Tuesday, March 06, 2007

எங்கே நீ போனாலும் - 1

காலையில் மின்னஞ்சலைப் பார்த்ததும் அன்புவிற்கு ஏதோபோல் ஆகிவிட்டது. மீண்டும் பார்த்தான். நித்யா வெட்ஸ் கார்த்திக். அலுவலகத்திற்கு சீக்கிரமே வந்துவிட்டதால் வேறு யாரும் இல்லை. எல்லோரும் வருவதற்கு இன்னும் ஒருமணி நேரமாவது ஆகும். கண்களில் அவனை அறியாமல் நீர் துளிர்த்தது. ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தவையெல்லாம் அவன் மனதில் தோன்றியது.

"எக்ஸ்கியூஸ் மி. உங்க மொபைல் நம்பர் தாரீங்களா?" இது தான் நித்யா அவனிடம் பேசிய முதல் வாக்கியம். "சாரி. என்கிட்ட செல் இல்லங்க. என் பிரண்ட் நம்பர் தான் இருக்கு. வேணும்னா குறிச்சுக்கோங்க" இது அவன். "இட்ஸ் ஓகே. என்கிட்டயும் மொபைல் போன் கிடையாது. வெளியிலிருந்துதான் பேசணும். சும்மா இண்டர்வியு ஸ்டேடஸ் கேட்கலாமேன்னுதான்". கொடுத்தான். குறித்துக் கொண்டாள். அவளை முதன்முதலில் சந்தித்தது ஒரு அலுவலகத்திற்கு நேர்காணலுக்காகச் சென்ற போதுதான். வந்திருந்தது இருவர் மட்டுமே. முதலில் அவளுக்கு நேர்காணல் முடிந்து அன்பு அவனது அழைப்புக்காக காத்திருந்த போது நடந்த உரையாடல் தான் மேலே கண்டது.

நம்பர் வாங்கிச் சென்றவள் ஏனோ தொடர்பு கொள்ளவே இல்லை. மறந்திருப்பாள் என எண்ணினான். இரண்டு நாட்களில் அந்த அலுவலகத்தில் வேலையில் அடுத்த ஒரு வாரத்தில் சேரச் சொல்லிக் கடிதம் வந்துவிட்டது. இவனும் அங்கே சென்ற போது அவனுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தாள் நித்யா. பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். "போன் பண்ணவேயில்லை?" என்றான். "ஆக்சுவலா நான் ஊருக்குப் போய் விட்டேன். நேற்று தான் வந்தேன். அதனால தான். என் சொந்த ஊர் கோயமுத்தூர். உங்களுக்கு?" என்றாள். "மதுரை" என்று பதிலளித்தான். இறைவனின் விருப்பத்தால் இருவரும் ஒரே குழுவில் பணிபுரிய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இருவருக்கும் அடுத்தத்த இருக்கைகள்.

நிறையப் பேசினார்கள். நண்பர்கள், திரைப்படம், சி, யுனிக்ஸ் இப்படி. அவனுக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது. ஆனால் அவளுக்கு?. தெரியவில்லை. அவளது பேச்சை வைத்து எதுவும் கணிக்க முடியாதவனாகவே இருந்தான். அவளிடம் அவனுக்கு பிடிக்காதது இரண்டு விசயங்கள் தான். ஒன்று அடிக்கடி "நீ ஒன்னும் எனக்கு பிரண்ட் இல்லை" என்பாள். முதல் முறையாக அவள் அப்படிச் சொன்ன போது அவன் மிகவும் சங்கடப்பட்டான். ஒருமுறை "என்ன பிரண்டுக்காக இது கூட செய்யமாட்டியா?" யோசிக்காமல், சிரிக்காமல் பதில் சொன்னாள் "நீ ஒன்னும் எனக்கு பிரண்ட் இல்லை". மற்றது "என்கிட்ட தேங்க்ஸ் எல்லாம் எதிர்பார்க்காதே" என்பாள். "உனக்காக கஷ்டப்பட்டு நெட்டில் தேடி பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டுவந்திருக்கேன். ஒரு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டியா?". "என்கிட்ட தேங்க்ஸ் எல்லாம் எதிர்பார்க்காதே" என்று டக்கென்று கூறினாள். மற்ற சமயங்களில் நன்றாகத்தான் பேசினாள். அதற்காக சும்மா இருந்தான்.

அவன் அறையில் செய்யும் சாப்பாட்டையும், அவள் விடுதியில் இருந்து கொண்டு வரும் சாப்பாட்டையும் மதியம் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டார்கள். சில சமயங்களில் உணவை மாற்றியும் சாப்பிட்டார்கள். இவன் ஊருக்குச் சென்று திரும்பும்போது வீட்டிலிருந்து பலகாரங்களை இவளுக்காகத் தனியாக எடுத்துவந்தான். அவளும் அப்படியே. தீபாவளிக்குத் தன் அம்மாவிற்குப் புடவை எடுக்கவேண்டும் என்று கூறி அவளை ஆர்.எம்.கே.விக்கு அழைத்துச் சென்றான். அவளும் ஒரு நல்ல புடவையாக தேர்வு செய்தாள். பிறகு திநகர் பேருந்து நிலையம் அருகே சரஸ்பதி வாட்ச் சென்டரில் தன் தங்கைக்கு ஒரு கடிகாரம் தேர்வு செய்யச் சொன்னான். வீட்டில் கொடுக்கும்போது "இது என் கூட வேலை பார்க்கிற பொண்ணு செலக்ட் பண்ணினது. பேரு நித்யா. ஊரு கோயமுத்தூரு" என்று காதில் போட்டுவைத்தான். அவன் அம்மாவிற்கு சேலை மிகவும் பிடித்துவிட்டது. தங்கைக்கு வாட்சை மிகவும் பிடித்துவிட்டது மேலும் அண்ணனையும், அண்ணணுடன் வேலை பார்ப்பவர்களையும்.

ஒரு மழைநாளில் இவன் அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது குடையில்லாததால் ஒதுங்கி நிற்க எண்ணினான். அவள் உடனே "ஏன் நிற்கிறே? வா என் குடையிலேயே போய்விடலாம்" என்று அழைத்தாள். சிறிய குடை. பெரிய மழை. இருவரும் நனையாமல் இருக்கவேண்டும். அவள் யோசிக்காமல் அவனை உரசியவாறே வந்தாள். அரைமணி நேரம் பேருந்து நிறுத்ததில் நின்றார்கள். ஏற இயலவில்லை. உடனே "ஆட்டோவில் போவோம்" என்று பதிலுக்குக் காத்திராமல் ஆட்டோவை அழைத்தாள். இருவரும் ஒரே ஆட்டோவில் சென்றார்கள். அவளை கோடம்பாக்கத்தில் அவளது விடுதியில் இறக்கிவிட்டு விட்டு தனது அறை இருக்கும் சாலிகிராமம் சென்றான். அன்று இரவு அவனுக்குத் தூக்கமே வரவில்லை. சென்னை முழுவதும் குடைகளால் மூடப்பட்டது போல் கனவு கண்டான். இப்படி எல்லாம் அருமையாகப் போய்க்கொண்டிருந்தது அவள் மொபைல் போன் வாங்கும் வரை.

(அடுத்த பதிவில் முடியும்)

எனது முதல் கதை முயற்சி. தயவு செய்து பொறுத்துக் கொள்ளவும். :)

நன்றி: இ-கலப்பை, ப்ளாக்கர், தமிழ்மணம், தேன்கூடு மற்றும் தமிழ்ப்பதிவுகள்

6 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்லாவே இருக்குங்க. கதை முடியற வரை படிச்சுட்டு அப்புறமா மொத்த கருத்தும் சொல்லறேன்.

ஜி said...

நல்லா போகுது கதை....

குடையால மூடுன சென்னையா?

நல்லாதான்யா வெரட்டுறீங்க கற்பனை குதிரைய... ;))))

நந்தா said...

இது வரை கதை அருமையாக போகிறது. அடுத்த பகுதி எப்படியோன்னு ஒரு எதிர்பார்ப்பை கிளப்பிட்டீங்க. பார்க்கலாம்.

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இலவசக்கொத்தனார், ஜி மற்றும் நந்தா.

சினேகிதி said...

Nalla iruku kathai..michathum keriya podunga :-)

Yogi said...

வருகைக்கு நன்றி சினேகிதி :)