Thursday, January 27, 2011

தமிழக மீனவர்கள் கொலை - புறக்கணிப்போம் இலங்கையை !!


ஒருவரா இருவரா? இதுவரை 400 க்கு மேற்பட்ட மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு விட்டார்கள். முதலில் விடுதலைப்புலிகள் என்று நினைத்து சுட்டோம் என்றார்கள். இப்போது போர் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் தாக்குதல்கள் நிகழ்ந்தால் இது தமிழர்கள் மீதான காழ்ப்புணர்வே தவிர வேறென்ன?

கையாலாகத மாநில அரசையும், வேண்டுமென்றே கள்ளத்தனமாக மவுனமாக இருக்கும் மத்திய அரசையும் இனியும் மீனவர்களும், நாமும் நம்பியிருக்க வேண்டுமா?

எங்கள் ஈழச்சகோதரர்களை எல்லாம் அழித்தாகிவிட்டது. இன்னும் ரத்தவெறி கொண்டு திரியும் இலங்கைக்கு வேறு வகையில் ஆப்படிக்க வேண்டும். உலகநாடுகள் பொருளாதாரத் தடை விதிக்காவிட்டால் என்ன? நாம் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இலங்கைக்கு எந்தவிதத்திலும் மறைமுகமாக உதவமாட்டோம் என உறுதி கொள்ள வேண்டும்.

பின்வரும் எல்லாம் நம்மால் நிச்சயம் செய்ய முடியும் செயல்கள் தான்.

1. சுற்றுலாவிற்கு இலங்கையைப் புறக்கணிப்பது. உலகத் தமிழர்கள் யாரும் இலங்கைக்குச் சுற்றுலா செல்லாமல் புறக்கணிக்க வேண்டும். தன் பொருளாதாரத்தில் பெரும் பங்கு சுற்றுலா வருவாயை நம்பியிருக்கும் இலங்கைக்கு இது நிச்சயம் பேரிழப்பு.

2. இலங்கையின் 'ஶ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமான சேவையைப் புறக்கணித்தல். மிக முக்கிய நிமித்தமாகச் செல்ல நேர்ந்தாலும் பிற விமானசேவை நிறுவனங்களை உபயோகித்தல்.

3. இலங்கை வங்கியைப் புறக்கணித்தல். சென்னையில் இருக்கும் இலங்கை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகள வேறு வங்கிகளுக்கு மாற்றுதல்.

4. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் இருக்கும் 'ஶ்ரீலங்கன் ட்ரேட் சென்டர்' வணிக நிறுவனத்தைப் புறக்கணித்தல்.

5. இலங்கையிலிருந்து வரும் சிங்கள மாணவர்களுக்கு தங்குவதற்கு வீடுகள் தராமல் புறக்கணித்தல்.

6. விரைவில் தூத்துக்குடியிலிருந்து கொழும்பிற்குத் துவங்க இருக்கும் பயணிகள் கப்பல் சேவையைப் பயன்படுத்தாமல் இருத்தல். இது நாம் ஈழ, தமிழகத் தமிழர்களை வெறுக்கும் காங்கிரஸுக்கு வைக்கும் வேட்டு.

7. எந்த ஒரு இலங்கைத் தயாரிப்பையும் பயன்படுத்தாதிருத்தல்.

தமிழனமே ! ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது வெட்கமில்லாமல் காங்கிரசைத் தேர்ந்தெடுத்தோம்! இப்போது நம் தமிழகத் தமிழர்கள் கொல்லப்படும் போதாவது சொரணையுடன் இருப்போம் !!

வாக்களித்தபின் உறுதிச்சீட்டு - தேவையில்லாத முறை


இந்தியத் தேர்தல் ஆணையம் வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு புதிய முறையைக் கொண்டு வருவதாகச் சொல்லியிருக்கிறது.

நம் வாக்கு யாருக்கு இயந்திரத்தில் பதிவானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நாம் வாக்களித்தபின் ஒரு சீட்டினில் அச்சிட்டு வெளியிடும் முறையை ஆய்வு செய்து வருவதாகச் சொல்லியிருக்கிறது.

ஏற்கனவே வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் செய்யமுடியும் என்ற பிரச்சினை உள்ள நிலையில் நம் வாக்கு யாருக்குப் பதிவாகிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்தால் அது நல்லதுதான்.

ஆனால் இதில் இன்னொரு முக்கியமான மறுபக்கமும் உள்ளது. இப்பொழுது எல்லாம் தங்கள் கட்சிக்கு வாக்களிப்பதற்கு கிராமங்களில் ஒரு வாக்கிற்கு ஆயிரக்கணக்கில் பணம் தரப்படுகிறது.

எனவே காசு கொடுத்த கட்சியினர் வாக்களித்தபின் இந்தச் சீட்டை வாங்கிப் பார்த்து தங்கள் கட்சிக்குத் தான் வாக்களித்திருக்கிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். காசு வாங்கிவிட்டு மாற்றுக் கட்சிக்கு வாக்களித்திருந்தால் 'டின்' கட்டிவிடுவார்கள். தேவையில்லாத பிரச்சினைகள் உருவாகும்.

வாக்காளர்களும் பலகட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு 'உங்களுக்குத் தான் போட்டேன்.. உங்களுக்குத் தான் போட்டேன்..' என்று ஏமாற்றவும் முடியாது :).

எனவே முதலில் எந்தக் கட்சி காசு தருகிறதோ - குறைவாக இருந்தாலும் - வாங்கிவிட்டால் அவர்களுக்கு ஓட்டு போட்டே ஆகவேண்டிய நிலை உருவாகும். 'ஏன் மாமு அவசரப்பட்ட ... ரெண்டு நாள் பொருத்திருந்தா இந்தக் கட்சி இரண்டு மடங்கு காசு கொடுத்திருப்பான்ல..' என்று அதிகம் காசு வாங்கியவர்கள் வெறுப்பேற்றுவார்கள். :)

குடும்பத்தில் கணவர் அரசு ஊழியர். திமுக ஆதரவாளராக இருப்பார். அவர் மனைவி எம்ஜிஆர் விசுவாசியாக அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டிருந்தாலும், கணவரிடம் 'கலர் டிவி தந்த கருணாநிதிக்குத் தான் போட்டேன்' என்று புருடா விட்டிருப்பார். கணவரின் கைக்கு இந்தச் சீட்டு கிடைத்தால் வீட்டிற்குள் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் நடக்கும்.

நம் அளிக்கும் வாக்கு நமக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய ரகசியமான ஒன்று. அதை அடுத்தவரும் பார்க்கும் வகையில் அச்சிட்டுத் தரத் தேவையில்லை. காசு வாங்கிய யாரும் தங்களை ஏமாற்ற முடியாது என்ற நிலை உருவாகும் என்பதால் தான் அரசியல் கட்சிகள் எதுவும் இந்த முறையை எதிர்க்கவில்லை. மின்னணு வாக்குமுறையையே எதிர்த்தவர்கள் இப்போது மட்டும் வாய் மூடி இருப்பது ஏன்?

எனவே தேர்தல் ஆணையம் வேறு முறையை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்.

Wednesday, January 26, 2011

WI5 - பட்டையைக் கிளப்பும் இணைய இணைப்பு சேவை !!



இப்பொழுது தான் புதிதாக மடிக்கணினி வாங்கியிருக்கிறேன். இணைய இணைப்பிற்காக கணினி வாங்குவதற்கு முன்பிருந்தே விசாரித்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலான இணையசேவை வழங்கும் நிறுவனங்கள் ரிலையன்ஸ், பிஎஸ்என்எல், டாடா போட்டான், எம்டிஎஸ் எம்பிளேஸ் ஆகியவை டேடா கார்டு 1500 முதல் 2500 வரை சொல்கிறார்கள். அதன்பிறகு மாதாமாதம் 750 ரூபாய் 516kbps வேகத்தில் சேவை அளிப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் இவ்வளவு காசு கொடுத்து நமக்குக் கட்டுபடியாகாது என்பதால், என்ன செய்யலாம் என யோசித்த போது, என் அறையின் கதவில் ஒரு விளம்பரத்தாள் சொருகப்பட்டிருந்தது. அதில் WI5 என்ற நிறுவனம் இணையவசதி செய்து தருவதாக குறிப்பிட்டிருந்ததால் அவர்களுக்குத் தொலைபேசினேன். அடுத்த ஒருமணி நேரத்தில் இணைய இணைப்பு கொடுத்துவிட்டார்கள்.

அதே போல மாதக்கட்டணமும் மிகவும் குறைவு. ரூ.250 முதல் பிளான்கள் உள்ளன. நான் ரூ250 திட்டத்தில் சேர்ந்துள்ளேன். முக்கியமான விசயம் இணைப்பு கொடுப்பதற்கான கட்டணம் (Installation charges) எதுவும் இல்லை. 256kbps 2GB தரவிறக்க அளவு. 30 நாள் அல்லது 2GB தரவிறக்கம். எது முதலில் முடிகிறதோ அப்பொழுது திரும்பவும் கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இது ஒரு ப்ரீபெய்டு சேவை. மாதாமாதம் 30ம் தேதி பணம் கட்டுவதற்குப் பதில் 1ம் தேதி பணம் கட்டி அந்த மாதம் முழுவதும் உபயோகித்துக் கொள்ளலாம். நான் உபயோகித்தவகையில் மிகவும் நன்றாகவே உள்ளது.

இன்றைய தேதியில் WI5 மட்டுமே இவ்வளவு குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கிறது.

எனவே இணைய இணைப்பு வேண்டியிருந்தாலோ, அல்லது மாற்ற நினைத்தாலோ தாரளமாக WI5க்கு மாறுங்கள்.

http://www.wi5.in/

Monday, January 24, 2011

பெங்களூரில் நாய்த் தொல்லை


கடந்த வாரம் பெங்களூரில் 2 வயது சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிக் கொன்ற சம்பவம் ரொம்பவே மனதைப் பாதித்தது. எவ்வளவு நாள் தான் பொறுப்பது இந்த நாய்ப் பிரச்சினைக்கு. அதுவும் பெங்களூரில் ரொம்பவே ஓவர். பெங்களூரின் நாய்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு அவற்றைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இங்கே இருக்கும் நாய்கள் நம்ம ஊர்த் தெருநாய்கள் மாதிரி சோப்ளாங்கி நாய்கள் அல்ல. நன்றாக கொழுக் மொழுக் என்று செர்லாக் பேபி மாதிரி இருக்கும் மலை நாய்கள் வகையைச் சேர்ந்தவை. பயம் என்பது அறவே கிடையாது. சாதாரணமாக நம் ஊரில் நாய்களை கையை ஓங்கி விரட்டினால் பயப்படுவது மாதிரி நடிக்கவாவது செய்யும். இங்கு அப்படி செய்தால் நம்மைப் பார்த்து முறைக்கும். கல்லெடுத்து அடிக்கப் போனால் குலைத்துக் கொண்டு கடிக்க வந்துவிடும்.

இந்திய அரசியல் சட்டப்படி விலங்குகளுக்கு துன்பம் செய்தல் கூடாது என்பது குறித்து ஒரு தனிப் பிரிவே உள்ளதாம். இங்கு நாய்களைக் கொல்லக்கூடாது ஆனால் கட்டுப்படுத்தலாம் என்ற வகையில் பெங்களூர் மாநகராட்சியிலும் சிலவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதாவது நாயைக் கஷ்டப்பட்டுப் பிடித்து அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து விட்டுவிடுவார்கள். ரேபிஸ் தடுப்புஊசி எல்லாம் போடுவார்கள். எதற்கு என்றால் கடித்தால் ரேபிஸ் பரவாமல் இருக்க. ஆனால் குழந்தைகள் கடியின் கொடூரம் தாங்காமல் இறந்துவிடுகிறார்கள். ஆக இந்த முறைகள் எல்லாம் வேலைக்கே ஆகாது. ஒரே வழி பாரபட்சம் இல்லாமல் அவற்றைக் கொல்வதே.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால் பிறகு ஏன் நாய்களின் எண்ணிக்கை வருடாவருடம் கூடுகிறது? ஆண்டவனுக்கே வெளிச்சம். பெங்களுரில் நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கிட்டத்தட்ட கூவம் அளவுக்கு ஓடும் சாக்கடைகளும், தெருவுக்கு நாலு இருக்கும் பேக்கரிகளும் அனுமதியின்றிப் பெருத்துவிட்ட கசாப்புக் கடைகளும் ஒரு காரணம். ஏற்கனவே பல குழந்தைகளைப் பெங்களூரின் நாய்கள் கடித்துக் கொலை செய்தது நமக்குத் தெரியும். இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமும் நீலச்சிலுவைச் சங்கத்தினரே. நாயைக் கொல்லக்கூடாது என்று கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி ஒருநாள் மட்டும் நாய்களுக்கு முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் போஸ் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

எங்கள் ஊரில் மார்கழி மாதம் நாய்களை சுருக்கு போட்டுப் பிடித்து கழுத்தில் விஷஊசி போட்டுக் கொல்வார்கள். யாரும் அங்கே எதிர்ப்பது இல்லை. ஏனென்றால் நீலச்சிலுவை சங்கம் போன்ற வெட்டி அமைப்புகள் அங்கே இல்லை. நகரத்தின் பணக்காரர்களான நாய்க்காதலர்கள் இது போன்ற அமைப்புகளில் இருந்து கொண்டு கோசம் போட்டு போஸ் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள். அவர்கள் குழந்தைகள் எல்லாம் கணினியில் மட்டுமே விளையாடும். சாமானியர்களின் குழந்தைகள் அல்லவா தெருவில் விளையாடும்? பிறகு எப்படி அவர்களுக்கு இது பற்றிப் புரியும்?

இந்த நாய்களிடம் இருந்து தப்பித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. பிரதான சாலையில் அலுவலக வண்டியை நிற்கச் சொல்லிவிட்டு சந்து பொந்துகளின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தேன். சொன்னால் நம்பமாட்டீர்கள் ஒரு திருப்பத்தில் சுமார் முப்பது நாய்கள் இருக்கும். ஆட்டு மந்தை போல நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அதிர்ச்சியில் பின்வாங்கி பின் வண்டி ஓட்டுனருக்கு தொலைபேசி என் வீட்டின் அருகே வரச் சொல்லிப் பின் அலுவலகம் சென்றேன்.

நீலச்சிலுவைச் சங்கத்தினர் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்றால் அவற்றைத் தனியிடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். விலங்குகளுக்கு சரணாலயம் மாதிரி. ஏற்கனவே கோரமங்களாவில் தெருவில் திரியும் பசு மற்றும் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும் ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றைப் பராமரிக்க ஒரு காப்பகம் உண்டு. அது போல இவர்களும் செய்யலாம்.

அதை விடுத்து நாயைக் கொல்லாதே அது தெருவில்தான் திரியும் என்று சொல்வதும், கார் ஓட்டினால் விபத்தே நடப்பது இல்லையா? அதற்காக யாருமே கார் ஓட்டுவதில்லையா? அது போலத்தான் நாய்க்கடிக்கொலைகளும் சாதாரணம் என்று அபத்தமாக ஒப்பிட்டுப் பேசுவதும் தேவையில்லாதது. நான் ஒன்றும் நாய்களைப் பிடிக்காதவனோ வெறுப்பவனோ அல்ல. நானும் தெருநாய்களுக்கு சோறு போட்டு வளர்த்தவன்தான்.

உதாரணமாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கிருஷ்ணகிரி-கன்னியாகுமரி சாலையில் இருக்கும் அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன. எதற்காக? மக்களின் வசதிக்காக. அதுபோலத்தான் இதுவும். மக்களுக்குச் சிரமம் தந்தால் நாய்களைக் கொல்வதில் என்ன தவறு?

குன்னூரில் இதே போன்று ஒரு சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிப்போட அவனது முகமே விகாரமாகி இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொஞ்சம் சரிசெய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு மக்கள் போராட்டம் நடத்திய பிறகும் நாய்களைக் கொல்ல நீலச்சிலுவைச்சங்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் மக்கள் வித்தியாசமாக ஒரு யோசனை செய்து அவர்களின் மூக்கை உடைத்தார்கள். அதாவது ஆட்டுக் குடலை துண்டு துண்டாக வெட்டி அதனுள் விசத்தை வைத்து தெருக்களில் போட்டு விட்டார்கள். அதைத் தின்ற நாய்கள் செத்து ஒழிந்தன. நீலச்சிலுவைச் சங்கத்தினரின் முகத்தில் ஈயாடவில்லை.

இனியும் இவர்கள் தொல்லை தொடர்ந்தால் குன்னூர் மக்களை நாமும் பின்பற்ற வேண்டியதுதான். அல்லது 'ரக்த ஜ்வால ..' எனத் தொடங்கும் பைரவர் ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டு தெருவில் நடமாடவேண்டியது தான்.