Friday, January 08, 2010

பசுமை இல்ல வாயுக்கள் - நம் பங்களிப்பு என்ன ?


பசுமை இல்ல வாயுக்கள் அப்படின்னா என்ன? கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும். பூமியை மிதமான சூடான வெப்பத்தில் வைத்திருக்கும் வாயுக்களே அவை. இந்த வாயுக்களால்தான் பூமியில் தாவரங்களும், உயிரினங்களும் தோன்றின. இல்லையெனில் பூமி வெறும் பனிக்கோளமாகவே இருந்திருக்கும். இந்த வாயுக்களால்தான் பூமியின் சராசரி வெப்பநிலை 33 டிகிரியாக உள்ளது.

இந்த வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் உயிரினங்கள் அழியும். துருவப்பகுதிகள் உருகத் துவங்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும். இந்த வாயுக்கள் அதிகரிக்க என்ன காரணம்? சுலபமான விடை மனிதனின் ஆதிக்கம்.

கீழே உள்ள 10 காரணிகள் தான் பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிக்கக் காரணம்.

1. மின் உற்பத்தி நிலையங்கள் - 25%
நிலக்கரி மற்றும் எண்ணையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் உலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு.

2. காடுகள் அழிப்பு - 20%
விவசாயம் மற்றும் குடியேற்றங்களுக்காக காடுகள் அழிப்பு. இதனால் பசுமைஇல்ல வாயுக்கள் உறிஞ்சப்படாமல் பூமியில் இருக்கின்றன.

3. போக்குவரத்து - 13%
வாகனங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

4. எரிபொருள் உற்பத்தி - 6.3%
பெட்ரோல் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் வெளியிடும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு

5. உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் - 6%
பயிர்களுக்குப் போடப்படும் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் நைட்ரேட் ஆக்சைடை வெளியிடுகின்றன

6. பண்ணைகள் - 5%
பண்ணைகளில் உள்ள மாடுகள், ஆடுகள் மற்றும் பன்றிகள் வெளியிடும் மீத்தேன்

7. சிமெண்ட் உற்பத்தி - 4%
பெருகிவரும் குடியேற்றங்கள் மற்றும் தொழிற்சாலைகளால் சிமெண்ட் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறதி. இந்த ஆலைகளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு முக்கிய காரணி.

8. விமானங்கள் - 3.5%
விமான எரிபொருளில் இருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு

9. இரும்பு மற்றும் ஸ்டீல் உற்பத்தி - 3.2%
இந்த தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

10. குப்பைகளும் கழிவுகளும் - 3%
குப்பைகளில் வெளிப்படும் மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு


இந்த வாயுக்களின் உற்பத்தியைக் குறைக்கத்தான் உலகநாடுகள் கடும் முயற்சி எடுத்து வருகின்றன. இவையெல்லாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள் ம்ட்டுமே முயன்று தீர்வு காண முடியும் என்றல்ல.


அன்றாட வாழ்வில் சாதாரண மக்களாகிய நாமும் பசுமை இல்ல வாயுக்களின் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறோம். தனிமனிதனாக நாமும் நம்மால் முயன்ற அளவு இவற்றைத் தவிர்க்க முடியும். சிறிய விசயங்கள்தான் மிகப்பெரும் பலன் தரும். ஒவ்வொரு வீட்டிலும் முயன்றால் சிறுதுளி பெரு வெள்ளம்.

1. சாதாரண விளக்குகளுக்குப் பதில் CFL விளக்குகளைப் பயன்படுத்துதல். இதனால் மின்சாரப் பயன்பாடு குறையும். உற்பத்தியும் அதிக அளவில் தேவையிருக்காது.

2. மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி ஆகியவை பயன்படுத்துதல். Energy Star முத்திரை 3க்கு மேல் இருப்பதை வாங்கலாம்.

3. அலுவலகக் கணினிகளை Stand byல் வைக்காமல் இயக்கத்தை முழுவதும் நிறுத்திவிடுதல்

4. ஏசிகளின் பில்டரை அடிக்கடி சுத்தம் செய்யலாம்.

5. தண்ணீர் சுடவைக்கும் இயந்திரங்களுக்குப் பதிலாக சூரிய ஒளி வெந்நீர் அடுப்புகளைப் பயன்படுத்தலாம். தண்ணீரை எப்போதும் 50 டிகிரிக்கு மேல் சுடவைக்க அவசியமில்லை.

6. துணிகள் அதிகம் இருந்தால் மட்டும் சலவை இயந்திரத்தைப் பயன்படுத்தலாம்

7. கடைகளுக்குச் செல்லும் போது துணிப்பைகளைப் பயன்படுத்தலாம். பிக் ஷாப்பர் பைகள் மிகவும் வசதியானவை. கடைகளில் கொடுக்கும் பாலித்தீன் பைகளைத் தவிர்க்கலாம்.

8. குப்பைகளைப் பாலித்தீன் பைகளில் சேகரிக்கும் பழக்கத்தை மாற்றி குப்பைவாளிகளில் மட்டும் சேகரிக்கலாம். பாலித்தீன்களை எரிக்கும் போது வெளிவரும் வாயுக்கள் அதிக தீமை விளைவிப்பவை.

9. வாகன உபயோகத்தை முடிந்த அளவு குறைக்கலாம். Car pooling எனப்படும் முறையில் நண்பர்கள் சேர்ந்து ஒரு வாகனத்தை உபயோகிக்கலாம்.

10. வார இறுதி நாட்களில் பேருந்துகளை மட்டும் பயணத்துக்குப் பயன்படுத்தலாம். நெரிசலும் இருக்காது தானே??

11. சிக்னல்களில் வண்டியின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

12. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மரம் வளர்க்கலாம். ஒரு மரம் தன் வாழ்நாளில் டன் கணக்கில் கார்பன் டை ஆக்சைடை சுவாசித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது


இதுபோன்ற செயல்கள் டென்மார்க் நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்டு விட்டன. டென்மார்க் தன் மின் உற்பத்திக்கு காற்றாலைகளையே பெரும்பாலும் பயன்ப்டுத்துகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சாலைகளில் வாகனம் ஓட்டத் தடையும் உள்ளது. டென்மார்க் உலகுக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது.அதனால் தான் தலைநகர் கோபன்ஹகனில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.

பிரிட்டன் போர்னியோ, நியூகினியா தீவிலுள்ள அடர்ந்த காடுகளை விலைக்கு வாங்கி அங்கு மரங்களை வெட்டத் தடைசெய்யும் படி அந்நாட்டு அரசாங்கங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.


நம் அரசாங்கமோ சாலை விரிவாக்கம், நான்கு வழிச் சாலை என இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டித்தள்ளிவிட்டது :( . அரசை நம்பிப் பயனில்லை நாமே முயன்றால் தான் உண்டு.

தகவல் கோர்வை - இணையம்

Saturday, January 02, 2010

சீனத்தயாரிப்புகள் வரமும், சாபமும்


இன்றைக்கு நம்மில் பெரும்பாலோனோர் வீட்டில் குறைந்தது ஒரு சீனப்பொருளாவது இருக்கும் நிலைமை இருக்கிறது. காரணம் அதன் குறைந்த விலை. குறிப்பாக அலைபேசிகளின் உபயோகத்தால் சீனத் தயாரிப்புகள் அனைவரையும் மிக எளிதில் சென்று அடைந்து விடுகின்றன. அமெரிக்கா கூட இந்த மலிவுவிலை சீனப்பொருள்களைக் கண்டு அஞ்சுகிறது.

பெரும்பாலோனோரின் முதல் சீனத்தயாரிப்பாக ஹீரோ பேனாதான் இருந்திருக்க முடியும். பள்ளிகளில் தலைமையாசிரியரின் அடையாளமே தங்கநிற மூடி போட்ட ஹீரோ பேனாதான்.

சீனத்தயாரிப்புகளுக்கு எப்படி இவ்வளவு வெற்றி? அதன் மலிவு விலையும், மேம்பட்ட உபயோகமும்தான். சீனப்பொருள்களின் தரமும் குறை சொல்லும் அளவு இருந்ததில்லை. எவ்வளவோ சீன அலைபேசிகள் மற்ற பிராண்டட் மொபைல்களைவிட குறைந்தவிலையில் அதிக Featuresஉடன் கிடைக்கின்றன். அதனால் தான் அவற்றுக்கு இவ்வளவு வரவேற்பு. பிரச்சினை வந்தால் தூக்கிப் போட்டுவிட்டு வேறு வாங்கிக் கொள்ளவேண்டியது தான். அதை சர்வீஸ் எல்லாம் செய்யமுடியாது. பிராண்டட் மொபைல்களில் பிரச்சினை வந்தால் அவற்றின் உதிரி பாகங்களின் விலை மொபைல்வாங்கிய விலையைவிட அதிகமாகவே இருக்கின்றன.

அலைபேசிகள் மட்டுமல்ல மற்றுமொரு முக்கியமான சீனத்தயாரிப்பும் இந்தியாவில் மிகப்பெரிய வெற்றிதான். அவைதான் பொம்மைகள். இன்றைய குழந்தைகள் விளையாடாத சீனப்பொம்மைகளே இல்லை. உள்ளூர் தயாரிப்பில் 700, 800 இருக்கும் சீனத்துக் கார் பொம்மைகளின் விலை வெறும் 100, 150 தான். மேலும் இவற்றால் வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைப்பதால் சீனப்பொருள்களை விற்றுவருகின்றனர். இன்றும் சீனத்தயாரிப்புகளை மட்டும் விற்கும் கடைகள் ஏகப்பட்டவை உள்ளன.

இப்படி அலைபேசிகள், பொம்மைகள் என மக்களுக்கு உபயோகமாக இருந்த சீனப்பொருள்கள் இன்று தடை செய்யப்படும் நிலைமைக்கு வரக் காரணம் என்ன? இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க போலி வீட்டு உபயோகப் பொருள்களை Made in India என்று போட்டு வெளியிட்டதுதான். சமீபகாலமாக எல்லையில் இந்தியாவைச் சீண்டிவரும் சீனா, ஷாம்பூ, முகக்ரீம் என ஏகப்பட்ட போலித் தயாரிப்புகளை இந்தியாவில் தயாரித்ததாக முத்திரையிட்டு இந்தியாவுக்கே அனுப்பி விற்கப்பார்த்தது.


இங்கேதான் பிரச்சினை. இதனால் மலிவு விலையில் கிடைக்கும் பிற சீனப்பொருள்களின் தரமும் கேள்விக்குறியானது. முதல்கட்டமாக IMEI எண் இல்லாத சீன அலைபேசிகளை உபயோகப்படுத்தமுடியாது எனக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. விடுமா சீனா? இப்பொழுது IMEI எண்ணுடனும் சீன அலைபேசிகள் கிடைக்கின்றன. இப்பொழுது எப்படி சீனப்பொருள்களின் உபயோகத்தைத் தடுப்பது எனவும் அரசு சிந்தித்து வருகிறது.

இன்னொரு முக்கியவிடயம் பார்ப்பதற்குக் கண்களைக் கொள்ளை கொள்ளும் சீனா பொம்மைகள் மற்றும் அலைபேசிகள் தரமில்லாத பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படுவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சொல்லி வருகின்றன. மலிவு விலையில் கிடைக்கும் இந்தப் பொருள்களால் நிச்சயம் நம் உள்நாட்டுத் தயாரிப்புகள் பாதிக்கப்படுகின்றன. ஆனால் உள்நாட்டுத் தயாரிப்புகளோ எளிய மக்களுக்குக் கட்டுபடியாகத விலையில் அல்லவா கிடைக்கின்றன. எனவே ஆபத்தை அறியாத மக்கள் அவற்றையே வாங்குகின்றனர். கோழியா முட்டையா கதைபோல் இருக்கும் இந்தப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வாக இருக்க முடியும்?