணிகண்டன் வந்தால் எங்களுக்கு இனிமேல் வகுப்பில் எந்தத் தொல்லையும் இருக்காது என நம்பி அவனை நல்லா ஏத்திவிட்டுக்கிட்டிருந்தோம். அவனும் கவலையேபடாதீங்கடான்னு சொல்லியிருந்தான்.

இதுக்கிடையில் காண்டாகிப் போன சம்சு, மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்திவிட்டான். நாங்கள் அவனுடன் சுற்றுவதால் எங்களையும் பழிவாங்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் சாயங்காலம் மைதானத்தில் விளையாடி விட்டு வீட்டுக்குக் கிளம்புறப்போ தூங்குமூஞ்சி மரத்துக்குப் பின்னால இருந்து யாரோ அழுகிற சத்தம் கேட்டுச்சின்னு போய்ப் பார்த்தால் சம்சு அறிவியல் புத்தகத்தைத் தொறந்து வச்சிக்கிட்டு அழுதுக்கிட்டிருக்கான்.

ஒரு பேச்சுக்குப் போய் "ஏண்டா அழுற?"ன்னு கேட்க "பொத்திக்கிட்டுப் போங்கடா. உங்களுக்கென்ன?" ன்னான். இருந்தாலும் எங்களுக்கெல்லாம் அளவிடமுடியாத சந்தோசம். எல்லாம் மணிகண்டனை நினைச்சுப் பயந்து போய்தான் அழுகிறான்னு தெரியும். 'ங்கொய்யால எங்களையா திட்டுற? மவனே! மாட்டுனடி! இந்த மாசத்தோட உன்னோட லீடர் பதவி காலி!'ன்னு சந்தோசமா வீட்டுக்குப் போனோம்.

அடுத்த வாரம் மாதப்பரீட்சை எழுதினோம். மணிகண்டன் எல்லாப் பரீட்சையும் நல்லா எழுதியிருக்கிறதா வேற சொன்னான். சனி, ஞாயிறு விடுமுறை முடிஞ்சி திங்கள்கிழமை எல்லாருக்கும் திருத்தின விடைத்தாள்களைக் கொடுத்தார்கள். வரிசையாக ஒவ்வொரு மதிப்பெண்ணும் வரவும் எங்கள் மதிப்பெண்ணைப் பற்றிக்கூடக் கவலைப்படாமல் மணிகண்டன் மதிப்பெண்ணைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருந்தோம்.

அடப்படுபாவி!! இப்படி ஏமாத்திட்டியடா !! ஆங்கிலம் தவிர எல்லாத்திலயும் அவன் பெயில்!! திக்கித்திணறி 36 மதிப்பெண் வாங்கியிருந்தான் ஆங்கிலத்தில் !! எங்களுக்கே அவன் முகத்தைப் பார்க்கக் கூச்சமா இருந்தது, ஆஹா ! இவனைப் போய் நம்பி ஏமாந்திருக்கமே!! ன்னு ரொம்ப வருத்தமாப் போச்சு.

அதெல்லாம் விட, சம்சு வந்து அவனைக் கேவலமா ஒரு பார்வை பார்த்தான் பாருங்க .. கொடுமை. அடுத்த வினாடியே சம்சு வேலையைக் காட்ட ஆரம்பிச்சிட்டான்.

"டேய் மணிகண்டா நீ போய் கடைசி பெஞ்சுல உட்காருடா!"

"எதுக்குடா?"

"ம். மக்குப்பசங்கெல்லாம் அங்கதான் உட்காரணும்" அப்படின்னு தெனாவெட்டா சொன்னான். மணிகண்டன் எதுவும் பேசாமல் எழுந்து போய்விட்டான்.

என்னது? அப்புறம் நாங்க என்ன பண்ணினோமா?? வாலைச் சுருட்டிக்கிட்டு நம்மளே நல்லாப் படிச்சி முதல் மதிப்பெண் வாங்கி க்ளாஸ் லீடர் ஆகிரணும்னு மனசுக்குள்ள நினைச்சிக்கிட்டோம்.

Monday, June 23, 2008

(கு)ரங்கும் ஜிலேபியும்


நானானி என்னை ஜிலேபி பிழியச் சொல்லியிருந்தாங்க. பதிவுகள் படிக்கிறதும் கொஞ்சம் குறைஞ்சதால எனக்கு இது என்ன விளையாட்டுன்னே புரியல. சரி ஜிலேபி பத்தி ஒரு மொக்கை போடணும்னு நானாகவே முடிவு பண்ணிக்கிட்டு ஒரு மொக்கைக் கதை.

பெண்பார்க்க வந்திருந்த பிள்ளை வீட்டுக்காரர்களுக்கு மங்களம் மாமி இனிப்பு வகைகளைக் கொடுத்து உபசரித்துக் கொண்டிருந்தாள். சன்னலில் ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த பாமாவுக்குப் பையனைப் பிடித்திருந்தது. சட்டென மங்களம் உள்ளே வந்து "பாமா, இதை மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்குக் கொடும்மா" என்று காபி கோப்பைகள் இருந்த தட்டைத் தந்து விட்டுப் போனாள்.

குனிந்த தலை நிமிராமல் எல்லோரிடமும் காபி கோப்பைகளைக் கொடுத்த போது தான் கவனித்தாள். தன் அம்மா அவர்களுக்குப் பரிமாறிய இனிப்பு வகையறாக்களில் ஜிலேபியும் இருந்தது. உள்ளே வந்த பாமா அம்மாவைப் பார்த்து மெதுவாக அழுத்தமாகக் கேட்டாள்.

"ஜிலேபியை எதுக்கு அவுங்களுக்குக் கொடுத்தாய்?"
"ஏண்டிம்மா? நீதானே அவங்களுக்குக் கொடுக்கலாம்னு நேத்து இனிப்புப் பண்டமெல்லாம் வாங்கிண்டு வந்தாய்?"
"வந்தேன். ஆனால் நான் ஜிலேபி வாங்கிண்டு வரலை"
"அப்புறம் மேசையில் தட்டில் இருந்த ஜிலேபி??"

பாமா மங்களத்தின் காதில் சொன்னாள்.
"அடிப்பாவி இப்படியா செய்வாய்?" மெதுவாக கூடத்தை எட்டிப் பார்த்துவிட்டு "ஐயையோ மாப்பிள்ளைப் பையன் வேறு ருசிச்சி சாப்பிடுறானேடி!!!" என்று பதட்டப்பட்டாள்.

சற்று நேரத்தில் எல்லாப் பேச்சு வார்த்தையும் முடிந்து, பெண்ணைப் பிடித்திருக்கிறதென்று சொல்லிவிட்டு பிள்ளையாண்டானின் அப்பா பாமாவிடம் "குழந்தே! ஜிலேபி நீயே செய்தாயோ? ரொம்ப நன்னாயிருந்தது"ன்னு சொன்னதும் பாமாவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

ல்யாணம் முடிந்து ஒரு மாதம் ஆனதும் கணவன் ஸ்ரீதர் பிறந்தநாள் வந்தது.

"ஏண்டி என் பிறந்தநாளுக்கு நீ ஜிலேபி செஞ்சு தர்றியா? உன்னைப் பெண் பார்க்க வந்திருந்தபோது சாப்பிட்ட ஜிலேபி இன்னும் தொண்டையிலேயே இருக்கிறதடி. நீதானே செய்தாய் அந்த ஜிலேபியை? ஜிலேபி செய்யணும்னா நம்மகிட்டே மாவு பிழிய உரல் இல்லியே?"

"பரவாயில்லை. பண்ணிரலாம்"

"உரல் இல்லாம எப்படிப் பண்ணுவாய்? இடியாப்ப உரலில் பண்ணலாம்னு சொல்றாயோ? ஜிலேபி ரொம்ப ஒல்லியா வருமோன்னோ?"

"அசடாட்டம் பேசாதேள். சர்க்கரைப் பாகு தயார் பண்ணிட்டாப் போதும். நீங்க கடையில் போய் ஒரு இருபது முறுக்கு மட்டும் வாங்கிண்டு வாங்கோ. கொஞ்சம் கட்டையா இருக்கிறதா வாங்கிண்டு வாங்கோ"

"முறுக்கு எதுக்கு இப்போ? ஜிலேபிதானே வேணும்னு கேட்டேன்"

"ஐயோ! ஜிலேபி செய்யத்தான் முறுக்கு"

"புரியறமாதிரி சொல்லேண்டி"

"ஈஸ்வரா! எனக்கு ஜிலேபியும் செய்யத் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. நீங்க என்னைப் பெண் பார்க்க வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னால தீபாவளிக்குப் பண்ணின முறுக்கும், குலோப்ஜாமூன் செய்து மிஞ்சிய சர்க்கரைப்பாகும் மீதமிருந்தது. பக்கத்து வீட்டு வாண்டு ரங்கு அதையெல்லாம் பாகுல போட்டு ஊற வச்சுட்டான்.அதைப் போய் எங்கம்மா ஜிலேபின்னு எடுத்து உங்களுக்குக் கொடுத்துட்டா. நீங்களும் அந்த ஜிலேபியைப் போய் ஆஹா ஓஹோ புகழ்றீங்களே?"

ஸ்ரீதர் முகத்தில் ஈயாடவில்லை.

Wednesday, June 18, 2008

மதுரை-திருப்பரங்குன்றம்-அழகர்கோவில்-பழமுதிர்ச்சோலை-பதிவர் சந்திப்பு

'கடுமையான உழைப்புக்குப் பின் வெற்றி' அப்படின்னு பழமொழி சொல்வாங்க. ஆனால் 'கடும் உழைப்புக்குப்(சரி.. சரி..) பின் விடுமுறை' அப்படிங்கிறதே எப்பவும் நம்ம கொள்கை. கடந்த இரண்டு மாதங்களாக வாட்டி வதைத்த ப்ராஜெக்ட் வேலை மே மாத இறுதியில் முடிவுக்கு வந்ததை அடுத்து "ஒரு வாரம் விடுப்பு வேணும்.குடுக்கலைன்னா எடுத்துக்குவேன்"ன்னு மிரட்டியிருந்ததால் விடுப்பு கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இல்லை.

ஒரு சின்ன ப்ளாஷ் பேக். ரெண்டு மாதம் முன்னாடி தூங்கிறப்போ கனவில் கையில் வேலோட முருகனும், அவர் மாமன் அழகரும் வந்து "ஏம்பா, ரெண்டு வருசம் மதுரையில் படிச்சியே எங்களை ஒரு தடவையாவது வந்து எட்டிப் பார்த்தியா? வாராவாரம் அல்வா வாங்கித் திங்கிறதுக்காகவே டவுன்ஹால் சாலை வழியா மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போன நீ அல்வா கிடைக்காதுங்கிறதுக்காக திருப்பரங்குன்றத்துக்கும், அழகர்கோவிலுக்கும் வராம டபாய்ச்சல்ல.. பாரு உனக்கு விடுப்பு கிடைக்காது" அப்படின்னு சொன்னதால "அப்படியெல்லாம் இல்லீங்கோ. நான் கூப்பிட்டப்போ துணைக்கு யாரும் வரமாட்டேன்னு சொன்னதால வரமுடியலீங்கோ. எனக்கு விடுமுறை கிடைச்சா கண்டிப்பா வந்து பார்க்கிறேன்"னு வாக்கு கொடுத்துட்டேன்.

கோவில் குளம்னு கூப்பிட்டாலே கம்பளிப் பூச்சியைப் பார்க்கிற மாதிரி நண்பர்கள் பார்க்கிறதால இப்பவும் தனியாகவே போக வேண்டிய சூழ்நிலை ஆகிப் போச்சு. சரியா இந்த நேரத்துல புரட்சிப்பதிவர் டிபிசிடி வேற மதுரையில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணியிருக்கேன்னு சொன்னதை நம்பி அதையும் என் பயணத்திட்டத்தில் சேர்த்துக்கிட்டேன். ஒரே கல்லில் ஏகப்பட்ட மாங்காய் அடிக்க முடிவு பண்ணியாச்சு.


கிடைச்சது 9 நாட்கள் விடுமுறை. ஜூன் 7 முதல் 15 வரை. விடு ஜூட். விடுப்புக்கு முதல் நாள் நான் வேலையே பார்க்கலை. எல்லோர்கிட்டயும் போய் "நான் ஊருக்குப் போறேன். ஒரு வாரம் லீவு" அப்படின்னு பீத்திக்கிட்டே திரிஞ்சேன். ரொம்ப பேர் காண்டாகிட்டாங்க. வரும்போது எதாவது திங்கிறதுக்குக் கொண்டு வா. (அட உங்களுக்கெல்லாம் வேற ஒன்னுமே தெரியாதாப்பா? ஊருக்குப் போனா எதாவது திங்க கொண்டு வரணும்னு எவன் சட்டம் போட்டான்?). ஒரு வழியா மதுரை பெரியார் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது அதிகாலை மணி 2. டவுன் ஹால் சாலையில் அலைஞ்சு திரிஞ்சு ஒரு விடுதியைக் கண்டுபிடித்து தூங்க ஆரம்பிச்ச போது மணி 2:30.

என் திட்டம் இது தான். முதலில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம். பின்னர் திருப்பரங்குன்றம். அடுத்து அழகர் கோவில். அதற்கப்புறம் மலை மேல் பழமுதிர்ச்சோலை மற்றும் இராக்காயி அம்மன் கோவில் தரிசனம்.

மீனாட்சி அம்மன் கோவில்
சீக்கிரமே மீனாட்சி அம்மன் கோவில் போகணும்னு முடிவு பண்ணியதால் வெறும் இரண்டரை மணி நேரம் மட்டுமே தூக்கம் போட்டேன். காலை 6 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் கூட்டமே இல்லாத தரிசனம். அம்மன் சன்னிதியிலேயே கூட்டம் இல்லை. சுவாமி சன்னிதியில் விழாக்காலங்களிலே கூட கூட்டம் இருக்காது. அதுவும் நான் சென்ற போது கூட்டமில்லாமல் ஒரு தரிசனம். பின்னர் பரிவாரங்களை வணங்கிவிட்டு வெளியில் வந்து தெப்பக்குளப் படிக்கட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்தாயிற்று.


மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால் கோபுரம் முழுவதும் தென்னை ஓலையால் மூடிவைத்திருந்தார்கள். கோவிலுக்கு வெளியே சித்திரை வீதி முழுவதும் சாலையைப் பெயர்த்துப் போட்டிருந்தார்கள். வாகனப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. காலையில் சாலையோரக் கடையில் மதுரை ஸ்பெசல் சுடச் சுட இட்லி சாப்பிடலாமென்றால் என் நேரம் ஒரு கடையும் தென்படவில்லை. சரின்னு வெறும் வயிற்றோடவே திருப்பரங்குன்றம் பேருந்து ஏறிய போது மணி 7:30.

திருப்பரங்குன்றம்
பெரியாரிலிருந்து கால் மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் வந்து விட்டேன். முருகனின் முதல் படை வீட்டைத் தரிசிக்கப் போறோமே, கடவுளை நினைத்துக் கொண்டே செல்லணும் என்று 'சேவல் கொடி பறக்குதடா சேர்ந்து இடி இடிக்குதடா' என்ற முருகன் துதியைப் பாடிக்கொண்டே கோவிலுக்குள் வந்து சேர்ந்தேன்.


திருப்பரங்குன்றம் கோவில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. கோவிலின் அமைப்பு ரொம்பவே வித்தியாசமானது. மலைதான் கோவிலின் ஒரு பக்கம். அதில் செதுக்கப்பட்ட சிற்பங்கள்,சிலைகளைச் சுற்றிக் கோவில் கட்டியிருக்கிறார்கள். கோவில் இரண்டு தளங்களாகக் கட்டப்பட்டுள்ளது. முதல் தளத்தில் நந்தி, மயில், எலி வாகனங்களின் சிலைகள் உள்ளன. அவற்றுக்கு எதிரே இரண்டாவது தளத்தில் முருகர், துர்க்கை, விநாயகர், முருகனுக்குப் பக்கவாட்டில் பெருமாளும், விநாயகருக்குப் பக்கவாட்டில் சிவனும் உள்ளனர்.

துர்க்கைக்கு சன்னிதிக்கு நேரேதான் ராஜகோபுரம் உள்ளது. முருகர் துர்க்கைக்குப் பக்கவாட்டில், தெய்வானையுடன் பக்கவாட்டில் சிற்பமாகக் காணப்படுகிறார். முருகனுக்கு அருகில் ஒருவர் தாடியுடன் உள்ளார். நாரதர் என்று குருக்கள் சொன்னார், அது தவறு இந்திரன் அல்லது அகத்தியராக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். இங்கும் கூட்டமில்லை. ரொம்ப நேரம் நின்று வணங்கிய பிறகு தெப்பக்குளம் மற்றும் கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியில் வந்தால் ஒரு அக்கா தெருவோரத்தில் இட்லி சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். வெறும் ஐந்து ரூபாய்க்கு சில பல இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு திரும்பவும் பெரியார் நிலையம் வந்து சேர்ந்தேன்.

அழகர் கோவில்
அங்கிருந்து பேருந்தில் அழகர் கோவிலுக்கு வந்து சேர்ந்த போது மணி 10:15. சுற்றிலும் பச்சை பசேல் என்று மலை. மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவில். உள்ளே சென்றால் கோவிலின் வெளியே முதலில் வருவது பதினெட்டாம்படி கருப்பசாமி சன்னிதி. இங்கு சாமிக்கு சிலை கிடையாது. மூடப்பட்ட கதவில் சந்தனம் பூசப்பட்டு அதையே கருப்பசாமியாக வழிபடுகிறார்கள். ஏன் என்ற காரணமும், வரலாறும் தெரியவில்லை. ரொம்பவும் சக்திவாய்ந்த கடவுள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
வெளியே



உள்ளே


மிகுந்த பயபக்தியோடு வணங்கிவிட்டு அழகர் கோவிலின் உள்ளே சென்றால் இங்கும் கூட்டமில்லை. சனிக்கிழமையாதலால் பூஜைகள் நடந்து கொண்டிருந்ததன. கொஞ்ச நேரத்தில் அது முடியவும் அழகரையும் தரிசித்துவிட்டு பிற சன்னிதிகளையும் தரிசித்து விட்டு வெளியில் வந்தால் நம் முன்னோர்களின் குறும்பு. பூஜை முடிந்து வாழைப்பழம் வைத்திருந்தவர்களையெல்லாம் விரட்டிக் கொண்டிருந்தனர்.

பழமுதிர்ச்சோலை

அழகர்மலையின் மேலே முருகனின் ஆறாவது படைவீடான பழமுதிர்ச்சோலை உள்ளது. இங்கு செல்வதற்கு அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பாக சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பதியில் இருப்பது போல. மலைப்பாதையில் பத்து நிமிடப் பயணம். பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் இறக்கிவிடுகிறார்கள். இந்த முருகன் கோவில் கொஞ்சம் சிறியது தான். விநாயகர், முருகர், பெருமாள் சன்னிதிகள் மட்டுமே உள்ளன.

இராக்காயி அம்மன் கோவில்

பழமுதிர்ச்சோலையில் இருந்து அதே மலைச்சாலையில் ஒரு பத்து நிமிடம் நடந்தால் நூபுரகங்கை எனப்படும் வற்றாத தீர்த்தக்கிணறு மற்றும் அதை ஒட்டி இருக்கும் இராக்காயி அம்மன் கோவிலையும் தரிசிக்கலாம். எல்லோரும் தீர்த்தக் கிணற்றில் குளித்து விட்டு வந்து தரிசிக்கிறார்கள். நான் தலையில் தெளித்துக் கொண்டு இராக்காயி அம்மனை தரிசித்துவிட்டு வெளியில் வந்ததும் என் புயல்வேக ஆன்மீகப் பயணம் முடிவுக்கு வந்தது. அப்போது மணி 12:10.

வௌவால் தெரியுதா?



அழகர்மலையின் அழகிய தோற்றம்



திரும்பவும் மலையில் இருந்து இறங்கி அழகர்கோவில் சென்று பின் பெரியார் நிலையத்தில் இறங்கி, சாப்பிட்டு விட்டு டவுன்ஹால் சாலை பிரேமாவிலாஸில் அல்வா சாப்பிட்டுவிட்டு விடுதிக்குச் சென்று பேய்த்தூக்கம் போட்டேன்.

மதுரையில் கண்ட மாற்றங்கள்
1. பண்பலை வானொலிகள்
2. மாற்றம் செய்யப்பட்ட பெரியார் நிலையம் மற்றும் புதிய மேம்பாலம்
3. ஏகப்பட்ட ஏர்பஸ்கள். இரண்டுமடங்கு கட்டணம்.
4. தங்கரீகல் திரையரங்கு மாற்றம் செய்து கட்டப்படுகிறது. DTS,ACயுடன்.
5. டவுன்ஹால் சாலையில் ஒரு தேநீர் 4 ரூபாய். அநியாயம்.

என்றும் மாறாதது
வாங்கண்ணே என்னும் மக்களின் அன்பு. (ஐஸ் ஐஸ்... நானெல்லாம் உங்களுக்கு அண்ணனா? எப்பவும் அன்புத்தம்பிதேன்)

பெருமாள் தெப்பம் - டவுன்ஹால் சாலை

இந்த அழகான தெப்பக்குளம் நேதாஜி சாலைக்கும் டவுன்ஹால் சாலைக்கும் இடையில் இருக்கிறதென்றால் நம்பமுடிகிறதா? தெப்பக்குளத்தைச் சுற்றி ஆக்கிரமித்து விட்டதால் இப்பொழுது தெப்பக்குளத்துக்குப் போக வழியே கிடையாது.

சின்ன சந்தேகம்
ஏன் அழகர்கோவில் கருப்பசாமி சன்னிதியில் சிலை வழிபாடு இல்லை? யாருக்காவது தெரியுமா?

பதிவர் சந்திப்பு
மதுரை வந்ததிலிருந்தே பதிவர் டிபிசிடியின் நடவடிக்கைகள் மர்மமாகவே இருந்தன. முதலில் நான் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வேன் என்று சொன்னபோது என் கைப்பேசி எண்ணை வாங்கி வைத்துக் கொண்டு திடீரென்று ஒருநாள் "நான் டிபிசிடி பேசுறேன். இது தான் என் கைப்பேசி எண்" என்று சொல்லிவிட்டு நான் "அப்புறம்" என்பதற்குள் டீங் டீங் டீங். தொடர்பைத் துண்டித்துவிட்டார். அப்புறம் இரண்டு நாட்களாக பேச்சு மூச்சைக் காணோம்.

சந்திப்புக்கு முதல் நாள் தொலைபேசி "எங்க சந்திப்பு நடத்துறீங்க?"ன்னு கேட்க "நாளைக்கு சந்திப்புக்கு நாளைக்குத்தான் முடிவு பண்ணனும்" அப்படின்னு மர்மச்சிரிப்பு சிரிக்கிறார். கொஞ்ச நேரத்தில் அவரிடமிருந்து குறுஞ்செய்தி.'நான் அவசரமாக போடி போகிறேன். என்னால் உங்களைச் சந்திக்க முடியாது' என்று. பின்னூட்ட பாணியில் ஒரு சோக ஸ்மைலியை அவருக்கு குறுஞ்செய்தியில் அனிச்சையாக அனுப்பிவிட்டேன்.

ஆகக் கூடி சந்திப்பு இருக்குன்னு ஆசையைக் கிளப்பிவிட்டு கடைசியில் எஸ்ஸாகிப் போன டிபிசிடியின் நடவடிக்கைகளில் சந்தேகமும் ஒரு வித பதற்றமும் இருப்பதால் எதற்கும் மலேசியா காவல்துறை அவர்மேல் ரெண்டு கண்ணையும் வைப்பது நல்லது. சந்திப்பு இல்லாததால் சாவகாசமாகக் கிளம்பி இரவு ஊருக்கு வந்து சேர்ந்தேன்.

Wednesday, May 07, 2008

குவெஸ்ட் நெட் மோசடி! மென்பொருள்துறையினர் பாதிப்பு!


'குவெஸ்ட் நெட் (Quest Net முன்பு Gold Quest)' தங்கக் காசு மல்ட்டி மார்கெட்டிங் ஏமாற்று வேலை அம்பலமாகிவிட்டது. இப்போது தான் எல்லோரும் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். காவல்துறை கண்டிப்பாக எல்லோருக்கும் போட்ட பணம் திரும்பக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருக்கிறது.

இதில் பணம் போட்டு ஏமாந்தவர்கள் பெரும்பாலோனோர் கணினி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள். ஆனால் இவர்கள் அனைவரும் வெளிப்படையாக புகார் தெரிவிப்பது கடினம் தான். ஏனென்றால் இந்தப் பணம் இவர்களுக்கு ஒரு மாதம் அல்லது அரைமாதச் சம்பளம் தான்.

சரி. இது என்ன முறைகேடு என்பதைப் பார்க்கலாம். குவெஸ்ட் நெட் என்பது ஒரு பன்னாட்டு மல்ட்டி மார்க்கெட்டிங் நிறுவனம். இதன் தலைமை அலுவலகம் ஹாங்காங்கில் உள்ளது. இவர்களது தங்கக்காசுத் திட்டத்தில் சேர முதலில் 33000 ரூபாய் கட்ட வேண்டும். (முதலில் குறைவாக இருந்திருக்கலாம். அல்லது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கட்டணம் வசூலித்திருக்கலாம். பெங்களூரில் வசூலித்த தொகை 33,000). அதற்குப் பதில் அவர்கள் ஒரு தங்கக்காசு அல்லது சில வெள்ளிக்காசுகள் கொடுப்பார்கள். அந்தக் காசு உலகில் வேறு எங்கும் கிடைக்காது. அந்தக் காசின் உருவம்,வடிவத்தை இவர்கள் பதிவு செய்து வைத்திருப்பார்கள். எனவே இந்தக் காசை வெளியில் யாரும் போலியாகத் தயாரிக்க முடியாது(!?).

இந்தக் காசுகளை நாம் இணைய தளத்தில் விற்கலாம். வாங்குவதற்கு வெளிநாட்டு மக்கள் அலைமோதுவார்களாம். ஏனென்றால் அந்தக் காசு வேறு எங்கும் கிடைக்காதாம். இப்படியெல்லாம் முதலில் அவர்களது அறிமுகக் கூட்டத்தில் சொல்வார்கள். அதன் பின்னர் நாம் நமக்குக் கீழே 3 பேரை இந்தத் திட்டத்தில் சேர்த்து விடவேண்டும். அப்படி சேர்த்து விட்டால் அதற்கான கமிசன் தொகை நமக்குக் கிடைக்கும். அது போக அவர்களுக்குக் கீழே ஆட்கள் சேரச்சேர அதற்கான கமிசன் தொகையும் நமக்குக் கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.

அந்தக் காசை இணைய வர்த்தகத்தின் மூலம் மட்டுமே விற்க முடியும். அதன் எடை வெறும் 6கிராம்தான். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் 33,000 கட்டிவிட்டு நம்மால் மூன்று பேரை சேர்த்துவிட முடியாவிட்டால் வெறும் 6கிராம் காசோடு திருப்திப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான். மிச்சப்பணம் அவ்வளவுதான். கேட்பதற்குச் சுலபமான வழியாகத் தெரியும், மூன்று பேரைச் சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

இதன் அறிமுகக் கூட்டமே பயங்கர பரபரப்புடன் நடக்கும். முதலில் நவநாகரீகமான இளைஞர்கள், இளைஞிகள் மேடைக்கு வந்து "நான் அந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், இந்தக் கம்பெனியில் வேலை பார்க்கிறேன், போன வருசம் இந்தத் திட்டத்தில் சேர்ந்தேன், இப்போ வாராவாரம் எனக்கு 30,000 கமிசன் கிடைக்கிறது, நான் கூட முதலில் யோசித்தேன் இதில் சேரலாமா என்று ஆனால் இன்று நான் கோடீஸ்வரி, நீங்கள் ஆக எப்போ பணக்காரர் ஆகப் போகிறீர்கள்?, இப்போ கூட நான் விமானத்தில் தான் இங்கு வந்தேன். போனவாரம் நான் ஹோண்டா சிட்டி கார் வாங்கினேன் நீங்களும் வாங்க வேண்டாமா? கையில் வெறுமனே காசை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றெல்லாம் விடுதியில் லேகியம் விற்கும் போலி மருத்துவர்கள் போல மூளைச் சலவை செய்வார்கள்.

இதில் வெளிப்படையாகத் தெரியும் குளறுபடிகள் என்னென்ன?
1. ஒரு சாதாரண தங்கக்காசினை வாங்குவதற்கு இணையத்தில் எப்படி மக்கள் இவ்வாறு போட்டி போடுவார்கள்?

2. நமக்குக் கீழே இருப்பவர்கள் ஆள் சேர்த்துவிட்டால் நமக்கும் கமிசன் கிடைக்கும் என்பதை எப்படி நம்புவது? நமக்குக் கீழே இருப்பவர்கள் ஆள் சேர்த்துவிடுவது நமக்கு எப்படித் தெரியும்?

3. இந்தத் திட்டத்தில் யாரும் நேரடியாகச் சேரமுடியாது. யாராவது உறுப்பினராக இருந்தால் அவர் மூலம் மட்டுமே இந்தத் திட்டத்தில் சேர முடியும். இதன் மூலம் நிறுவனத்துக்கும் சேருபவருக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் போய்விடுகிறது.

இப்போது இத்திட்டத்தில் சேர்ந்த எல்லோருமே யாரைக் கேட்பதென்று தெரியாமல் தம்மைச் சேர்த்துவிட்ட நண்பர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தக் காசின் தற்போதைய மதிப்பு EBayல் 80,000 ரூபாயாம். (யாராவது உறுதிப்படுத்துங்க). எனது நண்பர்கள் வட்டத்தில் மட்டும் இதில் 6 பேர் ஏமாந்திருக்கிறார்கள். அதில் ஒருவனுக்கு மட்டுமே தங்கக்காசு அனுப்பப்பட்டிருக்கிறது. வேறு யாருக்கும் வரவில்லை. அனைவரும் மென்பொருள் துறையில் இருப்பவர்கள். இந்த நிறுவனம் மூடப்பட்ட செய்தியே பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. விசயம் கேள்விப்பட்டும் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் பணம் மட்டுமே போயிருக்கிறது.

இன்னமும் 'இந்த நிறுவனம் நல்ல நிறுவனம், இதைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள், எனக்கு போனவாரம் கூட செக் வந்தது காட்டட்டுமா?' என்றெல்லாம் சிலர் இணையத்தில் சவால் விடுகிறார்கள். அவர்களுக்குச் சில தகவல்கள்

1. காவல்துறையிடம் நிறுவனத்தைப் பற்றிப் புகார் கொடுத்ததும் அதன் சென்னை கிளை தலைமை நிர்வாகி(கூட்டத்தலைவன்?) ஹாங்காங் சென்று மாயமானது ஏன்? சட்டப்படி பிரச்சினையை எதிர் கொண்டிருக்கலாமே? இந்நிறுவனம் 2003லேயே ஒருமுறை மோசடிக்காக மூடப்பட்டு சீல்வைக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

2. இந்த நிறுவனம் பிலிப்பைன்ஸ், நேபாளம், இலங்கையில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதாம். இந்நிறுவனத்தின் உரிமையாளரை சர்வதேச காவல்துறை தேடி வருகிறது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிறுவனம் திரும்பவும் ஜெகஜ்ஜோதியாகத் திரும்பவும் கடை(வலை?) விரிக்கிறதென்றால் நம் சட்டம் அவ்வளவு எளிதில் ஏமாற்றப்படக் கூடியதா? :(

தொடரும் இது போன்ற மோசடிகளுக்கு யார் காரணம்?

சட்டம் சரியில்லை என்பதெல்லாம் அப்புறம். சொல்வதற்கே சங்கடமாக உள்ளது. மன்னிக்கவும். பணம் போட்டு ஏமாந்த மக்களை காயப்படுத்தும் நோக்கில் சொல்லவில்லை. விரைவில் பணம் பார்க்க வேண்டும் என்ற மக்களின் பேராசையே காரணம். யாரும் ஒரே நாளில் பணக்காரனாக முடியாது. கூடுதல் வருமானம் வேண்டுமென்றால் தற்போது எத்தனையோ வழிகள் உள்ளன. நல்ல நல்ல லாபம் தரும் மியூட்சுவல் பண்ட்கள் எவ்வளவோ உள்ளன. இன்னும் அதிகம் வேண்டுமானால் பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளன. அதன் மூலம் திறமையுடன் செயல்பட்டு நல்ல வருமானம் பார்க்கலாம்.

மென்பொருள்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். அப்பாவி, படிக்காத நடுத்தர வர்க்க மக்கள்தான் சீட்டுக்கம்பெனிகளில் பணம் போட்டு ஏமாற்றப்பட்டார்கள் என்றால் படித்தவர்களும் இப்படி இருக்க வேண்டுமா? பெரும்பாலானோர்க்கு அரை மாதச் சம்பளம்தான், அதற்காக தெருவில் ஏமாற்றிப் பிழைப்பவனிடம் காசை அள்ளி வீச வேண்டுமா? :(

Monday, May 05, 2008

கொளுத்தும் வெயிலும், வெட்டப்படும் மரங்களும்


உலகம் வெப்பமாவதும், பருவமழைக் குளறுபடிகளும் பெருகிவரும் இக்காலகட்டத்தில் எல்லோருக்கும் விழிப்புணர்வையும், தேவையான நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டிய மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற அரசுகள் பொறுப்புணர்வின்றி செயல்படும் போது கோபமும், எரிச்சலும் மட்டுமே மிஞ்சுகின்றன.

பெங்களூர் பூங்கா நகரம் என அழைக்கப்பட்டாலும் அந்தப் பெயரை இழக்கும் நாட்கள் வெகுவிரைவில் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது. இந்த நகரம் கடல் மட்டத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் உயரத்தில் தக்காண பீடபூமியின் தெற்கு எல்லையில் இருப்பதால் மிதமான வெப்பநிலையும், வனங்கள், மழைவளம், தேவையான நிலத்தடி நீர் என இயற்கை வளங்கள் மிகுந்தே இருக்கிறது. ஆனால் போகிற போக்கில் இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும் நிலை தோன்ற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பெங்களூர் மட்டுமல்லாது மொத்த கர்நாடகத்துக்கும் மிக முக்கிய வருவாய், வனங்களை அழித்து நிலம் ஒதுக்கிக் கொடுத்ததால் வளர்ந்த கணினி நிறுவனங்கள் கொடுப்பதேயாகும். அசுர வளர்ச்சியும், இந்த நிறுவனங்களின் ஊழியர்களும், இந்நிறுவனங்களில் வேலைதேடி வந்து இங்கே வந்து தங்கியிருப்பவர்கள் மட்டும் தான் இங்கே பெரும்பான்மை மக்கள். நகரின் முக்கிய பிரச்சினையான போக்குவரத்துப் பிரச்சினைக்குக் காரணங்கள் சிறிய நகரத்தில் அடைந்து கிடக்கும் மக்கள், அவர்களால் ஏற்பட்டிருக்கும் போக்குவரத்து நெருக்கடிகள், பெரும்பான்மையாக சாலையில் ஓடும் இரவு பகல் பாராமல் கணினி நிறுவன ஊழியர்களை ஏற்றி வரும் வாகனங்கள் தாம்.

போக்குவரத்துப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சாலைகளை அகலப்படுத்தியும், பாலங்கள் கட்டியும் பார்த்தாயிற்று. முடிந்தபாடில்லை. இந்த போக்குவரத்து நெருக்கடியால் பாதிக்கப்பட்டவை சாலை ஓரங்களில் இருந்த மரங்கள். பாரபட்சம் இல்லாமல் வெட்டிச் சாய்க்கப்பாட்டதன் விளைவு இன்று நகரில் வெப்பநிலை உயர்வு. இந்தக் கோடையில் இன்று வரை பெங்களூரின் அதிகபட்ச வெப்பநிலை 39டிகிரி செல்சியஸ். நாங்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் பெங்களூரில் பிறந்து வளர்ந்த கன்னடர். தமிழ் நன்றாகப் பேசுவார். அவர் சொன்னது "15 வருடம் முன்பு பெங்களூரில் ஏப்ரல் மாதத்தில் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டுதான் வெளியே போகமுடியும். இப்போ பாருங்கள் எவ்வளவு வெயில்!" என்று மிகவும் வருத்தப்பட்டுக் கூறினார்.

இந்தப் போக்குவரத்துப் பிரச்சினைக்குக் காரணங்களுள் ஒன்று முக்கால்வாசிப் பேர் வாகனம் வைத்திருக்கிறார்கள். இங்கே நகரப் பேருந்துகளில் பயணக்கட்டணம் என்ற பெயரில் நடக்கும் கொள்ளைக்கு, தனிவாகனத்தில் சிரமமில்லாமல் செல்லலாம் என்ற எண்ணம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது. போக்குவரத்தைக் குறைக்க மெட்ரோ ரயில் என்ற புதிய திட்டத்துக்காக மகாத்மா காந்தி சாலையில் இருக்கும் ஏகப்பட்ட மரங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக அல்சூர் பழைய சென்னை சாலையில் இருக்கும் மரங்களும் சமீபத்தில் வெட்டப்பட்டன. மக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தும் போது அதனால் பின்னாளில் ஏற்படும் பாதிப்புகளை ஆராயாமல் தற்காலிகமாகத் தீர்வுகாணும் அரசின் போக்கால் பிற்காலத்தில் பெரிய விளைவுகள் ஏற்படலாம்.

இதுவரை எத்தனையோ ஆயிரம் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்குப் பதில் புதிய மரக்கன்றுகள் எங்காவது நடப்பட்டிருக்கின்றனவா என்றால் இல்லை. வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் புதிய மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பும் அரசாங்கத்துக்கே உள்ளது.

போனமாதம் மடிவாளாவில் வெட்டிச்சாய்க்கப்பட்ட மிகப்பெரிய ஆலமரத்தை பார்த்ததும் கண்ணீர் வந்துவிட்டது. காரணம் சாலையை அகலமாக்குகிறார்களாம். மடிவாளா காவல் நிலையத்தில் இருந்து செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனை நிறுத்தம் வரை உள்ள 200 மீட்டர் சாலை அகலப்படுத்தும் பணிக்காக மடிவாளா ஐயப்பன் ஆலயம் அருகில் - சாலையின் ஓரம் கூட இல்லை - அதையும் தாண்டி உள்ளே இருந்த ஒரு மிகப்பெரிய ஆலமரமும், அந்த சாலையில் இருந்த பிற மரங்களும் வெட்டப்பட்டன. என்னதான் இந்த 200 மீட்டருக்கு சாலையை அகலப்படுத்தினாலும், செயிண்ட் ஜான்ஸ் நிறுத்தம் தாண்டி திரும்பவும் சாலை குறுகலாகத்தான் செல்லும். என்ன ஒரு அறிவாளித்தனத்துடன் அரசு இயந்திரம் வேலை செய்கிறது பார்த்தீர்களா?

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை 7


இந்த நிலை இங்கே மட்டுமில்லை தமிழ்நாட்டிலும் தான். தேசிய நெடுஞ்சாலை 7ல் நான்கு வழிப்பாதைக்காக போடப்பட்ட ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் மீண்டும் மரக்கன்றுகள் நடும் அறிகுறியே இல்லை. மாறாக சாலையின் நடுவில் மட்டும் பூச்செடிகளை வைத்து அழகு பார்க்கிறார்கள். இப்படியெல்லாம் அற்பத்தனமாக செயல்பட்டு மரங்களை வெட்டிவிட்டு, சாலையின் நடுவில் புற்களையும், குரோட்டன்ஸ் செடிகளை வளர்த்து அழகு பார்ப்பதால் மழை பெய்யாது மாறாக வெப்பநிலை மட்டுமே கூடும். கோவை மாவட்டத்தில் ஒரு நான்குவழிச்சாலைக்காக வெட்டப்பட்டு கணக்கு காட்டப்பட்ட மரங்கள் 1300. கணக்கில் வந்தது மட்டுமே இவ்வளவு என்றால் வராததை எல்லாம் நினைத்தால் கண்ணீர் மட்டும் மிஞ்சும்.

குறிப்பாக தமிழகத்தில் முக்கியமான சாலைகள் எல்லாம் நான்கு வழிச்சாலைகளாக மாற்றப்படுவதால் ஏகப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. தேநெ 7 க்காக கன்னியாகுமரியிலிருந்து ஓசூர்வரை, மதுரை-சென்னை சாலையிலும் பணிகளுக்காக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டு வருகின்றன.

மாறிவரும் சூழ்நிலையில் இவையெல்லாம் நாட்டுக்கு முக்கியமான திட்டங்கள்தாம். ஆனால் வெட்டப்படும் மரங்களுக்குப் பதில் மீண்டும் மரக்கன்றுகள் நட்டுப் பராமரிக்கும் பொறுப்பும் அரசிடமே உள்ளது என்பதையும் உணரவேண்டும். ஏற்கனவே பெரும்பாலும் வறண்ட பூமியாக உள்ள தமிழகத்தில் இருக்கும் மரங்களையும் வெட்டி விட்டு, பதிலுக்கு மரக்கன்றுகளும் நடாமல் மெத்தனமாக இருந்தால் மேலும் பாதிப்புகள் நமக்குத்தான் பிற்காலத்தில் ஏற்படும் என்பதை அரசுகள் உணரவேண்டும்.

இல்லையெனில் தொழில்வளம் பெருகும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் மழை பெய்யாது, கையில் காசிருந்தும் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது. :(

Tuesday, April 29, 2008

ஜோகிந்தர் அல்ல 'சென்டிமென்ட்' சர்மா & ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்



நேற்று நடந்த சென்னை-பெங்களூர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலும் நம்ம ஜோகிந்தர் சர்மாவின் கடைசி ஓவர் ராசி வேலை செய்தது. இந்தியா விளையாடும் 20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலெல்லாம் ஜோகிந்தர் கடைசி ஓவர் பந்து வீசி வெற்றிக்கனியைப் பறித்துத் தந்திருக்கிறார். அது போலவே அணித்தலைவர் தோனியும் அவரையே எல்லாப் போட்டிகளிலும் கடைசி ஓவர் பந்து வீச வைக்கிறார். இந்த சென்டிமென்ட் நன்றாகவே வேலை செய்கிறது.

ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடும் தோனி ராசி காரணமாக ஜோகிந்தரை சென்னை அணியில் இழுத்துப் போட்டு தொடர்ந்து வெற்றியைத் தேடித் தந்து வருகிறார் ஜோகிந்தர். நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் 17 ரன் எடுக்க வேண்டிய நிலையில் நம் ஜோகிந்தர் பந்து வீசி வெற்றியைப் பறித்துத் தந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. எனவே நம் ஜோகிந்தருக்கு 'சென்டிமென்ட் சர்மா' என்ற பட்டம் சென்னை அணியின் ரசிகர்கள் சார்பாக வழங்கப்படுகிறது.

கொசுறு : நேற்று பெங்களூரில் சென்னை அணி ஜெயித்ததும், இதுக்குக் கூட அடியைப் போடுவானுங்கடா லூசுப் பசங்கன்னு நினைத்து நம்ம ஆட்கள் யாரும் வெளியில் தலை காட்டவில்லை. :)

-----XX-----

ஸ்ரீசாந்தை வைத்து காமெடி பண்ணும் கிரிக்கெட் ரசிகர்கள்


மின்னஞ்சல் 1 : உங்களுக்குத் தெரியுமா ஸ்ரீசாந்த் ஏன் அழுதார் என்று?


...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........
...........

இது தான் காரணம் :)



மின்னஞ்சல் 2 : நியூட்டனின் மூன்றாம் விதியும் ஸ்ரீசாந்தும்

எல்லா வினைக்கும் ...........


சரிசமமான எதிர்வினை உண்டு ......



மின்னஞ்சல் 3 : கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது

சைமண்ட்ஸைக் கேட்டார்


ஹைடனைக் கேட்டார்


ஏன் கைஃப்பைக் கூடக் கேட்டார்



கடைசியாக ஹர்பஜன்தான் கேட்காமலேயே கொடுத்தார்






நன்றி :
சாம்
-----XX-----
அழுத பிள்ளை சிரிச்சிச்சாம்!! கழுதைப் பாலைக் குடிச்சிச்சாம் !!




Friday, April 25, 2008

அய்யய்யே!!! 'ரெண்டு' !!!


நம்ம ஊர்ல ஏகப்பட்ட வகையறா இருக்குதுங்க. ஒவ்வொரு வகையறாக்கும் ஒவ்வொரு குலசாமி. ஒவ்வொரு வகையறாக்கும் ஒரு ஒரு வித்தியாசமான பேரு இருக்கும். அதை வச்சுத்தான் எப்பவாவது பொது இடத்துல வச்சுக் கூப்பிட்டு கிண்டலடிப்பாங்க.

அந்தப் பேரு எல்லாம் ரொம்ப சிரிப்பா இருக்கும். அந்தந்த பரம்பரையில இருந்த முன்னோருங்க பண்ணிய சேட்டையையே பட்டப்பெயராக வைத்து தலைமுறைகள் கடந்தும் அந்தப் பேர் அவர்களின் சந்ததிகளையும் அழைக்கப் பயன்பட்டு வருகிறது.

சரி. சரி. அந்தப் பெயரெல்லாம் என்னன்னு பார்ப்போம்.

  • மத்தியானச்சோறு
  • கட்டுச்சோறுகளவாணி
  • அரைப்பனையேறி
  • குருத்துப்புடுங்கி
  • மட்டைநக்கி
  • ஆவாரங்கட்டை

இப்படி நிறைய இருக்கு. ஞாபகம் வரும்போது சொல்றேன். ஒன்னொண்ணுக்கும் பெயர்க்காரணம் பார்ப்போமா?

மத்தியானச்சோறு
எங்க ஊர்லயே அந்தக் காலத்துல பெரிய பணக்காரங்க. அரிசி சாதம் வைக்கிறதே பெரிய விசயமாம் அப்போ. ஆனா இவுங்க வீட்டுல மட்டும் தினமும் மதியம் அரிசி சாதம் தானாம். அதான் இந்தப் பேரு.

கட்டுச்சோறுகளவாணி
திருவிழாவுக்குப் போயிருந்த இடத்துல கட்டுச்சோத்தைக் களவாண்டு சாப்பிட்டு மாட்டிக்கிட்டாராம் இவுங்க பரம்பரையில ஒரு தாத்தா. பாவம் அவரால அவர் பேரப்புள்ளைங்க மத்தவங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க.

அரைப்பனையேறி
நொங்கு திங்கிற ஆசையில விறுவிறுன்னு பனைமரம் ஏறிட்டு பாதி ஏறுனதும் கீழே குனிஞ்சு பார்த்திருக்கார். பயந்தே போயிட்டாரு. மேலேயும் ஏறத் தைரியம் இல்லை. கீழேயும் இறங்க முடியலை. பயந்து போய் ரொம்ப நேரமா பாதிப் பனைமரத்திலேயே இருந்திருக்கார். பாவம். மத்த ஆளுங்க எப்படியெல்லாம் ஓட்டியிருப்பாங்கன்னு நினைச்சாலே கண்ணுல தண்ணி வருது.

குருத்துப்புடுங்கி
குட்டிக் குட்டிப் பனை மரங்களில் குருத்தை மட்டும் உருவி எடுக்கிறதில கில்லாடிகளாம். என்ன ஒரு குரங்குச்சேட்டை இது?

மட்டைநக்கி
கள்ளு குடிக்க காசு இல்லாம குடிச்சுப் போட்ட மட்டையை நக்கி நக்கி போதை ஏத்திக்கிட்டாராம் ஒரு பெருசு.

ஆவாரங்கட்டை
சந்தைக்குப் போயிட்டு வர்றப்ப நம்ம ஆளுக்கு வயித்தைக் கலக்கியிருக்கு. ஆள் இல்லாத இடமா ஒதுங்கி அங்க இருந்த ஆவாரஞ்செடியை மடக்கி உட்கார்ந்திருக்கார். எல்லாம் முடிச்சிட்டு எந்திருச்சப்ப மடக்கியிருந்த ஆவாரஞ்செடி தடார்னு நிமிர்ந்து நம்ம ஆளு முதுகு பூரா ஷேம் ஷேம் பண்ணிடுச்சாம். சிங்கம் மாதிரி இருந்த நாம இப்படி அசிங்கமா ஆகிட்டோமேனெல்லாம் பீல் பண்ணாம, எந்திருச்சி நின்னாலும் முதுகுல ஒன்னும் ஒட்டலைன்னு நம்ம ஆளு துடைச்சுப் போட்டுட்டு போகப் பார்க்க சைடு வாக்குல ஒளிஞ்சிருந்த கூட்டாளிங்கலாம் பார்த்து கிண்டலடிச்சி ஊரைக் கூட்டாமலே விசயத்தைச் சொல்லிட்டாங்களாம் ஊருக்குள்ள.

இன்னிக்கும் ஊருக்குள்ளாற ஆவாரங்கட்டைன்னாலே ஒரு நமுட்டுச் சிரிப்புத்தான். இந்த வகையறாப் பசங்கள பொது இடத்துல் ஆவாரங்கட்டைன்னு கூப்பிட்டாலே நெளிவானுங்க. இன்னொரு முக்கியமான விசயம் எங்க ஊர்ல வீட்டுல முதன் முதல்ல டாய்லட் கட்டினது இந்த வகையறாதானுங்க.

இதுதாங்க நம்ம ரெண்டு வ.வா.சங்கப் போட்டிக்கு. இந்தப்பதிவுல எங்க ரெண்டு வருதுன்னு யோசிச்சீங்கன்னா ஷேம் ஷேம் பப்பி ஷேம்.


படம் நன்றி : http://kuttapusky.blogspot.com/2007/03/blog-post_26.html

Thursday, April 24, 2008

இவனை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்க?



யாரா இருந்தாலும் சரி.. வெறிநாய்னா குலைக்கத்தான் செய்யும் !!

அடங்குடாடேய்! யோகா கத்துக்குற மூஞ்சியைப் பாரு !

நன்றி : சாம்

Saturday, April 12, 2008

சென்னையில் கால்வைக்கும் Times of India! வெற்றி பெறுமா?


Times of India ஆங்கில நாளிதழ் இப்போது தமிழகத்தில் கால் பதிக்கும் முயற்சியாக சென்னையில் ஏப்ரல் 14 அன்று தனது பதிப்பைத் துவங்குகிறது. தற்சமயம் பெங்களூரில் முன்னணி ஆங்கில நாளிதழாக இருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா சென்னையில் தடம் பதிப்பதால் முதலில் கவலை கொள்ளப்போவது தி ஹிந்துவாகத்தான் இருக்கும். ஏற்கனவே இரண்டு வருடங்கள் முன்பு Deccan Chronicle நாளிதழ் ஒரு ரூபாய்க்கு நாளிதழும், 99 ரூபாய்க்கு ஆண்டு சந்தாவும் அறிமுகச்சலுகையாக வழங்கி பெரும்பாலானோரை தன் பக்கம் இழுத்தது. படிக்கிறோமோ இல்லையோ சந்தா கட்டினால் ஒரு வருசம் கழித்து கணிசமான எடைக்கு காகிதம் சேரும் என்ற எண்ணத்துடன் சந்தா கட்டியவர்கள் பலர் என்றால் மிகையில்லை. Deccan Chronicle கொடுத்த அதிர்ச்சியில் தான் ஹிந்து நாளிதழ் தனது எழுத்துக்கள் மற்றும் வடிவத்தை உலகப் புகழ்பெற்ற ஒரு பத்திரிக்கை வடிவமைப்பாளர் கொண்டு மாற்றியமைத்தது.

பெங்களூரில் Times of India வை செய்திகளின் தரத்துக்காக வாங்குபவர்களை விட அதனுடன் வரும் Bangalore Times (சுருக்கமாக BT) என்ற இணைப்புக்காகவே நிறைய இளைஞர்கள் வாங்குவார்கள்(வோம்). முழுக்க முழுக்க திரைப்படத்துறை குறித்த செய்திகள் அதுவும் முழுக்க முழுக்க விருந்து, கேளிக்கை இந்தி திரைப்படச் செய்திகளே இடம்பெறும். கடைசிப்பக்கத்தில் கன்னடம் எப்பவாவது தமிழ்,தெலுங்கு,மலையாளத் திரைப்படச் செய்திகளும் இருக்கும். எனவே ஆங்கிலத்தில் படங்களுடன் தமிழ்த்திரைப்படச் செய்திகள் நிறைந்த Chennai Times இணைப்பு இருக்கும் என்பது உறுதி.

அதே நேரம் செய்திகளை நடுநிலையுடன் வெளியிடுமா என்ற கேள்வியும் எழுகிறது. காரணம் Times of India குழுமத்தின் செய்தித் தொலைக்காட்சியான Times Now ஒகேனக்கல் விவகாரத்தில் தமிழக முதல்வர் பேசிய பேச்சின் ஒரு பகுதியினை மட்டும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி வெறுப்பேற்றியது. 'எங்கள் எலும்புகளை உடைத்தாலும் திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்பதை மட்டும் கன்னடர்களுக்கு வெறியேற்றும் விதமாக போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தது. முக்கியமாக கலைஞர் சொன்ன 'இந்திய இறையாண்மை கர்நாடகத்தால் கேள்விக்குறியாகிறது' என்பதை மறைத்துவிட்டார்கள். ஏன்? குற்ற உணர்ச்சியா? காரணமும் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது.

தற்போதைய சூழலில் உதாரணமாக இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ஹிந்து நாளிதழ் நடுநிலை மறந்து தொடர்ந்து விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருவதால் Times of India நடுநிலையுடன் செய்திகளை வெளியிட்டால் வெற்றிபெறும் என்பது நிச்சயம்.

Saturday, March 22, 2008

துரத்திய மரணம் ! அறியாத சுப்பு !

மரணம் மனிதனுக்கு இயற்கை தான். ஆனால் எதிர்பாராதவிதமாக அதை நேர்கொள்ளும் போது மரணிப்பவரைச் சார்ந்தவர்கள் தான் மிகவும் பாதிக்கபடுகிறார்கள். குடும்பத்தினர் ஒருபுறம் அவருக்கு வெளியில் பழக்கமானவர்கள் என மனரீதியான பாதிப்பும், நமக்கு எப்போது ஏற்படுமோ என்ற அச்சமும் ஏற்பட்டு அலைக்கழிக்கின்றன.

டிசம்பர் மாதம் பெங்களூரிலிருந்து ஊருக்குச் செல்லும் போது ஓசூர் தாண்டியதும் ஒரு விபத்து. 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலையின் நடுவில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது எதோ கனரக வாகனத்தில் அடிபட்டு இறந்து போயிருந்தார். நான் சென்ற பேருந்து சம்பவ இடத்தைக் கடந்து சென்ற போது சம்பவம் நிகழ்ந்து 10 நிமிடங்களுக்குள் தான் இருக்கும். அன்றைய பயணம் முழுவதும் அதே நினைப்பிலேயே முடிந்தது. இந்த நினைப்பிலிருந்து விடுபடவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது. அதன் பின்னர் செய்திகளில் விபத்து, மரணம் குறித்தவைகளைப் பார்க்கும் போது மனம் மிகவும் வருத்தப்பட்டது. முன்பெல்லாம் விபத்து, மரணச் செய்திகளைப் படிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பை விட ஒரு மரணத்தை நேரில் பார்த்தபின் ஏற்பட்ட பாதிப்பு அதிகமாகவே இருந்தது.

அதன் பின்னர் சிலநாட்கள் கழித்து ஊரில் இருந்து பெங்களூர் திரும்பி வரும்போது எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணத்தையும் காண நேர்ந்தது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்திருந்தார். தலையில் மட்டுமே அடி. தலைக்கவசம் அணிந்திருந்தார். ஆனால் முழுவதுமாக தலையை மறைக்காமல்,தொப்பி போல இருக்கும் தலைக்கவசம். ஒருவேளை தலைமுழுவதும் மறைக்கும் கவசம் அணிந்திருந்தால் நிச்சயம் உயிர் தப்பியிருப்பாராயிருக்கும். 2,3 நொடிகளுக்கு மேல் அந்த இடத்தைப் பார்க்க முடியாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். இந்த சம்பவத்தின் பாதிப்பும் சில நாட்கள் இருந்தது.


மேலே படத்தில் இருக்கும் பையனின் பெயர் சுப்பிரமணியன். ஊர் திருவண்ணாமலை. சென்னையில் நான் வேலை பார்த்த அலுவலகத்தில் ஃப்ரஷராக வேலைக்கு சேர்ந்தவன். வயது 23. நாங்கள் எல்லோரும் சுப்பு என்று அழைப்போம். நான் பெங்களூரில் வேலை கிடைத்ததும் அந்த அலுவலகத்தில் வேலையை விட்ட போது, என் பணிகள் அனைத்தையும் இவனிடம்தான் ஒப்படைத்துவிட்டு வந்தேன். மிகவும் அமைதியான பையன். அழகான சிரிப்பு. அதிர்ந்துகூட பேசமாட்டான். நான் செய்த எல்லா ப்ராஜக்ட்களையும் விளக்கிய போது கவனமாகவும், பொறுப்பாகவும் எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொண்டான். அதன்பின் குழுமடல்கள் மூலம் மட்டுமே தொடர்பில் இருந்தோம்.

சுப்பு இப்போது உயிருடன் இல்லை. :(

அந்த அலுவலகத்தில் ஒரு வருடம் பணிபுரிந்த பின் தேனாம்பேட்டை அண்ணாசாலையில் இருக்கும் விப்ரோவில் (பழைய MPower) கடந்த டிசம்பரில் வேலைக்குச் சேர்ந்தான். போனமாதம் அலுவகத்தில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்து கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இரத்த வாந்தி எடுத்திருக்கிறான். உடனே நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்திருந்திருக்கிறார்கள். எல்லா பரிசோதனைகளும் முடிந்தபின் மருத்துவர்கள் சொன்னது அவனுக்கு ப்ரைன் ட்யூமர் இறுதி நிலை. மறுநாள் சாயங்காலம் சுப்பு உலகை விட்டுச் சென்றுவிட்டான்.

சுப்புவின் மரணம் நண்பர்கள் மூலம் தெரியவந்தபோது ஏற்பட்ட மனச்சங்கடங்களுக்கு அளவே இல்லை. இரண்டு நாட்கள் அலுவலகத்தில் வேலையே பார்க்க முடியவில்லை. பழைய நினைவுகளே ஆட்கொண்டன. 23 வயதில் மரணமா? ஏன் இப்படி? என்ன என்ன கனவுகள் கண்டிருப்பான்? தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தவுடன் அவன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? சுப்புவின் மரணம் அவனை நம்பியிருந்த குடும்பத்துக்கு பேரிடி தான்.

ப்ரைன் ட்யூமர் முதல்நிலையிலேயே கண்டுபிடித்திருந்தால் சரிசெய்திருக்க முடியும் என்று மருத்துவர்கள் சொன்னார்களாம். அதன் அறிகுறி கடுமையான தலைவலி இருக்குமாம். சுப்புவுக்கும் அப்படி இருந்து அறியாமையால் கவனிக்காமல் இருந்துவிட்டானோ?

எல்லோரும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். மரணம் எல்லோரையும் துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.
சிலரை ரொம்ப தூரத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. அது எப்பவும் சீரான வேகத்தில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நமது வேகம் குறையும் போது நம்மைப் பற்றிக் கொள்கிறது.
சிலரை ரொம்ப அருகில் துரத்தி வந்து கொண்டிருக்கிறது. நாம் கொஞ்சம் வேகமாக ஓடினால் தப்பிக்கலாம்.
சிலரை மரணம் எதிர்நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கிறது. இதை ஒன்றும் செய்ய முடியாது. விதி என்று கூட சொல்லிவிடலாம்.

ஆனால் தவிர்க்கக் கூடிய மரணங்களை ஏன் நம் உடல் நலத்தில் அக்கறை கொள்வதன் மூலம் தவிர்க்கக் கூடாது? நம் மரணத்தால் நம்மைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்வோம். எனவே உடல்நலத்தில் அக்கறை கொள்வோம் நண்பர்களே !!

Thursday, March 13, 2008

மழலையர் பாடல்கள் - அரும்புகளுக்காக



சிட்டு

சிட்டே சிட்டே பறந்து வா
சிறகை சிறகை அடித்து வா !
கொட்டிக் கிடக்கும் மணிகளை
கொத்திக் கொத்தித் தின்ன வா !

ஆற்று நீரில் குளிக்கிறாய்
அழகாய்த் தூளி ஆடுகிறாய் !
சேற்று வயலில் அமர்கிறாய்
திறந்த வெளியில் திரிகிறாய் !

உன்னைப் போலப் பறக்கணும்
உயர உயர செல்லணும் !
என்னை அழைத்துச் சென்றிடு
ஏற்ற இடத்தைக் காட்டிடு !!


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>




சேர்ந்து செய்வோம் !

துண்டு தாள்கள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுவன் எடுத்தனன்
கப்பல் செய்து மகிழ்ந்தனன் !

துண்டு துணிகள் கிடந்தன
தூக்கி வீசி எறிந்தனர் !
கண்டு சிறுமி எடுத்தனள்
கணக்காய் பொம்மை செய்தனள் !

வண்ணத்தாள்கள் கிடந்தன
வாரி வீசி எறிந்தனர் !
சின்னப்பையன் கண்டனர்
சேர்த்துப் பூக்கள் செய்தனர் !

சிறிய பொருளும் நமக்குமே
சிறந்த பொருளாய் மாறுமே !
சின்னஞ்சிறுவர் நாமுமே
சேர்ந்து பொருள்கள் செய்வோமே !


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>


மரம் வளர்ப்போம்

தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறதே !
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறதே !

அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வாபோல பழம் தருது !
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில்லாமல் காய்க்கிறது !

அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போல பழுக்கிறது !
சின்னஞ்சிறுவன் நானுமொரு
செடியை நட்டு வளர்ப்பேனே !


><(((º>`·.¸¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>¸.·´¯`·.><(((º>¸. ·´¯`·.¸.><(((º>
, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸¸><(((º>, . .·´¯`·.. ><(((º>`·.¸¸.·´¯`·.¸><(((º>


நன்றி : சங்கீதா அக்கா