Tuesday, July 31, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 4

ஏடிஎம் பற்றிக் கொஞ்சம் தெளிவாகவே பார்த்தாச்சு. அடுத்து EDC (Electornic Data Capture Machine) எனப்படும் இயந்திரம் எப்படி வேலை செய்யுதுன்னு பார்ப்போம்.

EDC என்பது வேறொன்னும்மில்லங்க. நாம கடையில் சாமான் வாங்கும் போது நமது அட்டையை ஒரு இயந்திரத்தில் தேய்க்கிறார்களே அந்த இயந்திரம் தான். இதுவும் ஏடிஎம் போல Switch -உடன் தொடர்பு கொண்டிருக்கும். நாம் அட்டையைத் தேய்த்தவுடன் தொலைபேசி ஊடகத்தின் வாயிலாக வங்கியைத் தொடர்பு கொண்டு தகவலை வாங்கித் தரும். Telephone network இந்த மாதிரியான Data Transferக்கும் பயன்படுகிறது.

இப்போ திநகரில் இருக்கும் கடைகள் எல்லாவற்றிலும் கண்டிப்பாக ஒரு EDCயாவது இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் EDCயெல்லாம் NAC(Network Access Controller) எனப்படும் பெட்டியுடன் இணைந்திருக்கும். ஒவ்வொரு வங்கியும் NAC எனப்படும் பெட்டியை ஒவ்வொரு பகுதி அல்லது ஊருக்கும் வைத்திருப்பார்கள். எப்படின்னா ஒவ்வொரு NACக்கிற்கும் ஒரு தொலைபேசி எண் இருக்கும். அந்த NACக்கின் தொலைபேசி எண் EDCயில் பதிவு செய்யப்பட்டிருக்கும். நாம் அட்டையை EDCயில் தேய்க்கும் போது அது அந்த NACக்கினுடைய எண்ணுக்கு டயல் செய்யும். பின்னர் EDCயானது ஏடிஎம் போலவே ஒரு தகவலை(Request Message) NAC வழியாக Switchக்கு அனுப்பி வங்கியிலிருந்து தகவலைப் (Response Message) பெற்றவுடன் Charge Slip எனப்படும் ரசீதினைத் தரும்.

மேலதிகத் தகவலுக்குப் படத்தைப் பார்க்கவும்.



சரி. அடுத்து கடன் அட்டைகளை வைத்து என்ன செய்யலாம், செய்யக்கூடாதுன்னு பார்ப்போம்.

1. ஓசியில கிடைக்குதுன்னு அட்டைகளை வாங்கிக் குவிக்க வேண்டாம். ஒன்று அல்லது இரண்டு அட்டைகள் போதும். ஒரு அட்டையில் 20000 வரை உபயோகிக்கலாம் என்றால் இரண்டு அட்டைக்கு 40000 ஆச்சு. ஒரு மாதத்திற்கு இதற்கு மேலா தேவைப்படும்?

2. ரொம்ப முக்கியம் ஒரு கடன் அட்டையை வைத்து இன்னொன்றுக்கு விண்ணப்பிக்க வேண்டாம். இது ஏன்னா நீங்கள் உங்களது கடன் அட்டையின் முன்,பின் பக்கங்களை நகல் எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கும். அப்படி செய்தால் உங்கள் அட்டையின் பின்புறம் இருக்கும் CVV2வும் அதில் தெரியும். CVV2 நமக்காக Online shopping செய்வதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் ரகசிய எண். அதைப் போய் முன் பின் தெரியாத ஒருவரிடம் கொடுக்கலாமா? அந்த நபர் அதை வைத்து கோல்மால் செய்து விட்டால் கஷ்டம். அதனால் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

3. Balance Transfer தயவு செய்து வேண்டாம். சேவை வரி,Processing Fee என்று ஒரு 200, 250 பிடுங்கிவிடுவார்கள்.

4. இப்போது Verified By Visa (VBV), Mastercard Secure போன்ற பாதுகாப்பான Online shopping வழிமுறைகள் வங்கிகளால் வழங்கப்படுகின்றன. அவற்றில் பதிவு செய்து கொண்டு விட்டால் Online Shoppingக்கு ரொம்பவே பாதுகாப்பு.

5. Online Shopping செய்த பிறகோ அல்லது Onlineல் பயணச்சீட்டு முன்பதிவு செய்த பிறகோ மறக்காமல் Signout செய்த பிறகு இணைய உலாவியை மூடுங்கள்.

6. அதேபோல் வங்கிகள் நாம் கடன் அட்டையை உபயோகிப்பதைப் பொறுத்து Points வழங்குவார்கள். அதிகம் செலவு செய்தால் அதிக Points கிடைக்கும் என்பது உண்மை. நூறு ரூபாய்க்கு ஒரு Point என்று வைத்தால் 1000 Pointச் கிடைக்க நாம் 100000 செலவு செய்ய வேண்டும். பின்னர் அந்த Pointsக்கு ஏற்றவாறு நமது கடன் அட்டை பில்லில் தள்ளுபடி கிடைக்கும். அதாவது தள்ளுபடி 1000 ரூபாய். இந்த 1000 ரூபாய் தள்ளுபடிக்கு செலவு செய்ய வேண்டியது 100000 ரூபாய். நான் சொல்வது Cash back Credit card. சில வங்கிகள் இந்த வசதியும் தராது. அவர்கள் ஒரு லிஸ்ட் அனுப்புவார்கள். அதிலிருக்கும் பாடாவதிப் பொருளை வாங்கி நமது Pointsஐக் கழித்துக் கொள்ளலாம் என்பார்கள். எனவே Pointsக்காக செலவழிக்க வேண்டாம்.

யப்பப்பா. இப்படி பயமுறுத்துறியேங்கிறீங்களா? கடன் அட்டைகளால் நன்மைகளும் உண்டுங்க. மாதச் சம்பளக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தான் கடன் அட்டைகள். மாதக்கடைசியில் கையில் பணம் இல்லாதபோது உபயோகித்துவிட்டு பின் சம்பளம் வந்தவுடன் சுலபமாக செலுத்திவிடலாம். என்ன வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது. கை அரிப்பு எடுத்தால் சொரிந்து கொள்ளவும். கடன் அட்டையை உபயோக்கிக்க வேண்டாம். :)

சரி. வங்கிகள் வாடிக்கையாளர்களை ரொம்பவே ஏமாற்றுகின்றன என்பது பொதுவாக எல்லோரும் சொல்லும் குற்றச்சாட்டு. என் அனுபவத்தில் ஒரு வங்கியின் ஏமாற்று வேலையையும், ஒரு வங்கியின் நல்ல மனசையும், அப்புறம் கிரெடிட் கார்டுகளை வைத்துத் தான் நான் ஒரு வீடே கட்டிக் கொண்டிருக்கிறேன் அது எப்படி என்பதையும் அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(அடுத்த பதிவில் முடியும்)


ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

Thursday, July 26, 2007

விஜய.டி.ராஜேந்தரின் புதிய அவதாரம் !

தசாவதாரம் படத்தில் கமல் பத்து வேடங்களில் கலக்குவதால் தனது அடுத்த படத்தில் விஜய.டி.ராஜேந்தர் தனது கெட்டப்பை மாற்றி வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளார். இன்று அந்த கெட்டப்பின் ஸ்டில்ஸ் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று கீழே.















ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 3

முந்தைய பதிவுகளில் ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னும், அது எப்படி நமது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்குதுன்னும் பார்த்தோம். இப்போ ஒரு வங்கியின் ஏடிஎம்மில் வேறொரு வங்கியின் அட்டையை உபயோகித்தால் எப்படிப் பணம் வருதுன்னு பார்க்கலாம்.

உதாரணத்துக்கு ஒரு சிட்டி வங்கியின் ஏடிஎம்மில் ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையை உபயோகித்தால் அது எப்படி செயல்படுதுன்னு பார்க்கலாம். ஏடிஎம்க்கு நமது அட்டையை வைத்து அது எந்த வங்கியின் அட்டை என்றெல்லாம் கண்டுபிடிக்கத் தெரியாது. ஆகவே நாம் பணம் கேட்டால் வழக்கம் போல் ஒரு தகவலை உருவாக்கி அதை ஏடிஎம் கண்ட்ரோலருக்கு அனுப்பி வைக்கும். ஏடிஎம் கண்ட்ரோலர் அந்தத் தகவலை Switchக்கு அனுப்பி வைக்கும்.

Switch தான் அந்தத் தகவலில் இருக்கும் அட்டை எண் அந்த வங்கியினுடையதா அல்லது வேறு ஏதாவது வங்கியினுடையதா எனக் கண்டுபிடிக்கும். அது ஒன்றும் பெரிய வித்தை எல்லாம் இல்லைங்க.உங்களது அட்டை எண்ணின் முதல் 6 இலக்கங்களை 'வங்கி அடையாள எண்' (BIN - Bank Identification No) என அழைப்பர். இந்த BINஐ வைத்துத் தான் அது அந்த வங்கியின் அட்டையா அல்லது பிற வங்கியின் அட்டையா எனக் கண்டுபிடிக்கும்.

உதாரணத்துக்கு நீங்கள் சிட்டி வங்கி டெபிட் அட்டை வைத்திருக்கிறீர்களா?. அதில் உங்கள் அட்டையின் முதல் 6 இலக்கங்கள் 508159,508125,508126 என்ற மூன்றில் ஒன்றாகத் தான் இருக்கும். சரி தானே?. இதே போல் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட இலக்கங்களைத் தங்களுக்காக வைத்திருப்பார்கள். Switch எப்படி மற்ற வங்கியின் அட்டைகளைக் கண்டுபிடிக்கிறது? ரொம்ப சிம்பிள். ஒரு வங்கி 3 BIN வைத்திருக்கிறதென்றால் அவை தவிர மற்றவையெல்லாம் பிற வங்கியினுடையது தான் அல்லவா? :) . இந்த லாஜிக்கில் தான்.

சரி. அந்த அட்டை பிற வங்கியின் அட்டை என்று கண்டுபிடித்தாயிற்று. அப்போ அந்தத் தகவலை அந்தக் குறிப்பிட்ட வங்கிக்கு அனுப்ப வேண்டும். எப்படி அனுப்புவது?. இங்கே தான் உதவிக்கு வருகின்றன விசா மற்றும் மாஸ்டர் கார்ட்.

விசாவும், மாஸ்டர் கார்டும் ஏஜெண்ட்கள். அவற்றின் வேலையே இந்த மாதிரி வங்கிகளுக்கிடையில் இணைப்பு ஏற்படுத்திக் கொடுப்பது தான். எனவேதான் நாம் உலகில் எங்கு சென்றாலும் நமது அட்டையை ஏடிஎம்மில் உபயோகித்தால் பணம் கிடைக்கிறது. விசா, மாஸ்டர் கார்ட் போல பல ஏஜண்ட்கள் (Diners, American Express) உள்ளன. தெற்காசியாவிலும், தென்கிழக்காசியாவிலும் மிகவும் பிரபலமானவை விசா மற்றும் மாஸ்டர் கார்ட் தான்.

சரி. ஓவர் டு Transaction. Switch அந்தத் தகவலை விசாவிற்கோ அல்லது மாஸ்டர் கார்டுக்கோ அனுப்பும். உங்கள் அட்டை விசா அட்டை என்றால் அட்டை எண் '4'லும், மாஸ்டர் கார்ட் அட்டை என்றால் அட்டை எண் '5'லும் ஆரம்பிக்கும். சரிதானே? உங்கள் அட்டை எண் '4'ல் ஆரம்பித்தால் விசாவுக்கும், '5'ல் ஆரம்பித்தால் மாஸ்டர் கார்டுக்கும் Switch அனுப்பி வைக்கும்.

விசா அல்லது மாஸ்டர் கார்டு உங்கள் அட்டைக்குச் சொந்தமான வங்கியைத் தொடர்பு கொண்டு உங்கள் தகவலுக்கான பதிலை (Response message) பெற்றுத் தரும்.அப்புறம் என்ன ஏடிஎம் பணத்தை வாரி வழங்கும். நல்லாப் புரியணும்னா கீழே இருக்கிற படத்தைப் பாருங்க.



முக்கியமான விசயம் இவையெல்லாம் இரண்டு, மூன்று வினாடிகளுக்குள் நடந்து முடிந்துவிடும். என்னே அறிவியலின் வளர்ச்சி. அவ்வளவுதாங்க ஏடிஎம் வேலை பார்க்கிற விதம். அடுத்த பதிவில் Switch, Online shopping மற்றும் சில பாதுகாப்பு முறைகள் குறித்து சொல்கிறேன்.

(தொடரும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

Wednesday, July 25, 2007

கணினி ஓவியப் போட்டிக்கு எனது படம்

ஓவியமெல்லாம் அஞ்சாவது படிக்கிறப்ப 'வாழ்க்கைக் கல்வி' பாடத்துக்காக வரைஞ்சது. அதுக்கப்புறம் இப்பத்தான். அதுனால சின்னப்புள்ளத்தனமா கணினி ஓவியப் போட்டிக்கு ஒரு படம்.

தலைப்பு : மழையில் ஒரு பயணம்



Tuesday, July 24, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 2

நீங்கள் ஏடிஎம்மில் அட்டையை சொருகியவுடன் Card Reader கருப்புப் பட்டையில் இருக்கும் விபரங்களை எடுத்து தற்காலிகமாக சேமித்து வைத்துக் கொள்ளும் என சொல்லியிருந்தேன். அதன் பிறகு உங்களது நான்கிலக்க கடவுச்சொல்லைத் (PIN) தருமாறு கேட்கும். பின்னர் உங்களுக்குத் தேவையான தொகையைக் கேட்கும்.

இவ்வாறு அட்டையிலிருந்தும், நம்மிடம் இருந்தும் பெற்ற விசயங்களையெல்லாம் மொத்தமாக சேர்த்து ஒரு தகவலை (Request Message) உருவாக்கும். அந்தத் தகவலில் நமது அட்டை எண், காலாவதியாகும் தேதி, உருமாற்றப்பட்ட (Encrypt செய்யப்பட்ட) நமது கடவுச்சொல், நமக்குத் தேவையான தொகை ஆகிய எல்லாமும் இருக்கும். இப்படி ஏடிஎம் தகவல்களை உருவாக்குவதற்கு ஒரு ISO 8580 என்ற ஒரு முறை உள்ளது. உலகில் உள்ள எல்லா ஏடிஎம்களும் இதே முறையில் தான் தகவல்களை உருவாக்கும். இந்தத் தகவலை உருவாக்குவதற்கான மென்பொருள் ஏடிஎம்மில் நிறுவப்பட்டிருக்கும்.

பின்னர் அந்தத் தகவலை ஏடிஎம் கண்ட்ரோலர் (ATM Controller) என்ற மென்பொருளுக்கு அனுப்பும். இந்த கண்ட்ரோலர் தான் ஒரு வங்கியின் அனைத்து ஏடிஎம்களையும் கட்டுப்படுத்தும் மென்பொருள் ஆகும். ஒரு வங்கிக்கு இந்தியாவில் சுமார் 400 ஏடிஎம்கள் இருந்தாலும் ஒரு ஏடிஎம் கண்ட்ரோலர் தான் இருக்கும். ஏடிஎம் கண்ட்ரோலர் ஒரு Centralised software ஆகும். இது கணினி மென்பொருள் வல்லுனர்களால் அந்தந்த வங்கியின் வசதிக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும்.

ஏடிஎம் கண்ட்ரோலர் சில அடிப்படை சோதனைகளை மட்டும் அந்தத் தகவலில் செய்து விட்டு பின்னர் அந்தத் தகவலை Switch எனப்படும் மென்பொருள் பகுதிக்கு அனுப்பும். Switch என்பது ஏடிஎம் கண்ட்ரோலர், Internet banking, விசா, மாஸ்டர் கார்ட் போன்ற பிறவற்றுடனும் தொடர்பு கொண்டிருக்கும். அவை பற்றி பின்னர் தெளிவாக சொல்கிறேன்.

பின்னர் Switch ஏடிஎம் அனுப்பிய அந்தத் தகவலை பிரித்து மேயும். அந்தத் தகவலின் எல்லாப் பகுதிகளும் சரியாக இருக்கிறதா (Message format validation) செய்யும். உதாரணத்திற்கு, அட்டை எண் கண்டிப்பாக 14,16 அல்லது 19 இலக்கங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அப்புறம் CVV1 என்று சொன்னேன் இல்லையா? அது எல்லாம் சரிதானா என்று algorithm உபயோகித்து சரி பார்க்கும். இந்த மாதிரி பல வேலைகளை switch செய்யும். வங்கிக்கான மென்பொருள்களில் Switch மிகவும் முக்கியமானதாகும். அது பற்றி பின்னர் சொல்கிறேன்.

பின்னர் நமது கடவுச்சொல்லை சரிபார்க்க RACAL/HSM (Host Security Module) என்னும் ஒரு வன்பொருளுக்கு அனுப்பும். அந்த வன்பொருளில் உள்ள மென்பொருள் ஒரு algorithm உபயோகித்து நாம் கொடுத்த கடவுச்சொல் சரிதானா எனப் பார்க்கும். சரி என்றால் அடுத்து நேராக அந்தத் தகவலை Switch வழியாக நமது வங்கிக் கணக்கு விபரங்கள் இருக்கும் Databaseக்கு அனுப்பும்.

அங்கே நமது வங்கிக் கணக்கில் நாம் கேட்ட அளவு பணம் இருக்கிறதா என சோதனை செய்து விட்டு திரும்பவும் ஒரு தகவலை (Response message) அனுப்பும். அதாவது 'இவன் கணக்கில் பணம் உள்ளது. ஆகவே இவனுக்குப் பணம் கொடு ஏடிஎம்மே' என்பது போல ஒரு தகவல். அந்தத் தகவல் திரும்பவும் Switch, ஏடிஎம் கண்ட்ரோலர் வழியாக ஏடிஎம்மை வந்தடைந்து ஏடிஎம் அந்தத் தகவலைச் சரிபார்த்தவுடன் நமக்குப் பணத்தை வாரி வழங்கும்.

கீழே இருக்கும் படத்தைக் கிளிக்கிப் பார்த்தால் புரியும்.


இன்னொரு முக்கியமான விசயம் நமது கடவுச் சொல் (PIN) எந்த ஒரு இடத்திலும் வங்கியினால் சேமித்து வைக்கப்பட்டிருக்காது. வைக்கவும் கூடாது. எல்லாம் RBI உத்தரவு. ஆகவே தான் RACAL/HSM அந்தக் கடவுச்சொல் சரியா, தவறா என்று மட்டுமே பார்க்கும். வேறு எங்குமே சேமித்து வைக்காது.

சரி. மேலே சொன்னது எல்லாம் நமது வங்கிக் கணக்கு எந்த வங்கியில் இருக்கிறதோ அதே வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் நடைபெறும் முறை. அதாவது ஹெச்டிஎப்சி வங்கியின் அட்டையைக் கொண்டு ஹெச்டிஎப்சி வங்கியின் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முறை. அப்ப சிட்டி பேங்க் அட்டையை வைத்து ஹெச்டிஎப்சி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் என்ன ஆகும்? அது அடுத்த பதிவில்.

(தொடரும்)

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1


Wednesday, July 18, 2007

ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா? பகுதி - 1

நான் இரண்டு வருடங்கள் Banking domain-ல வேலை பார்த்ததுனால ஓரளவுக்கு ஏடிஎம்,கடன்/வங்கிக் கணக்கு அட்டை, இணைய வியாபாரம்(?) (Online shopping) இதிலெல்லாம் கொஞ்சம் ஞானம் உண்டு. அவை பற்றித் தான் எழுதலாம்னு இருக்கேன். படிக்கிறவுங்க சும்மா போகாம, புரிஞ்சுதா இல்லையாங்கிறதையும், ரொம்ப Technical terms உபயோகிக்கிறேனாங்கிறதையும் கருத்தாகச் சொல்லிவிட்டுப் போங்கள்.சந்தேகங்கள் இருந்தாலும் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இப்போது ஏடிஎம் வசதியில்லாத வங்கியே இல்லைன்னு சொல்லலாம். நாம் ஒரு வங்கியில் கணக்கு ஆரம்பித்த உடனே அல்லது கடன் அட்டைக்கு விண்ணப்பித்த பிறகு நமக்கு ஒரு பிளாஸ்டிக் அட்டையை வழங்குவார்கள். அதைதான் நாம் ஏடிஎம் அல்லது கடையில் சாமான் வாங்கும் போது பணத்துக்குப் பதிலாக உபயோகிக்கிறோம். இது எல்லோருக்கும் தெரிஞ்சதுதான். (அப்புறம் எதுக்கு நீ வேற ஒரு தடவை சொல்றன்னு கேட்கக் கூடாது. அப்பத்தான ஒரு flow கிடைக்கும்). அந்த அட்டையில் அப்படி என்ன இருக்குன்னு தெரிந்து கொள்வோம்.

அந்த அட்டையில் உங்கள் அழகான முகம், அட்டை எண், காலாவதியாகும் தேதி போக பின்னால் ஒரு கருப்புப் பட்டையிருக்கும். அதன் பேர் Magnetic Stripe. பிளாப்பியில் இருக்கிறதல்லவா அதேதான். தண்ணீரில் போட்டால் கூட ஒன்றும் ஆகாது(போட்டுப் பார்த்துட்டு ஒப்பேந்து போச்சுன்னா நான் பொறுப்பில்லை). அந்தக் கருப்புப் பட்டையிலும் நமது கார்டு எண், காலாவதியாகும் தேதி போக CVV1(Card Verification Value 1) என்ற ரகசிய எண்ணும் இருக்கும். இது ஒவ்வொரு கார்டுக்கும் வேறாக இருக்கும். உங்களுக்குக் கொடுப்பதற்காக அட்டை செய்யும் போதே அந்த ரகசிய எண்ணை அந்த கருப்புப் பட்டையில் பதிந்து விடுவார்கள்.இது எதற்காக என்றால் ஒருவருடைய அட்டை எண்ணும், காலாவதியாகும் தேதியும் தெரிந்துவிட்டால் வேறு யார் வேண்டுமானாலும் போலி அட்டை செய்து கொள்ளமுடியுமல்லவா? அதைத் தடுக்கத்தான்.

CVV1 என்று இருக்கிறதே CVV2 வேறு இருக்கிறதா என்றால் ஆமாம். உங்கள் அட்டையைத் திருப்பிப் பார்த்தால் கருப்புப் பட்டையின் கீழ் நீங்கள் கையெழுத்திடுவதற்காக வெள்ளை நிறத்தில் ஒரு பட்டையிருக்கும். அதில் கடன் அட்டை என்றால் உங்கள் அட்டை எண்ணும், வங்கிக் கணக்கு அட்டை என்றால் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணும் அதைத் தொடர்ந்து ஒரு 3 இலக்க எண்ணும் இருக்கும். அது தான் CVV2. இது எதுக்குன்னா இணையத்தில் உபயோகப்படுத்துகிற போது நம்மளோட அட்டைதானா இல்ல போலியான்னு கண்டுபிடிக்கிறதுக்காக. இதுவும் ஒவ்வொரு அட்டைக்கும் மாறுபடும். இது ஒவ்வொன்றின் பயன் பற்றியும் பின்னால் விபரமா சொல்கிறேன். இப்போ ஏடிஎம் பற்றிப் பார்க்கலாம்.

ஏடிஎம்ங்கிறது கொஞ்சம் ஹைடெக் அலமாரி. NCR, Diebold நிறுவனங்கள தான் இவைகளின் தயாரிப்புக்குப் புகழ் போனவை. ஏடிஎம் மிகவும் உறுதியானது. அதன் கண்ணாடியைக் கூட யாரும் எளிதில் உடைக்க முடியாது.அதற்குள் ஒரு கணினி இருக்கும். அது தான் நாம் பார்க்கும் screen எல்லாம் காட்டும். விசைப்பலகைக்குப் பதில் நாம் அமுக்கும் எண்கள் கொண்ட Key Pad இருக்கும். அப்புறம் ஒரு Card Reader. நாம ஒரு துவாரத்தில் நமது அட்டையை சொருகுகிறோமே அது தான். அது தான் நமது அட்டையின் பின்னால் இருக்கும் கருப்புப் பட்டையில் இருக்கும் விபரங்களைப் படித்து தற்காலிகமாகச் சேமித்து வைத்துக் கொள்ளும்.

அப்புறம் ஒரு பெட்டகம் (Locker). அதில் தான் பணம் வைக்கும் Slots இருக்கும். ஏடிஎம்மில் பணம் இல்லையென்றால் இந்த பெட்டகத்தைத் திறந்து ஒவ்வொரு Slotடிலும் 1000,500,100 என்று வைத்து எந்த ஸ்லாட்டில் எந்த ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றன என்பதை ஏடிஎம்-மின் கணினியில் பதிந்து விடுவார்கள். மாற்றிப் பதிந்து விட்டால் சீன் தான். 500 எடுப்பவனுக்கு 1000மும், 1000 எடுப்பவனுக்கு 100ம் போகும். அதனால் இதை செய்யும் போது கவனமாக இருப்பார்கள். குறிப்பாக இந்தியாவில் தற்போதுள்ள ஏடிஎம் வகைகளில் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் வசதியும், எந்த ரூபாய் நோட்டு என்று அறிந்து கொள்ளும் வசதியும் கிடையாது. வெளிநாடுகளில் இருக்கலாம் என நினைக்கிறேன்.

மேலும் ரசீது கொடுக்கும் ஒரு ஸ்லாட்டும், ஏடிஎம்மில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக EJ (Electronic Journal) எனப்படும் காகித ரோலும் இருக்கும். இந்தக் காகித ரோலில நாம் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலோ, ஏடிஎம்மைத் திறந்தாலோ, நாம் என்ன செய்தாலும் அந்தக் காகித ரோலில் எழுதிக் கொண்டே வரும். காகிதம் தீர்ந்து போனால் கூட memoryயில் பதிந்து வைத்துக் கொண்டு காகித ரோலை மாட்டின உடனே 'ஒரு கடமை தவறாத காவல்துறை அதிகாரி' போல கட கட வென எழுதித் தள்ளிவிட்டு தான் மறுவேலை பார்க்கும். இது விமானங்களில் இருக்கும் கருப்புப் பெட்டி போல் பின்னால் என்ன பிரச்சினையென்றாலும் பார்த்துத் தெரிந்து கொள்ள உதவும்.

அப்புறம் ஒரு குப்பைத் தொட்டி. இது எதுக்குன்னா உங்களுக்கு ரசீது கொடுக்கும் போதோ, அல்லது பணம் கொடுக்கும் போதோ கிழிந்து அல்லது எசகு பிசகாக மாட்டி விட்டாலோ அதை அப்படியே உள்ளே இழுத்து இந்தக் குப்பைத் தொட்டியில் போட்டு விடும். இது போக பணம் கொடுக்கும் Cash dispenser, பணம் அல்லது செக் டெபாசிட் செய்ய உதவும் Slotகளும் இதில் உள்ளன.

ஆக இவ்வளவு சாமான் சட்டுகளும் ஒரு ஏடிஎம் பெட்டியில் உள்ளன. சரி அட்டையைப் போட்டவுடனே கொஞ்ச நேரத்தில் எப்படிப் பணம் வருது? அது அடுத்த பதிவில்.

(தொடரும்)

Sunday, July 15, 2007

மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா! மக்களின் மத்தியில் காமராஜா!

இன்று ஜூலை15. பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம். தமிழக அரசு இந்நாளை இனிவரும் ஆண்டுகளில் கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாட வேண்டுமென்று அறிவித்திருக்கிறது. மிகவும் வரவேற்கத்தக்கதே.

இவ்வாறு காமரஜர் பிறந்தநாளைப் பள்ளிகளில் கொண்டாடுவது நான் படித்த பள்ளியில் காலகாலமாக நடந்து வரும் ஒன்று. அது நாடார் சமுதாயத்தினர் நடத்தி வந்த பள்ளி. பெருந்தலைவர் பிறந்ததினத்தின் முதல் நாள் எங்கள் பள்ளியில் இருக்கும் ஆளுயர காமராஜர் படத்தை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் துடைத்து சுத்தம் செய்ய ஆரம்பிப்பதிலிருந்து பள்ளி களை கட்டிவிடும். பின்னர் கொஞ்சநேரத்தில் தலைமை ஆசிரியரிடமிருந்து வரும் சுற்றறிக்கையில் மறுநாள் எல்லோரும் கண்டிப்பாக சீருடை அணிந்து வரவேண்டும், ஒழுங்காக இத்தனை மணிக்கு பள்ளியில் இருக்கவேண்டும் என்ற கட்டளைகளுடன் நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பொரி வழங்கப்படும் என்ற தூண்டிலும் இருக்கும்.

மறுநாள் காலையில் பள்ளிக்குள் நுழையும்போதே "மலர்களின் நடுவினில் ஒரு ரோஜா மக்களின் மத்தியில் காமராஜா" என்ற பாடல் வரவேற்கும். அந்தப் பெரிய காமராஜர் படம் சைக்கிள் ரிக்சாவில் வைக்கப்பட்டு பெரிய ரோஜா மாலையினால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் அனைவருக்கும் காமராஜர் படம் போட்ட கொடி தரப்பட்டு அனைவரும் சட்டையில் குத்திக் கொள்வோம். அடுத்தவன் கொடி குத்திவிடச் சொன்னால் குத்தி விடுகிற சாக்கில் குண்டூசியால் நறுக்கென மார்பில் குத்தி விட்டு தெரியாமடா என்று சொல்லி வெறுப்பேற்றுவோம். எல்லா வகுப்பு மாணவர்களும் வரிசையில் நிற்க தலைமையாசிரியர் உரையுடன் தேசியக் கொடியேற்றப்பட்டு பின்னர் ஊர்வலம் தொடங்கும். கைகூப்பியபடியுள்ள காமராஜர் படத்துடன் செல்லும் ரிக்சாவைத் தொடர்ந்து தேசிய மாணவர் படையில் உள்ள மாணவர்கள் காக்கி சீருடையுடன் முதலில் செல்ல அவர்கள் பின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் வெள்ளை சீருடையிலும் பன்னிரெண்டாம் வகுப்பு, பதினொன்று என்று வந்து ஆறாம் வகுப்பில் முடியும். எங்கள் பின்னால் ஆண்கள், பெண்கள் தொடக்கப்பள்ளிகளின் மாணவ, மாணவிகளும் கடைசியாக அனைவரும் எதிர்பார்க்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும் ஊர்வலம் செல்லும் வழியில் வந்து இணைந்து கொள்வர்.

இதற்கிடையில் கமுதியில் இருக்கும் காமராஜர் சிலையைப் பற்றிச் சொல்லவேண்டும். யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் பெரிய சிலையாக சாலை ஓரத்தில் மிகவும் பாதுகாப்பாக கம்பீரத்துடன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒரு பகுதியில் அமைத்திருப்பர். முக்கியமான விசயம் அந்தப் பெரிய சிலைக்கும் வேட்டி, சட்டை அணிவித்து இருப்பர். நான் ஒரு நாள் கூட வேட்டி சட்டை இல்லாமல் பார்த்ததில்லை. பிறந்த நாளன்று புது வேட்டி சட்டையுடன் ஏகப்பட்ட மாலைகளுடன் சிலை அழகாக இருக்கும்.

ஓவர் டு ஊர்வலம். இரண்டு மூன்று நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் மட்டும் பந்தாவாக ரிக்சாவின் அருகிலேயே நடந்து செல்வர். ஏனென்றால் ரிக்சாவில் ஒலிப்பெருக்கி மாட்டி காமராஜர் புகழ்பாடும் பாடல்களை அவர்கள் தான் கேசட் மாற்றிப் போட்டு இயக்குவார்கள். மற்றவர்களை அருகிலேயே விடமாட்டார்கள். இவ்வாறாக பட்டையைக் கிளப்பும் ஊர்வலம் நாடார் பஜார், செட்டியார் பஜார், முஸ்லிம் பஜார், தெற்குத் தெரு, மேட்டுத் தெரு வழியாக அமர்க்களமாகச் செல்லும். அனைத்தும் சாதிப்பெயராக இருக்கிறதே என எண்ண வேண்டாம். கமுதியில் அவை மூன்றும் தான் முக்கிய வீதிகள்.

வழியில் சில பெரியவர்கள், வயதான பெண்கள் மட்டும் காமராஜர் படத்தைப் பார்த்துக் கையெடுத்து வணங்குவார்கள். எனக்கு அப்போதெல்லாம் வியப்பாக இருக்கும். சில வீடுகளின் வெளியில் காமராஜர் படம் வைத்து மாலையிட்டு ஏகப்பட்ட மிட்டாய்களை அருகில் தட்டுகளில் வைத்திருப்பார்கள். ஊர்வலத்தில் செல்லும் நாங்கள் போட்டி போட்டு அவற்றை எடுத்துக் கொள்வோம். இப்படி நாங்கள் ஊர்வலமாக வரும் போது எங்கள் எல்லோரது வீடுகளிலுமிருந்து ஆட்கள் வெளியில் வந்து எங்கள் ஊர்வலத்தைப் பார்ப்பார்கள். நாங்கள் அவரவர் வீடு வரும் போது அப்பா, அம்மாக்களைப் பார்த்து கையசப்பதும், வீட்டுக்குள் ஓடிச் சென்று தண்ணீர் குடித்து விட்டு வந்து திரும்பவும் ஊர்வலத்தில் கலந்து கொள்வதும் நடக்கும். எங்கள் உடற்கல்வி ஆசிரியருக்கு மட்டும் இது எல்லாம் பிடிக்காது. உர்ரென்று முறைத்தபடியே எங்களுடன் வருவார்.

ஒருவழியாக ஊர்வலம் முடியும் போது பிற பள்ளி மாணவ, மாணவிகளெல்லாம் அடுத்தடுத்து கழன்று கொள்ள நாங்கள் கடைசியாகப் பள்ளிக்கு வந்து சேருவோம். சிறிது நேரம் கழித்து வகுப்புவாரியாக பொரி விநியோகம் நடைபெறும். அதைத் தின்பது கொஞ்சமாகவும், தெருவில் சிதறுவது அதிகமாகவும் சேட்டைகள் செய்து கொண்டே வீட்டினைச் சென்றடவோம். இவ்வாறாக எனது பள்ளிக்காலம் முழுவதும் பன்னிரெண்டு ஆண்டுகள் பெருந்தலைவர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மரியாதை செய்திருக்கிறேன். பள்ளி முடித்து கல்லூரியில் பயின்ற போது இவ்வாறான ஊர்வலம் சாலையோரம் எனது நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கடந்து சென்ற போது எங்கள் அனைவருக்குமே பழைய நினைவுகள் வந்து ஆட்கொண்டன. அதைக் காட்டிக் கொள்ளாமல் ஊர்வலத்தில் இருந்த மாணவர்களுக்குக் கையசைத்துவிட்டு நின்றோம். இப்போது அந்தப் பெருந்தலைவரின் பிறந்தநாளன்று, தற்போதுள்ள அரசியல்வாதிகளுக்கு அவரது குணத்தில் பத்து சதவீதமாவது கிடைக்கவேண்டும் என எண்ணிக் கொள்கிறேன்.

Thursday, July 12, 2007

கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருக்காது

சிறுவயதில் எனக்கு மரம், செடி வளர்த்தல் என்றால் மிகவும் விருப்பம். ஆனால் நாங்கள் சொந்த ஊரில் இருந்தபோது எங்கள் வீட்டில் அதற்கான இடம் கிடையாது. ஆனாலும் காலியான பாலித்தீன் பைகளில் மண் நிரப்பி காட்டுரோஜா(இப்போ பட்டுரோஸ்?!)ச் செடிகளை வளர்த்து வந்தேன். இசை கேட்டால் செடி நன்றாக வளரும் என்பதால் எங்கள் வீட்டு வானொலி இருக்குமிடத்துக்கு அருகில் சன்னலுக்கு வெளியே வைத்து வளர்த்து வந்தேன். ஆனாலும் மரம் வளர்ப்பது என்பது ஓரு கனவாகவே இருந்து வந்தது.

பின்னர் வேறொரு வீட்டிற்கு மாறியபோதும் இதே நிலைதான் என்றாலும், வீட்டிற்கு முன்புறம் நிறைய காலி இடமிருந்ததால் மரம் வளர்க்கும் ஆசை மீண்டும் முளைத்தது. வீட்டு வாசலுக்கு அருகில் ஒரு மரம் வளர்க்கப் போகிறேன் என அம்மாவிடம் சொல்லி வைத்தேன். "என்ன மரம்டா?"ன்னு கேட்டபோது "வேப்பமரம்" என்றேன். மறுநாள் காலையில் என் அம்மா இடுப்பில் தண்ணீர்க் குடமும், கையில் சிறிய வேப்பங்கன்றையும் வைத்திருந்தார்கள். தண்ணீர் பிடிக்கும் குழாயடியில் இருந்து எடுத்து வந்ததாகச் சொன்னார்கள். இரண்டு இலைகள் மட்டுமே முளைத்திருந்த சிறிய செடி அது.

பின்னர் ஒரு காலி பாலித்தின் பையில் மண் நிரப்பி அதில் ஊன்றி வீட்டின் பின்புறம் வெயில் படும் இடத்தில் வைத்து வளர்த்து வந்தேன். ஒரு மரம் மட்டும் போதுமா? இன்னொன்றும் வளர்ப்போம் என எண்ணி பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்த மரமான மயில் கொன்றை மரத்தின் விதைகளை சேகரித்துக் கொண்டு வந்து முளைக்கவைத்தேன். தினமும் தண்ணீர் ஊற்றியும் வேப்பமரம் மட்டுமே வளர்ந்தது. மயில் கொன்றை முளைக்கவே இல்லை. பின் விதையைத் திரும்ப எடுத்து தண்ணீரில் மூன்று நாட்கள் ஊற வைத்த பின் அது லேசாக முளைக்கத் தொடங்கியதும் திரும்பவும் பையில் வைத்து வளர்த்து வந்தேன்.

சில நாட்களில் இரண்டும் நன்கு பெரியனவாக வளர்ந்து விட்டன. தரையில் ஊன்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. எங்கள் வீட்டு வாசலில் ஒரு மரம் மட்டுமே வைக்க இடமிருந்ததால் வேப்பமரத்தை மட்டும் வீட்டு வாசலில் வைப்பது என்றும் மயில் கொன்றை மரத்தை எங்கள் வீட்டு எதிரில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து வளர்ப்பது என்றும் முடிவு செய்தோம். அதன்படியே மரக்கன்றுகளுக்கு வேலியெல்லாம் போட்டு தினமும் தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து வந்தேன். இரண்டு வருடங்களில் மிகவும் நன்றாகவே வளர்ந்து விட்டன.

பின்னர் அந்த ஊரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது எனது நண்பர்கள், தெரிந்தவர்கள், ஆசையாய் வளர்த்த மரங்கள் என எல்லோரையும் பிரிய வேண்டியதாயிற்று. கிளம்பும் முன் வீட்டு வாசலில் இருந்த வேப்பமரத்தையும், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று மயில் கொன்றை மரத்தையும் நன்றாக ஒருமுறை பார்த்துவிட்டு வந்தேன்.
பின்னர் இராமநாதபுரத்தில் தற்காலிகமாக ஒரு வீட்டில் தங்கியிருந்தோம். நான் மதுரையில் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். பிறகு வேறொரு வீடு பார்த்திருப்பதாகவும் வீடு நன்றாக இருப்பதாகவும், அங்கு ஒரு ஆச்சரியம் எனக்காக இருப்பதாகவும் என் அம்மா தொலைபேசியில் சொன்னார்கள். நான் எனது நண்பர்கள் யாராவது பக்கத்து வீட்டில் இருக்கிறார்களா என்று கேட்டதற்கு நீ வந்து நேரடியாகப் பார் என்று சொல்லிவிட்டார்கள். நானும் என்னடா இது என்னவாக இருக்கும் என எண்ணியபடியே அந்த வாரம் ஊருக்கு வந்தபின் புது வீட்டைப் பார்க்கக் கிளம்பினேன்.

உண்மையிலேயே ஆச்சரியம் தான். அந்த வீட்டின் வாசலில் ஒருபுறம் வேப்பமரமும், மறுபுறம் மயில்கொன்றை மரமும் இருந்தன. கிட்டத்தட்ட நான் எங்கள் சொந்த ஊரில் வளர்த்த மரங்களின் அளவிலேயே இருந்தன. அம்மா "பார்த்தாயா! இது தான் நான் சொன்ன ஆச்சரியம்"ன்னார்கள். "என்னால் நம்பவே முடியவில்லை" என்றேன். "நீ கஷ்டப்பட்டு இரு மரங்களை வளர்த்தாய். அதன் பலன் உனக்குச் சேரவேண்டியது. அது நீ எங்கிருந்தாலும் உனக்குக் கிடைக்கும் "
ன்னு அம்மா சொன்னார்கள். இன்றும் அந்த மரங்கள் என்னதான் வெயில் அடித்தாலும் வீட்டுக்குள் குளுமையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இப்போதும் எங்கள் சொந்த ஊருக்குச் சென்றால் எனது மரங்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவது வழக்கம்.

Wednesday, July 04, 2007

கண்ணால் கண்ட காதல் கதை

என்னுடன் பணிபுரிந்த சக அலுவலகத் தோழியின் சுவாரஸ்யமான காதல் கல்யாணக் கதை இது. என் தோழி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். எல்லோரிடமும் மிகவும் நன்றாகப் பழகுவார். அவரும் எனது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இன்னொருவரும் காதலித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அங்கேயே காதலாகிக் கசிந்துருகி பிறகு இருவரும் ஒரே இடத்தில் வேலை கிடைத்ததும் மிகத் தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்தனர். இது இருவரின் வீட்டுக்கும் தெரியாது.

ஒரு நாள் தோழி தனது அக்காவிற்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும், அடுத்த மாதம் கல்யாணம் என்றும் சொன்னார். அவரது அக்கா சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். அக்காவிற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை கணினித்துறையில் ஒரு பெரிய பதவியில் இருப்பதாகக் கூறினார். நாங்களும் "உங்களுக்கு எப்போ கல்யாணம்?" என்று வழக்கமான பல்லவியை எடுத்துவிட்டோம். அவர் "எங்க மேட்டரை வீட்டில் சொல்ல வேண்டியதுதான் பாக்கி" என்றார்.

தன் அக்காவிற்குத்தான் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதே தன் காதலை வீட்டில் சொல்ல இது தான் சரியான சமயம் என எண்ணி சில நாட்களில் இவர் தங்கள் காதலை வீட்டில் சொல்லிவிட்டார். என் தோழியின் அப்பா தலைமைச் செயலகத்தில் பெரிய பதவியில் இருப்பவர். மிகவும் கண்டிப்பானவராம். என்ன ஆச்சரியம்! அவர் கோபமேபடாமல் யாரைக் காதலிக்கிறாய், இருவரும் ஒரே சாதி தானா என்று விசாரித்த போது பையன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மகளுக்காக இவர் பையனின் வீட்டிலும் பேசி அவர்கள் சம்மதத்தையும் வாங்கிவிட்டார். தனது இளையமகளுக்கும் மாப்பிள்ளை பார்த்து விட்ட மகிழ்ச்சியான செய்தியை தனது மூத்த மகளுக்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டில் சொல்லியிருக்கிறார். நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

என் தோழியின் அக்காவிற்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டில் தாம் தூம் எனக் குதித்திருக்கிறார்கள். தாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தினர், இதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது, நீங்கள் செய்தது சரியில்லை, என் தோழியின் தந்தை அவர் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் பெண் எடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டனராம். என் தோழியின் அப்பா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பயனில்லை. கடைசியில் சம்பந்தம் வேண்டாம் என முறித்துக் கொண்டு விட்டனர். என் தோழியோ தன் காதலினால் தனது அக்காவின் திருமணம் நின்று போனதில் மிகுந்த வருத்தத்திலிருந்தார். "சாதியைப் பெரிசாக நினைக்கிறவர்கள் சம்பந்தம் ஒன்றும் நமக்கு வேண்டாம்மா" என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் திரைப்படங்களில் வருவது போன்ற திருப்பம். அதாவது எனது தோழியின் அக்காவிற்கு ஏற்கனவே இன்னொருவருடன் காதல். இவர் தன் தங்கையைப் போல காதலை வீட்டில் சொல்ல தைரியமில்லாமல் திருமணத்திற்குச் சம்மதித்திருக்கிறார். இப்போது தான் எல்லாம் சரியாகிவிட்டதே! அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது காதலை லேட்டாக வீட்டில் சொல்லியிருக்கிறார். இவரது காதலர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தபோது காதலாம். பிறகென்ன முதலில் அக்கா கல்யாணம், பிறகு தங்கை கல்யாணம் என இரு கல்யாணங்களும் ஜாம் ஜாமென நடந்தன. நாங்கள் இரண்டு கல்யாணங்களுக்கும் போய் நன்றாக சாப்பிட்டுவிட்டு வந்தோம்.

இதில் எனக்கு மிகவும் பிடித்தது என் தோழியின் தந்தையின் குணம் தான். தன் இளைய மகளின் காதலால் தன் மூத்த மகளின் திருமணம் நின்றுவிட்டதே என்று எண்ணாமல் அவர்கள் சம்பந்தம் வேண்டாம் என்ற பிறகும் தன் இளையமகளின் வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டதால் கடைசியில் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.