Wednesday, January 02, 2008

வியப்பூட்டும் சில சம்பவங்கள் - உண்மையா, பொய்யா, தற்செயலா?

எனக்கும் சமயங்களில் வியப்பூட்டும் வகையில் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. நானும் பாரதியாரும் ஒன்று. கணக்கு சுட்டுப் போட்டாலும் வராது. கணக்கு எப்பவுமே பிணக்குதான். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வந்தவுடன் எனக்கெல்லாம் செம பயம். எல்லாம் கணக்கை நினைத்துதான். வீட்டிற்கு வந்தவுடன் நாள்காட்டியில் தேர்வுநாட்களுக்கான பலன்களை எடுத்துப் பார்த்தேன். கணக்குத்தேர்வன்று போட்டிருந்த பலன் என்ன தெரியுமா? 'வெற்றி'. ஆகா தப்பிச்சோமடா சாமின்னு கொஞ்சம் தைரியமாகவே இருந்தேன். அதைப் போலவே கணக்குத்தேர்வும் சுலபமாகவே இருந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் சாதாரணமாக கணக்கில் 55,60 என வாங்கு நான் முழுஆண்டுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் 95 :O. இதைக்கூட தற்செயல் என்று சொல்லிவிடலாம். அடுத்த சம்பவம் அப்படி அல்ல.

ஜாதகம் பார்ப்பதிலும் எனக்கு நம்பிக்கை அந்த அளவு இல்லை. இருப்பினும் வீட்டில் பெரியவர்கள் எதிர்த்துப் பேசும் தைரியம் இல்லாததாலும், அவர்கள் மனம் புண்படக் கூடாது என்பதாலேயும் பேசாமல் இருந்துவிடுவேன். இங்கே இருக்கும் பெரும்பாலோனோரும் அப்படித்தான் என நினைக்கிறேன். நான் எங்கள் சொந்த ஊரில் இருந்தபோது என்வீட்டின் அருகில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடிக்கடிச் செல்வது வழக்கம். ஒருநாள் பொழுது போகாததால் கோவிலின் மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். அக்கோவிலின் குருக்களிடம் ஒருவர் தன் மகளுக்கு ஜாதகம் எழுதிக் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அவரும் தெரிந்தவர்தான். அவர் மகள் ஒரு சிறுமி. மனநலம் பாதிக்கப்பட்டவர். குருக்களும் அவரிடம் நட்சத்திரம், பிறந்ததேதி, நேரம் ஆகியவற்றைக் கேட்டுவிட்டு ஒரு புத்தகத்தில் எதையோ பார்த்துப் பார்த்து குறித்துக் கொண்டிருந்தார். பின்னர் குருக்கள் அவரிடம் "ஜாதகம் இப்பொழுது எழுத வேண்டாம். உன் மகளுக்கு 12 வயது முடிந்தவுடன் எழுதிக்கொள்ளலாம். அது தான் சரியான சமயம்" என்று சொல்லிவிட்டார். அச்சிறுமியின் தந்தையும் பேசாமல் போய்விட்டார். அவர் உடனிருந்த மற்றொரு குருக்கள் அவரிடம் "ஏன் ஓய் எழுதலை?" ன்னு கேட்க அவர் "அந்தப் பொண்ணுக்கு பன்னிரெண்டோட ஆயுள் முடியுது" ன்னு யாருக்கும் கேட்காமல் சொன்னது எனக்குக் கேட்டுவிட்டது. மனசுக்குக் கஷ்டமாயிருந்தது. அந்தப் பெண்ணும் முடியாமல் இருந்து 12வயதிலேயே இறந்துபோனாள். இது ஒரு மிகவும் சோகமான உதாரணம்.

அப்புறம் கும்பகோணத்தில் ஓலைச்சுவடியை வைத்துப் பலன்கள் சொல்கிறார்கள் என்று என் மாமா அங்கு சென்று வந்தார். அவர்கள் பலன்களை ஒரு ஒலிநாடாவில் பேசிப் பதிந்து கொடுத்திருந்தார்கள். என் மாமா அவர்களிடம் சொன்னது இரண்டு விசயங்கள் தான். ஒன்று அவர் பெயர். மற்றது அவரது கைரேகை. பிறந்த தேதி கேட்டபோது அவர்களை சோதனை செய்யும் விதமாக விவரமாக "தேதி தெரியாது" என்று சொல்லிவிட்டார். வீட்டில் வந்து ஒலிநாடாவைக் கேட்டால் அவர்கள் எங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லியிருந்தது 90% உண்மை. குடும்பத்தில் எத்தனை பேர், அவர்கள் பெயர், என்ன தொழில் என எல்லாமும் சொல்லியிருந்தனர். இது எப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை. எதாவது மை போட்டு(!) விசயத்தைக் கறந்துவிட்டார்களா என்பது தெரியவில்லை. தெரிந்தவர்கள் அதன் ரகசியத்தைச் சொல்லவும்.

இன்னும் சில இருக்கின்றன ஞாபகம் வரும்போது சொல்கிறேன்.

24 comments:

வடுவூர் குமார் said...

ரகசியமாக...
எனக்கும் தெரியாது.:-)

Yogi said...

வருகைக்கு நன்றி வடுவூர் குமார்!

இக்பால் said...

ஓலைச்சுவடி ஜோதிடத்தை நான்கூட கேள்விபட்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவர் சென்று பார்த்த விஷயங்களை சொன்னார். நம்மவே முடியவில்லை. அவர் சென்று வந்தது வைத்தீஸ்வரன் கோயில்.

Yogi said...

வருகைக்கு நன்றி இக்பால் !

Expatguru said...

என்ன ஆச்சரியம் பாருங்கள். இன்று தான் மற்றொரு இழையில் என்னுடைய அனுபவத்தை எழுதியிருந்தேன். இந்த சுட்டியில் பார்க்கவும்:

http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/b459fa73ac5a4a58/ef106c2223a564d6?lnk=raot#ef106c2223a564ட்6

Yogi said...

வருகைக்கு நன்றி Expatguru.. நானும் உங்கள் அனுபவத்தைப் படித்தேன். எனக்கும் ஆச்சரியமாகத்தான் உள்ளது. :)

கண்மணி/kanmani said...

ஜாதகத்தை நம்பாதவர்களுக்கும் இது சில சமயம் ஆச்சர்யம் தரும்.
இதைவிட எனக்கு மிகவும் பிரமிப்பூட்டுவது ESP [EXTRA SENSORY POWER] MATTER தான்.அழகிய தமிழ்மகனுக்காக சொல்லவில்லை.உளவியலாரே இதை ஏற்கும் போது எங்கோ யாருக்கோ நடக்கப் போவது எப்படித் தெரியும்?உணரமுடியும்?

புத்தாண்டு வாழ்த்துக்கள் பொன்வண்டு

Yogi said...

வருகைக்கு நன்றி கண்மணி டீச்சர்.

நேற்று மாலை உங்கள் 'முதுகு சொறிதல்' பதிவைப் படித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். என்னமோ தெரியல நினைப்பு எல்லாம் அதிலேயே இருந்தது. இப்போ மின்னஞ்சல் பார்த்தா நீங்க பின்னூட்டம் போட்டிருக்கீங்க. ஆச்சரியம் தான்.

வாழ்த்துக்களுக்கு நன்றி டீச்சர். தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். :)

Mangai said...

Agasthiyar Nadi Josyam at Kancheepuram is also famous for this. They don't even ask your name. They ask only the thumb impression.

I personally have seen people who initially donot beleive but finally accept that all the family info are correct.

I have personal experiences about palm josyam. Seing my Palm One Josyar could tell many of our family details and our blood relatives details too. My family people have never met him before to reveal any such news.

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மங்கை!

கண்மணி/kanmani said...

பொன்வண்டும் வவ்வாலும் வெவ்வேறுதானா?ஒன்றா?ஹாஹா

என் பதிவு உங்களை ஏன் குழப்பியது.
வலையுலகைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் எனக்கு யாரும் பிடிக்காதவர்கள் என்பது இல்லை.சில சமயம் சில கருத்துக்களில் உடன்பாடு இல்லாமல் போகலாம்.

ஆனால் குதர்க்கமான பேச்சும்,தடித்த வார்த்தைப்பிரயோகமும் நிச்சயம் கோபம் வரவழைக்கும்.

வவ்வால் பலமுறை என்னை அப்படி சீண்டியிருக்கிறார்.

வவாச அட்லஸ் பதிவில்...
தமிழ்வழிக்கல்வி சாத்தியமா பதிவில்..
மகளிர் மட்டும்....2007 பதிவில்...

நான் யாரை முதுகு சொறிந்து என்ன ஆகப் போகிறது?
டு பீ ஃபிராங்க் முதுகு சொறிதல் னா என்னனு கூடத் தெரியலை.[காக்கா பிடிப்பது?]

இப்படிச் சொன்னால் கோபம் வருமா வராதா?
இங்கு காக்கா பிடித்து பின்னூட்டம் வாரிக் கட்டிக் கொள்வதில் எனக்கென்ன பணமா கொட்டப் போகிறது இல்லை புரமோஷன் கிடைக்கப் போகுதா?
என் எழுத்துக்களை பிடித்தவர்கள் படிக்கப் போகிறார்கள்.எல்லோரும் எல்லா நேரத்திலும் நன்றாகவே எழுதுவதில்லை.மொக்கையும் கும்மியும் கூட போடலாம்.இதைக் கமேண்ட் அடித்தால் இப்படித்தான் பதிலடி.

Yogi said...

// பொன்வண்டும் வவ்வாலும் வெவ்வேறுதானா?ஒன்றா? //

சந்தேகமே இல்லை. வெவ்வேறுதான். :)

// என் பதிவு உங்களை ஏன் குழப்பியது. //

நீங்கள் பதிலடி கொடுத்த விதத்தை நினைத்துக் கொண்டிருந்தேன். மற்றபடி குழப்பமெல்லாம் ஒன்றும் இல்லை டீச்சர். :)

hjgf said...

hi ,
i like this blog very much

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜயரங்கன் !

மத்த பதிவுகளையும் படிச்சிட்டு கருத்து சொல்லுங்க!! :)

பாச மலர் / Paasa Malar said...

இதைப் பற்றி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்..எப்படி என்பதுதான் புதிர்..

Yogi said...

வருகைக்கு நன்றி பாசமலர் !

Unknown said...

புதிய வேலை மற்றும் இடமாற்றம்னு போட்டிருந்தது.
நான் பெரிதும் எதிர்பார்த்திருந்த பெங்களூர் வேலை கிடைத்தது.

ஒரு முக்கியமான வேலைக்கான அழைப்புக்கடிதம் வந்த அன்று கடிதம் மூலம் நல்ல செய்தி வரும்னு போட்டிருந்தது.

பாகம் பிரியாள் கோயில் பூசாரி நேர்ந்து போடச்சொன்ன யானை முடி மோதிரத்தை போட மறுத்தபோது நிச்சயம் கிடைக்கும் என்று நினைத்த ஒரு வாய்ப்பு தட்டிப்போனது. மூன்று மாதம் கழித்து அந்த மோதிரத்தை நேர்ந்து போட்ட அன்று தவறிப்போன அந்த வாய்ப்பு எதிர்பாராமல் தானாகவே வந்தது.

இப்படி நிறைய இருக்கிறது. நினைவு வரவில்லை.

அப்போதெல்லாம் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. எல்லாம் பலித்தன. இப்போது எதிர்பார்ப்பு பெரிதாக ஒன்றும் இல்லை. இப்போது அந்த மாதிரி எதுவும் நடப்பதில்லை.

இதெல்லாம் தற்செயலா உண்மையா எனக்கும் குழப்பமாகவே இருக்கிறது. அதனால் எதற்கும் இருக்கட்டும் என்று நம்பிவிடுகிறேன். அதற்காக ரொம்ப மூடத்தனமாகவெல்லாம் நம்புவதில்லை.

Yogi said...

வருகைக்கு நன்றி உமையணன் !

இன்னமும் தூங்கவில்லை தமிழ்மணத்தை மேய்ந்து கொண்டிருக்கிறேன். ;)

நானும் கண்ணை மூடிக்கொண்டெலாம் எதையும் நம்புவதில்லை ....

cheena (சீனா) said...

அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. காரணம் புரியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் கூறுவார்கள்.

Yogi said...

வருகைக்கு நன்றி சீனா சார்

// January 19, 2008 5:44 AM //
காலையில் இவ்வளவு சீக்கிரமாக எழுந்துவிடும் பழக்கம் உண்டா? வியப்பாக இருக்கிறது எனக்கு :)

எனது வழக்கமான நேரம் 8மணி :)

வல்லிசிம்ஹன் said...

சம்பவங்கள் நிகழ்வது உண்மைதான். விளக்கம்தான் கிடைப்பதில்லை.

மங்கை சொல்லும் அகத்திய நாடியும் வியப்பூட்டும் விஷயம். எப்படி ஒரு கைரேகையை வைத்து குடும்ப விவரம் சொல்கிறார்கள்????

Expatguru said...

வைத்தீஸ்வரன்கோவிலில் மில்லடி தெரு என்று ஒரு தெரு உள்ளது. அந்த தெரு முழுவதும் ஜோதிடர்கள் தான் உள்ளனர். நானும் எனது மனைவியும் அந்த தெருவில் நடந்து கடைசியில் இருக்கும் ஒரு ஜோதிட நிலையத்துக்குள் சென்றோம். ஏன் அந்த குறிப்பிட்ட வீட்டுக்குள் சென்றோம் என்று ஒரு காரணமும் கிடையாது. ஒவ்வொறு வீட்டின் முன்பும் ஒரு board இருந்தது. 'காக்கை நாடி' ' அகத்தியர் நாடி' என்று பல
வீடுகளில் இவ்வாறு boardடுகளை பார்த்தோம். ஒரு வீட்டின் முன் 'சிவ நாடி பார்க்கப்படும்' என்று இருந்தது. அந்த வீட்டினுள் தான் சென்றோம்.

மற்றபடி வேறு யாரையும் நாங்கள் சந்திக்கவில்லை. ஜோதிடர் எங்களிடம் என்ன கூறினார் என்றால்
"15 'காண்டங்கள்' உள்ளன (பதினைந்தா அல்லது பதினாறா
என்று இப்போது சரியாக ஞாபகம் இல்லை). காண்டம் ஒன்றை படிக்க 250 ரூபாய் ஆகும் என்றார். நாங்கள் 'பொது காண்டம்' மட்டும் தான் பார்த்தோம். நேரமின்மையால் மற்றதை பார்க்கவில்லை. ஆனால் எதிர்காலத்தை பற்றி அவர்
கூறிய அனைத்தும் என்னை பொருத்தவரையில் உண்மையாகவே நடந்துள்ளன (இதுவரை).

இந்த‌ அனுப‌வ‌த்தை சில‌ ந‌ண்ப‌ர்க‌ள் ந‌ம்ப‌வில்லை. ப‌ரிகாச‌ம் கூட‌ செய்தார்க‌ள். ஆனால் அந்த‌ ஜோதிட‌ர் உண்மையான‌வ‌ரா, போலியா என்று ப‌ரிசோதிப்ப‌தில் என‌க்கு எந்த‌ வித‌மான‌ ஆதாய‌மும் இல்லையே. ஏனென்றால் அவ‌ர் யார் என்றே என‌க்கு தெரியாது. ஆனால் என்னை பொருத்த‌வ‌ரையில் ஓலையில் இருந்த‌து எல்லாமே உண்மையாகவே நடந்துள்ளன. பார்க்க‌ www.madrasthamizhan.blogspot.com

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வல்லியம்மா !

Yogi said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Expatguru!

எல்லா விசயங்களும் சொல்வார்கள் எனில் இறப்பு குறித்த தகவல்களும் சொல்வார்களா? ஏனென்றால் பெரும்பாலான ஜோதிடர்கள் அதைக்கூற மாட்டார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.