Wednesday, January 23, 2008

பதிவுலகில் ஒரு வருடம் மற்றும் எழுதியதில் பிடித்தது

ஒரு வருடம் ஆச்சுங்க நான் வலைப்பதிவுலகத்திற்கு வந்து. நான் எப்படிப் பதிவெழுத வந்தேன், என் பதிவுகளில் எனக்குப் பிடித்தவை எது மற்றும் பதிவுலகம் பற்றி சில விசயங்கள் பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

நான் வலைப்பதிய வந்தது முழுக்க முழுக்க விபத்தே. வேலையில் சேர்ந்து கொஞ்ச நாளில் வேலை நேரம் போக மிச்ச நேரம் அலுவகத்தில் ரொம்பவே போரடிப்பதாகவும், எவ்வளவு நேரம் தான் குமுதத்தையும், தினமலரையும் பார்ப்பது என என் அண்ணனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் அறிமுகப்படுத்தியது தான் தமிழ்மணம். அதாவது நான் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தது 2006 டிசம்பர் வாக்கில் தான். கணினியில் தமிழில் இவ்வளவு எளிதாக தட்டச்ச முடியும் என்பதே எனக்கு அப்போது தான் தெரியும். சரி நாமளும் பதிவு எழுதிப் பார்ப்போமே என்று எழுதியது ஜனவரி 2007 கடைசியில். மூன்று பதிவுகளை ஒரே மூச்சில் முடித்து விட்டு தமிழ்மணம் மற்றும் தேன்கூட்டில் பதிவினை இணைத்தேன்.

நான் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இராமேஸ்வரம் சென்று வந்ததை என் முதல் பதிவாகப் போட்டேன். அது 'எங்க ஏரியா உள்ள வாங்க'. அப்புறம் என் நண்பர்களின் பட்டப்பெயர்களை எல்லாம் ஒரு பதிவில் போட்டு அவர்களுக்கு வெறுப்பேற்றிய 'ரொம்பப் பெருமையா இருக்கு' ரெண்டாவது பதிவு.

அதுக்கப்புறம் கொஞ்ச நாள் சுமாரான பதிவுகள் மட்டுமே எழுதிவிட்டு ஒரு நகைச்சுவைப் பதிவு முயற்சி செய்வோம் என்று நான் ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்தது தான் 'இம்சை இளவரசன் சோனி எரிக்ஸன்'. எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது நான் நினைத்தாலும் இந்த மாதிரி எழுத முடிவதில்லை. இன்றும் இப்பதிவு என் நண்பர்களால் மின்னஞ்சலில் சுற்றி வருகிறது.

அப்புறம் எங்க ஊர் நடிகர் ரித்திஸின் அட்டகாசங்களைச் சொல்லி துவைத்துத் தொங்கவிட்டது 'கானல் நீர் கதாநாயகனின் முதலமைச்சர் கனவு'.

நானும் உருப்படியான பதிவுகள் எழுதுவோம் என நினைத்து எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்து எழுதியது தான் 'ஏடிஎம் எப்படி வேலை செய்யுது தெரியுமா?' தொடர். இத் தொடர் பூங்காவில் வெளிவந்தது மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது.

ஏண்டா எங்க ஊரைப் பத்தியெல்லாம் பெருமையா எழுத மாட்டியா ன்னு நண்பர்கள் கேட்க எழுதியது தான் 'நாகர்கோவில் நண்பர்கள்' இரண்டு பாகம்.

அப்புறம் எனக்கிருக்கும் கொஞ்ச நஞ்ச ஜாவா ஸ்கிரிப்ட் அறிவைச் சோதித்துப் பார்த்து ப்ளாக்கரின் டெம்ப்ளேட் நிரலில் சின்ன மாற்றம் செய்து எழுதியது தான் 'ஒரே Blogger Account-ன் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் author name மாற்றலாம்'.

அதற்கப்புறம் இன்று வரை ஏதோ எழுதி வருகிறேன். சக பதிவர்களைக் கலாய்த்துப் பார்ப்போமே என்று எழுதியது இரண்டு பதிவுகள். அவை 'பதிவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்' மற்றும் 'சுக்கு காபி வித் சுப்பிரமணியில் கண்மணி'. கண்மணி டீச்சரின் அனுமதியோடு எழுதியது இரண்டாவது.

இடையில் இரண்டு மாதங்கள் பணிச்சுமையாலும், மதுரைத்திட்டத்தில் பங்கு பெற்றதாலும் பதிவுகள் எழுத முடியவில்லை. முகத்தை மறைத்து வேறு பெயரில் எழுதுவது எனக்கும் உடன்பாடில்லை. இருந்தாலும் எதோ அப்போதிருந்த நினைப்பில் அப்படிப் பெயர் வைத்துக் கொண்டேன். சின்னப்பிள்ளையில் என் தாத்தாவின் மளிகைக் கடையில் பொன்வண்டு சோப்பை வைத்து கார் ஓட்டி விளையாண்ட நினைப்பு வர அதையே வைத்துக் கொண்டேன். தெரியாதவர்களுக்கு ஒரு சிறிய அறிமுகம். என் பெயர் யோகேஸ். தற்சமயம் பெங்களூரில் இருக்கிறேன்.

கிட்டத்தட்ட எல்லாப் பதிவர்களின் பதிவுகளையும் ஒரு முறையாவது படித்திருக்கிறேன். ஆனால் அந்த அளவுக்கு யாருக்கும் பின்னூட்டம் போட்டது இல்லை. காரணம் என் அலுவலகத்தில் உடன் இருப்பவர்கள் அப்படி. ஏற்கனவே எப்பவுமே தமிழ் இணையதளங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று நல்ல பெயர் எனக்கு. இரண்டு மூன்று முறை என் மேனேஜரே பார்த்திருக்கிறார். இருந்தாலும் பதிவுகளை சின்னச் சின்ன விண்டோக்களாக திறந்து வைத்துக் கொண்டு படித்து விடுவேன். :). இருந்தாலும் நிறையப் பதிவுகளுக்குப் பின்னூட்டங்களும் போட்டிருக்கிறேன்.

நிறையப் பதிவர்களுக்கு இருப்பது போல எனக்கும் ஒரு நட்பு வட்டம் இல்லையே என வருத்தம் உள்ளது :( . இந்த வருடத்திலாவது அது நிறைவேறுகிறதா எனப் பார்ப்போம்.

என் பதிவுகளைப் பற்றி தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அப்புறம் பதிவின் பக்கவாட்டில் ஒரு கருத்துக் கணிப்பு உள்ளது உங்கள் கருத்தை அதில் சொல்லுங்கள்.

15 comments:

Anonymous said...

join abiappa's kummi group you will get more friends and commets

லக்கிலுக் said...

அய்யா! உங்களது ஒரு வருட மொத்தப் பதிவுகளையுமே போட்டிருக்கலாம்.

“ரொம்பப் பெருமையா இருக்கு” - சும்மா ஜாலியா இருக்கு!!!

Yogi said...

ஐடியா கொடுத்த அனானிக்கு நன்றி !

வருகைக்கு நன்றி லக்கி! வெறும் 9 பதிவே உங்களுக்கு அதிகமா? ;)

கண்மணி/kanmani said...

அனானி சொன்னதுக்கு ரிப்பீட்டேய்ய்

ஆமா உங்க பட்டபேரு எது 'குரங்கா'?:)

Yogi said...

டீச்சர் வருகைக்கும் ரீப்பீட்டுக்கும் நன்றி !

எல்லி இதீரு?
ஸ்கூல் அல்லி இன்டர்னெட் இதியா? :))))

எங்க இருக்கீங்க ? ஸ்கூல்ல இன்டர்னெட் இருக்கா?? :)

Yogi said...

// ஆமா உங்க பட்டபேரு எது 'குரங்கா'?:) //

அதெல்லாம் சொல்ல மாட்டேன். பரம ரகசியம் ;)

Anonymous said...

நேற்று எனது பிளாகின் பிறந்தநாள், இன்று உங்களதா! வாழ்த்துக்கள்..... நாம எல்லாம் ஒரே பேச் ஆய்ட்டோம்ல :-)

Yogi said...

வருகைக்கு நன்றி அப்பாவி !

ஆமாங்க நாம ஒரே பேட்ச். :). ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க :))))

கண்மணி/kanmani said...

பொன்வண்டு
தைப் பூசம் கோஸ்கர இம்து சாலெகெ ரஜே
ஸ்கூல் அல்லி இண்டெர்நெட் இல்ல

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்க்த்துக்கள் பொன்வண்டு.

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் பொன்வண்டு

Yogi said...

// பொன்வண்டு
தைப் பூசம் கோஸ்கர இம்து சாலெகெ ரஜே
ஸ்கூல் அல்லி இண்டெர்நெட் இல்ல //

அச்சச்சோ டீச்சர் தெரியாம வாயைக் குடுத்துட்டேன். :)))
சகலகலாவல்லியா இருக்கீங்க ;)

Yogi said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றி மதுரையம்பதி மற்றும் கானாபிரபா :)

மங்களூர் சிவா said...

ஓ நீ சூப்பர் சீனியரா !!!

ப்ளாக்ல எனக்கு!!

Unknown said...

ஒரு வருசம் ஆச்சா ரொம்ப பெருமையா இருக்கு.

நான் வலைப்பதிவுக்கு வந்து கூட ஒரு வருசம் ஆச்சு. முதல்ல சொந்த பெயரில் ஒருவலைப்பதிவு.
இங்க இருக்குற நெலமயப்பார்த்து அதை சுத்தமா அழிச்சுட்டு வலைப்பதிவுக்காகவே ஒரு கூக்ள் கணக்கைத்திறந்து இந்த வலைப்பதிவை உருவாக்கினேன். ஆரம்பிச்சு ரொம்ப நாள் கழிச்சுத்தான் தமிழ்மணத்தில் இணைத்தேன். ஆனாலும் என்னெயெல்லாம் வலைப்பதிவன்னு சொல்றது எனக்கே கொஞ்சம் கூச்சமா இருக்கு.

நம்மூர்க்காரவுக நீங்க. நடத்துங்க. வாழ்த்துகள்