Friday, December 07, 2007

முகமூடி வீரர் மாயாவி


பள்ளியில் படிக்கும் போதே எனக்கு புத்தகங்கள் படிப்பதில் ரொம்பவே ஆர்வம் இருந்தது. (பாடப் புத்தகங்கள் அல்ல :) ). என் அண்ணன் மட்டும் நூலகத்திற்குச் சென்று வந்து "இன்னிக்கு நான் 'ஜலதீபம்' படித்தேனே. இருபது பக்கம்" என்று சொல்லும் போது தான் எனக்கும் அந்த ஆர்வம் தொற்றியிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

என் அண்ணனுக்கும் எனக்கும் அப்பவே பங்காளிச் சண்டை. நான் அவனுடன் சேர்ந்து நூலகத்துக்குப் போறதெல்லாம் நடக்காத காரியம். நான் நூலகத்திற்குத் தனியாகச் சென்றால் நூலகர் அனுமதிக்கவில்லை. நான் சின்னப்பையன் புத்தகங்களைக் கிழித்து விடுவேன் என்று நூலகர் எண்ணியிருப்பார் போல. நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அவர் இல்லாத நேரத்தில் விகடனை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தபோது "டேய் புத்தகத்தை வைடா" என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப்பார்த்தால் நூலகர் நிற்கிறார். "அண்ணே!" என்றேன் பயத்துடன். "வைச்சுட்டுப் போடா!" என்று விரட்டியபோது கண்களில் நீர் முட்டியது.

பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் நூலகத்துக்குள்ளேயே நுழைய முடிந்தது. நூலகத்தில் அமர்ந்து சோறு, தண்ணியில்லாமல் வார இதழ்களைப் படித்துக் கொண்டிருப்பேன். பாக்யாவில் கேள்வி-பதில் பகுதியில் பாக்யராஜ் சொல்லியிருக்கும் குட்டிக்கதைகளை விரும்பிப் படிப்பேன். அப்புறம் ராணி காமிக்ஸ். இதில் வரும் முகமூடி வீரர் மாயாவி கதையும், ஜேம்ஸ்பாண்ட் துப்பறியும் கதையும் மிகவும் பிடிக்கும்.

முகமூடி வீரர் மாயாவி ஆப்பிரிக்காவில் காட்டுக்குள் இருந்து கொண்டு அங்குள்ள விலங்குகளையும், மலைவாழ்மக்ககளையும் காப்பாற்றுவார். அவரது இருப்பிடம் மண்டை ஓட்டுக் குகை. அவருக்குத் துணை ஒரு ஓநாய். அதன் பெயர் மறந்துவிட்டது. காட்டுக்குள்ளே இருந்தாலும் நாட்டில் நடக்கும் எல்லா விசயங்களும் அவருக்குத் தெரியும். மண்டை ஓட்டுக் குகைக்குள் ஒரு பெரிய நூலகம், அவரது முன்னோர்களது கல்லறைகள் எல்லாம் இருக்கும். கொள்ளைக்காரர்களுக்கும் விலங்குகளை வேட்டையாடுபவர்களுக்கும் அவர் சிம்ம சொப்பனம். அவர் கையில் ஒரு மண்டை ஓடு பொறித்த மோதிரம் அணிந்திருப்பார். அவர் சண்டை போடும் போது எதிராளியின் முகத்தில் அதை வைத்து ஒரு குத்து விடுவார். அவ்வளவுதான் அந்த மண்டைஓட்டுக் குறி அவன் முகத்தில் பதிந்து விடும். அதை யாராலும் அழிக்க முடியாது. எதிராளி தப்பித்தாலும் மண்டை ஓட்டுக் குறியைக் கொண்டு பின்னர் எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் மக்கள். மாயாவிக்கு ஒரு மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் உண்டு. ஒவ்வொரு மாயாவியும் இறக்கும் போதும் தனது பொறுப்பைத் தனது மகனிடம் விட்டுச் செல்வது வழக்கம். இப்படித்தான் தலைமுறை தலைமுறையாக மாயாவியின் தோற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மாயாவியின் அதிரடியிலும், தீமையை எதிர்க்கும் சாகசத்தாலும் நான் அவருக்கு ரசிகனானேன்.

ஜேம்ஸ்பாண்ட் கதைகள் அப்படியே இப்போது வரும் ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போலத்தான். கொஞ்சம் சாகசம், குடி, கும்மாளம் என்று. கடைசியில் "007 உங்களாலதான் இதையெல்லாம் செய்யமுடியும்" என்ற வசனத்தோடு கதை முடியும்.

பின்னர் கொஞ்ச நாளில் ராணி காமிக்ஸ் பதிப்பு நிறுத்தப்பட்டது. பின் எங்கள் நூலகத்தில் லயன், முத்து காமிக்ஸ் வாங்க ஆரம்பித்தனர். மாயாவியை என் தலைவனாக நினைத்ததாலோ என்னவோ அந்த காமிக்ஸ் புத்தகங்களில் என் மனம் நிலைக்கவில்லை.

அப்புறம் எனக்கு அந்தக் காலகட்டத்தில் (1993-95) ஜூனியர் விகடன் மூலமாகத்தான் அரசியல் அறிமுகம் ஆனது. ஜெயலலிதாவும், அமைச்சர்களும் பண்ணும் அட்டகாசங்கள், வெளிப்படையான ஊழல்களை ஜூவியில் படிக்கும் போது ஒரு வெறியைக் கிளப்பியது. திமுக-தமாகாவை வெளிப்படையாகவே ஆதரித்து வீட்டில் பேசிய போது "இந்த வயசிலேயே என்ன அரசியல்?" என்று திட்டு விழுந்தது. இப்போ அந்த இதெல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லோரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைன்னு தெரிஞ்சு போச்சு. :)

இப்படி சின்னப்புள்ளையாத் திரிஞ்ச என்னைப் புதினங்கள் படிக்கத் தூண்டியவர் கல்கி. சரி போதும். இன்னொரு பதிவாப் போட்டுடலாமா?

No comments: