Monday, January 24, 2011

பெங்களூரில் நாய்த் தொல்லை


கடந்த வாரம் பெங்களூரில் 2 வயது சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிக் கொன்ற சம்பவம் ரொம்பவே மனதைப் பாதித்தது. எவ்வளவு நாள் தான் பொறுப்பது இந்த நாய்ப் பிரச்சினைக்கு. அதுவும் பெங்களூரில் ரொம்பவே ஓவர். பெங்களூரின் நாய்கள் பற்றித் தெரியாதவர்களுக்கு அவற்றைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம். இங்கே இருக்கும் நாய்கள் நம்ம ஊர்த் தெருநாய்கள் மாதிரி சோப்ளாங்கி நாய்கள் அல்ல. நன்றாக கொழுக் மொழுக் என்று செர்லாக் பேபி மாதிரி இருக்கும் மலை நாய்கள் வகையைச் சேர்ந்தவை. பயம் என்பது அறவே கிடையாது. சாதாரணமாக நம் ஊரில் நாய்களை கையை ஓங்கி விரட்டினால் பயப்படுவது மாதிரி நடிக்கவாவது செய்யும். இங்கு அப்படி செய்தால் நம்மைப் பார்த்து முறைக்கும். கல்லெடுத்து அடிக்கப் போனால் குலைத்துக் கொண்டு கடிக்க வந்துவிடும்.

இந்திய அரசியல் சட்டப்படி விலங்குகளுக்கு துன்பம் செய்தல் கூடாது என்பது குறித்து ஒரு தனிப் பிரிவே உள்ளதாம். இங்கு நாய்களைக் கொல்லக்கூடாது ஆனால் கட்டுப்படுத்தலாம் என்ற வகையில் பெங்களூர் மாநகராட்சியிலும் சிலவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதாவது நாயைக் கஷ்டப்பட்டுப் பிடித்து அதற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து விட்டுவிடுவார்கள். ரேபிஸ் தடுப்புஊசி எல்லாம் போடுவார்கள். எதற்கு என்றால் கடித்தால் ரேபிஸ் பரவாமல் இருக்க. ஆனால் குழந்தைகள் கடியின் கொடூரம் தாங்காமல் இறந்துவிடுகிறார்கள். ஆக இந்த முறைகள் எல்லாம் வேலைக்கே ஆகாது. ஒரே வழி பாரபட்சம் இல்லாமல் அவற்றைக் கொல்வதே.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்தால் பிறகு ஏன் நாய்களின் எண்ணிக்கை வருடாவருடம் கூடுகிறது? ஆண்டவனுக்கே வெளிச்சம். பெங்களுரில் நாய்கள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கிட்டத்தட்ட கூவம் அளவுக்கு ஓடும் சாக்கடைகளும், தெருவுக்கு நாலு இருக்கும் பேக்கரிகளும் அனுமதியின்றிப் பெருத்துவிட்ட கசாப்புக் கடைகளும் ஒரு காரணம். ஏற்கனவே பல குழந்தைகளைப் பெங்களூரின் நாய்கள் கடித்துக் கொலை செய்தது நமக்குத் தெரியும். இந்தப் பிரச்சினைக்கு முழுக்காரணமும் நீலச்சிலுவைச் சங்கத்தினரே. நாயைக் கொல்லக்கூடாது என்று கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி ஒருநாள் மட்டும் நாய்களுக்கு முத்தம் கொடுத்து கட்டிப்பிடித்து தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் போஸ் கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள்.

எங்கள் ஊரில் மார்கழி மாதம் நாய்களை சுருக்கு போட்டுப் பிடித்து கழுத்தில் விஷஊசி போட்டுக் கொல்வார்கள். யாரும் அங்கே எதிர்ப்பது இல்லை. ஏனென்றால் நீலச்சிலுவை சங்கம் போன்ற வெட்டி அமைப்புகள் அங்கே இல்லை. நகரத்தின் பணக்காரர்களான நாய்க்காதலர்கள் இது போன்ற அமைப்புகளில் இருந்து கொண்டு கோசம் போட்டு போஸ் கொடுத்து விட்டு சென்று விடுகிறார்கள். அவர்கள் குழந்தைகள் எல்லாம் கணினியில் மட்டுமே விளையாடும். சாமானியர்களின் குழந்தைகள் அல்லவா தெருவில் விளையாடும்? பிறகு எப்படி அவர்களுக்கு இது பற்றிப் புரியும்?

இந்த நாய்களிடம் இருந்து தப்பித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. பிரதான சாலையில் அலுவலக வண்டியை நிற்கச் சொல்லிவிட்டு சந்து பொந்துகளின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தேன். சொன்னால் நம்பமாட்டீர்கள் ஒரு திருப்பத்தில் சுமார் முப்பது நாய்கள் இருக்கும். ஆட்டு மந்தை போல நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அதிர்ச்சியில் பின்வாங்கி பின் வண்டி ஓட்டுனருக்கு தொலைபேசி என் வீட்டின் அருகே வரச் சொல்லிப் பின் அலுவலகம் சென்றேன்.

நீலச்சிலுவைச் சங்கத்தினர் நாய்களைக் கொல்ல வேண்டாம் என்றால் அவற்றைத் தனியிடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். விலங்குகளுக்கு சரணாலயம் மாதிரி. ஏற்கனவே கோரமங்களாவில் தெருவில் திரியும் பசு மற்றும் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படும் ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றைப் பராமரிக்க ஒரு காப்பகம் உண்டு. அது போல இவர்களும் செய்யலாம்.

அதை விடுத்து நாயைக் கொல்லாதே அது தெருவில்தான் திரியும் என்று சொல்வதும், கார் ஓட்டினால் விபத்தே நடப்பது இல்லையா? அதற்காக யாருமே கார் ஓட்டுவதில்லையா? அது போலத்தான் நாய்க்கடிக்கொலைகளும் சாதாரணம் என்று அபத்தமாக ஒப்பிட்டுப் பேசுவதும் தேவையில்லாதது. நான் ஒன்றும் நாய்களைப் பிடிக்காதவனோ வெறுப்பவனோ அல்ல. நானும் தெருநாய்களுக்கு சோறு போட்டு வளர்த்தவன்தான்.

உதாரணமாக நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கிருஷ்ணகிரி-கன்னியாகுமரி சாலையில் இருக்கும் அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன. எதற்காக? மக்களின் வசதிக்காக. அதுபோலத்தான் இதுவும். மக்களுக்குச் சிரமம் தந்தால் நாய்களைக் கொல்வதில் என்ன தவறு?

குன்னூரில் இதே போன்று ஒரு சிறுவனை நாய்கள் கடித்துக் குதறிப்போட அவனது முகமே விகாரமாகி இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொஞ்சம் சரிசெய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு மக்கள் போராட்டம் நடத்திய பிறகும் நாய்களைக் கொல்ல நீலச்சிலுவைச்சங்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் மக்கள் வித்தியாசமாக ஒரு யோசனை செய்து அவர்களின் மூக்கை உடைத்தார்கள். அதாவது ஆட்டுக் குடலை துண்டு துண்டாக வெட்டி அதனுள் விசத்தை வைத்து தெருக்களில் போட்டு விட்டார்கள். அதைத் தின்ற நாய்கள் செத்து ஒழிந்தன. நீலச்சிலுவைச் சங்கத்தினரின் முகத்தில் ஈயாடவில்லை.

இனியும் இவர்கள் தொல்லை தொடர்ந்தால் குன்னூர் மக்களை நாமும் பின்பற்ற வேண்டியதுதான். அல்லது 'ரக்த ஜ்வால ..' எனத் தொடங்கும் பைரவர் ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டு தெருவில் நடமாடவேண்டியது தான்.

No comments: