Sunday, November 30, 2008

சென்னையில் ஒரு மழைக்காலம்


'சென்னையில் மழை பெய்யாது, வெயில் அதிகம், வேர்க்கும், தண்ணீர்ப்பஞ்சம் இருக்கும், ஊர் ரொம்ப அழுக்கா இருக்கும், அதெல்லாம் ஒரு ஊரா?' நீங்க அப்படி நினைக்கிற ஆளா?. குறிப்பா பெங்களூர் மக்கள் :). இவை எல்லாம் இருந்ததுதான். ஆனால் 2004 கோடைகால‌ம் வரை.

அதன்பிறகு 2004 மழைக்காலத்தில் கொட்டித்தீர்க்க ஆரம்பித்த மழை இப்பொழுது வரை வருடாவருடம் தொடர்கிறது. அதனால் சென்னையைப் பத்தி தப்பா நினைக்காம நடப்பு நிலவரத்தையும் தெரிஞ்சுக்கங்க. 2004க்குப் பிறகு இப்போ மீண்டும் நிஷாவின் கோரத்தாண்டவத்தால் சென்னை திரும்பவும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது.

ஏற்கனவே இரண்டு வாரங்கள் முன்பு மழை நன்கு பெய்து ஓய்ந்து போய் டிசம்பரில் வரவேண்டிய பனிக்காலம் முன்பே தொடங்கியிருந்தது. (உலகம் வெப்பமயமாதல் காரணமா?) இப்போ தொடர்ந்து ஐந்து நாட்களாகப் பெய்துவரும் மழையால் முதலில் மகிழ்ச்சியாயிருந்தாலும் வெள்ளம் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்தது, 90 பேர் பலி ஆகிய செய்திகளைப் படிக்கவும் நின்று போனது. இப்போதைக்கு மழை பெய்யாமலிருந்தால் போதும் என்று நினைத்தாலும் இதோ இப்போதும் விட்டு விட்டுப் பெய்து கொண்டுதான் இருக்கிறது. பெய்யெனப் பெய்யும் மழை. பெய்தும் கெடுக்கும் மழை.

2003ம் வருடம் டிசம்பரில்தான் நானும் பிராஜெக்ட் பண்ண‌ சென்னைக்கு வந்தேன். வடபழனியில் வீடு. இரண்டு படுக்கையறை வாடகை வெறும் 3600. 5 பேர் தங்கியிருந்தோம். அரசல் புரசலாக சென்னையின் தண்ணீர்ப் பஞ்சம் தெரிந்திருந்தாலும் வாழக்கையே வெறுத்துப் போனது அப்போது தான். ஜனவரியில் நிலத்தடி நீர் சுத்தமாக இல்லை. நாங்கள் தங்கியிருந்தது அடுக்குமாடிக் குடியிருப்பு என்பதால் எல்லோரும் சேர்ந்து தண்ணீர் லாரியில் காசு கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தினோம். அதுவும் மகா மட்டமாக இருக்கும். கூவத்தின் ஓரத்தில் தெளிந்திருக்கும் தண்ணீரை எடுத்து வந்திருப்பானுங்களோன்னு நினைக்கத் தோணும். வெறும் ஒரு வாளித்தண்ணீரில் குளியல். ஒரு வாளித்தண்ணீரில் ஒரு வாரம் போட்டிருக்கும் உடைகளைத் துவைத்து அலசுவது என மகா கொடுமை.

அந்தக் கொடுமைக்கெல்லாம் விடிவு என்பது போல 2004ல் மழைக்காலத்தில் கொட்டித் தீர்த்தது மழை. ஊர் முழுவதும் வெள்ளமென்றாலும் எல்லோருக்கும் மகிழ்ச்சியே. அப்பொழுதிலிருந்து இதோ இப்போது வரை தண்ணீர்ப் பிரச்சினையெல்லாம் கிடையாது. தொடர்ந்து மழைபெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விட்டதால் வீடு வாடகையையும் கண்டமேனிக்கு உயர்த்தி விட்டார்கள். நாங்கள் இருந்த வீட்டின் தற்போதைய வாடகை 8500.

இந்த மழைக்காலத்தில் நான் இருக்கும் சூளைமேடு பகுதி எவ்வளவோ தேவலை. எப்பவும் போல வேளச்சேரி, மடிப்பாகம் பகுதிகளுக்குத்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. வண்டியை வெளியில் எடுத்து 5 நாட்களாகிறது. ஸ்டெர்லிங் சாலை, கல்லூரி சாலைகளில் தண்ணீர் தேங்கிப் போய் நிற்கிறது. ஆச்சரியம் இவ்வளவு மழைக்குப் பிறகும் சூளைமேடு சப் வேயில் தண்ணீர் தேங்கவேயில்லை. கல்லூரி சாலையில் இருக்கும் அரசு அலுவலகங்கள், மகளிர் கிறித்தவக் கல்லூரி, சங்கர நேத்ராலயா போன்ற‌ கூறுகெட்ட குப்பைகள் உள்ளே தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றுகிறேன் என சாலை முழுவதும் வெள்ளக்காடாக மாற்றிவைத்திருக்கிறார்கள்.

2000 ரூபாய் நிவாரணம் என அரசு அறிவித்திருக்கிறது. கடந்த ஆட்சியில் நிக‌ழ்ந்த‌து போல‌ திரும்ப‌வும் ஏதேனும் அச‌ம்பாவித‌ங்க‌ள் நிக‌ழ்ந்துவிட‌க்கூடாது. அர‌சு அலுவ‌ல‌கங்க‌ளுக்கு ம‌ட்டும் விடுமுறை என‌ ஒரு த‌லைப‌ட்ச‌மாக‌ ஆணை பிற‌ப்பித்த‌ அர‌சைக் க‌ண்டிக்கிறேன். ஏன் த‌னியார் அலுவ‌ல‌கங்க‌ளில் வேலை பார்ப்ப‌வ‌ர்க‌ள் எல்லாம் நீச்ச‌லடித்தா அலுவ‌ல‌க‌ம் செல்ல‌ முடியும்? ;) . அடுத்த முறையாவது அளவோடு பெய்யட்டும் மழை.

வெயில், வேர்வையெல்லாம் இப்போ சென்னையில் இல்லையா எனக் கேட்கும் பெங்களூர் பெருமான்களே ஒரு வாரமா சென்னையில் ஓசி ஏசி தெரியுமா?

எப்பத்தான் உங்களுக்குப் புத்தி வரும்?


மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு அதற்குக் காரணமானவர்களை விட அதை முன் கூட்டியே தடுக்கத்தவறிய அரசாங்கத்தின் மீது தான் கடும் கோபம் வருகிறது. ஏற்கனவே சாமானியன் வாழமுடியாத நிலையை ஏற்படுத்திப் பெருமை தேடிக் கொண்ட இந்த அரசாங்கத்தால் எங்களின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்று நினைக்கையில் பயம் வயிற்றைக் கவ்வுவதை மறைக்கமுடியவில்லை.

புயல், மழை, சுனாமி பேரிடர்கள் என்றாலும் விதியின் பேரில் குற்றம் சொல்லிவிட்டு சும்மா இருக்கலாம். ஆனால் ரயில்நிலையம், ஹோட்டல் போகக்கூட மனதைரியம், உயிர் மேல் ஆசை இல்லாமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்யமுடியும்?

ஏற்கனவே இந்தியாவில் குண்டுவெடிப்பு நிகழாத முக்கிய நகரமே இல்லை என்னும் அளவுக்கு நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குப் பிறகும் இந்தக் கிழவர்களின் அரசாங்கம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்றால் யாருடைய குற்றம் அது?

மும்பையை விட்டுத் தள்ளுவோம். தமிழகத்தில் பாதுகாப்பு கடந்த வார‌ம் வரை என்ன லட்சணத்தில் இருந்தது தெரியுமா? கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எப்பவும் பெயரளவுக்கு ஒரு சோதனை நுழைவு வைத்திருப்பார்கள். குண்டு வைப்பவன் தலைவாசல் வழியாகத்தான் வருவான் என்பது போல் எப்பவும் 5 போலீசார் நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதைப் போனவாரம் அங்கே காணவில்லை. காவலர்களும் இல்லை.

எழும்பூர் ரயில் நிலையத்தில் அதைவிட மோசம். பேருந்து நிறுத்தம் அருகில் கோட்டைச் சுவர் இடிக்கப்பட்டு பயணிகள் நடைமேடைக்கு சாலையிலிருந்து நேரடியாகப் போகுமாறு இருந்தது. அந்த இடத்தில் காவலர்களும் இல்லை. இவையிரண்டும் சில உதாரணங்கள்தான். தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலை என்றால் மதுரையில் கேட்கவா வேண்டும். மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளின் எடை தாங்காமல் சோதனை நுழைவாயில் கத்திக்கூப்பாடு போடுகிறது. அருகில் எந்த ஒரு காவலரும் இல்லை. இந்த மாதிரியான் ஓட்டை உடைசல் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் சரி செய்யப்பட்டு எப்போது முழுஅர்ப்பணிப்புடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நம்மவர்களுக்குத் தோன்றுமோ தெரியவில்லை.

இந்தியாவில் எல்லா இடங்களிலுமே இப்படித்தானா என்றால் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாகவே திருமலை திருப்பதியில் இருக்கிறது. மலையில் ஏறுவதற்குமுன் ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி ஒவ்வொருவர் பைகளையும் சோதனை போடுகிறார்கள். பாதயாத்திரை செல்பவர்களுக்கும் முழுசோதனை நடக்கிறது. அத்தகைய பாதுகாப்பு எல்லா இடங்களிலும் இருந்தால் மட்டுமே இந்த மாதிரியான தாக்குதல்களைத் தடுக்கமுடியும்.

சந்திரனுக்கு விண்கலம் செலுத்தி மனிதனையும் அனுப்பும் திறமை வாய்ந்தவர்கள் இருக்கும் நாட்டில் கேவலம் பொது இடங்களில் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கமுடியாது என்றால் நம்மை ஆள்பவர்களின் முகத்தில் காறி உமிழத்தான் வேண்டும். :(

Sunday, November 09, 2008

WALL-E பார்த்துட்டீங்களா?


உலகம் 2800ல் எவ்வளவு நாஸ்தியாகிருக்கும் ? ரோபோவுக்கும் ரோபோவுக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும்? அதுதான் வால் ஈ படத்தின் கதை.

2800ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் குப்பையாகி மனித இனமே இல்லாமல் வெறிச்சோடிப்போய் எல்லோரும் பூமியைவிட்டே வெளியேறி வானவெளியில் ஒரு தனிஉலகம் அமைத்துக் கொண்டு வசிக்கிறார்கள். குப்பை என்றால் கொஞ்ச நஞ்ச குப்பை அல்ல. அனைத்தும் எலக்ட்ரானிக் குப்பை. மருந்துக்குக் கூட மரங்களே கிடையாது. எனவே குப்பைகளை எல்லாம் செங்கல்களை போல மாற்றி கோபுரம் கோபுரமாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். அப்படி குப்பைகளைச் சேகரித்து அமுக்கி சதுரமாக, செங்கல்லாக மாற்றிக் கோபுரத்தில் ஏற்றும் பணி செய்யும் ஒரு குட்டி ரோபோட்தான் வால்‍-ஈ(wall-e).

மனிதர்கள் எல்லாம் பூமியை விட்டு வெளியேறிவிட்டாலும் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல் தனக்கு இட்ட குப்பை பொறுக்கும் பணியை வால்-ஈ தொடர்ந்து செய்து வருகிறது. சுயமாக‌ சிந்திக்கும் அறிவும் நன்றாகவே உள்ளது. வால்-ஈ சூரியஒளி பேட்டரியால் இயங்கக் கூடியதால் அதற்குப் பகலில் மட்டுமே பணி. பணிக்குச் சென்று திரும்பியதும் ஓய்வெடுக்க ஒரு குப்பைலாரி கன்டெய்னர். அதைத் தன் வீடாகப் பயன்படுத்துகிறது. குப்பை பொறுக்கும் போது தனக்குப் பிடித்தமான அழகான பொருட்களை எல்லாம் சேகரித்து வீடு முழுவதும் அலங்கரித்து வைக்கிறது.

அப்படி ஒரு நாள் குப்பை பொறுக்கும் போது தான் திடீரென்று வானத்தில் இருந்து ஒரு ராக்கெட் வந்து பூமியில் வெள்ளை நிறத்தில் யாரையோ இறக்கி விட்டு விட்டுச் செல்கிறது. வேறு யார் கதாநாயகிதான். ஆம் அதுவும் ஒரு அழகான ரோபோட். வால்-ஈயைப் போல அல்லாமல் கொஞ்சம் பெரிய டால்பின் போன்று அழகான நடக்கும் ரோபோட். அதன் பெயர் ஈவா. ரொம்ப புத்திசாலி.

ஈவாவை வால்-ஈ மறைந்து மறைந்து நோட்டம் பார்க்கிறது. வால் ஈ தன்னைப் பின் தொடர்ந்து வருவதைக் கவனித்து விட்ட ஈவா டமால் என்று சுட்டுவிட பாவமாக வால்-ஈ ஈவா முன் வந்து நிற்கிறது. வால்-ஈ முந்தைய நூற்றாண்டு ரோபோட். ஈவா ப்ரெஷ் பீஸ். எனவே வால்-ஈயைப் பற்றி தானே ஸ்கேன் செய்து அறிந்து கொள்கிறது ஈவா.

இக்கட்டத்தில் வால்-ஈக்கு ஈவாவின் மேல் விருப்பு+காதல் வந்துவிட அதைத் தன் வீட்டுக்குக் கூட்டிச் செல்கிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் எல்லாப் பொருள்களையும் அதற்குக் காட்டுகிறது. அப்படித்தான் எடுத்து வைத்த ஒரு குட்டிச் செடியையும் வால்-ஈ ஈவாவுக்குக் காட்டுகிறது. அவ்வளவுதான் ஈவா அதைத் த‌டால் என்று பறித்து தன் உடலுக்குள் வைத்துப் பூட்டிவிட்டு அந்த இடத்திலேயே தியானம் செய்வது போல் நின்றுவிடுகிறது. அசையவே இல்லை. வால் ஈக்கு ஒன்றும் புரியவில்லை. "ஈவா ஈவா" என்று கூப்பிட்டுப் பார்க்கிறது. ஈவாவின் உடலில் ஒரு பச்சைவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கிறது.

திடீரென ஜடமாகிவிட்ட ஈவாவை வால்-ஈ வெயில், புயலிலிருந்து பாதுகாக்கிறது. சிலநாட்களில் ஈவாவைத் தேடி அதை விட்டுச்சென்ற ராக்கெட் வந்து அதை அழைத்துச் செல்கிறது. ஈவாவைப் பிரிய மனமில்லாத வால்-ஈ ராக்கெட்டில் புட்போர்ட் அடித்துத் தொங்கிக் கொண்டு செல்கிறது.

அந்த ராக்கெட் ஒரு கோள் மாதிரி இருக்கும் விணகலத்தின் உள்ளே செல்கிறது. அங்கே தான் மனிதர்கள் இருக்கிறார்கள் அதாவது பூமியிலிருந்து சென்றவர்கள். அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண‌ மனிதர்கள் இல்லை பரிணாம வளர்ச்சியில் எலும்புகள் எல்லாம் தேய்ந்து ரப்பர் ட்யூப் போன்ற கை கால்களை உடையவர்கள் (பரிணாமத் தேய்ச்சி?) . நடப்பதைக் கூட மறந்து போன எப்பவும் நாற்காலியில் அமர்ந்து உயிர் வாழ்பவர்கள். அவர்கள் உலகமே மிக மிக நவீனமானது. எல்லா வேலைகளுக்கும் ரோபோக்கள்தான்.

அந்த விண்கலத்திற்கும் ஒரு கேப்டன் உண்டு. அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி பூமிக்கு ரோபோக்களை அனுப்பி அங்கே மனிதர்கள் உயிர்வாழ சூழ்நிலை திரும்பிவிட்டதா என அறிவது. தலைமுறை தலைமுறையாக ரோபோக்கள் அனுப்பியும் இதுவரை பாசிட்டிவ் ரிசல்ட் இல்லை. ஆனால் இந்த முறை ஈவா அதைச் செய்திருக்கிறது. அதாவது பூமியிலிருந்து ஒரு தாவரத்தை அது எடுத்து வந்திருக்கிறது. எப்போது பூமியில் மனிதன் உயிர் வாழும் சூழ்நிலை வருகிறதோ அப்போது இவர்கள் எல்லோரும் பூமிக்குத் திரும்பிவிடவேண்டும் என்பது தான் கேப்டனுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை.

தாவரங்கள் இருந்தால் கண்டிப்பாக மனிதர்கள் உயிர்வாழமுடியும் எனவே பூமிக்குத் திரும்பலாம் எனக் கட்டளை பிறப்பிக்க எண்ணும் வேளையில் அந்த விண்கலத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு பெரிய ரோபோட் அதைத் தடுக்கிறது. அதை எப்படி கேப்டன், ஈவா, வால்-ஈ சேர்ந்து முறியடித்தார்கள் என்பது மிச்சக்கதை. (இப்பவே முக்கால்வாசி சொல்லியாச்சு, மிச்சத்தை டிவிடியில் பாருங்க :) )

படம் முழுவதும் காட்சிகள் நகைச்சுவையாக உள்ளன். வால்-ஈ யின் அப்பாவித்தனமான் செயல்கள் கலக்கல். ராக்கெட் பூமியை விட்டு வெளியே செல்லும் போது செயற்கைக்கோள் குப்பைகளை உடைத்துக் கொண்டு செல்லும் காட்சி சூப்பர். வால்-ஈ விண்கலம் முழுவதும் குப்பையாக்கி விட அதைத் துடைத்துக் கொண்டே துரத்தும் ரோபோ காட்சிகள் நல்ல நகைச்சுவை.

டிஸ்னி தயாரிப்பில் வந்திருக்கும் இந்தப்படம் குழந்தைகளை மிகவும் கவரும்.

Friday, November 07, 2008

கர்நாடக அரசுக்கும் சிங்கள அரசுக்கும் என்ன வித்தியாசம்?

கர்நாடகத்தில் ஒகேனக்கல் விட‌யம் தேர்தல் பிரச்சினையாக மட்டுமே பயன்படுத்தப்படும் தேர்தல் முடிந்ததும் காற்றோடு போய்விடும் என்று பார்த்தால் காவேரியை விட மிகப் பெரிய பிரச்சினையாகி வழக்கு, நடுவர் மன்றம் என்று இழுத்தடிக்கப்பட்டு திட்டம் பாடையில் ஏற்றப்படும் என்றே தோன்றுகிறது.

நேற்று கர்நாடக்த்தின் நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கொடுமையின் உச்சகட்டமாக ஒகேனக்கல் திட்டத்துக்கு நிதியுதவி செய்யும் ஜப்பான் வங்கிக்குக் கடிதம் எழுதி திட்டத்துக்கு ஆப்படிக்க இருப்பதாகக் கூறுகிறார். எவ்வளவு ஈனத்தனமான செயல் இது?? திட்டத்தில் சிக்கல் இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக ஜப்பான் வங்கி உதவிசெய்யாது என்றே தெரிகிறது.

ஆகக்கூடி ஒகேனக்கல் திட்டத்துக்குப் பால் ஊற்றும் வேளை வந்துவிட்டது என்றே நினைக்கத்தோன்றுகிறது. ஏனென்றால் மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போதே ஒகேனக்கல்லில் சர்வே நடத்த எப்படியோ அனுமதி வாங்கிவிட்டது கர்நாடக அரசு. தூங்குறீங்களா மதிப்பிற்குரிய 40 எம்பிக்களே, மத்திய அமைச்சர்களே, இணை அமைச்சர்களே??? இல்லை நாங்களும் காசு கொடுத்தாத்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்கிறீர்களா?

சர்வே நடத்த அனுமதி பெற்றபின் எடியூரப்பா சொல்கிறார் இப்போதுதான் முதன்முறையாக மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசு கர்நாடக பாஜகவின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறதாம். எப்படியும் அடுத்த தடவை பாஜக ஆட்சிக்கு வந்தால் கர்நாடகம் மத்திய அரசின் செல்லப்பிள்ளையாகித் தொடர்ந்து தமிழகத்துக்குத் தொல்லைகள் கொடுக்கும்.

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று கூப்பாடுபவர்கள் ஒரு மாநிலம் அடுத்த மாநிலத்தை இப்படி குராதத்துடன் துரோகம் இழைப்பதையும் இதுதான் இந்திய இறையாண்மை என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வார்களோ???

குறிப்பு : பின்னூட்டம் கூட போட முடியாத இடத்தில் இருந்து திருட்டுத்தனமாகப் பதிவெழுதுகிறேன். பதில் சொல்லலைன்னு கோவிச்சுக்காதீங்க நண்பர்களே !!

Sunday, November 02, 2008

சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் அடுத்த நூற்றாண்டிலாவது முடியுமா?

சேலம்-கரூர் இருப்புப்பாதைத் திட்டம் 1996-97ம் ஆண்டுகளுக்கான தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சேலம்‍-நாமக்கல்-கரூர் நகரங்களை இணைப்பதாகும். தற்சமயம் முக்கிய மாவட்டத்தலைநகரமான நாமக்கல் நகரத்தில் தொடர்வண்டிநிலையமோ இருப்புப் பாதையோ இல்லை.

இத்திட்டத்துக்கான அடிக்கல் அப்போதைய மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சர் நிதிஷ்குமார் அவர்களால் 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் திகதி நாட்டப்பட்டது.

இந்த இருப்புப்பாதையின் மொத்த தூரம் 85 கிமீ. இதனால சேலம், மல்லூர், ராசிபுரம், நாமக்கல், மோகனூர், கரூர் ஆகிய நகரங்கள் இணைக்கப்படும். திட்டத்துக்கான மொத்த செலவு 136 கோடி இந்திய ரூபாய்கள் ஆகும். இதில் முக்கியமாக காவேரி ஆற்றின் குறுக்கில் மோகனூரையும் வாங்க‌ல் ஊரையும் இணைக்கும் வகையில் ஒரு பாலம் கட்ட வேண்டும்.

தற்சமயம் தென்மாவட்டங்களிலிருந்து வரும் புகைவண்டிகள் சேலம் செல்வதற்கு கரூரிலிருந்து ஈரோடு சென்று அங்கிருந்து சேலம் செல்லவேண்டும். இதனால் கூடுதலாக 45கிமீ தூரமும் கிட்டத்தட்ட ஒருமணிநேரம் கூடுதலாகவும் ஆகும்.

சரி இவ்வளவு வருடங்கள் ஆகிவிட்டதே இந்தத் திட்டம் முடிந்து புகைவண்டிகள் ஓட ஆரம்பித்துவிட்டதா என்றால் இன்னும் இல்லை. :(. காரணம் கூறுகெட்ட அரசாங்கம் செய்த ஒரு செயல் தான்.
இந்தத் திட்டத்துக்குத் தேவையான நிலங்கள் ‍ பெரும்பாலும் விவசாயிகள் ‍ இடமிருந்து கையகப்படுத்தும் போது அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்க முன்வந்த தொகை-அதிகமில்லை ஜென்டில்மென்-ஒரு சதுராடிக்கு 0.63 பைசா. (இவனுங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?)

காவேரி ஆற்றுப் படுகையில் அமைந்திருக்கும் வளம் கொழிக்கும் நிலங்களை இப்படிக் கேவலமான் முறையில் விவசாயிகளிடமிருந்து பெற்று விடலாம் என எண்ணியிருந்த நேரத்தில் இதை எதிர்த்துப் பலரும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்ததால் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நாமக்கல் நீதிமன்றம் ஒரு சதுர அடி ரூ211 என்ற விலையில் அரசாங்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. இருப்பினும் மேலும் சில வழக்குகளை விவசாயிகள் தொடர்ந்ததால் இத்திட்டம் காலவரையற்று ஒத்தி வைக்கப்பட்டு பல வருடங்களாக தொடர்வண்டித்துறை நிதிநிலை அறிக்கையில் ஏதும் நிதி ஒதுக்கப்படவில்லை.

கடந்த வருடம் நிதி ஒதுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சர் வேலு தெரிவிக்கையில் சுமுகமான முறையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஒரு சில அதிகாரிகளஇன் பொறுப்பற்றதனத்தால் தேவையில்லாத வழக்குகள் போடப்பட்டு திட்டம் தாமதமானதுடன் இன்னும் செயல்படுத்தப்படவும் இல்லை என்பதுதான் வருந்தத்தக்கது.

நாமக்கல், மோகனூர் சுற்றுவட்டார நண்பர்கள் வருத்தத்துடன் இத்தகைய தகவ்ல்களைத் தெரிவித்ததால் இதை எழுதும் எண்ணம் ஏற்பட்டது.