Wednesday, July 04, 2007

கண்ணால் கண்ட காதல் கதை

என்னுடன் பணிபுரிந்த சக அலுவலகத் தோழியின் சுவாரஸ்யமான காதல் கல்யாணக் கதை இது. என் தோழி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். எல்லோரிடமும் மிகவும் நன்றாகப் பழகுவார். அவரும் எனது அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த இன்னொருவரும் காதலித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அங்கேயே காதலாகிக் கசிந்துருகி பிறகு இருவரும் ஒரே இடத்தில் வேலை கிடைத்ததும் மிகத் தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்தனர். இது இருவரின் வீட்டுக்கும் தெரியாது.

ஒரு நாள் தோழி தனது அக்காவிற்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும், அடுத்த மாதம் கல்யாணம் என்றும் சொன்னார். அவரது அக்கா சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். அக்காவிற்குப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை கணினித்துறையில் ஒரு பெரிய பதவியில் இருப்பதாகக் கூறினார். நாங்களும் "உங்களுக்கு எப்போ கல்யாணம்?" என்று வழக்கமான பல்லவியை எடுத்துவிட்டோம். அவர் "எங்க மேட்டரை வீட்டில் சொல்ல வேண்டியதுதான் பாக்கி" என்றார்.

தன் அக்காவிற்குத்தான் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதே தன் காதலை வீட்டில் சொல்ல இது தான் சரியான சமயம் என எண்ணி சில நாட்களில் இவர் தங்கள் காதலை வீட்டில் சொல்லிவிட்டார். என் தோழியின் அப்பா தலைமைச் செயலகத்தில் பெரிய பதவியில் இருப்பவர். மிகவும் கண்டிப்பானவராம். என்ன ஆச்சரியம்! அவர் கோபமேபடாமல் யாரைக் காதலிக்கிறாய், இருவரும் ஒரே சாதி தானா என்று விசாரித்த போது பையன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மகளுக்காக இவர் பையனின் வீட்டிலும் பேசி அவர்கள் சம்மதத்தையும் வாங்கிவிட்டார். தனது இளையமகளுக்கும் மாப்பிள்ளை பார்த்து விட்ட மகிழ்ச்சியான செய்தியை தனது மூத்த மகளுக்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டில் சொல்லியிருக்கிறார். நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

என் தோழியின் அக்காவிற்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டில் தாம் தூம் எனக் குதித்திருக்கிறார்கள். தாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தினர், இதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது, நீங்கள் செய்தது சரியில்லை, என் தோழியின் தந்தை அவர் முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் பெண் எடுக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டனராம். என் தோழியின் அப்பா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் பயனில்லை. கடைசியில் சம்பந்தம் வேண்டாம் என முறித்துக் கொண்டு விட்டனர். என் தோழியோ தன் காதலினால் தனது அக்காவின் திருமணம் நின்று போனதில் மிகுந்த வருத்தத்திலிருந்தார். "சாதியைப் பெரிசாக நினைக்கிறவர்கள் சம்பந்தம் ஒன்றும் நமக்கு வேண்டாம்மா" என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் திரைப்படங்களில் வருவது போன்ற திருப்பம். அதாவது எனது தோழியின் அக்காவிற்கு ஏற்கனவே இன்னொருவருடன் காதல். இவர் தன் தங்கையைப் போல காதலை வீட்டில் சொல்ல தைரியமில்லாமல் திருமணத்திற்குச் சம்மதித்திருக்கிறார். இப்போது தான் எல்லாம் சரியாகிவிட்டதே! அதனால் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனது காதலை லேட்டாக வீட்டில் சொல்லியிருக்கிறார். இவரது காதலர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தபோது காதலாம். பிறகென்ன முதலில் அக்கா கல்யாணம், பிறகு தங்கை கல்யாணம் என இரு கல்யாணங்களும் ஜாம் ஜாமென நடந்தன. நாங்கள் இரண்டு கல்யாணங்களுக்கும் போய் நன்றாக சாப்பிட்டுவிட்டு வந்தோம்.

இதில் எனக்கு மிகவும் பிடித்தது என் தோழியின் தந்தையின் குணம் தான். தன் இளைய மகளின் காதலால் தன் மூத்த மகளின் திருமணம் நின்றுவிட்டதே என்று எண்ணாமல் அவர்கள் சம்பந்தம் வேண்டாம் என்ற பிறகும் தன் இளையமகளின் வாழ்க்கைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டதால் கடைசியில் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

2 comments:

முத்துகுமரன் said...

வாழ்வில் இணைந்த காதலர்களுக்கு வாழ்த்துகள்.

காதலுக்கு மரியாதை செய்த அந்த தந்தைக்கு வணக்கங்கள்

Anonymous said...

Nice one...