Monday, December 31, 2007

தொல்லை கொடுக்கும் கனவுகளும், பல்லி விழுந்த பலன்களும்

எனக்கும் பல சமயங்களில் (இன்னமும்) இரண்டு கனவுகள் தோன்றி என்னைத் தூக்கத்திலிருந்து விழிக்கச் செய்துவிடுகின்றன. அதில் முதலாவது நான் நண்பர்களுடன் சேர்ந்து வெண்குழல்வத்தியை ஆழமாக இழுத்து வட்ட வட்டமாகப் புகைவிடுவது போலத் தோன்றுவது. கனவிலேயே, வீட்டிற்குப் போனால் மாட்டிக் கொள்வோமே என்றும் சரி ஹால்ஸ் ஒன்று வாங்கிப்போட்டுக் கொள்ளலாம் என்று யோசனையும் தோன்றும். அவ்வளவுதான் பட்டென முழித்துப் பார்த்தால் நடுநிசியைத் தாண்டியிருக்கும். இதில் முக்கியமான விசயம் என்னன்னா எனக்கு தம்மடிக்கும் பழக்கம் கிடையாது. பொதுவாக சிலர் தாங்கள் விரும்பும் ஒரு விசயம் கனவில் தோன்றும் என்று சொல்லுவார்கள். எனக்கு அப்படியெதுவும் தம்மடிப்பதில் விருப்பமில்லை. இருந்தாலும் ஏன் இந்தக் கனவு வருகிறதுன்னு தெரியவில்லை.

அடுத்தது நான் இன்னமும் பள்ளியில் படிப்பது போலவும் இன்னும் சிறிது நாளில் பரீட்சை நடக்கப்போவது போலவும் "ஐயையோ சமூக அறிவியல் பாடம் இன்னமும் தொட்டுக் கூடப் பார்க்கவில்லையே!" என்று மிகவும் கவலைப்படுவது போலவும் தோன்றும். பள்ளியைவிட்டு வெளியேறி பத்து ஆண்டுகள் ஆகியும் இன்னமும் இந்தக் கனவும் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. அதுவும் சமூக அறிவியல் எல்லாம் பத்தாம் வகுப்பில்தான். அதிகாலையில் நிகழும் கனவுகள் பலிக்கும் என்று வேறு சொல்வார்கள். இந்தக் கனவுகள் திரும்பத் திரும்ப வருகின்றனவே தவிர வேற ஒன்னும் செய்யலை. பொதுவாக கனவை வெளியில் சொல்லிவிட்டால் பலிக்காது என்று சொல்வார்கள். நான் வெளியில் சொல்லிவிட்டேன். இனியாவது அவை தொல்லை கொடுக்காமல் இருக்குமா எனப் பார்ப்போம்.

அடுத்த தொல்லை இந்தக் கிரகப்பெயர்ச்சிப் பலன்கள். முதலில் குருப்பெயர்ச்சி வந்தது. அடுத்து சனிபெயர்ச்சி. இப்போ புது வரவு ராகு-கேது பெயர்ச்சி. இது போதாதென்று தின, வார, மாத மற்றும் பிறந்தநாள் பலன்கள் வேறு. இதில் எதை நம்புவது எதை விடுவது என்று மகா குழப்பமாக உள்ளது. முதலில் தினத்தந்தியில் வார பலன்கள் மட்டும் படித்து வந்தேன். அதில் அவன் நாலு சொல்லியிருந்தால் அதில் ஒன்று பலித்தது. அப்படி எதுவும் பலிக்கவில்லையென்றாலும் நடந்த சம்பவங்களை ராசிபலன்களுடன் பொருத்திப்பார்க்கும் மனநிலை தோன்றியவுடன் அவற்றைப் படிப்பதை நிறுத்தி விட்டேன். என்னைப் பொறுத்தவரை எந்தப் பலன்களையும் நம்பாமல் சாமியை மட்டும் கும்பிட்டு விட்டு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்.

இணைய விகடனில் போட்டிருந்த குருப்பெயர்ச்சிப் பலன்களில் சிம்மராசிக்கு எல்லாம் சூப்பர், டக்கர் என்று போட்டிருந்தார்கள். அதற்கு ஒருவர் பின்னூட்டம் போட்டுக் கிழித்திருந்தார். "ஏன்யா இரண்டு மாசம் முன்னாலதான் சனிப்பெயர்ச்சிக்கு மகா கேவலமா பலன்கள் போட்டிருந்த. அடுத்த சனிப்பெயர்ச்சி அடுத்த வருசம் தான். இப்ப என்னன்னா குரு பெயர்ச்சி பலன்ல ஆகா ஓகோ போட்டிருக்கீங்க. இதில் எது உண்மை? எதை நாங்கள் நம்புவது?"ன்னு. அவர் கேட்பதும் சரிதானே? இதற்கு விகடனின் பதில் மவுனம்.

அடுத்து நாள்காட்டியில்‌ ப‌ல்லி விழும் ப‌ல‌ன்னு ஒன்னு போட்டிருக்காங்க. ப‌ல்லி சுவ‌ரில் இருந்து த‌வ‌றி ந‌ம்ம‌ மேல‌ விழுந்துட்டா அதுக்கு என்ன‌ ப‌ல‌ன்னு சொல்லியிருப்பாங்க‌. நான் எட்டாம் வ‌குப்பு ப‌டிக்கும்போது வீட்டில் அம‌ர்ந்து பாடம் ப‌டித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு ப‌ல்லி என‌து இட‌து கையில் விழுந்துவிட்ட‌து. அடடா என‌ நினைத்து கையைக் க‌ழுவிவிட்டு நாள்காட்டியைத் திருப்பிப்பார்த்தால் அதில் போட்டிருந்த‌ ப‌ல‌ன் என்ன‌ தெரியுமா ?

இடது கை - ம‌ர‌ண‌ம்.

ஐயையோன்னு ப‌த‌றி அடிச்சி ப‌ல்லி இட‌து கையில்தான் விழுந்த‌தான்னு ந‌ல்லா உறுதி செய்த‌பிற‌கு, ச‌ரி வ‌ல‌து கைக்கு என்ன‌ன்னு பார்த்தா ம‌றுபடியும் அதிர்ச்சி தான்.

வ‌ல‌து கை - ம‌ர‌ண‌ம்.

ஒரு வேளை ப‌ல்லிக்குத்தான் அந்த‌ப் ப‌ல‌னோ என்ன‌மோ? :))) ன்னு மனசைத் தேற்றிக்கொண்டேன். அப்ப‌டின்னாலும் ப‌ல்லி நாள்காட்டியெல்லாம் ப‌டிக்குமா என்ன‌?

நான் நம்பாத மற்றொரு விசயம் வாஸ்து. ஏன் இந்த‌ வாஸ்தெல்லாம் இப்போ வ‌ந்த‌துதானே. அந்த‌க் கால‌த்திலெல்லாம் ம‌னையடி சாஸ்திர‌ம் என்ற‌ திசை அடிப்ப‌டையிலான‌ முறை வைத்துத்தான் பெரிய பெரிய வீடுகள் எல்லாம் கட்டியிருக்கிறார்கள். அதே வீடுகளை அதைக் கட்டியவர்களின் மகன்களும், பேரன்களும் இடித்து அலங்கோலமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். வாஸ்துப்படி தென்மேற்குத்திசையில் வீடு உயரமாயிருக்க வேண்டும் என்பதற்காக மொட்டைமாடியில் செங்கற்களை கோபுரம் போல அடுக்கிவைத்திருக்கின்றனர் சிலர். அவை கீழே விழுந்து எவர் மண்டையையாவது உடைத்தால்தான் தெரியும் வாஸ்துவும் அதனால் கிடைக்கும் பலன்களும். வாழ்க்கையில் சில தோல்விகள் வரும்போது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என அலைவர்களை இந்த வாஸ்துவாதிகள் கெட்டியாகப் பிடித்து விடுகிறார்கள்.

இவை எல்லாமே சிந்திக்கவைக்கும் விசயங்கள் தான். இன்றளவும் என்னாலும் நம்பமுடியாத சில வியப்பூட்டும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அதை அப்புறமா சொல்லுறேன்.

2 comments:

ஜெகதீசன் said...

:)
எனக்கும் இதுபோல கனவுகள் தொல்லை தருகின்றன...
"ரெக்கார்ட் நோட் இன்னும் எழுதலையே... நாளைக்கு பிசிக்ஸ் வாத்தியார் டின்னு கட்டீருவாரே".. என்பது போல!!!

Yogi said...

வருகைக்கு நன்றி ஜெகதீசன். கனவில் அசின், ஸ்ரேயா எல்லாம் வந்தால் நல்லா இருக்கும். அது இல்லாம சும்மா வெட்டியா எதாவது வந்து உயிரை எடுக்குதுங்க :))