Thursday, November 12, 2009

தமிழில் பட்டையைக் கிளப்பும் டிஸ்கவரி சேனல் !!


டிஸ்கவரி தொலைக்காட்சி இப்பொழுது தமிழில் பட்டையைக் கிளப்புவது தெரியுமா உங்களுக்கு?? அலுத்துப் போன நகைச்சுவைகளும், உலுத்துப்போன நடன நிகழ்ச்சிகளையும் பார்த்து சலித்திருந்த நேரத்தில் அதிரடியாக தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது டிஸ்கவரி தொலைக்காட்சி.

டிஸ்கவரி தொலைக்காட்சியை அதன் அறிவியல் மற்றும் விலங்குளின் வாழ்க்கைமுறை பற்றிய நிகழ்ச்சிகளுக்காகக் காண்பவர்கள் ஏராளம். பின்னே சிங்கம், புலி, சிறுத்தைகள் மானைத் துரத்திச் சென்று வேட்டையாடுவதை சன் தொலைக்காட்சியில் காணமுடியுமா?

கிராமங்களில் டிஸ்கவரியின் ரசிகர்கள் குறைவானாலும், சிறு நகரங்களில் அதிகம். மொழிபுரியாவிட்டாலும் காட்சிகளுக்காகக் காண்பவர்கள் ஏராளம். எனவே இவர்களை முற்றிலும் கவர்வதற்காக‌ தன் ஒளிபரப்பை இந்தியாவின் மாநில மொழிகளிலும் தொடங்கியிருக்கிறது.

முதலில் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை மட்டும் தமிழில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய டிஸ்கவரி இப்பொழுது மறுஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ழ்சிகளால் 24 மணிநேர தமிழ்த் தொலைக்காட்சியாக மாறியிருக்கிறது. (Discovery Kids தவிர). பாராட்டபட வேண்டிய விடயம் அவர்களின் மொழிமாற்றம். முடிந்தவரையில் ஆங்கிலக்கலப்பின்றி தமிழில் பேசுகிறார்கள்.

Man vs Wild, Nature's great events, Escaped, Expedition wild, Survivor man, Discover India இன்னும் பல நிகழ்ச்சிகளைத் தமிழில் அருமையாக மொழிமாற்றம் செய்து ஒளிபரப்புகிறார்கள். இவர்களைப் பார்த்து Nat Geo, Animal Planet ஆகியோரும் தமிழில் ஒளிபரப்பினால் ( Zee Studio ஆங்கிலத்தில் சப்டைட்டில் போட்டதைப் பார்த்து Star Moviesம், HBOவும் செய்தது போல) அறிவியல் சம்பந்தமான நிகழ்ச்சிகளை மாணவர்கள், குழந்தைகளும் காணும் வாய்ப்புகள் அதிகமாகும்.

டிஸ்கவரி தமிழ், கேபிள் தொலைக்காட்சியிலும், DTHலும்தெரியுதுங்க. டிஸ்கவரி பாருங்க. அறிவை வள்ர்த்துக்கோங்க. :)

Tuesday, November 03, 2009

இலங்கை வானொலிகள்


வானொலிகள். முந்தைய காலத்திலும் சரி,இன்றைய கால்த்திலும் சரி,எதிர்காலத்திலும் சரி. மிக முக்கியமான செய்தி ஊடகம் மட்டுமல்ல, மிகச்சிறந்த பொழுதுபோக்கு ஊடகமும் கூட. திரைப்பபடப் பாடல்களை ஒலிபரப்பி அவற்றின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருப்பவை இன்றைய பண்பலை வானொலிகள் மட்டுமல்ல. இங்கு நான் குறிப்பிட விரும்புவது என் குழந்தைப் பருவத்தில் (90களில்) வானொலிகள் எவ்வளவு முக்கியமான பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தது என்பதைத்தான்.

80களின் கடைசி மற்றும் 90களின் தொடக்கத்தில் தமிழகத்தின் மிகமுக்கிய பொழுதுபோக்கு ஊடகமாக இருந்தவை தூர்தர்சனும், இலங்கை வானொலியும் தான். அகில் இந்திய வானொலி செய்திகள் மற்றும் விவசாய செய்திகளுக்காக மட்டுமே பெயர்பெற்றவை. மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பியதில்லை. என‌க்கு வானொலி கேட்ப‌தென்றால் கொள்ளை விருப்ப‌ம்.

"இலங்கை வானொலியின் கொழும்பு சர்வதேச ஒலிபரப்பு". தமிழகத்தில் அனைத்துத் திரைப்படப்பாடல்களையும் ஒலிபரப்பி கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. காலை 7:00 மணிக்குத் தொடங்கும் ஒலிபரப்பு 10:00 வரையிலும். பின்னர் 3:00 மணிக்குத் தொடங்கி 5:30 வரையிலும் வகை தொகையில்லாமல் பாடல் பட்டாசுகளைக் கொளுத்திவிடுவார்கள்.

தினமும் மாலை 4 மணிக்கு ஒலிபரப்பாகும் 'லீவியின் சினிமாப் பாடல்கள்' என்ற நிகழ்ச்சியின் அடிமையாக இருந்தேன். அப்போது தமிழகத்தின் ஒட்டுமொத்த விளம்பரங்களும் இலங்கை வானொலிக்கே வழங்கப்பட்டிருந்தன. மத்திய அலை ஒலிபரப்பானாலும் தெள்ளத் தெளிவான ஒலிபரப்பு. தொகுப்பாளர்களின் தோழமையாகப் பேசும் விதம் என எல்லாமே அகில‌ இந்திய வானொலியின் சோம்பேறித்தனத்திலிருந்து வித்தியாசப்பட்டதால் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

பிடித்த தொகுப்பாளர் இராஜேஸ்வரி சண்முகம். பாடல் ஒலிபரப்பும் முன்பு மிக அருமையாக சம்பந்தப்பட்ட‌ விசயங்களையும் சேர்த்துச் சொல்லுவார். இல்ங்கை வானொலியிடம் தான் தமிழ்த்திரைப்படங்கள் அனைத்தினுடைய பாடல் ஒலிநாடாக்களும் உள்ளனவாம். இப்போதும் இந்த ஒலிபரப்பு உள்ளதா இல்லையா எனத் தெரியவில்லை.

அது மட்டுமா? கொஞ்சம் பெரியவனாகி (15, 16 வயதில்) விவரம் தெரியவும் தொலைக்காட்சி ஆன்டனாவுடன் வானொலிப்பெட்டியை இணைத்து இலங்கையின் பண்பலை வானொலிகளையும் கேட்டு நானும், அண்ணனும் மகிழ்ந்து வந்தோம். இந்தியாவில் பண்பலைகள் வருவதற்குப் பல வருடங்கள் முன்பே இலங்கையில் பண்பலை வானொலிகள் கொடிகட்டிப் பறந்து வந்தன.



சூரியன் பண்பலை, சக்தி பண்பலை, இலங்கை வானொலியின் வர்த்தக சேவை இன்னும் நிறைய. எனக்கு சக்தி பண்பலை தான் மிகவும் பிடிக்கும். மேகமூட்டம் இல்லாத காலங்களில் மிகத் தெளிவாக அனைத்துப் பண்பலை வானொலிகளும் கேட்டிருக்கிறோம்.

ஒருமுறை சூரியன் பண்பலைக்குத் தொலைபேசிய சிறுமி "மியாவ்!!!" என்று கத்த "ம்ஹூம்.இது போன்ற ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அவர் தொலைபேசி இலக்கத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்" என பெண்தொகுப்பாளர் அவர் உதவியாளரிடம் சொன்னார். அதை நினைத்து ஒருநாள் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தேன். ம்ம்ம்... சூதுவாது தெரியாத பருவமது.... மிக‌ முக்கிய‌மாக‌ அவ‌ர்க‌ள்து தூய த‌மிழ். தொகுப்பாளர்கள் 95 ச‌த‌வீத‌ம் ஆங்கில‌க்க‌ல‌ப்பின்றிப் பேசுவார்க‌ள். இன்றும் க‌தைத்துக் கொண்டுதான் இருக்கிறார்க‌ள். இலங்கையில் இப்பொழுது இன்னும் நிறைய தமிழ் பண்பலை வானொலிகள் இருப்பதாக அறிகிறேன்.

வெகுஅரிதாக கோடைகாலத்தில் 'புலிகளின் குரல்' வானொலியில் வரும். ஒருமுறை விடுதலைப்போராளி ஒருவரது வாழ்க்கை வரலாற்றையும், செய்திகளும் கேட்கமுடிந்தது. அலைவரிசை தெளிவின்மை, வானிலை ஆகியவற்றால் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே கேட்கமுடிந்திருக்கிறது.

இதோடு விட்டுவிடவில்லை வானொலி கேட்கும் விருப்பம். சிற்றலையில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு , லண்டன் பிபிசியின் தமிழோசை, சிங்கப்பூர் வானொலி ஆகியவற்றையும் தேடிப்பிடித்து நிகழ்ச்சிகளை ரசித்திருக்கிறேன்.

இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் கொடைக்கானலில் இருந்து பண்பலை வானொலி தொடங்கப்பட்டது. துல்லியமான ஒலிபரப்பாக இருந்தாலும், நிகழ்ச்சிகள் மொக்கையாக இருந்தால் யார் கேட்பார்கள்? "பண்பலையில் விளம்பரம் செய்யுங்கள். இந்த நாட்டின் செல்வம் இங்கேயே இருக்கட்டும்" என இலங்கை வானொலியின் சர்வதேச ஒலிபரப்பின் போட்டியை ஈடுகொடுக்க முடியாமல் புலம்பித் தள்ளுவார்கள்.

அதன்பின்னர் நான் கல்லூரியில் சேர்ந்த காலம். இந்தியாவில் தனியார் பண்பலை வானொலிகளுக்கு அனுமதி கிடைத்தது. தமிழில் முதலி திருநெல்வேலியில் இருந்து சூரியன் பண்பலை தன் முதல் ஒலிபரப்பைத் தொடங்கியது. திருநெல்வேலியில் ஒலிபரப்பாகும் வானொலி மதுரை வரை கேட்கும். எங்களுக்கு கல்லூரி விடுதியில் மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. ஏனோ தனியார் பண்பலை வானொலிகளுக்கு செய்திகள் ஒலிபரப்பும் உரிமை மட்டும் கொடுக்கப்படவில்லை.

வேலை தேடி சென்னை வந்தால் .... அட சென்னையின் பண்பலை வானொலிகள் பற்றி உங்களுக்குத் தெரியாததா பாஸ்?

Friday, October 30, 2009

யூத்புல் விகடனில் என் பதிவு




யூத்புல் விகடனில் என் முந்திய பதிவான 'மாமல்லபுரம்' 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் வெளிவந்துள்ளது. விகடனுக்கு நன்றி.

http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

Wednesday, October 28, 2009

மாமல்லபுரம்


’சிவகாமியின் சபதம்’ - பண்டைத் தமிழகத்தின் பல்லவ சாம்ரஜ்யம் எப்படி எழுச்சியுற்று வாதாபியை வென்று கணபதியைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்தது என ஒரு காதலின் பின்னணியில் புனையப்பட்டிருக்கும் அருமையான சரித்திரப் புதினம்.

மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் அவர்களது சிற்பக்கலை மீதான காதலை அருகிலிருந்து கண்டது போல சிவகாமியின் சபதத்தில் படித்து விட்டு அவர்கள் ஆட்சி புரிந்த மாமல்லபுரத்திற்குச் செல்லவில்லையென்றால் எப்படி???

கோடைவாட்டியெடுக்கும் ஒரு விடுமுறை நாளில் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் செல்லலாமெனத் திட்டமிட்டு நண்பகலில் அங்கு சென்றாயிற்று. ஆனால் கோடையில் வந்தது எவ்வளவு தவறு எனப் பின்னர் உணர்ந்தேன்.

பேருந்து நிலையத்திற்கு அருகில் நடந்து செல்லும் தொலைவில்தான் சிறப்புமிக்க ’கடற்கரைக் கோவில்’ உள்ளது. ஆர்ப்பரிக்கும் கடல் பின்னணியில் கோவிலைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி.

கிபி 640ல் மகேந்திரவர்மரால் குன்றைக் குடைந்து குடைவரைக் கோவிலாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏகப்பட்ட சிற்பங்கள் கடற்காற்றால் அரிக்கப்பட்ட நிலையிலும் செதுக்கிய சிற்பிகளின் திறமையைக் காட்டுகின்றன.

இருகோவில்களாக உள்ள கடற்கரைக் கோவிலில் கிழக்கு நோக்கி அமைந்த கோவிலில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ளது. பின்புறம் உள்ள சிறிய கோவிலில் மேற்கு நோக்கி உள்ள சன்னிதி வெறூமையாக உள்ளது. உள்ளே சிலை எதுவும் அமைக்கப்படவில்லை அல்லது அழிந்திருக்கலாம். இதன் பின்புறம் உள்ள சன்னிதியில் படுத்திருக்கும் நிலையில் பெருமாள் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.


சுற்றிச் சுற்றிப் படங்கள் எடுத்தபின் மதிய உணவு. ம். பரவாயில்லை ரகம். அடுத்தது மகிசாசுரமர்த்தினி மண்டபம். இது ஐந்துரதம் செல்லும் சாலையில் உள்ளது. வலதுபுறம் சிறிய மலையின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே மூன்று மண்டபங்கள் உள்ளன. முதல் மண்டபம் பாறையைக் குடைந்து மூன்று சன்னிதிகளுடன் உள்ளது. உள்ளே சிறபங்களோ வேலைப்பாடுகளோ இல்லை.

அதற்கும் சிறிது மேலே சென்றால் அருமையான மகிசன் வதம் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மற்றொரு பக்கம் படுத்திருக்கும் திருமால் சிற்பம். பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இவ்விரண்டும் அவ்வளவு அருமை.




அவ்வ்வ்வ்... கால் வலிக்குதே !!! தண்ணீர் வேறு காலியாகிவிட்டது. இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னொரு மண்டபம் தெரிகிறது. அவ்வளவு தூரம் நடக்கமுடியாது என்று மேலே இருந்த இன்னொரு சிறிய மண்டபத்துக்குச் சென்றேன். இது என்ன கண்காணிப்புக் கோபுரமா அல்லது கலங்கரை விளக்கமா தெரியவில்லை. உள்ளே மேலே ஏறிச் செல்ல மாடிப்படிகள் உள்ளன.

கீழே இறங்கிவந்த பிறகு ஐந்துரதம் செல்ல நடைப்பயணம். சாலையின் இருபுறங்களிலும் சிற்பக் கூடங்கள். பெரிய பெரிய புத்தர் சிலைகள் வேலை முடிந்து வெளியில் வைக்கப்பட்டிருந்தன. அடுத்த சோதனையாக என் கேமரா வேலை செய்யவில்லை. பேட்டரியில் சார்ஜ் இல்லை. சும்மா ஒரு 250 படங்கள் மட்டுமே எடுத்திருந்தேன். முக்கியமான ஐந்து ரதங்களைக் கேமராவில் படம்பிடிக்க முடியவில்லை. என் அலைபேசியில் மட்டுமே படங்கள் எடுத்தேன்.




ஐந்து விதமான ரதங்களும் விதவிதமான சிற்பங்களுடன் கண்கொள்ளாத அழகுடன் விளங்குகின்றன. யானை, சிங்கம், நந்தி என அனைத்தும் அருமை.

அப்பாடா .... அவ்வளவு தான் கோடையின் கொடுமையில் இதற்கு மேல் என்னால் நடக்கமுடியாது. திருக்கழுகுன்றம் செல்லமுடியாது. பகீரதன் தவம், புலிக்குகை, திருக்கழுகுன்றம் காண முடியவில்லை. பயணம் பாதியில் முடிந்தது.

Wednesday, September 09, 2009

சாண்டில்யனின் கடல்புறா - 1


கலிங்க நாடு. தற்போதைய ஆந்திராவின் வடபகுதியையும், ஒரிசாவின் தென்பகுதியையும் கொண்ட நாடு. அதன் மன்னன் பீமன். இந்நாட்டின் முக்கியத் துறைமுகம் பாலூர்பெருந்துறை. கலிங்க நாட்டில் தமிழ்மக்களுக்கு போதிய பாதுகாப்பின்மையும், அநீதியும் இழைக்கப்படுகின்றன. ஏனென்றால் கலிங்கத்துக்கும் சோழநாட்டிற்கும் பகை.

எனவே சோழ நாட்டு மன்னன் வீரராஜேந்திரர்(இராஜேந்திர சோழரின் மகன்) சமாதானத்தை வேண்டி கருணாகரன் என்ற இளைய பல்லவனைத் தூதுவனாக அனுப்புகிறார். அவன் கப்பலில் புகாரிலிருந்து பாலூர்பெருந்துறை வருகிறான். துறைமுகத்தில் தன் உயிர் நண்பனும் சோழ-சாளுக்கிய இளவரசனான அநபாயன் (பின்னாளில் முதலாம் குலோத்துங்கச் சோழன்) கலிங்கத்தால் சிறைபிடிக்கப்பட்டிடுப்பதை அறிந்து சினம் கொண்டு பீமனுக்கு எதிராக வாய்ச் சண்டையை ஆரம்பிக்க அது வாள்ச்சண்டையில் முடிகிறது.

கலிங்கத்து வீரர்களிடமிருந்து தப்பி வெளிநாட்டவர் தங்கியிருக்கும் விடுதி ஒன்றில் ஒளிந்து கொள்கிறான். கதாநாயகியை அறிமுகம் செய்ய இதை விட ஒரு நல்ல சமயம் வேண்டுமா? அந்த விடுதியில் தங்கியிருப்பவர் ஸ்ரீவிஜயத்தின் இளவரசரான குணவர்மர் மற்றும் அவர் மகள் காஞ்சனா. ஸ்ரீவிஜயம் இன்றைய சுமத்ரா, இந்தோனேசியா. குணவர்மர் அவர் தம்பி ஜெயவர்மனால் வஞ்சிக்கப்பட்டு அரியணையில் ஏறமுடியாமல் கடாரத்த்தின்(மலேசியா) இளவரசராகவே உள்ளார். எனவே வாரிசுச் சண்டையைத் தீர்த்துவைக்க இராஜேந்திரசோழரின் உதவியை நாடி சோழநாடு செல்வதற்காக பாலூரில் ரகசியமாகத் தங்கியிருக்கிறார்.

கலிங்கமும், ஸ்ரீவிஜயமும் நட்பு நாடுகள். எனவே பீமனும், ஜெயவர்மனும் நண்பர்கள் என்பதையும் நினவில் கொள்க. எனவேதான் குணவர்மர் ரகசியமாகத் தங்கியிருக்கிறார். காஞ்சனாவின் அறையில் ஒளிந்திருக்கும் இளையபல்லவனுக்கும், காஞ்சனா, குணவர்மருக்கும் அறிமுகம் ஏற்படுகிறது. இளையபல்லவனை மோப்பம் பிடித்த கலிங்கவீரர்கள் விடுதிக்கு வருகிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி சோழநாடு ஒற்றனான வணிகன் சேந்தனின் வீட்டிற்குச் செல்கிறான். அதற்குள் அங்கே சேந்தனும் கலிங்கவீரர்களிடம் சிறைப்ப்ட்டிருக்கிறான். இளையபல்லவனும் சிறைப்படுகிறான். நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

சிறையிலிருக்கும் இளையபல்லவனுக்கு அநபாயன் ’அவர்களை எப்படியாவது மீட்பதாகச்’ செய்தி அனுப்புகிறான். சிறையிலிருக்கும் அநபாயர் எப்படித் தன்னைச் சிறைமீட்பார் என யோசிக்கிறான் பல்லவன். எல்லாத் தடைகளையும் மீறி நீதிமன்றத்தில் காஞ்சனாவின் உதவியுடன் அட்டகாசமாக அனைவரையும் சிறைமீட்கிறார் அநபாயன். தப்பிச் செல்லும் அனைவரும் பாலூருக்கு வெளியில் கடற்கரைக் கிராமத்தில் தங்குகிறார்கள். பின்னர் காஞ்சனாவிற்கும் இளையபல்லவனுக்கும் காதல் அரும்புகிறது.


(படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்.)

சோழநாட்டு இளவரசனும், தூதுவனும், ஒற்றர்களும் தப்பிய செய்தியால் கலிங்கம் முழுவதும் கடும் பாதுகாப்பு இடப்படுகிறது. எனவே தரைவழியாக சோழநாடு செல்வது இயலாத காரியம். கடல்வழியாக மட்டுமே செல்லமுடியும். ஆனால் அங்கும் பாதுகாப்பு பலமாயிருக்குமென்பதால் திட்டமிட்டு சாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

இப்போதுதான் அறிமுகமாகிறான் அமீர். அரபு நாட்டவன். கதையின் மிகமுக்கியமானவன். அநபாயரின் நண்பன். அமீர் அவர்களை எப்படியாவது தப்பவைப்பதாக வாக்குறுதி கொடுத்து, அவர்களைத் தன் குருவும், கொள்ளையன் என்றும், மாவீரன் என்றும் அறியப்பட்ட அகூதா என்னும் சீனத்துக் கடலோடியிடம் அழைத்துச் செல்கிறான். அகூதா பெரும் வணிகர். கப்பல்களுக்குச் சொந்தக்காரர்.

அநபாயர், இளையபல்லவன், குண்வர்மர், காஞ்சனா, சேந்தன் ஆகிய அனைவரும் மாறுவேடத்தில் அகூதாவின் ஊழியர்கள் போல பாலூர்த் துறைமுகத்தில் நுழைந்து அனைத்துக் காவலையும் உடைத்து பூம்புகார் செல்லும் மரக்கலத்தில் ஏறித் தப்பிப்பது என்பது திட்டம். மிகவும் ஆபத்தான திட்டம். இதனால் ஓரிருவர் இறக்கும் வாய்ப்பும் உள்ளது. துறைமுகவாயிலில் இவர்களின் வேடம் கலையவே ஆரம்பிக்கிறது சண்டை. இளையபல்லவன் சண்டையில் பலத்த காயமடைகிறான். அவனால் மரக்கலம் செல்லமுடியாமல் கடற்கரையிலேயே விழுந்துவிடுகிறான். அநபாயர், குணவர்மர், காஞ்சனா மட்டுமே மரக்கலத்தை அடையமுடிகிறது. அமீரும், சேந்தனும் மரக்கலத்தில் ஏறாமல் கடற்கரையின் மற்றொரு பகுதியை நோக்கி ஓடுகிறார்கள். அடுத்து என்ன நடந்தது??????

அதை அடுத்த பாகத்தில் தான் பார்க்கவேண்டும் :)))))


பட்டையைக் கிளப்பும் இப்புதினத்தில் நிறைய அருமையான சரித்திரத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

1) இராஜேந்திரசோழருக்குப் பின்னர் இரண்டாவது முறையாகக் கடாரமும், ஸ்ரீவிஜயமும் சோழர்களால் வெல்லப்பட்டிருக்கிறது.

2) இளையபல்லவன் பின்னாளில் ’கருணாகர தொண்டைமான்’ எனப் பெயர் கொண்டு கலிங்கத்தின் மீது படையெடுத்து கலிங்கத்தை அழிக்கிறான். செயங்கொண்டார் இப்போரை வைத்துத்தான் ‘கலிங்கத்துப்பரணி’ பாடியிருக்கிறார்.

3) அடுத்தது நாடுகளின் பெயர்கள். இந்த ஆயிரம் ஆண்டுகளில் நாடுகளின் பெயர்கள் எவ்வளவு மாறிவிட்டன.
ஸ்ரீவிஜயம் - இந்தோனேசியா, ஜாவா, சுமத்ரா
கடாரம் - மலேசியா
நக்காவரம் - நிக்கோபார் தீவுகள்
அட்சயமுனை - Banda Aceh (தமிழில் எப்படிச் சொல்வது??)

இன்னும் பல.....

சாண்டில்யன் அவர்கள் எழுதினால் கவர்ச்சி இல்லாமலா??? இதிலும் நிறைய இருக்கிறது. காஞ்சனாதேவியின் அறிமுகத்தில் மூன்று
பக்கங்களில் அவள் அழகு வர்ணிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் இளையபல்லவன், காஞ்சனாதேவி காதல் காட்சிகளும் நிறைய உள்ளன. ;)

ஆமாம் அது என்ன கடல்புறா?? தெரியலங்க... ஒரு வேளை காஞ்சனாதேவியைத்தான் அப்படிச் சொல்கிறாரோ?? (தெரிந்தவர்கள் சொல்லவேண்டாம் :) ) ஒரே ஒரு இடத்தில் மட்டும் இளையபல்லவன், காஞ்சனாதேவியிடம் ‘வீட்டுப்புறா காட்டுபுறா கடல்புறா’ என்கிறான். அவ்வளவு தான்...

விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எழுதப்பட்டிருக்கும் இப்புதினம் சரித்திர ஆர்வம் கொண்ட அனைவரும் வாசிக்கலாம்.

கடல்புறா இணையத்தில் படிக்க - http://kadalpuraaonnet.blogspot.com

Saturday, July 11, 2009

நீங்க பேயைப் பார்த்திருக்கீங்களா பாஸ்?


எனக்கு எப்பவும் எது மேலயாவது ஆசை அல்லது விருப்பம் வந்தா வெறித்தனமா வரும். தேங்காய்ப்பால் ஊத்தி ஆப்பம் சாப்பிடணும்னு தோணினா ஒரு வாரம் தொடர்ந்து வெறுத்துப் போறவரைக்கும் ஆப்பம் மட்டும் சாப்பிடுவேன். அந்த மாதிரி இப்போ கொஞ்ச நாளா பேயைப் பார்க்கணும்னு ஆசை பிடிச்சி ஆட்டுது. பேய், ஆவி மேல நம்பிக்கை இல்லைன்னாலும் அப்பப்ப கேட்கிற தகவல்கள் ஒருவேளை பேய் இருக்குமோனு தோணவைக்குது.

நம்மில் யாருமே பேயை நேரில் பார்த்திருக்க மாட்டோம். பேய் பற்றிய தகவல்கள் எல்லாமே நம் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்கள் நமக்கு சொல்லிய தகவல்களாகவே இருக்கும். அதில் பாதி புரளிகளாகவே இருக்கும். மீதமுள்ளவை நம்பலாமா வேண்டாமா என்று நம்மைக் குழப்பும்.

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் 'தலையில்லாத முண்டம் ஊருக்குள்ள வந்துருச்சாம். அம்பிகா ஓட்டல்ல போய் இட்லி கொடுன்னு கேட்டுச்சாம். எல்லாரும் வீட்டில் வேப்பிலையைக் கட்டுங்க'ன்னு ஒரு புரளி. எங்கள் வீடு உள்பட எல்லோர் வீட்டிலும் வேப்பிலை. 'தலையில்லாத முண்டம் எப்படிடா இட்லி கொடுன்னு கேட்கும்'னு யாரும் யோசிக்கலை. அடுத்துப் பள்ளிக்கூடத்தில் 'ஒரு மணிக்கு சங்கு ஊதுறப்ப ஒத்தப் பனைமரத்திலருந்து பேய் பறந்து சுடுகாட்டுக்குப் போகும்'னு பசங்க வேற கிலியைக் கிளப்புவானுங்க. நம்ம பசங்களோட கற்பனை பேய் விசயத்தில் களைகட்டும்.

கல்லூரி விடுதியில் அதைவிடக் கொடுமை. பேய் ராத்திரி குழாயைப் பிடிச்சி ஏறி வந்து பாத்ரூமில் குளிக்குதுன்னு ஒரு பீதி. ஒரு நொன்னையும் கிடையாது. சீனியர் பசங்க ராத்திரி பாத்ரூமில் திருட்டு தம்மடிக்க கிளப்பிவிட்டிருந்த புரளி இது. இப்படி வதந்திகளை மட்டுமே பேய் விசயத்தில் கேட்டிருந்ததால் பேயின் இருப்பு குறித்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. நடுராத்திரியில் ஊர் சுற்ற, தனியாக வீட்டில் தூங்க என பேயை எல்லாம் நினைக்காமலே செய்தாகி விட்டது.

ஆனால் பேய் குறித்து எப்போதாவது நண்பர்களிடம் பேச்சு வரும் போது, உறவினர்கள் வீட்டில் யாருக்காவது பேய் பிடித்தது, பேய் விரட்டியது எனப் பேச்சு கிளம்பும். அந்தக் கதையெல்லாம் சுவாரஸ்யமாகக் கேட்டு விட்டு அதோடு மறந்துவிடுவதோடு சரி.

சமீபத்தில் நண்பர் ஒருவர் பேயை நேரில் பார்த்ததாகச் சொன்னவுடன் அதிர்ந்து போனேன். மதுரையின் ஒதுக்குப்புறமான இடமொன்றில் மாடியில் தண்ணியடித்துக் கொண்டிருந்த போது ஒரு உருவம் பூட்டியிருந்த கதவின் வழியே நுழைந்து அறைக்குள் சாவகாசமாக நடமாடிவிட்டுப் பின் வெளியே சென்றதாம். நான் நம்பவில்லை. 'யோவ், நீ முழுப் போதையில் இருந்தப்ப நிசமாலுமே எவனாவது உள்ள வந்து போயிருப்பான்யா..'ன்னு சொன்னா மனுசன் ரூம் பூட்டியிருந்துச்சுன்னு தலையிலடிச்சு சத்தியம் பண்றார்.

பட்ட காலிலேயே படும்கிற மாதிரி நண்பர் ஏற்படுத்திய குழப்பம் தீர்வதற்குள், நம்ம விஜய் தொலைக்காட்சி அடுத்த வெடிகுண்டை வீசியது. 'கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு' (தமிழில் Suicide Point) பற்றி 'குற்றம்-நடந்தது என்ன?'வில் ஒரு நிகழ்ச்சி. அதாவது இந்தப் பசுமைப் பள்ளத்தாக்கில் நிறையப் பேர் தற்கொலை செய்து கொள்வதால் அங்கே பேய்கள் உலாவுகின்றனவாம். அது உண்மையா என்று அறிவதற்கு அந்தப் பள்ளத்தாக்கின் கீழே இறங்கிப் பார்த்து உறுதி செய்யும் நிகழ்ச்சி.



தற்கொலை செய்து கொண்டவர்களின் உடலை மீட்கும் பணியில் இருப்பவர்களுடன், எழுத்தாளர் ராஜநாராயணனும் உடன் சென்றார். யாராவது தற்கொலை செய்து கொண்டால் அவர்களது உறவினர்களின் வேண்டுகோளுக்க்கிணங்க இவர்கள் பள்ளத்தாக்கில் இறங்கி உடலைத் தேட ஆரம்பிப்பார்களாம். இவர்கள் சொன்ன அனைத்துத் தகவல்களும் பயந்தவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்போது ஒரு தெய்வத்தை வணங்கி விட்டு கையில் ஒரு எலுமிச்சம் பழத்துடன் பயணம் தொடங்குவார்களாம். பயணத்தின் இடையில் யாராவது அழுவது போன்றும், கூப்பிடுவது போன்றும் சத்தம் கேட்குமாம். திரும்பிப் பார்க்கக்கூடாதாம். இறந்தவரின் உடலைத் தேடிக்கண்டுபிடித்தபின் அதை மேலே இழுத்து வரும் போது பிற பேய்கள் எல்லாம் சேர்ந்து உடலைக் கீழே இழுக்குமாம். அப்போது கையில் வைத்திருக்கும் எலுமிச்சையைப் பிய்த்துப் போட்டு பேய்களை விரட்டுவார்களாம்.

அடுத்து இந்தப் பசுமைப் பள்ளத்தாக்கில் இருந்து தவறி விழுந்த ஒருவரும் பேய்களைத் தான் கண்டதாகக் கூறினார். கிட்டத்தட்ட மூன்று நாட்கள் கால் உடைந்து போய் பசுமைப் பள்ளத்தாக்கில் மாட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அவரையும் இவர்கள் தான் காப்பாற்றியிருக்கிறார்கள். இதுவரை பசுமைப் பள்ளத்தாக்கில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டவர் இவர் ஒருவரே.

யம்மாடி இந்த நிகழ்ச்சி பார்த்து முடித்தவுடன் ரொம்ப நேரம் பேயடித்தது போலத்தான் இருந்தது. அன்னிக்குத்தான் தெரிந்தது. இவ்வளவு நாள் நான் பயப்படாத மாதிரியே நடிச்சிருக்கேன்னு.

அடுத்த அணுகுண்டு நம் பதிவுலகிலிருந்தே வீசப்பட்டது. இலங்கையிலும் பேய்கள் உண்டு. அது உலகுக்கே தெரிந்த விசயம்தான். இலங்கை நண்பர் லோஷன் அவர்களின் அலுவலகத்தில் பேயைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் புகைப்படம் எடுத்தும் போட்டிருந்தார். அவ்வளவுதான் இனிமேலும் சும்மா இருக்கக்கூடாது என்று முடிவு செய்து பேய் பற்றி நிறையத் தகவல்களைத் தேடிப் பார்த்து சலித்து எல்லாம் கிலியை அதிகப்படுத்தும் தகவல்கள் அல்லது அப்படியெல்லாம் எதுவும் கிடையாது எனும் பகுத்தறிவுத் தகவல்கள்.

எனவே நண்பர்களே, நீங்களாவது சொல்லுங்க .. உண்மையிலேயே பேய் இருக்கா? இல்லையா? பார்த்துருக்காய்ங்களா? பார்க்கலையா?

குறிப்பு :
'பேயைப் பார்க்கணும்னா சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க' என்னும் அறிவுரைகளும், 'நாங்கலாம் பேய் கூடத்தான் குடும்பமே நடத்துறோம்' எனும் ரங்கமணிகளின் புலம்பல்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. :) :) :)

படம் நன்றி : ஸ்ரீகணேஷ்

Wednesday, July 01, 2009

அகதியாய் வந்த சிறுமி




அகதியாய் வந்த சிறுமியின் காயத்துக்குக்
கட்டுப்போடுகையில் சொன்னாள்
"குருதி தோய்ந்த உன் கரங்களால்
என்னைத் தொடாதே!"

பக்குவ‌மாய் எடுத்துச் சொன்னேன்
"நான் இந்திய‌ன் என்ற‌ ச‌ட்டையை
எப்போதோ கழற்றிவிட்டேன்" என்று

கோப‌த்தோடு கூறினாள்
"த‌மிழனாய் இருந்து ம‌ட்டும் என்ன‌ கிழித்தாய்?"
அழுகையோடு தொட‌ர்ந்தாள்
"என் த‌ந்தை முட‌மாக்க‌ப்பட்டார்
தாய் பைத்தியமானாள்
அண்ண‌ன் க‌ட‌த்த‌ப்ப‌ட்டான்
அக்காள் கெடுக்க‌ப்ப‌ட்டாள்
நான் மட்டும் தப்பிவந்தேன் எப்படியோ ..
தாய்நாடு ஈழ‌மென்றும்
த‌ந்தைநாடு பார‌த‌மென்றும்
என் தாய்க்கு அவ‌ள் தாய்
சொல்வாளாம் ஒரு கால‌த்தில்.
ஆனால் நீர் எம‌க்குச் செய்த‌து?"

மெதுவாய்த் தொட‌ர்ந்தேன்.
"போராட்ட‌ங்க‌ள் ஆர்ப்பாட்டங்க‌ள்
தீக்குளிப்புக‌ள் உண்ணாநிலைக‌ள்
ம‌னித‌ச் ச‌ங்கிலிகள்
எவையும் எட்டவில்லை
எமை ஆள்பவரின் செவிகளை
ஏன் தெரியுமா?"

மெதுவாய்க் காதில் சொன்னேன்
"இலங்கையில் மட்டுமல்ல‌
இந்தியாவிலும் தமிழரை எவரும்
மதிப்பதில்லை"

ஏளனமாய்ச் சிரித்துச் சொன்னாள்
"சொல்லித் தெரிய அவசியமில்லை
எல்லாம் தெரியுமெனக்கு
உன் மக்கள் ஓட்டுப் போட்ட லட்சணத்திலிருந்தே!
சொரணையற்ற இனமென்று
சொந்த நாட்டவரும் மதிக்க மாட்டார்கள் !
எமைக் கைவிட்ட சனமென்று
சகோதரமக்களும் மதிக்க மாட்டார்கள் !"

கையை உதறிவிட்டு எழுந்து சென்றாள்
காறியுமிழ்ந்த உணர்வுடன் அமர்ந்திருந்தேன் நான் !

Tuesday, February 10, 2009

ரிச்சி ஸ்ட்ரீட் aka நரசிங்கபுரம் தெரு


உங்களுக்கு சென்னையில் நரசிங்கபுரம் தெரு எங்கே இருக்கிறதென்று தெரியுமா? என்னப்பா சத்யம் திரையரங்கம் தெரியுமாங்கிற மாதிரி கேட்கிறங்கிறீங்களா? அது சென்னையில் எல்லாருக்கும் தெரிஞ்ச இடம் தான். அதுதான் ரிச்சி ஸ்ட்ரீட் என தமிழில்(!) அழைக்கபடும் மின்னணு சாமான்கள் விற்கப்படும் தெரு.

ஜவுளிகளுக்கு எப்படி ரங்கநாதன் தெருவோ அதைப் போல மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) பொருட்களுக்குப் பேர் போன தெரு ரிச்சி ஸ்ட்ரீட். ஒரிஜினல் சாமான்கள், ஒரிஜினலைப் போலவே இருக்கும் டுபாக்கூர் சாமான்கள், கம்பெனி ப்ராண்டட் சாமான்களைவிட தரமான மின்னணு சாதனங்களை இங்கே வாங்கலாம். கணிப்பொறிக்குத் தேவையான திருகாணி முதல் ப்ராசசர் வரை சகலமும் கிடைக்கும் தெரு.

இந்தத் தெரு 1974ல் வெறும் 5 கடைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இப்போது 900க்கும் மேற்பட்ட கடைகளுடன் ஒட்டு மொத்த சென்னை/தமிழகத்துக்கும் தேவையான மின்னணுப் பொருட்களை விற்பனை செய்யும் இடமாக உள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய மின்னணுப் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையாக உள்ளது. இங்கே கடை வைத்திருப்பவர்கள் முக்கால்வாசிப் பேர் குஜாராத்திகள். வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு (ரொம்பப் பெருமை ! ).

ரங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் அளவுக்கு இங்கேயும் கூட்டம் எல்லாக் கடைகளிலும் மொய்க்கிறது. பெரும்பாலான மக்கள் வாங்க வருவது கணினிக்குத் தேவையான பொருட்கள், USB pen drive, mobile memory card போன்றவை. இங்கே வாங்க முடியாத மின்னணு சாதனங்களே இல்லை எனலாம். நமக்குத் தெரிந்த எல்லா கம்பெனி ஐட்டங்களும், தெரியாத ஏகப்பட்ட சரக்குகளுக்கும் கிடைக்கின்றன. புதிதாக ஒரு கணினி வாங்க வேண்டும் என்றால் ஷோரூம் போய் அங்கே காட்டும் கணினியை வாங்குவதற்கு அதே configuration உடன் இங்கே 10000 குறைவாகவே வாங்கிவிடலாம்.

கணினி மட்டுமின்றி ’ரிச்சி ஸ்ட்ரீட் மேட்’ டிவிடி ப்ளேயர்கள், மெமரி கார்டுகள், மொபைல் போன்கள், கணினி உதிரி பாகங்கள் என வாரண்டி இல்லாத சரக்குகள் மலிவு விலையில் கிடைக்கின்றன. புதியன மட்டுமின்றி பழைய பொருட்களையும் சரி செய்து விற்கிறார்கள். கணினியில் அல்லது தனியாக Play station வைக்கத் தேவையான எல்லாப் பொருட்களும் இங்கே கிடைக்கின்றன. என்ன புது எலக்ட்ரானிக்ஸ் சாமான் வந்தாலும் அடுத்த நாளே இங்கே எதிர்பார்க்கலாம். ஒரிஜினலாகவோ அல்லது டுபாக்கூராகவோ !!! :)))

நான் ஒரு முறை மெமரி கார்ட் வாங்கப் போனபோது அந்தக் கடைக்காரர் ஒரு பேனாவை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார். என்ன வென்று பார்த்தால் அது ஒரு ரகசிய கேமராவுடன் உள்ள பேனா. 4 மணி நேர ரெக்கார்டிங் வசதியுடன் USB plug & play model. விலை வெறும் 700. இப்படி அன்றாட உபயோகத்துக்கு அல்லாத பல பொருட்கள் இங்கே மலிவாகக் கிடைக்கின்றன.


இப்படி எல்லாமே இங்கே கிடைத்தாலும் சில பிரச்சினைகளும் இங்கே இருக்கின்றன. முதலாவது டூப்ளிகேட் சாமான்கள். நாங்கள் ஒரு முறை ஆப்பிள் ஐபாட் வாங்கப் போன போது அந்தக் கடைக்காரன் ”ஒரிஜினலா, டூப்ளிகேட்டா?” என்றான் (ரொம்ப நல்லவன்) . இரண்டிலும் கொஞ்சமும் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியவில்லை. விலை மட்டுமே வித்தியாசம். டூப்ளிகேட் மூன்று மடங்கு விலை குறைவு. இது என்ன தங்கமா? உரசிப் பார்த்து வாங்க? அவன் ஒரிஜினல் என்று சொன்னதையே வாங்கித் தொலைத்தோம். ஒன்றும் பிரச்சினையில்லாமல் வருகிறது.

அடுத்தது இங்கே நிறைய கடைகள் இருப்பதால் எல்லாக் கடைகளிலும் ஒவ்வொரு விலை சொல்கிறார்கள். நாங்கள் புதிதாதகக் கணினி வாங்க வேண்டியிருந்ததால் நிறையக் கடைகளில் Configuration சொல்லி விலை விசாரித்தோம். ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது 600 ரூபாய் விலை வித்தியாசம் இருந்தது. பின்னர் 'Delta peripherals' என்ற கடையில் வாங்கி விட்டு 250 கொடுத்து மாடியில் ஒரு இடத்தில் எல்லா பாகங்களையும் மாட்டினோம். கடையில் இருக்கும் பொடியன் சர்வ சாதரணமாக எல்லாவற்றையும் மாட்டுகிறான்.

அடுத்தது வாரண்டி. வாங்கும் வரை ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டு பின்னால் எதாவது பிரச்சனை என்று அடுத்த நாள் போய்க் கேட்டால் “யார் நீ?” என்று கேட்பார்கள். இல்லையெனில் “கம்பெனி வாரண்டி. நாங்க எதுவும் பண்ண முடியாது” என்பார்கள்.

அடுத்த பிரச்சினை. கூட்டமாக உள்ள கடைகளில் நீங்கள் ஒரு சாமான் வாங்குவதற்குள் உங்களுக்கு பிபி ஏறி பின்னர் குளுக்கோஸ் தான் ஏற்றணும். பின்னே நீங்கள் எதாவது சாமான் கேட்டால் என்னவோ க்டன் கேட்ட மாதிரி கடையில் இருப்பவர்கள் மதிக்கவே மாட்டார்கள். ஒரு பத்து தடவை கேட்டு பின்னர் அங்கே இருப்பவன் கையைப் பிடித்து இழுத்துக் கேட்டால்தான் எடுத்துத் தருவான். எனவே ஹைபிபி மக்கள் தவிர்க்கவும். :)

சரி அப்படின்னா எதுக்கு இங்க போய் ஒரிஜினலா டூப்ளிகேட்டான்னு தெரியாம ஒரு பொருளை வாங்குறதுக்கு நேரா ஷோரூமுக்குப் போய் வாங்கிரலாமே என்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். இங்கே ஒரிஜினல் சாமான்களும் விலை கம்மி. உதாரணத்துக்கு ஸ்பென்சரில் ஒரு கேமரா மெமரிகார்ட் 1GB 850 ரூபாய் சொன்னார்கள். அதே மெமரி கார்ட் 2GB 550க்கு ரிச்சி தெருவில் வாங்கினேன். எனவே நாம் நம்பிக்கையான கடையைத் தேர்ந்தெடுத்துப் போனால் ஒரு பிரச்சினையும் இல்லை.

என் அனுபவத்தில் கணினி உதிரி பாகங்கள், உதா. எலி, விசைப்பலகை, ஹெட்போன் மற்றும், USB pendrive, Mobile memory card போன்றவை வாங்க 'Oasis networks' என்ற கடையில் குறைவான விலைக்கு ஒரிஜினல் சாமான்களை வாங்கலாம். இது பிரதான வீதியிலேயே உள்ளது.

புதிய கணினிக்கு எல்லா பாகங்களும் வாங்கி பின்னர் தனியாகப் பொருத்த வேண்டுமானால் 'Delta peripherals' என்ற கடை உள்ளது. நாங்கள் விசாரித்தவரை இங்கே எல்லாப் பொருட்களும் விலை குறைவாகவே கிடைக்கின்றன. 'Oasis networks' க்கு எதிரில் கொஞ்சம் தள்ளி இருக்கும் ஒரு காம்ப்ளக்ஸின் உள்ளே இருக்கிறது.

எந்தக் கடைக்குப் போனாலும் பிராண்ட் பெயரைச் சொல்லியே கேளுங்கள். உதா USB pendrive, Mobile memory card வாங்க வேண்டுமானால் Kingston, Transcend, Sandisk போன்றவை பிரபலமானவை. பேர் சொல்லாமல் கேட்டால் அவர்கள் வைத்திருக்கும் டுபாக்கூரைக் கொடுப்பார்கள். நினைவிருக்கட்டும் ஒரிஜினல் சாமான்கள் எப்பவும் மூடிய உறையில் (Sealed pack) மட்டுமே வரும். உறை கிழிந்திருந்தாலோ, இல்லாமல் இருந்தாலோ வாங்க வேண்டாம்.

குறிப்பாக ஆளே இல்லாத கடையில் வாய் நிறைய பீடா போட்டுக் கொண்டு ஷோக்காக எவனாவது உட்கார்ந்திருந்தால் அவன் கடைக்குப் போகவே வேண்டாம். கண்டிப்பாக அவன் டுபாக்கூர்தான். (அனுபவம் இருக்கில்ல !!!)

Monday, January 05, 2009

அபியும் நானும் அபிராமி மெகாமாலும்


புத்தாண்டு அன்னிக்கு படம் பார்த்தால் வருசம் பூராவும் படம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்கிற நல்ல நம்பிக்கையில் கண்டிப்பாகப் பார்க்கணும்னு நினைச்சிருந்த 'அபியும் நானும்' பார்க்கப்போனேன். என் தம்பி அபிராமி மெகா மால்ல பார்க்கலாம்னு சொன்னதால் அங்கேயே போக முடிவு பண்ணிக் கிளம்பிட்டோம். விளம்பரங்களில் வரும் படத்தலைப்பே ஒரு குழந்தை தன் கையெழுத்தில் எழுதியிருப்பது போல் அழகாகக் கவர்ந்ததால் ஒரு எதிர்பார்ப்பு.

என்ன மாலோ கன்றாவியோ நச நசன்னு இத்தினியோண்டு இடத்துல இம்புட்டுக் கடைகளா இதுல தியேட்டர்கள் வேற. சும்மா சுத்தி சுத்திக் கடைகளாக் க‌ட்டியிருக்காங்க. மாடிப்படியெல்லாம் சின்னதா ஒடுக்கமா வச்சி ... ச்சை... எரிச்சல்.

கவுண்டர்ல போய் டிக்கெட் கேட்டால் 10 மணிக் காட்சிக்குத்தான் இருக்குன்னு சொன்னாங்க. மணி 7 தானே ஆகுது அதுவரைக்கும் என்ன பண்றது? 'கிஸ்ஸிங் கார்ஸ்' விளையாடலாம்னு என் தம்பி நச்சரிச்சான். நாலு கழுதை வயசாகுது கார் ஓட்டி விளையாடணுமான்னு டிக்கெட் வாங்கப் போனா அங்க எட்டு கழுதை வயசானதெல்லாம் டிசர்ட் போட்டுக்கிட்டு வரிசையில நிக்கிறாங்க. ஏழு நிமிசம் விளையாடலாம்னு என் தம்பி சொன்னான். படு பாவிங்க கூட்டமா இருக்குன்னு நாலு நிமிசத்துலயே விரட்டி விட்டுட்டாங்க.

ஒரு வழியா பொழுதை ஒப்பேத்திட்டு திரையரங்குக்கு உள்ளே சென்றால் என்னடா வேற படத்துக்கு வந்துட்டமான்னு நினைக்கிற அளவுக்கு 'பஞ்சாமிர்தம்' பட விளம்பரம் ஒரு பத்து தடவை போட்டார்கள். அந்தப் படம் அபிராமி திரையங்க் உரிமையாளரின் தயாரிப்பாம். அடப் போங்கய்யா சன்டிவிக்காரனுங்கதான் காதல் கொண்டேன், தெனாவெட்டு, திண்டுக்கல் சாரதின்னு அஞ்சு நிமிசத்துக்கு ஒரு தரம் தொல்லை பண்றானுங்கன்னா நீங்களுமா?

ஒரு வழியாப் படத்தைப் போட்டாங்க. ஒரு அப்பா தன் புத்திசாலியான் செல்ல மகளின் மேல் கண்மூடித்தனாமான பாசத்துடன் இருக்கிறார். அவள் தான் தன் உலகம். அவள் இருப்பதால் தான் தனக்குப் பொழுதே போகிறது என எண்ணும் அளவிற்குப் பாசம். தன் மகளின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் தானே சில முடிவுகள் எடுக்கும்போது முதலில் அது சரியா தவறா என அப்பா எண்ணும் போது அது சரியே என மகள் தன் அப்பாவிற்கு உணர்த்துகிறாள்.

சாதாரண சைக்கிள் வாங்குவதற்குக் கூட முதலில் எதிர்ப்புக் காட்டும் அப்பா காதல் திருமணம் செய்து கொண்ட தன் பெற்றோரைப் போலவே தானும் ஒருவரைக் காதலிப்பாதாகச் சொன்னால்? அதுவும் காதலிப்பவர் சர்தார்ஜி என்றால்? வேண்டாவெறுப்பாக இருக்கும் தந்தையின் மனம் எப்படி மாறுகிறது என்ப‌தே கதை.

நாயகனும் காமெடியனும் பிரகாஷ்ராஜே. சொல்லியா கொடுக்கவேண்டும் சும்மா பின்னியிருக்கிறார். மகளாக த்ரிஷா. சின்ன வயது அபியாக வரும் குட்டிப்பாப்பாக்கள் எல்லாம் கொள்ளை அழகு. பிரகாஷ்ராஜிடம் அபியின் கதையைக் கேட்கும் சிறப்புத் தோற்றத்தில் பிருத்விராஜ். 'மொழி' படத்தைப் போலவே படம் முழுவதும் காட்சிகளிலும் வசனத்திலும் நகைச்சுவைப் பட்டாசு. மாப்பிள்ளையாகச் சர்தார்ஜியைக் காட்டும் போது திரையரங்கில் வயிறு குலுங்க வைக்கும் சிரிப்பு. அதைப்போலவே கதை கேட்கும் பிருத்வியும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்.

தொய்வில்லாமல் நகரும் காட்சியமைப்பு, பிச்சைக்காரராக வந்து பின் குடும்பத்தில் ஒருவராக‌ மாறும் நடிகர் குமரவேலுவின் வசனங்கள் செம காமெடி. படத்தின் வேகத்தைக் குறைப்பவை பாடல்கள் மட்டுமே. குமரவேலு அபியின் குடும்பத்தைப் பற்றிப் பாடும் ஒரு பாடல் மட்டுமே பரவாயில்லை.

ப்ரீகேஜி அட்மிசனுக்காகப் பிரகாஷ்ராஜ் வரிசையில் நிற்பதை முதல் நாள் படத்தில் பார்க்க அடுத்தநாள் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை கான்வென்ட்டில் அதைப்போலவே வரிசை. எல்கேஜி அட்மிசனாம். எனக்கு அடக்க முடியாத சிரிப்பு. (மவனே உனக்கும் அந்த நிலைமை வரும்டி!)

ரொம்பவும் எதிர்பார்க்காமல் குடும்பத்துடன் ஜாலியாக ஒரு நல்ல படத்தைப் பார்க்க நினைத்தால் கண்டிப்பாக அபியும் நானும் போகலாம்.

கடந்த வாரம் தனது பிறந்தநாளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் கொண்டாடிய த்ரிஷாவுக்கு வாழ்த்துக்கள். லாபநோக்கில்லாமல் தரமான படங்களை மட்டுமே தர வேண்டும் என முடிவெடுத்திருக்கும் பிரகாஷ்ராஜிற்குப் பாராட்டுக்கள்.

அபியும் நானும் ‍- அட்டகாசம்.