Friday, October 30, 2009

யூத்புல் விகடனில் என் பதிவு




யூத்புல் விகடனில் என் முந்திய பதிவான 'மாமல்லபுரம்' 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் வெளிவந்துள்ளது. விகடனுக்கு நன்றி.

http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp

Wednesday, October 28, 2009

மாமல்லபுரம்


’சிவகாமியின் சபதம்’ - பண்டைத் தமிழகத்தின் பல்லவ சாம்ரஜ்யம் எப்படி எழுச்சியுற்று வாதாபியை வென்று கணபதியைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்தது என ஒரு காதலின் பின்னணியில் புனையப்பட்டிருக்கும் அருமையான சரித்திரப் புதினம்.

மகேந்திரவர்மர், நரசிம்மவர்மர் அவர்களது சிற்பக்கலை மீதான காதலை அருகிலிருந்து கண்டது போல சிவகாமியின் சபதத்தில் படித்து விட்டு அவர்கள் ஆட்சி புரிந்த மாமல்லபுரத்திற்குச் செல்லவில்லையென்றால் எப்படி???

கோடைவாட்டியெடுக்கும் ஒரு விடுமுறை நாளில் மாமல்லபுரம், திருக்கழுகுன்றம் செல்லலாமெனத் திட்டமிட்டு நண்பகலில் அங்கு சென்றாயிற்று. ஆனால் கோடையில் வந்தது எவ்வளவு தவறு எனப் பின்னர் உணர்ந்தேன்.

பேருந்து நிலையத்திற்கு அருகில் நடந்து செல்லும் தொலைவில்தான் சிறப்புமிக்க ’கடற்கரைக் கோவில்’ உள்ளது. ஆர்ப்பரிக்கும் கடல் பின்னணியில் கோவிலைக் காண்பது கண்கொள்ளாக் காட்சி.

கிபி 640ல் மகேந்திரவர்மரால் குன்றைக் குடைந்து குடைவரைக் கோவிலாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஏகப்பட்ட சிற்பங்கள் கடற்காற்றால் அரிக்கப்பட்ட நிலையிலும் செதுக்கிய சிற்பிகளின் திறமையைக் காட்டுகின்றன.

இருகோவில்களாக உள்ள கடற்கரைக் கோவிலில் கிழக்கு நோக்கி அமைந்த கோவிலில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்துள்ளது. பின்புறம் உள்ள சிறிய கோவிலில் மேற்கு நோக்கி உள்ள சன்னிதி வெறூமையாக உள்ளது. உள்ளே சிலை எதுவும் அமைக்கப்படவில்லை அல்லது அழிந்திருக்கலாம். இதன் பின்புறம் உள்ள சன்னிதியில் படுத்திருக்கும் நிலையில் பெருமாள் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.


சுற்றிச் சுற்றிப் படங்கள் எடுத்தபின் மதிய உணவு. ம். பரவாயில்லை ரகம். அடுத்தது மகிசாசுரமர்த்தினி மண்டபம். இது ஐந்துரதம் செல்லும் சாலையில் உள்ளது. வலதுபுறம் சிறிய மலையின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே மூன்று மண்டபங்கள் உள்ளன. முதல் மண்டபம் பாறையைக் குடைந்து மூன்று சன்னிதிகளுடன் உள்ளது. உள்ளே சிறபங்களோ வேலைப்பாடுகளோ இல்லை.

அதற்கும் சிறிது மேலே சென்றால் அருமையான மகிசன் வதம் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மற்றொரு பக்கம் படுத்திருக்கும் திருமால் சிற்பம். பார்த்துக் கொண்டேயிருக்கலாம். இவ்விரண்டும் அவ்வளவு அருமை.




அவ்வ்வ்வ்... கால் வலிக்குதே !!! தண்ணீர் வேறு காலியாகிவிட்டது. இன்னும் கொஞ்ச தூரத்தில் இன்னொரு மண்டபம் தெரிகிறது. அவ்வளவு தூரம் நடக்கமுடியாது என்று மேலே இருந்த இன்னொரு சிறிய மண்டபத்துக்குச் சென்றேன். இது என்ன கண்காணிப்புக் கோபுரமா அல்லது கலங்கரை விளக்கமா தெரியவில்லை. உள்ளே மேலே ஏறிச் செல்ல மாடிப்படிகள் உள்ளன.

கீழே இறங்கிவந்த பிறகு ஐந்துரதம் செல்ல நடைப்பயணம். சாலையின் இருபுறங்களிலும் சிற்பக் கூடங்கள். பெரிய பெரிய புத்தர் சிலைகள் வேலை முடிந்து வெளியில் வைக்கப்பட்டிருந்தன. அடுத்த சோதனையாக என் கேமரா வேலை செய்யவில்லை. பேட்டரியில் சார்ஜ் இல்லை. சும்மா ஒரு 250 படங்கள் மட்டுமே எடுத்திருந்தேன். முக்கியமான ஐந்து ரதங்களைக் கேமராவில் படம்பிடிக்க முடியவில்லை. என் அலைபேசியில் மட்டுமே படங்கள் எடுத்தேன்.




ஐந்து விதமான ரதங்களும் விதவிதமான சிற்பங்களுடன் கண்கொள்ளாத அழகுடன் விளங்குகின்றன. யானை, சிங்கம், நந்தி என அனைத்தும் அருமை.

அப்பாடா .... அவ்வளவு தான் கோடையின் கொடுமையில் இதற்கு மேல் என்னால் நடக்கமுடியாது. திருக்கழுகுன்றம் செல்லமுடியாது. பகீரதன் தவம், புலிக்குகை, திருக்கழுகுன்றம் காண முடியவில்லை. பயணம் பாதியில் முடிந்தது.